உபா 5
5
அத்தியாயம் 5
பத்துக் கட்டளைகள்
1“மோசே இஸ்ரவேலர்கள் எல்லோரையும் அழைப்பித்து, அவர்களை நோக்கி: இஸ்ரவேலர்களே, நான் இன்று உங்கள் காதுகள் கேட்கச் சொல்லும் கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள்; நீங்கள் அவைகளின்படியே செய்வதற்கு அவைகளைக் கற்றுக் கைக்கொள்ளக்கடவீர்கள். 2நம்முடைய தேவனாகிய யெகோவா ஓரேபிலே நம்முடன் உடன்படிக்கை செய்தார். 3அந்த உடன்படிக்கையைக் யெகோவா நம்முடைய முற்பிதாக்களுடன் செய்யாமல், இந்நாளில் இங்கே உயிரோடிருக்கிற நம் அனைவரோடும் செய்தார். 4யெகோவா மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து முகமுகமாக உங்களோடு பேசினார். 5யெகோவாவுடைய வார்த்தையை உங்களுக்கு அறிவிப்பதற்கு, அக்காலத்திலே நான் யெகோவாவுக்கும், உங்களுக்கும் நடுவாக நின்றேன்; நீங்கள் அக்கினிக்குப் பயந்து மலையில் ஏறாமல் இருந்தீர்கள்; அப்பொழுது அவர் சொன்னது என்னவென்றால்: 6நீங்கள் அடிமைகளாய் வாழ்ந்த எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த உன் தேவனாகிய யெகோவா நானே. 7என்னைத்தவிர உனக்கு வேறு தெய்வங்கள் உண்டாயிருக்கவேண்டாம். 8மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு உருவத்தையாகிலும் யாதொரு சிலையையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம். 9நீ அவைகளை வணங்கவும் பூஜை செய்யவும் வேண்டாம்; உன் தேவனாகிய யெகோவாவாயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்து முற்பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம், நான்காம் தலைமுறைவரை விசாரிக்கிறவராயிருக்கிறேன். 10என்னிடத்தில் அன்புசெலுத்தி, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைவரைக்கும் இரக்கம்செய்கிறவராயிருக்கிறேன். 11உன் தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தை வீணாகப் பயன்படுத்தாதிருப்பாயாக; யெகோவா தம்முடைய நாமத்தை வீணாகப் பயன்படுத்துகிறவனைத் தண்டிக்காமல் விடமாட்டார். 12உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிட்டபடியே, ஓய்வுநாளைப் பரிசுத்தமாக அனுசரிப்பாயாக. 13ஆறு நாளும் நீ வேலைசெய்து, உன் செயல்களையெல்லாம் நடப்பிப்பாயாக. 14ஏழாம் நாளோ உன் தேவனாகிய யெகோவாவுடைய ஓய்வு நாள்; அதிலே நீயானாலும், உன்னுடைய மகனானாலும், மகளானாலும், வேலைக்காரனானாலும், வேலைக்காரியானாலும், எருதானாலும், கழுதையானாலும், உனக்கு இருக்கிற மற்றெந்த மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும் எந்தவொரு வேலையும் செய்யவேண்டாம்; நீ இளைப்பாறுவதுபோல உன் வேலைக்காரனும், வேலைக்காரியும் இளைப்பாறவேண்டும்; 15நீ எகிப்து தேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும், உன் தேவனாகிய யெகோவா உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் புறப்படச்செய்தார் என்றும் நினைப்பாயாக; ஆகையால் ஓய்வு நாளை அனுசரிக்க உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிட்டார். 16உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கும், நீ நன்றாயிருப்பதற்கும், உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிட்டபடியே, உன் தகப்பனையும், தாயையும் மதிப்புடன் நடத்துவாயாக. 17கொலை செய்யாதிருப்பாயாக. 18விபசாரம் செய்யாதிருப்பாயாக. 19திருடாதிருப்பாயாக. 20மற்றவனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக. 21மற்றவனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக; அவனுடைய வீட்டையும், நிலத்தையும், வேலைக்காரனையும், வேலைக்காரியையும், எருதையும், கழுதையையும், மேலும் அவனுக்குச் சொந்தமான எதையும் இச்சியாதிருப்பாயாக என்றார். 22“இந்த வார்த்தைகளைக் யெகோவா மலையிலே அக்கினி, மேகம், காரிருள் ஆகியவற்றிலிருந்து உங்கள் சபையார் அனைவரோடும் மகா சத்தத்துடனே சொன்னார்; அவைகளோடு ஒன்றும் கூட்டாமல், அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதி என்னிடத்தில் கொடுத்தார். 23மலை அக்கினியாக எரியும்போது இருளின் நடுவிலிருந்து உண்டான சத்தத்தை நீங்கள் கேட்டபோது, கோத்திரத் தலைவர்களும் மூப்பர்களுமாகிய நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வந்து: 24“இதோ, நம்முடைய தேவனாகிய யெகோவா நமக்குத் தம்முடைய மகிமையையும் தம்முடைய மகத்துவத்தையும் காண்பித்தார்; அக்கினியின் நடுவிலிருந்து பேசின அவருடைய சத்தத்தையும் கேட்டோம்; தேவன் மனிதனுடன் பேசியும், அவன் உயிரோடிருக்கிறதை இந்நாளில் கண்டோம். 25இப்பொழுது நாங்கள் ஏன் சாகவேண்டும்? இந்தப் பெரிய அக்கினி எங்களை சுட்டெரிக்குமே; நாங்கள் இன்னும் நம்முடைய தேவனாகிய யெகோவாவின் சத்தத்தைக் கேட்போமானால் சாவோம். 26நாங்கள் கேட்டதுபோல, அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிற ஜீவனுள்ள தேவனுடைய சத்தத்தை மாம்சமானவர்களில் யாராவது கேட்டு உயிரோடிருந்தது உண்டா? 27நீரோ அருகில் சென்று, நம்முடைய தேவனாகிய யெகோவா சொல்வதையெல்லாம் கேட்டு, அவைகளை நீரே எங்களுக்குச் சொல்லவேண்டும்; நாங்கள் கேட்டு, அதின்படியே செய்வோம் என்றீர்கள். 28நீங்கள் என்னுடன் பேசும்போது, யெகோவா உங்கள் வார்த்தைகளைக் கேட்டு, யெகோவா என்னை நோக்கி; “இந்த மக்கள் உன்னிடம் சொன்ன வார்த்தைகளைக் கேட்டேன்; அவர்கள் சொன்னது எல்லாம் நன்றாக இருந்தது. 29அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருப்பதற்கு, அவர்கள் எந்நாளும் எனக்குப் பயந்து, என் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கேற்ற இருதயம் அவர்களுக்கு இருந்தால் நலமாயிருக்கும். 30நீ போய்: உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப்போங்கள் என்று அவர்களுக்குச் சொல். 31நீயோ இங்கே என்னிடத்தில் நில்; நான் அவர்களுக்குச் சொந்தமாகக் கொடுக்கும் தேசத்தில் அவர்கள் செய்யும்படி நீ அவர்களுக்குப் போதிக்கவேண்டிய சகல கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் உனக்குச் சொல்லுவேன் என்றார். 32உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கற்பித்தபடியே செய்ய கவனமாக இருங்கள்; வலதுபுறமும் இடதுபுறமும் சாயாதிருப்பீர்களாக. 33நீங்கள் சொந்தமாக்கிக்கொள்கிற தேசத்திலே பிழைத்து சுகமாக நீண்டநாட்கள் வாழ, உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்கு ஏற்படுத்தின வழிகளெல்லாவற்றிலும் நடக்கக்கடவீர்கள்.
اکنون انتخاب شده:
உபா 5: IRVTam
هایلایت
کپی
مقایسه
به اشتراک گذاشتن
می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.