1 சாமு 12
12
அத்தியாயம் 12
சாமுவேல் இஸ்ரவேலரிடம் ராஜாவை பற்றி பேசுதல்
1அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேலர்கள் அனைவரையும் பார்த்து: இதோ, நீங்கள் எனக்குச் சொன்னபடியெல்லாம் உங்கள் சொல்லைக்கேட்டு உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தினேன். 2இப்போதும் இதோ, ராஜா உங்களுக்கு முன்பாக வாழ்ந்துவருகிறார்; நானோ முதிர்வயதானவனும் நரைத்தவனுமானேன்; என்னுடைய மகன்கள் உங்களோடிருப்பார்கள்; நான் என்னுடைய சிறுவயதுமுதல் இந்த நாள்வரைக்கும் உங்களுக்கு முன்பாக வாழ்ந்துவந்தேன். 3இதோ, நான் இருக்கிறேன்; யெகோவாவுக்கு முன்பாகவும் அவர் அபிஷேகம்செய்து வைத்தவருக்கு முன்பாகவும் என்னைக்குறித்துச் சாட்சி சொல்லுங்கள்; நான் யாருடைய எருதை எடுத்துக்கொண்டேன்? யாருடைய கழுதையை எடுத்துக்கொண்டேன்? யாருக்கு அநியாயம்செய்தேன்? யாருக்கு தீங்கு செய்தேன்? யார் கையில் லஞ்சம் வாங்கிக்கொண்டு குருடனாக இருந்தேன்? சொல்லுங்கள்; அப்படி இருக்குமானால் அதை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பேன் என்றான். 4அதற்கு அவர்கள்: நீர் எங்களுக்கு அநியாயம் செய்யவும் இல்லை; எங்களுக்கு தீங்கு செய்யவும் இல்லை; ஒருவர் கையிலும் ஒன்றும் வாங்கவும் இல்லை என்றார்கள். 5அதற்கு அவன்: நீங்கள் என்னுடைய கையில் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை என்பதற்குக் யெகோவா உங்களுக்கு எதிராகச் சாட்சியாக இருக்கிறார்; அவர் அபிஷேகம்செய்தவரும் இன்று அதற்குச் சாட்சி என்றான்; அதற்கு அவர்கள்: அவர் சாட்சிதான் என்றார்கள். 6அப்பொழுது சாமுவேல் மக்களைப் பார்த்து: மோசே, ஆரோனை, ஏற்படுத்தியவரும், உங்கள் முற்பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்தவரும் யெகோவாவே. 7இப்பொழுதும் யெகோவா உங்களுக்கும் உங்களுடைய முற்பிதாக்களுக்கும் செய்துவந்த எல்லா நீதியான செய்கைகளைக்குறித்தும், நான் யெகோவாவுக்கு முன்பாக உங்களோடு நியாயம் பேசும்படிக்கு நீங்கள் நில்லுங்கள். 8யாக்கோபு எகிப்திற்கு போயிருக்கும்போது, உங்கள் முன்னோர்கள் யெகோவாவைப் பார்த்து முறையிட்டார்கள், அப்பொழுது யெகோவா மோசேயையும், ஆரோனையும் அனுப்பினார்; அவர்கள் உங்கள் முன்னோர்களை எகிப்திலிருந்து அழைத்துவந்து, அவர்களை இந்த இடத்திலே குடியிருக்கச்செய்தார்கள். 9அவர்கள் தங்கள் தேவனாகிய யெகோவாவை மறந்துபோகிறபோது, அவர் அவர்களை ஆத்சோரின் படைத்தலைவனாகிய சிசெராவின் கையிலும், பெலிஸ்தர்களின் கையிலும், மோவாபிய ராஜாவின் கையிலும் விற்றுப்போட்டார்; இவர்கள் அவர்களுக்கு விரோதமாக யுத்தம்செய்தார்கள். 10ஆகையால் அவர்கள் யெகோவாவைப் பார்த்து முறையிட்டு: நாங்கள் யெகோவாவை விட்டுப் பாகால்களையும் அஸ்தரோத்தையும் வழிபட்டதினாலே, பாவம்செய்தோம்; இப்போதும் எங்கள் எதிரிகளின் கைக்கு எங்களை மீட்டுவிடும்; இனி உம்மை வழிபடுவோம் என்றார்கள். 11அப்பொழுது யெகோவா யெருபாகாலையும்,#12:11 கிதியோனை பேதானையும்#12:11 பாராக்கை, யெப்தாவையும் சாமுவேலையும் அனுப்பி, நீங்கள் பயமில்லாமல் குடியிருக்கும்படிச் சுற்றிலும் இருந்த உங்கள் எதிரிகளின் கைக்கும் உங்களை நீங்கலாக்கி இரட்சித்தார். 12அம்மோன் மக்களின் ராஜாவாகிய நாகாஸ் உங்களுக்கு விரோதமாக வருகிறதை நீங்கள் கண்டபோது, உங்கள் தேவனாகிய யெகோவாவே உங்களுக்கு ராஜாவாக இருந்தும், நீங்கள் என்னை நோக்கி: அப்படியல்ல, ஒரு ராஜா எங்கள்மேல் ஆளவேண்டும் என்றீர்கள். 13இப்பொழுதும் நீங்கள் வேண்டும் என்று விரும்பித் தெரிந்துகொண்ட ராஜா, இதோ, இருக்கிறார்; இதோ, யெகோவா உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தினார். 14நீங்கள் யெகோவாவுடைய வாக்குக்கு விரோதமாகக் கலகம்செய்யாமல் யெகோவாவுக்குப் பயந்து, அவருக்கு பணிவிடைசெய்து, அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்தால், நீங்களும் உங்களை ஆளுகிற ராஜாவும் உங்கள் தேவனாகிய யெகோவாவைப் பின்பற்றுகிறவர்களாக இருப்பீர்கள். 15நீங்கள் யெகோவாவுடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமல், யெகோவாவுடைய வாக்குக்கு எதிராக கலகம் செய்தால், யெகோவாவுடைய கை உங்கள் முன்னோர்களுக்கு எதிராக இருந்ததுபோல உங்களுக்கும் எதிராக இருக்கும். 16இப்பொழுது யெகோவா உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்யும் பெரிய காரியத்தை நின்று பாருங்கள். 17இன்று கோதுமை அறுவடையின் நாள் அல்லவா? நீங்கள் உங்களுக்கு ஒரு ராஜாவைக் கேட்டதால், யெகோவாவின் பார்வைக்குச் செய்த உங்களுடைய தீங்கு பெரியதென்று நீங்கள் பார்த்து உணரும்படி, நான் யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்வேன்; அப்பொழுது இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிடுவார் என்று சொல்லி, 18சாமுவேல் யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்தான்; அன்றையதினமே யெகோவா இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிட்டார்; அப்பொழுது மக்கள் எல்லோரும் யெகோவாவுக்கும் சாமுவேலுக்கும் மிகவும் பயந்து; 19சாமுவேலைப் பார்த்து: நாங்கள் சாகாதபடி உம்முடைய தேவனாகிய யெகோவாவிடத்தில் உம்முடைய அடியாருக்காக விண்ணப்பம் செய்யும்; நாங்கள் செய்த எல்லாப் பாவங்களோடும் எங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று கேட்ட இந்தப் பாவத்தையும் சேர்த்துக்கொண்டோம் என்று மக்கள் எல்லோரும் சொன்னார்கள். 20அப்பொழுது சாமுவேல் மக்களைப் பார்த்து: பயப்படாதீர்கள்; நீங்கள் இந்தத் தீங்கையெல்லாம் செய்தீர்கள்; ஆனாலும் யெகோவாவை விட்டுப் பின்வாங்காமல் யெகோவாவை உங்கள் முழு இருதயத்தோடும் தொழுதுகொள்ளுங்கள். 21பயனற்றதும், விடுவிக்கமுடியாததுமாக இருக்கிற வெறுமையானவைகளைப் பின்பற்றும்படி திரும்பாதீர்கள்; அவைகள் வீணானவைகளே. 22யெகோவா உங்களைத் தம்முடைய மக்களாக்கிக்கொள்வதற்கு பிரியமானதால், யெகோவா தம்முடைய மேன்மையான நாமத்தினிமித்தம் தமது மக்களைக் கைவிடமாட்டார். 23நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாமல் இருந்தால் யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்கிறவனாக இருப்பேன்; அது எனக்குத் தூரமாயிருக்கட்டும்; நன்மையும் சரியானதுமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன். 24நீங்கள் எப்படியும் யெகோவாவுக்குப் பயந்து, உங்கள் முழு இருதயத்தோடும் உண்மையாய் அவரைச் தொழுதுகொள்ளக்கடவீர்கள்; அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள். 25நீங்கள் இன்னும் தீங்கையே செய்தால், நீங்களும் உங்கள் ராஜாவும் அழிந்துபோவீர்கள் என்றான்.
اکنون انتخاب شده:
1 சாமு 12: IRVTam
هایلایت
کپی
مقایسه
به اشتراک گذاشتن
می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.