1 இராஜா 6
6
அத்தியாயம் 6
சாலொமோன் ஆலயத்தைக் கட்டுதல்
1இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட 480 வருடத்திலும், சாலொமோன் இஸ்ரவேலின்மேல் ராஜாவான நான்காம் வருடம் சீப் மாதமாகிய இரண்டாம் மாதத்திலும், அவன் யெகோவாவின் ஆலயத்தைக் கட்டத்தொடங்கினான். 2சாலொமோன் ராஜா யெகோவாவுக்குக் கட்டின ஆலயம் 90 அடி நீளமும், 30 அடி அகலமும், 45 அடி உயரமுமாக இருந்தது. 3ஆலயமாகிய அந்த மாளிகையின் முகப்பிலே அவன் கட்டின மண்டபம் ஆலயத்தின் அகலத்திற்குச் சமமாக 30 அடி நீளமும், ஆலயத்திற்கு முன்னே 15 அடி அகலமுமாக இருந்தது. 4பார்வைக்குக் குறுகிப்போகிற ஒடுக்கமான ஜன்னல்களை ஆலயத்திற்குச் செய்தான். 5அவன் தேவாலயத்தின் சுவரும் சந்நிதி இடச்சுவருமாகிய ஆலயத்தின் சுவர்களுக்கு அடுத்ததாய்ச் சுற்றுச்சுவரைக் கட்டி, அவைகளில் அறைகளைச் சுற்றிலும் உண்டாக்கினான். 6கீழே இருக்கிற சுற்றுச்சுவர் 7.6 அடி அகலமும், நடுவே இருக்கிறது 9 அடி அகலமும், மூன்றாவதாக இருக்கிறது 10.6 அடி அகலமுமாக இருந்தது; அவைகள் ஆலயத்தினுடைய விட்டத்தினாலே தாங்காதபடி ஆலயத்தைச் சுற்றிலும் வெளிப்புறமாக ஒட்டுச்சுவர்களைக் கட்டினான். 7ஆலயம் கட்டப்படும்போது, அது வேலைசெய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட கற்களாலே கட்டப்பட்டது; ஆகையால் அது கட்டப்படுகிறபோது, சுத்திகள் கோடரிகள் முதலான எந்த இரும்பு ஆயுதங்களின் சத்தமும் அதிலே கேட்கப்படவில்லை. 8நடு அறைகளுக்குப் போகிற வாசற்படி ஆலயத்தின் வலதுபுறத்தில் இருந்தது; சுழற்படிகளால் நடு அறைகளுக்கும், நடு அறைகளிலிருந்து மூன்றாவது அறைகளுக்கும் ஏறுவார்கள். 9இவ்விதமாக அவன் ஆலயத்தைக் கட்டி, கேதுரு மர உத்திரங்களாலும் பலகைகளாலும் ஆலயத்தை மூடி ஆலயப்பணியை முடித்தான். 10அவன் 7.6 அடி உயரமான சுற்றுக்கட்டுகளை ஆலயத்தின்மேலெங்கும் கட்டினான்; அவைகள் கேதுரு மரங்களால் ஆலயத்தோடு இணைக்கப்பட்டிருந்தது.
11அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை சாலொமோனுக்கு உண்டாயிற்று; அவர்: 12நீ என்னுடைய கட்டளைகளின்படி நடந்து, என்னுடைய நீதி நியாயங்களை நிறைவேற்றி, என்னுடைய கற்பனைகளின்படியெல்லாம் நடந்துகொள்ளும்படி, அவைகளைக் கைக்கொண்டால், நீ கட்டுகிற இந்த ஆலயத்தைக்குறித்து நான் உன்னுடைய தகப்பனாகிய தாவீதோடு சொன்ன என்னுடைய வார்த்தையை உன்னிடத்தில் நிறைவேற்றி, 13இஸ்ரவேல் மக்களின் நடுவிலே இருந்து, என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலைக் கைவிடாதிருப்பேன் என்றார். 14அப்படியே சாலொமோன் ஆலயத்தைக் கட்டி முடித்தான்.
