உபா 1
1
அத்தியாயம் 1
ஓரேபைவிட்டுப் புறப்படுவதற்கான கட்டளை
1சேயீர் மலைவழியாக ஓரேபுக்குப் பதினொரு நாட்கள் பிரயாண தூரத்திலுள்ள காதேஸ்பர்னேயாவிலிருந்து, 2சூப்புக்கு எதிராகவும், பாரான், தோப்பேல், லாபான், ஆஸரோத், திசாகாப் ஆகியவற்றிக்கு நடுவிலும் இருக்கிற யோர்தானுடைய கிழக்கு பகுதியில் வனாந்திரத்தின் சமவெளிக்கு வந்தபோது, மோசே இஸ்ரவேலர்கள் எல்லோரையும் நோக்கிச் சொன்ன வசனங்களாவன: 3எஸ்போனில் குடியிருந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனையும், எத்ரேயின் அருகே அஸ்தரோத்தில் குடியிருந்த பாசானின் ராஜாவாகிய ஓக் என்பவனையும், மோசே தோற்கடித்தபின்பு, 4எகிப்தை விட்ட 40 ஆம் வருடம் பதினோராம் மாதம் முதல் தேதியிலே, மோசே இஸ்ரவேல் மக்களுக்குச் சொல்லும்படி தனக்குக் யெகோவா கொடுத்த யாவையும் அவர்களுக்குச் சொன்னான். 5யோர்தான் நதிக்கு கிழக்கு திசையிலிருக்கிற மோவாபின் தேசத்தில் மோசே இந்த நியாயப்பிரமாணத்தை விவரித்துக் காண்பிக்கத் துவங்கி, 6ஓரேபிலே நம்முடைய தேவனாகிய யெகோவா நம்மிடம் சொன்னது என்னவென்றால்: “நீங்கள் இந்த மலையருகே தங்கியிருந்தது போதும். 7நீங்கள் திரும்பிப் பிரயாணம் செய்து, எமோரியர்களின் மலைநாட்டிற்கும், அதற்கு அருகிலுள்ள எல்லா சமவெளிகளிலும், குன்றுகளிலும், பள்ளத்தாக்குகளிலும், தென்திசையிலும், மத்திய தரைக் கடலோரத்திலும் இருக்கிற கானானியர்களின் தேசத்திற்கும், லீபனோனுக்கும், ஐப்பிராத்து நதி என்னும் பெரிய நதிவரைக்கும் செல்லுங்கள். 8இதோ, இந்த தேசத்தை உங்களுக்கு முன்பாக வைத்தேன்; நீங்கள் போய், யெகோவா உங்களுடைய முற்பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் அவர்களுக்குப் பின்வரும் அவர்களுடைய சந்ததிக்கும் வாக்களித்துக் கொடுத்த அந்த தேசத்தை சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்” என்றார்.
தலைவர்கள் நியமனம்
9அக்காலத்திலே நான் உங்களை நோக்கி: “நான் ஒருவனே உங்களுடைய பாரத்தை சுமக்கமுடியாது. 10உங்கள் தேவனாகிய யெகோவா உங்களைப் பெருகச்செய்தார்; இதோ, இந்நாளில் நீங்கள் வானத்தின் நட்சத்திரங்களைப்போல திரளாக இருக்கிறீர்கள். 11நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும் ஆயிரம் மடங்கு அதிகமாகும்படி உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவா உங்களுக்குச் சொன்னபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக. 12உங்களுடைய வருத்தத்தையும், பிரச்சனைகளையும், வழக்குகளையும் நான் ஒருவனே தாங்குவது எப்படி? 13நான் உங்களுக்கு தலைவர்களை ஏற்படுத்துவதற்காக, உங்களுடைய கோத்திரங்களில் ஞானமும், விவேகமும், அறிவும் உள்ளவர்களென்று நன்மதிப்பு பெற்ற மனிதர்களைத் தெரிந்துகொள்ளுங்கள் என்று சொன்னேன். 14நீங்கள் எனக்கு மறுமொழியாக: நீர் செய்யச்சொன்ன காரியம் நல்லது என்றீர்கள். 15ஆகையால் நான் ஞானமும், அறிவுமுள்ள மனிதர்களாகிய உங்கள் கோத்திரங்களின் வம்சத் தலைவர்களைத் தெரிந்துகொண்டு, அவர்கள் உங்களுக்குத் தலைவர்களாயிருக்க, ஆயிரம்பேருக்கு தலைவர்களாகவும், நூறுபேருக்கு தலைவர்களாகவும், ஐம்பதுபேருக்கு தலைவர்களாகவும், பத்துப்பேருக்கு தலைவர்களாகவும் உங்கள் கோத்திரங்களில் அதிகாரிகளாகவும் ஏற்படுத்தினேன். 16அக்காலத்திலே உங்களுடைய நியாயாதிபதிகளை நான் நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரர்களின் வழக்குகளைக் கேட்டு, உங்கள் சகோதரர்களுக்கும், அவர்களிடத்தில் தங்கும் அந்நியனுக்கும், நீதியின்படி தீர்ப்புச் செய்யுங்கள். 17நியாயத்திலே முகதாட்சிணியம் பார்க்காமல் பெரியவன் சொல்வதைக் கேட்பதுபோலச் சிறியவன் சொல்வதையும் கேட்கக்கடவீர்கள்; மனிதனுடைய முகத்திற்குப் பயப்படக்கூடாது; நியாயத்தீர்ப்பு தேவனுடையது; உங்களுக்குக் கடினமாயிருக்கும் காரியத்தை என்னிடம் கொண்டு வாருங்கள்; நான் அதைக் கேட்பேன் என்று சொல்லி, 18நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் எல்லாவற்றையும் அக்காலத்திலே கட்டளையிட்டேன்.
