சகரியா 6
6
நான்கு தேர்கள்
1நான் மீண்டும் பார்த்தபோது, இரண்டு மலைகளுக்கு இடையிலிருந்து நான்கு தேர்கள் வெளியே வரக்கண்டேன். அந்த மலைகள் வெண்கல மலைகளாயிருந்தன. 2முதலாம் தேரில் சிவப்பு நிறக் குதிரைகளும், இரண்டாம் தேரில் கறுப்பு நிறக் குதிரைகளும், 3மூன்றாம் தேரில் வெள்ளை நிறக் குதிரைகளும், நான்காம் தேரில் புள்ளிகளுடைய குதிரைகளும் பூட்டப்பட்டிருந்தன. அவையெல்லாம் வலிமை நிறைந்தனவாய் இருந்தன. 4அப்போது நான் என்னுடன் பேசிக்கொண்டிருந்த தூதனிடம், “ஆண்டவனே இவை என்ன?” எனக் கேட்டேன்.
5அதற்கு அந்தத் தூதன் என்னிடம், “இவை முழு உலகுக்கும் ஆண்டவராக இருப்பவரின் முன்னேயிருந்து புறப்படுகின்ற வானத்தின் நான்கு காற்றுகளாகும்#6:5 காற்றுகளாகும் – ஆவிகளாகும். 6கறுப்புக் குதிரைகள் பூட்டப்பட்ட தேர் வட தேசத்தை நோக்கியும், வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட தேர் மேற்கு தேசத்தை நோக்கியும்#6:6 அவற்றின் பின்னால், புள்ளிகளுடைய குதிரைகள் பூட்டப்பட்ட தேர் தெற்கு தேசத்தை நோக்கியும் செல்கின்றன” என்று பதிலுரைத்தான்.
7வலிமைவாய்ந்த குதிரைகள் வெளியே வந்தபோது, அவை பூமியைச் சுற்றிச் செல்ல பொறுமையிழந்து காணப்பட்டன. அப்போது அவன், “பூமி முழுவதையும் சுற்றிச் செல்லுங்கள்!” என்றான். உடனே அவை பூமி முழுவதையும் சுற்றிச் சென்றன.
8அப்போது அவன் என்னை அழைத்து, “பார்! வட தேசத்தை நோக்கிச் செல்பவை வட தேசத்தில் என் ஆவிக்கு அமைதியைக் கொடுத்திருக்கின்றன” என்றான்.
யோசுவாவுக்குக் கிரீடம்
9கர்த்தருடைய வார்த்தை மீண்டும் எனக்கு வந்தது. 10“நாடுகடத்தப்பட்டு, பாபிலோனிலிருந்து திரும்பி வந்த எல்தாய், தொபியா, யெதாயா ஆகியோரிடமிருந்து வெள்ளியையும் தங்கத்தையும்#6:10 வெள்ளியையும் தங்கத்தையும் – எபிரேய மொழியில் இல்லை பெற்றுக்கொண்டு, அதேநாளில் புறப்பட்டு செப்பனியாவின் மகன் யோசியாவின் வீட்டுக்குப் போ. 11அந்த வெள்ளியையும், தங்கத்தையும் எடுத்து ஒரு கிரீடம் செய்து அதை யெகோசாதாக்கின் மகன் யோசுவா என்னும் தலைமை மதகுருவின் தலையில் வைப்பாயாக. 12சேனைகளின் கர்த்தர் அறிவிப்பது இதுவே என நீ அவனிடம் சொல்: ‘கிளை என்னும் பெயரைக்கொண்டவர் இவரே; அவர், தாம் இருக்குமிடத்திலிருந்து கிளைவிட்டு கர்த்தரின் ஆலயத்தைக் கட்டியெழுப்புவார். 13கர்த்தரின் ஆலயத்தைக் கட்டியெழுப்புகிறவர் அவரே. அவர் மாட்சிமையை அணிந்து, தம் அரியணையின்மீது அமர்ந்திருந்து ஆட்சி செய்வார். அவ்வாறு அவர் தமது அரியணையில் ஒரு மதகுருவாகவும் இருப்பார். இந்த இரண்டு பணிகளுக்கும் இடையே ஒரு நல்லிணக்கம் இருக்கும்.’ 14அந்தக் கிரீடம் ஏலேம்#6:14 ஏலேம் – எல்டாய், தொபியா, யெதாயா ஆகியோருக்கும், செப்பனியாவின் மகன் யோசியா எனப்பட்ட ஏனுக்கும் நினைவுச் சின்னமாகக் கொடுக்கப்படும். அதைக் கர்த்தரின் ஆலயத்தில் வைத்திருக்க வேண்டும். 15வெகுதொலைவில் இருப்பவர்கள் வந்து, கர்த்தரின் ஆலயத்தைக் கட்டியெழுப்ப உதவி செய்வார்கள்; அப்போது என்னை சேனைகளின் கர்த்தர் உங்களிடம் அனுப்பினார் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். நீங்கள் உங்கள் இறைவனாகிய கர்த்தருக்கு முழுவதுமாய் கீழ்ப்படிவீர்களானால் இது நிறைவேறும்” என்றான்.
Currently Selected:
சகரியா 6: TRV
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.