1
1இது ஒரு இறைவெளிப்பாடு, மல்கியாவின்#1:1 மல்கியாவின் – எனது தூதுவர் என்று அர்த்தம் மூலம் இஸ்ரயேலுக்குக் கிடைத்த கர்த்தருடைய வார்த்தை.
இறைவனின் அன்பை இஸ்ரயேல் சந்தேகித்தல்
2“இஸ்ரயேலரே, நான் உங்களில் அன்பாயிருக்கின்றேன்” என கர்த்தர் சொல்கின்றார்.
“ஆனால், ‘நீர் எங்களில் எவ்வாறு அன்பு செலுத்தினீர்?’ என நீங்கள் கேட்கின்றீர்கள்.
“ஏசா யாக்கோபின் சகோதரன் அல்லவா? அவ்வாறிருந்தும், நான் யாக்கோபை நேசித்தேன், 3ஆனால் ஏசாவை வெறுத்தேன்; அவனுடைய மலைநாட்டைப் பாழடையச் செய்து அவனுடைய உரிமைச் சொத்தைப் பாலைநில நரிகளுக்குக் கொடுத்தேன்” என்று கர்த்தர் சொல்கின்றார்.
4“நாங்கள் நொறுக்கப்பட்டோம், ஆயினும் மீண்டும் பாழடைந்தவற்றைக் கட்டியெழுப்புவோம்” என ஏதோமியர் சொல்லலாம்.
ஆனால் சேனைகளின் கர்த்தர் சொல்வது இதுவே: “அவர்கள் மீண்டும் கட்டியெழுப்பலாம், ஆனால் நான் அதை இடித்து விடுவேன். அவர்கள் கொடுமையின் நாடு என்றும், கர்த்தரின் கோபத்துக்கு என்றென்றும் உள்ளான மக்கள் என்றும் அழைக்கப்படுவார்கள். 5உங்கள் சொந்தக் கண்களினால் இதைக் காண்பீர்கள். அப்போது நீங்கள், ‘கர்த்தரே மிகவும் பெரியவர், இஸ்ரயேலின் எல்லைகளுக்கு அப்பால் கர்த்தரே பெரியவர்’ என்று சொல்வீர்கள்.”
கறைப்பட்ட பலிகள்
6“ஒரு மகன் தன் தந்தையையும், ஒரு வேலைக்காரன் தன் எஜமானையும் கௌரவப்படுத்துகின்றான். நான் ஒரு தந்தையாயிருந்தால், எனக்குரிய கௌரவம் எங்கே? நான் ஒரு எஜமானாயிருந்தால், எனக்குரிய மரியாதை எங்கே?” என சேனைகளின் கர்த்தர் உங்களிடம் கேட்கின்றார்.
மதகுருக்களே, நீங்கள் அல்லவா என்னுடைய பெயரை அவமதிக்கின்றீர்கள்.
ஆனால், “உம்முடைய பெயரை நாங்கள் எவ்வாறு அவமதித்தோம்?” என நீங்கள் கேட்கின்றீர்கள்.
7என் பலிபீடத்தின்மீது அசுத்தமான காணிக்கைகளை வைக்கின்றீர்கள்.
ஆயினும், “உம்மை எவ்வாறு கறைப்படுத்தினோம்?” என்று நீங்கள் கேட்கின்றீர்கள்.
கர்த்தரின் மேசை#1:7 மேசை – பலிபீடம் மதிப்புக்குரியது என்று நீங்கள் கருதாததன் காரணமாகவே அவ்வாறு செய்கின்றீர்கள். 8நீங்கள் குருடான மிருகங்களை பலிக்காகக் கொண்டு வருகின்றீர்களே, அது தவறில்லையா? ஊனமானதும் நோயுற்றதுமான மிருகங்களைப் பலியிடுகிறீர்களே, அது தவறில்லையா? அவற்றை உங்கள் ஆளுநருக்குக் கொடுத்துப் பாருங்கள். உங்களிடம் அவன் பிரியமாய் இருப்பானோ? அல்லது அவன் உங்களை ஏற்றுக்கொள்வானோ? என சேனைகளின் கர்த்தர் கேட்கின்றார்.
9“அவ்வாறிருந்தும், உங்கள்மீது தயவாய் இருக்கும்படி இறைவனிடம் இப்போது மன்றாடுகிறீர்கள். நீங்கள் உங்கள் கைகளில் இவ்வாறான காணிக்கைகளை அவரிடம் கொண்டுவந்தால், அவர் உங்களை ஏற்றுக்கொள்வாரா?” என சேனைகளின் கர்த்தர் கேட்கின்றார்.
10“நீங்கள் என் பலிபீடத்தில் பயனற்ற நெருப்பை மூட்டாதபடி, உங்களில் ஒருவனாவது ஆலயக் கதவுகளை அடைக்க மாட்டானோ! உங்கள்மீது எனக்குப் பிரியமில்லை. நான் எந்தவொரு காணிக்கையையும் உங்கள் கைகளிலிருந்து ஏற்றுக்கொள்ள மாட்டேன் என சேனைகளின் கர்த்தர் சொல்கின்றார். 11சூரியன் உதிப்பது முதல் அது மறையும்வரை இனங்களுக்குள்ளே என் பெயர் மேன்மையுள்ளதாய் இருக்கும். அதனால் ஒவ்வொரு இடத்திலும் என் பெயருக்குத் தூபமும் தூய்மையான காணிக்கையும் செலுத்தப்படும். ஏனெனில் இனங்களிடையே என் பெயர் மேன்மையுள்ளதாய் இருக்கும்” என்று சேனைகளின் கர்த்தர் சொல்கின்றார்.
12“ஆனால் நீங்கள் ஆண்டவரின் பரிசுத்த பெயரைத் தூய்மைக்கேடாக்கினீர்கள். ‘கர்த்தருடைய மேசையைக் குறித்து அது கறைப்பட்டது’ என்றும், அதிலுள்ள உணவைக் குறித்து ‘அது வெறுக்கத்தக்கது’ என்றும் சொல்கின்றீர்கள். 13நீங்கள், ‘இது எவ்வளவு தொல்லையாயிருக்கிறது!’ என்று கூறி அதை இழிவாகப் பேசுகிறீர்கள் என சேனைகளின் கர்த்தர் சொல்கின்றார்.
“காயப்பட்டதையும் ஊனமான அல்லது நோயுற்றதையும் கொண்டுவந்து பலியாகச் செலுத்தும்போது, உங்கள் கைகளிலிருந்து நான் அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமோ?” என கர்த்தர் கேட்கின்றார். 14“தன் மந்தையில் இருக்கும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய ஒரு கடாவை ஆண்டவருக்கு நேர்த்திக்கடன் செய்து, அதன்பின்பு குறைபாடுள்ள ஒரு மிருகத்தைப் பலியிடுகிற ஏமாற்றுக்காரன் சபிக்கப்பட்டவன். ஏனெனில் நான் ஒரு பேரரசர், என் பெயர் இனங்களுக்குள்ளே பயபக்திக்குரியதாய் இருக்கவேண்டும்” என்று சேனைகளின் கர்த்தர் சொல்கின்றார்.