1 சாமு 4

4
அத்தியாயம் 4
பெலிஸ்தர்கள் உடன்படிக்கைப் பெட்டியைக் கைப்பற்றுதல்
1சாமுவேலின் வார்த்தை இஸ்ரவேலுக்கெல்லாம் வந்தது. இஸ்ரவேலர்கள்: பெலிஸ்தர்களுக்கு விரோதமாக யுத்தம்செய்யப்புறப்பட்டு, எபெனேசருக்கு அருகில் முகாமிட்டார்கள்; பெலிஸ்தர்களோ ஆப்பெக்கிலே முகாமிட்டிருந்தார்கள். 2பெலிஸ்தர்கள் இஸ்ரவேலர்களுக்கு எதிராக அணிவகுத்து நின்றார்கள்; யுத்தம் அதிகரித்து, இஸ்ரவேலர்கள் பெலிஸ்தர்களுக்கு முன்பாக முறியடிக்கப்பட்டார்கள்; அவர்கள் படையில் போர்க்களத்திலே ஏறக்குறைய நான்காயிரம்பேர் வெட்டப்பட்டு இறந்தார்கள். 3மக்கள் திரும்ப முகாமிற்கு வந்தபோது, இஸ்ரவேலின் மூப்பரானவர்கள், இன்று யெகோவா பெலிஸ்தர்களுக்கு முன்பாக நம்மை முறியடித்ததென்ன? சீலோவிலிருக்கிற யெகோவாவுடைய உடன்படிக்கைப்பெட்டியைக் கொண்டுவருவோம்; அது நம்மை#4:3 யெகோவா எங்களோடு யுத்தக்களத்துக்கு வந்தால் நம்முடைய எதிரியின் கைக்கு விலக்கி இரட்சிக்கும்படி, நம்முடைய நடுவில் வரவேண்டும் என்றார்கள். 4அப்படியே கேருபீன்களின் மத்தியில் இருக்கிற சேனைகளின் யெகோவாவுடைய உடன்படிக்கைப்பெட்டியை எடுத்துவர, மக்கள் சீலோவுக்குச் சொல்லியனுப்பினார்கள்; அங்கே ஏலியின் இரண்டு மகன்களான ஒப்னியும் பினெகாசும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியின் அருகில் இருந்தார்கள். 5யெகோவாவுடைய உடன்படிக்கைப்பெட்டி முகாமிலே வருகிறபோது, இஸ்ரவேலர்கள் எல்லோரும் பூமி அதிரத்தக்கதாக அதிக சத்தமாக ஆர்ப்பரித்தார்கள். 6அவர்கள் ஆர்ப்பரிக்கிற சத்தத்தைப் பெலிஸ்தர்கள் கேட்டபோது: எபிரெயர்களுடைய முகாமில் இந்த மகா ஆர்ப்பரிப்பின் சத்தம் என்ன என்றார்கள்; பின்பு யெகோவாவின் பெட்டி முகாமில் வந்தது என்று அறிந்துகொண்டார்கள். 7தேவன் முகாமில் வந்தார் என்று சொல்லப்பட்டதினால், பெலிஸ்தர்கள் பயந்து, ஐயோ, நமக்கு மோசம் வந்தது; இதற்குமுன்பு ஒருபோதும் இப்படி நடக்கவில்லையே. 8ஐயோ, அந்த மகத்துவமான தேவர்களின் கைக்கு நம்மைத் தப்புவிப்பவர் யார்? எகிப்தியரைச் சகலவித வாதைகளினாலும் வனாந்திரத்திலே அடித்த தேவர்கள் இவர்கள்தானே. 9பெலிஸ்தர்களே, திடன் கொண்டு ஆண்களைப்போல நடந்துகொள்ளுங்கள்; எபிரெயர் உங்களுக்கு அடிமைகளாக இருந்ததுபோல நீங்களும் அவர்களுக்கு அடிமைகளாகாதபடி ஆண்களாக இருந்து யுத்தம்செய்யுங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். 10அப்பொழுது பெலிஸ்தர்கள் யுத்தம்செய்தார்கள்; இஸ்ரவேலர்கள் விழுந்து, அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்; மகா பெரிய அழிவு உண்டானது; இஸ்ரவேலிலே 30,000 காலாட்படையினர் மடிந்தார்கள். 11தேவனுடைய பெட்டி பிடிக்கப்பட்டது; ஏலியின் இரண்டு மகன்களான ஒப்னியும் பினெகாசும் இறந்தார்கள்.
ஏலியின் மரணம்
12பென்யமீன் கோத்திரத்தானாகிய ஒருவன் படையிலிருந்து ஓடி, தன்னுடைய ஆடைகளைக் கிழித்து, தன்னுடைய தலையின்மேல் புழுதியை வாரிப்போட்டுக்கொண்டு, அன்றையதினமே சீலோவுக்கு வந்தான். 13அவன் வந்தபோது: ஏலி ஒரு இருக்கையின்மேல் உட்கார்ந்து வழியைப் பார்த்துக்கொண்டிருந்தான்; தேவனுடைய பெட்டிக்காக அவனுடைய இருதயம் தத்தளித்துக்கொண்டிருந்தது, ஊரிலே செய்தியை அறிவிக்க அந்த மனிதன் வந்தபோது, ஊரெங்கும் அழுகை உண்டானது. 14அழுகிற இந்தச் சத்தத்தை ஏலி கேட்டபோது: இந்த கூச்சலின் சத்தம் என்ன என்று கேட்டான்; அப்பொழுது அந்த மனிதன் விரைவாக வந்து, ஏலிக்கு அறிவித்தான். 15ஏலி 98 வயதுள்ளவனாக இருந்தான்; அவன் பார்க்க முடியாதபடி அவனுடைய கண்கள் மங்கலாக இருந்தது. 16அந்த மனிதன் ஏலியைப் பார்த்து: படையிலிருந்து வந்தவன் நான்தான்; இன்றுதான் படையிலிருந்து ஓடிவந்தேன் என்றான். அப்பொழுது அவன்: என் மகனே, நடந்த காரியம் என்ன என்று கேட்டான். 17செய்தி கொண்டுவந்தவன் பதிலாக: இஸ்ரவேலர்கள் பெலிஸ்தர்களுக்கு முன்பாக முறிந்தோடிப்போனார்கள்; மக்களுக்குள்ளே பெரிய அழிவு உண்டானது; உம்முடைய மகன்களான ஒப்னி பினெகாஸ் என்னும் இருவரும் இறந்துபோனார்கள்; தேவனுடைய பெட்டியும் பிடிபட்டது என்றான். 18அவன் தேவனுடைய பெட்டியைக் குறித்துச் சொன்னவுடனே, ஏலி இருக்கையிலிருந்து வாசலின் பக்கமாய் மல்லாந்து விழுந்தான்; அவன் முதிர்வயதானவனும் அதிக பருமனானவனுமாக இருந்தபடியால், அவன் பிடரி முறிந்து இறந்துபோனான். அவன் இஸ்ரவேலை 40 வருடங்கள் நியாயம் விசாரித்தான்.
மகிமை கடந்தது
19பினெகாசின் மனைவியான அவனுடைய மருமகள் நிறைகர்ப்பிணியாக இருந்தாள்; அவள் தேவனுடைய பெட்டி பிடிபட்ட செய்தியையும், தன்னுடைய மாமனும் தன்னுடைய கணவனும் இறந்து போனதையும் கேள்விப்பட்டபோது, அவள் கர்ப்பவேதனைப்பட்டு குனிந்து பிரசவித்தாள். 20அவள் மரணமடையப்போகிற நேரத்தில் அவள் அருகே நின்ற பெண்கள்: நீ பயப்படாதே, ஆண்பிள்ளையைப் பெற்றாய் என்றார்கள்; அவளோ அதற்கு ஒன்றும் சொல்லவுமில்லை, அதின்மேல் சிந்தைவைக்கவுமில்லை. 21தேவனுடைய பெட்டி பிடிபட்டு, அவளுடைய மாமனும் அவளுடைய கணவனும் மரித்தபடியால், அவள்: மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று என்று சொல்லி, அந்தப் பிள்ளைக்கு இக்கபோத் என்று பெயரிட்டாள். 22தேவனுடைய பெட்டி பிடிபட்டுப்போனபடியால், மகிமை இஸ்ரவேலை விட்டு விலகிப்போனது என்றாள்.

اکنون انتخاب شده:

1 சாமு 4: IRVTam

های‌لایت

کپی

مقایسه

به اشتراک گذاشتن

None

می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید