1 இராஜா 16

16
அத்தியாயம் 16
1பாஷாவுக்கு எதிராகக் யெகோவாவுடைய வார்த்தை அனானியின் மகனாகிய யெகூவுக்கு உண்டானது, அவர்: 2நான் உன்னைத் குப்பையிலிருந்து உயர்த்தி, உன்னை என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலின்மேல் தலைவனாக வைத்திருக்கும்போது, நீ யெரொபெயாமின் வழியிலே நடந்து, என்னுடைய மக்களாகிய இஸ்ரவேல் தங்களுடைய பாவங்களால் எனக்குக் கோபமுண்டாக்கும்படி அவர்களைப் பாவம் செய்யச்செய்கிறபடியால், 3இதோ, நான் பாஷாவுக்கு பின்பு வருபவர்களையும் அவனுடைய வீட்டாருக்கு பின்பு வருபவர்களையும் அழித்துப்போட்டு, உன்னுடைய வீட்டை நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் வீட்டைப்போல ஆக்குவேன். 4பாஷாவின் சந்ததியிலே பட்டணத்திலே சாகிறவனை நாய்கள் சாப்பிடும்; வெளியிலே சாகிறவனை ஆகாயத்துப் பறவைகள் சாப்பிடும் என்றார்.
5பாஷாவின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்ததும், அவனுடைய வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது. 6பாஷா இறந்து தன்னுடைய பிதாக்களோடு திர்சாவில் அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய மகனாகிய ஏலா அவனுடைய இடத்தில் ராஜாவானான். 7பாஷா தன்னுடைய கைகளின் செய்கையால் யெகோவாவுக்குக் கோபமுண்டாக்கி, அவருடைய பார்வைக்குச் செய்த எல்லாத் தீமையினால், அவன் யெரொபெயாமின் வீட்டாரை வெட்டிப்போட்டதால், இவர்களைப்போல் ஆவான் என்று அவனுக்கும், அவனுடைய வீட்டுக்கும் எதிராக அனானியின் மகனாகிய யெகூ என்னும் தீர்க்கதரிசியினால் யெகோவாவுடைய வார்த்தை பின்னும் உண்டாயிற்று.
இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலா
8யூதாவின் ராஜாவான ஆசாவின் 26 ஆம் வருடத்திலே பாஷாவின் மகனாகிய ஏலா இஸ்ரவேலின்மேல் திர்சாவிலே ராஜாவாகி இரண்டு வருடங்கள் அரசாட்சி செய்தான். 9இரதங்களில் பாதிபங்குக்குத் தலைவனாகிய சிம்ரி என்னும் அவனுடைய வேலைக்காரன் அவனுக்கு விரோதமாக சதிசெய்து, அவன் திர்சாவிலே அந்த இடத்தின் அரண்மனைப் பொறுப்பாளன் அர்சாவின் வீட்டிலே குடிவெறியில் இருக்கும்போது, 10சிம்ரி உள்ளே புகுந்து, யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் 27 ஆம் வருடத்தில் அவனை வெட்டிக் கொன்றுபோட்டு, அவனுடைய இடத்தில் ராஜாவானான். 11அவன் ராஜாவாகி, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தபோது, அவன் பாஷாவின் வீட்டார்களையெல்லாம் வெட்டிப்போட்டான்; அவனுடைய உறவினர்களையோ, நண்பர்களையோ, சுவரில் நீர்விடும் ஒரு நாயையோ, அவன் உயிரோடு வைக்கவில்லை. 12அப்படியே பாஷாவும், அவனுடைய மகனாகிய ஏலாவும், தங்கள் வீணான விக்கிரகங்களினாலே இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்குக் கோபமுண்டாக்கிச் செய்ததும் இஸ்ரவேலைச் செய்யவைத்ததுமான அவர்களுடைய எல்லாப் பாவங்களினால், 13யெகோவா தீர்க்கதரிசியாகிய யெகூவினால் பாஷாவைக்குறித்துச் சொல்லியிருந்த அவருடைய வார்த்தையின்படியே, சிம்ரி பாஷாவின் வீட்டாரையெல்லாம் அழித்துப்போட்டான். 14ஏலாவின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்தவைகளும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
இஸ்ரவேலின் ராஜாவாகிய சிம்ரி
15யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இருபத்தேழாம் வருடத்திலே சிம்ரி திர்சாவிலே ஏழுநாட்கள் ராஜாவாக இருந்தான்; மக்கள் அப்பொழுது பெலிஸ்தர்களுக்கு இருக்கிற கிபெத்தோனுக்கு எதிராக முகாமிட்டிருந்தார்கள். 16சிம்ரி சதிசெய்து, ராஜாவைக் கொன்றுபோட்டான் என்பதை அங்கே முகாமிட்டிருந்த மக்கள் கேட்டபோது, இஸ்ரவேலர்களெல்லாம் அந்த நாளிலே முகாமிலே படைத்தலைவனாகிய உம்ரியை இஸ்ரவேலுக்கு ராஜாவாக்கினார்கள். 17அப்பொழுது உம்ரியும் அவனோடு இஸ்ரவேல் அனைத்தும் கிபெத்தோனிலிருந்து வந்து, திர்சாவை முற்றுகை போட்டார்கள். 18பட்டணம் பிடிபட்டதை சிம்ரி கண்டபோது, அவன் ராஜாவின் வீடாகிய அரண்மனைக்குள் நுழைந்து, தான் இருக்கிற ராஜ அரண்மனையைத் தீயிட்டுகொளுத்தி, அதிலே செத்தான். 19அவன் யெகோவாவின் பார்வைக்குத் தீமையானதைச் செய்து, யெரொபெயாமின் வழியிலும் அவன் இஸ்ரவேலைப் பாவம்செய்யச்செய்த அவனுடைய பாவத்திலும் நடந்ததால், அப்படி நடந்தது. 20சிம்ரியின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த அவனுடைய சதியும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