15ஆலயத்துச் சுவர்களின் உட்புறத்தை, தரை துவங்கி சுவர்களின் மேற்கூரைவரை, கேதுரு பலகைகளால் மூடி, இப்படி உட்புறத்தை மரவேலையால் செய்து, ஆலயத்தின் தரையை தேவதாரு மரங்களின் பலகைகளால் தரையை மூடினான். 16மூடப்பட்ட தரைதுவங்கி சுவர்களின் மேற்கூரைவரை ஆலயத்தின் பக்கங்களைத் தொட்டிருக்கிற 30 அடி நீளமான மறைப்பையும் கேதுரு பலகைகளால் செய்து, உட்புறத்தை மகா பரிசுத்தமான சந்நிதியினிடமாகக் கட்டினான். 17அதின் முன்னிருக்கிற தேவாலயமாகிய மாளிகை 60 அடி நீளமாக இருந்தது. 18ஆலயத்திற்குள் இருக்கிற கேதுரு மரங்களில் மொக்குகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரவேலை செய்திருந்தது; பார்வைக்கு ஒரு கல்கூட காணப்படாமல் எல்லாம் கேதுரு மரமாக இருந்தது. 19யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியை வைப்பதற்கு ஆலயத்திற்குள்ளே மகா பரிசுத்த ஸ்தலத்தை ஆயத்தப்படுத்தினான். 20மகா பரிசுத்த ஸ்தலம் முன்புறம்வரை 30 அடி நீளமும், 30 அடி அகலமும், 30 அடி உயரமுமாக இருந்தது; அதைப் பசும்பொன்தகட்டால் மூடினான்; கேதுருமரப் பலிபீடத்தையும் அப்படியே மூடினான். 21ஆலயத்தின் உட்புறத்தை சாலொமோன் பசும்பொன்தகட்டால் மூடி, மகா பரிசுத்த ஸ்தலத்தின் மறைப்புக்கும் பொன்சங்கிலிகளைக் குறுக்கே போட்டு, அதைப் பொன்தகட்டால் மூடினான். 22இப்படி ஆலயம் முழுவதும் கட்டிமுடியும்வரை, அவன் ஆலயம் முழுவதையும் பொன்தகட்டால் மூடி, மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு முன்பாக இருக்கிற பலிபீடத்தை முழுவதும் பொன்தகட்டால் மூடினான். 23மகா பரிசுத்த ஸ்தலத்தில் ஒலிவமரங்களால் இரண்டு கேருபீன்களைச் செய்து வைத்தான்; ஒவ்வொன்றும் 15 அடி உயரமுமாக இருந்தது. 24கேருபீனுக்கு இருக்கிற ஒரு இறக்கை 7.6 அடி கேருபீனின் மற்ற இறக்கை 7.6 அடியாக, இப்படி ஒரு இறக்கையின் கடைசிமுனை தொடங்கி மற்ற இறக்கையின் கடைசி முனைவரை 15 அடியாக இருந்தது. 25மற்றக் கேருபீனும் 15 அடியாக இருந்தது; இரண்டு கேருபீன்களும் ஒரே அளவும் ஒரே திட்டமுமாக இருந்தது. 26ஒரு கேருபீன் 15 அடி உயரமாக இருந்தது; மற்றக் கேருபீனும் அப்படியே இருந்தது. 27அந்தக் கேருபீன்களை உள் ஆலயத்திலே வைத்தான்; கேருபீன்களின் இறக்கைகள் விரித்திருந்ததால், ஒரு கேருபீனின் இறக்கை ஒரு பக்கத்துச்சுவரிலும், மற்றக் கேருபீனின் இறக்கை மறுபக்கத்துச் சுவரிலும் தொடும்படியிருந்தது; ஆலயத்தின் நடுமையத்தில், அவைகளின் இறக்கைகள் ஒன்றோடொன்று தொடத்தக்கதாயிருந்தது. 28அந்தக் கேருபீன்களைப் பொன்தகட்டால் மூடினான். 29ஆலயத்தின் சுவர்களையெல்லாம் அவன் சுற்றிலும் உள்ளேயும் வெளியேயுமாகக் கேருபீன்களும் பனை மரங்களும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களும் கொத்து வேலைகளுமாக்கினான். 30உள்ளேயும் வெளியேயும் இருக்கிற ஆலயத்து தரையையும் பொன்தகட்டால் மூடினான். 31மகா பரிசுத்த ஸ்தலத்தின் வாசலுக்கு ஒலிவமரங்களால் இரட்டைக் கதவுகளைச் செய்தான்; மேல்சட்டமும் நிலைகளும் மறைப்பின் அளவில் ஐந்தில் ஒரு பங்காக இருந்தது. 32ஒலிவமரமான அந்த இரட்டைக் கதவுகளில் அவன் கேருபீன்களும் பனை மரங்களும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களைச் செய்து, அந்தக் கேருபீன்களிலும் பனை மரங்களிலும் பொன்பதியத்தக்கதாகப் பொன்தகட்டால் மூடினான். 33இப்படி தேவாலயத்தின் வாசலுக்கும் ஒலிவமர நிலைக்கால்களைச் செய்தான்; அது சுவர் அளவில் நான்கு பக்கமும் ஒரே அளவு சதுரமாக இருந்தது. 34அதின் இரண்டு கதவுகளும் தேவதாருப் பலகைகளால் செய்யப்பட்டிருந்தது; ஒரு கதவுக்கு இரண்டு மடிப்புப் பலகைகளும், மற்றக் கதவுக்கு இரண்டு மடிப்புப் பலகைகளும் இருந்தது. 35அவைகளில் கேருபீன்களும் பனை மரங்களும் மலர்ந்த பூக்களுமான சித்திர வேலையைச் செய்து, சித்திரங்களுக்குச் சமமாகச் செய்யப்பட்ட பொன்தகட்டால் அவைகளை மூடினான். 36அவன் உட்பிரகாரத்தை மூன்று வரிசை வெட்டின கற்களாலும், ஒரு வரிசை கேதுரு பலகைகளாலும் கட்டினான். 37நான்காம் வருடம் சீப் மாதத்திலே யெகோவாவுடைய ஆலயத்திற்கு அஸ்திபாரம் போட்டு, 3811 வது வருடம் பூல் என்னும் 8 வது மாதத்திலே, அந்த ஆலயம்முழுவதும் எல்லா சட்டதிட்டத்தின்படியே ஒருபங்கும் குறையாமல் கட்டி முடிந்தது; அவன் அதைக் கட்டிமுடிக்க 7 வருடங்கள் ஆனது.
اکنون انتخاب شده:
1 இராஜா 6: IRVTam
هایلایت
کپی
مقایسه
به اشتراک گذاشتن
می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.