வேவுகாரர்கள் அனுப்பப்படுதல்
19“நம்முடைய தேவனாகிய யெகோவா நமக்குக் கட்டளையிட்டபடியே, நாம் ஓரேபைவிட்டுப் பிரயாணம் செய்து, எமோரியர்களின் மலைநாட்டிற்கு நேராக நீங்கள் பார்த்த அந்தப் பயங்கரமான பெரிய வனாந்திர வழி முழுவதும் நடந்து வந்து, காதேஸ்பர்னேயாவிலே சேர்ந்தோம். 20அப்பொழுது நான் உங்களை நோக்கி: நம்முடைய தேவனாகிய யெகோவா நமக்குக்கொடுக்கும் எமோரியர்களின் மலைநாடு வரை வந்து சேர்ந்தீர்கள். 21இதோ, உன் தேவனாகிய யெகோவா அந்த தேசத்தை உனக்கு முன்பாக வைத்திருக்கிறார்; உன் முற்பிதாக்களுடைய தேவனாகிய யெகோவா உனக்குச் சொன்னபடியே, நீ போய் அதை சொந்தமாக்கிக்கொள்; பயப்படாமலும் கலங்காமலும் இரு என்றேன். 22அப்பொழுது நீங்கள் எல்லோரும் என்னிடம் வந்து: நமக்காக அந்த தேசத்தைச் சோதித்துப்பார்க்கவும், நாம் இன்னவழியாக அதில் சென்று, இன்ன பட்டணங்களுக்குப் போகலாம் என்று நமக்கு மறுசெய்தி கொண்டுவரவும், நமக்கு முன்பாக மனிதர்களை அனுப்புவோம் என்றீர்கள். 23அது எனக்கு நன்றாகக்கண்டது; கோத்திரத்திற்கு ஒருவனாக பன்னிரண்டு மனிதர்களைத் தெரிந்தெடுத்து அனுப்பினேன். 24அவர்கள் புறப்பட்டு, மலைகளில் ஏறி, எஸ்கோல் பள்ளத்தாக்கு வரை போய், அதை உளவுபார்த்து, 25அந்த தேசத்தின் பழங்களில் சிலவற்றைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு நம்மிடத்தில் வந்து, நம்முடைய தேவனாகிய யெகோவா நமக்குக் கொடுக்கும் தேசம் நல்ல தேசம் என்று நம்மிடத்தில் சொன்னார்கள்.
தேவனுக்கு எதிரான கலகம்
26“அப்படியிருந்தும், நீங்கள், போகமாட்டோம் என்று உங்கள் தேவனாகிய யெகோவாவுடைய கட்டளைக்கு விரோதமாக எதிர்த்து, 27உங்கள் கூடாரங்களில் முறுமுறுத்து: யெகோவா நம்மை வெறுத்து, நம்மை அழிப்பதற்காக நம்மை எமோரியர்களின் கையில் ஒப்புக்கொடுக்க, நம்மை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தார். 28நாம் எங்கே போகலாம்; அந்த மக்கள் நம்மைவிட பலவான்களும், உயரமானவர்களும், அவர்களுடைய பட்டணங்கள் பெரியவைகளும், வானளாவிய மதிலுள்ளவைகளுமாக இருக்கிறதென்றும், ஏனாக்கியர்களின் சந்ததியையும் அங்கே கண்டோம் என்றும் நம்முடைய சகோதரர்கள் சொல்லி, நம்முடைய இருதயத்தைக் கலங்கச்செய்தார்கள் என்று சொன்னீர்கள். 29அப்பொழுது நான் உங்களை நோக்கி: நீங்கள் கலங்காமலும் அவர்களுக்குப் பயப்படாமலும் இருங்கள். 30உங்களுக்கு முன் செல்லும் உங்கள் தேவனாகிய யெகோவா தாமே எகிப்தில் உங்களோடிருந்து, உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்த எல்லாவற்றைப் போலவும், வனாந்திரத்தில் செய்துவந்ததுபோலவும், உங்களுக்காக போர்செய்வார். 31ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல, நீங்கள் இவ்விடத்திற்கு வருகிறவரைக்கும், நடந்துவந்த வழிகள் எல்லாவற்றிலும், உங்கள் தேவனாகிய யெகோவா உங்களைச் சுமந்துகொண்டு வந்ததைக் கண்டீர்களே. 32உங்கள் தேவனாகிய யெகோவா நீங்கள் முகாம் அமைக்கத்தக்க இடத்தைப் பார்க்கவும், நீங்கள் போகவேண்டிய வழியை உங்களுக்குக் காட்டவும், 33இரவில் அக்கினியிலும் பகலில் மேகத்திலும் உங்களுக்குமுன் சென்றாரே. இப்படியிருந்தும், இந்தக் காரியத்தில் நீங்கள் அவரை விசுவாசிக்காமற்போனீர்கள். 34“ஆகையால் யெகோவா உங்கள் வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டு, கடுங்கோபங்கொண்டு: 35உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று நான் வாக்களித்த அந்த நல்ல தேசத்தை இந்தப் பொல்லாத சந்ததியாராகிய மனிதர்களில் ஒருவரும் காண்பதில்லை என்றும், 36எப்புன்னேயின் மகனாகிய காலேப் மாத்திரம் அதைக் காண்பான்; அவன் யெகோவாவை உத்தமமாகப் பின்பற்றினபடியினால், நான் அவன் மிதித்து வந்த தேசத்தை அவனுக்கும் அவனுடைய பிள்ளைகளுக்கும் கொடுப்பேன் என்றும் வாக்களித்தார். 37அன்றியும் உங்கள் நிமித்தம் யெகோவா என்மேலும் கோபங்கொண்டு: நீயும் அதில் நுழைவதில்லை; 38உனக்கு முன்பாக நிற்கிற நூனின் மகனாகிய யோசுவா அதில் நுழைவான்; அவனைத் திடப்படுத்து; அவனே அதை இஸ்ரவேலுக்குச் சொந்தமாகப் பங்கிடுவான். 39கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் குழந்தைகளும், இந்நாளில் நன்மை தீமை அறியாத உங்கள் பிள்ளைகளும் அதில் நுழைவார்கள்; அவர்களுக்கு அதைக் கொடுப்பேன்; அவர்கள் அதைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். 40நீங்களோ திரும்பிக்கொண்டு, சிவந்த சமுத்திரத்தின் வழியாக வனாந்திரத்திற்குப் பிரயாணப்பட்டுப் போங்கள் என்றார். 41அப்பொழுது நீங்கள் எனக்கு மறுமொழியாக: “யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்தோம்; நம்முடைய தேவனாகிய யெகோவா எங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் நாங்கள் போய் போர் செய்வோம் என்று சொல்லி, நீங்கள் யாவரும் உங்களுடைய ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, மலையின்மேல் ஏற ஆயத்தமாயிருந்தீர்கள். 42அப்பொழுது யெகோவா என்னைப் பார்த்து: நீங்கள் உங்களுடைய எதிரிகளுக்கு முன்பாக தோற்றுப்போகாதபடி, போகாமலும் போர் செய்யாமலும் இருப்பீர்களாக; நான் உங்களுடன் இருக்கமாட்டேன் என்று அவர்களுக்குச் சொல் என்றார். 43அப்படியே நான் உங்களுக்குச் சொன்னேன்; நீங்களோ செவிகொடாமல், யெகோவாவுடைய கட்டளைக்கு விரோதமாகத் துணிந்து மலையின்மேல் ஏறினீர்கள். 44அந்த மலையிலே குடியிருந்த எமோரியர்கள் உங்களை எதிர்க்கும்படி புறப்பட்டுவந்து, தேனீக்கள் துரத்துகிறதுபோல உங்களைத் துரத்தி, உங்களைச் சேயீர் துவங்கி ஓர்மாவரை தாக்கினார்கள். 45நீங்கள் திரும்பிவந்து, யெகோவாவுடைய சமுகத்தில் அழுதீர்கள்; யெகோவா உங்கள் சத்தத்தைக் கேட்கவில்லை, உங்களுக்குச் செவிகொடுக்கவும் இல்லை. 46இப்படி காதேசிலே அநேக நாட்கள் தங்கியிருந்தீர்கள்.
اکنون انتخاب شده:
உபா 1: IRVTam
هایلایت
کپی
مقایسه
به اشتراک گذاشتن
می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.