இஸ்ரவேலின் ராஜாவாகிய உம்ரி
21அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் இரண்டு வகுப்பாகப் பிரிந்து, பாதி மக்கள் கீனாத்தின் மகனாகிய திப்னியை ராஜாவாக்க, அவனைப் பின்பற்றினார்கள்; பாதி மக்கள் உம்ரியைப் பின்பற்றினார்கள். 22ஆனாலும் கீனாத்தின் மகனாகிய திப்னியைப் பின்பற்றின மக்களைவிட, உம்ரியைப் பின்பற்றின மக்கள் பலப்பட்டார்கள்; திப்னி இறந்துபோனான்; உம்ரி அரசாட்சி செய்தான். 23யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தோராம் வருடத்தில், உம்ரி இஸ்ரவேல்மேல் ராஜாவாகி, பன்னிரண்டு வருடங்கள் அரசாட்சிசெய்தான்; அவன் திர்சாவிலே ஆறு வருடங்கள் அரசாட்சி செய்து, 24பின்பு சேமேரின் கையிலிருந்து சமாரியா மலையை இரண்டு தாலந்து#16:24 70 கிலோ வெள்ளிக்கு வாங்கி, அந்த மலையின்மேல் ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு மலையினுடைய எஜமானாக இருந்த சேமேருடைய பெயரின்படியே சமாரியா என்னும் பெயரை வைத்தான். 25உம்ரி யெகோவாவின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்து, தனக்கு முன்னே இருந்த எல்லோரையும்விட கேடாக நடந்து, 26நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் எல்லா வழியிலும், இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்குத் தங்களுடைய வீணான விக்கிரகங்களாலே கோபம் ஏற்படுத்தும்படியாக இஸ்ரவேலைப் பாவம்செய்யச்செய்த அவனுடைய பாவங்களிலும் நடந்தான். 27உம்ரி செய்த அவனுடைய மற்ற செயல்பாடுகளும், அவன் காண்பித்த வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது. 28உம்ரி இறந்து தன்னுடைய முன்னோர்களோடு, சமாரியாவிலே அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய மகனாகிய ஆகாப் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
ஆகாப் இஸ்ரவேலின் ராஜாவாகுதல்
29யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் 38 ஆம் வருடத்தில் உம்ரியின் மகனாகிய ஆகாப் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, சமாரியாவில் இஸ்ரவேலின்மேல் 22 வருடங்கள் அரசாட்சி செய்தான். 30உம்ரியின் மகனாகிய ஆகாப், தனக்கு முன்னே இருந்த எல்லோரையும் விட யெகோவாவின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்தான். 31நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களில் நடப்பது அவனுக்குக் கொஞ்சக்காரியமென்று நினைத்ததைப்போல அவன் சீதோனியர்களின் ராஜாவாகிய ஏத்பாகாலின் மகள் யேசபேலை திருமணம் செய்ததுமல்லாமல், அவன் போய் பாகாலையும் தொழுது அதைப் பணிந்துகொண்டு, 32தான் சமாரியாவிலே கட்டின பாகாலின் கோவிலில் பாகாலுக்குப் பலிபீடத்தைக் கட்டினான். 33ஆகாப் ஒரு விக்கிரகத்தோப்பையும் வைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்குக் கோபம் உண்டாக்கும்படி தனக்கு முன்னே இருந்த இஸ்ரவேலின் ராஜாக்களெல்லாம் செய்ததைவிட அதிகமாகச் செய்துவந்தான். 34#16:34 யோசுவா 6:26 பார்க்க அவனுடைய நாட்களிலே பெத்தேல் ஊரைச்சேர்ந்த ஈயேல் எரிகோவைக் கட்டினான்; யெகோவா நூனின் மகனாகிய யோசுவாவைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது, அபிராம் என்னும் தன்னுடைய மூத்த மகனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது செகூப் என்னும் தன்னுடைய இளைய மகனையும் சாகக்கொடுத்தான்.

اکنون انتخاب شده:

1 இராஜா 16: IRVTam

های‌لایت

کپی

مقایسه

به اشتراک گذاشتن

None

می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید