லூக்கா 2
2
இயேசுவின் பிறப்பு
1அந்நாட்களில் பேரரசன் அகஸ்து, ரோம பேரரசு எங்கும் குடிசனமதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தான். 2சீரியா நாட்டுக்கு சிரேனியு என்பவர் ஆளுநராய் இருந்த காலத்தில் இடம்பெற்ற முதலாம் குடிசனமதிப்பீடு இதுவாகும். 3எனவே ஒவ்வொருவரும் தங்களைப் பதிவு செய்வதற்காக தத்தமது ஊர்களுக்குப் போனார்கள்.
4அப்போது யோசேப்பும் கலிலேயாவிலுள்ள நாசரேத்துப் பட்டணத்திலிருந்து, யூதேயாவிலுள்ள தாவீதின் பட்டணமான பெத்லெகேமுக்குச் சென்றான். ஏனெனில் அவன் தாவீதின் குடும்பத்தையும் அந்த வம்சத்தையும் சேர்ந்தவனாயிருந்தான். 5அவன் பதிவு செய்யும்படி, தனக்கு மனைவியாக நிச்சயிக்கப்பட்டிருந்த கர்ப்பிணியான மரியாளுடன் சென்றான். 6அவர்கள் அங்கிருக்கையில் அவளுக்குப் பிரசவவேளை வந்தது; 7அவர்கள் விடுதியில் தங்குவதற்கு இடம் இருக்காதபடியால், அவள் தன்னுடைய முதல் பிள்ளையான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து, குழந்தையை துணிகளினால் சுற்றி, தொழுவத்திலிருந்த தொட்டியில் கிடத்தினாள்.
8அன்றிரவு அருகேயிருந்த வயல்வெளிகளில் மேய்ப்பர்கள் தங்கியிருந்து, இரவிலே தங்கள் மந்தையைக் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். 9கர்த்தரின் தூதன் ஒருவன் அவர்களுக்குக் காட்சியளித்தான். கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்ததால் அவர்கள் மிகவும் பயந்தார்கள். 10அப்போது அந்தத் தூதன் அவர்களிடம், “பயப்பட வேண்டாம், அனைத்து மக்களுக்கும் மிகுந்த மனமகிழ்ச்சியை உண்டாக்கும் நற்செய்தியை நான் உங்களுக்குக் கொண்டுவந்திருக்கிறேன். 11இன்று தாவீதின் பட்டணத்திலே, ஒரு இரட்சகர் உங்களுக்காக பிறந்திருக்கிறார்; ஆண்டவராகிய மேசியா அவரே. 12துணிகளினால் சுற்றப்பட்ட ஒரு குழந்தை, தொழுவத்திலுள்ள தொட்டியில் கிடத்தப்பட்டிருப்பதை நீங்கள் காண்பீர்கள். இதுவே உங்களுக்கு அடையாளம்” என்றான்.
13அப்போது திடீரென பரலோக தூதர்கள் ஒரு பெரும் கூட்டமாகப் படையெடுத்து, அந்தத் தூதனுடன் இணைந்து காட்சியளித்து,
14“உன்னதத்தில் இறைவனுக்கு மகிமையும்,
பூமியில் அவர் தயவு காட்டுகின்ற மனிதர்களுக்கு சமாதானமும் உண்டாகட்டும்”
என்று இறைவனைத் துதித்தார்கள்.
15அந்தத் தூதர் அவர்களைவிட்டுப் பரலோகத்துக்குத் திரும்பிப் போன பின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் பார்த்து, “நாம் பெத்லெகேமுக்குப் போய், நிகழ்ந்திருப்பதாகக் கர்த்தர் நமக்கு வெளிப்படுத்திய இந்தச் சம்பவத்தைப் பார்ப்போம்” என்று சொல்லிக் கொண்டார்கள்.
16அவ்வாறே அவர்கள் விரைவாய் சென்று, மரியாளையும் யோசேப்பையும் தொழுவத்திலே கிடத்தப்பட்டிருந்த குழந்தையையும் கண்டார்கள். 17அவர்கள் குழந்தையைக் கண்ட பின்பு, அக்குழந்தையைக் குறித்து இறைதூதர்களால் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியை எங்கும் பரப்பினார்கள். 18மேய்ப்பர்கள் சொன்னதைக் கேட்ட எல்லோரும் வியப்படைந்தார்கள். 19மரியாளோ இந்தக் காரியங்களையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, ஆழ்ந்து தியானித்தாள். 20தங்களுக்கு சொல்லப்பட்டபடியே நடந்திருந்தபடியால், மேய்ப்பர்கள் தாங்கள் கண்டதும் கேட்டதுமான எல்லாவற்றையும் குறித்து, இறைவனைத் துதித்து மகிமைப்படுத்திக் கொண்டு திரும்பிச் சென்றார்கள்.
21குழந்தைக்கு விருத்தசேதனம் செய்யப்பட வேண்டிய எட்டாம் நாளிலே, தாயின் கர்ப்பத்தில் குழந்தை உருவாகும் முன்பே இறைவனின் தூதனால் கொடுக்கப்பட்ட பெயரின்படி, அவருக்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.
இயேசுவை ஆலயத்துக்குக் கொண்டுவருதல்
22மோசேயின் நீதிச்சட்டத்தின்படி அவர்களுக்குரிய சுத்திகரிப்பின் காலம் முடிவடைந்ததும், யோசேப்பும் மரியாளும் குழந்தையைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்கும்படி எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள். 23ஏனெனில், “ஒவ்வொரு முதற்பேறான ஆண் குழந்தையும் கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும்”#2:23 யாத். 13:2,12 என்று கர்த்தருடைய நீதிச்சட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 24மேலும் கர்த்தருடைய நீதிச்சட்டத்தில் சொல்லப்பட்டபடியே, “ஒரு சோடிப் புறாக்களை அல்லது, இரண்டு மாடப் புறாக் குஞ்சுகளை”#2:24 லேவி. 12:8 பலியாகச் செலுத்தும் வகையில் அங்கு போனார்கள்.
25அப்போது எருசலேமில் சிமியோன் எனப்பட்ட ஒருவர் இருந்தார்; அவர் நீதிமானும், இறைபக்தி உள்ளவரும், இஸ்ரயேலர்களுக்கு ஆறுதல் அளிப்பவரின் வருகைக்காகக் காத்திருக்கின்றவருமாய் இருந்தார். பரிசுத்த ஆவியானவர் அவர்மீது இருந்தார். 26எனவே, கர்த்தருடைய மேசியாவைக் காண்பதற்கு முன்பு அவர் மரணிக்க மாட்டார் என்று பரிசுத்த ஆவியானவரால் அவருக்கு வெளிப்படுத்தப்பட்டிருந்தது. 27அன்று அவர் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டு, ஆலயத்துக்குள் வந்திருந்தார். குழந்தை இயேசுவுக்கு நீதிச்சட்ட வழக்கத்தின்படி செய்ய வேண்டியவற்றைச் செய்வதற்காக, அவருடைய பெற்றோர் அவரை ஆலயத்துக்குள் கொண்டுவந்தார்கள். 28அப்போது சிமியோன் அவரைத் தனது கையில் எடுத்து, இறைவனைத் துதித்துச் சொன்னதாவது:
29“ஆண்டவரே, நீர் வாக்குறுதி தந்தபடியே,
உமது பணியாளனாகிய என்னைச் சமாதானத்துடன் இப்போது அனுப்புகின்றீர்.
30ஏனெனில், எனது கண்கள் உமது இரட்சிப்பைக் கண்டன;
31இந்த இரட்சிப்பை அனைத்து மக்களும் காணும்படி, நீர் ஆயத்தமாக்கியிருக்கிறீர்.
32இது யூதரல்லாதோருக்கு வெளிப்படுத்திய ஒளியாயிற்று.
இதுவே உமது மக்களான இஸ்ரயேலரின் மகிமை”
என்றார்.
33குழந்தையின் தந்தையும்#2:33 தந்தையும் – யோசேப்பு குழந்தையின் வளர்ப்புத் தந்தை தாயும் அவரைப் பற்றிச் சொல்லப்பட்டதைக் குறித்து வியப்படைந்தார்கள். 34அப்போது சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, குழந்தையின் தாயாகிய மரியாளுக்குச் சொன்னதாவது: “இஸ்ரயேலில் பலர் வீழ்வதற்கும், எழுச்சி அடைவதற்கும் காரணமாக இந்தக் குழந்தை நியமிக்கப்பட்டிருக்கிறது. இவர் பலரால் எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருப்பார். 35இதனால் அநேகருடைய இருதயத்தின் சிந்தனைகள் வெளிப்படுத்தப்படும். உனது ஆத்துமாவையும் ஒரு வாள் ஊடுருவிச் செல்லும்” என்றார்.
36ஆலயத்தில் அன்னாள் எனப்பட்ட ஒரு இறைவாக்கினளும் இருந்தாள். இவள் ஆசேர் கோத்திரத்தைச் சேர்ந்த பானுவேலின் மகள். இவள் மிகவும் வயது முதிர்ந்தவள்; தனது திருமணத்திற்குப் பின் ஏழு வருடங்களே தனது கணவனுடன் வாழ்ந்திருந்தாள். 37அதன் பின்னர் எண்பத்து நான்கு வயது வரைக்கும் அவள் விதவையாகவே இருந்தாள். அவள் ஒருபோதும் ஆலயத்தைவிட்டு விலகாமல், இரவும் பகலும் உபவாசத்துடனும் மன்றாடுதலுடனும் வழிபட்டுக் கொண்டிருந்தாள். 38அந்தவேளையில், அவள் அங்கு வந்து இறைவனுக்கு நன்றி செலுத்தி, எருசலேமின் மீட்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்த எல்லோருடனும், அந்தக் குழந்தையைக் குறித்துப் பேசினாள்.
39கர்த்தருடைய நீதிச்சட்டத்தின்படி செய்யவேண்டிய எல்லாவற்றையும் செய்து முடித்த பின்பு, யோசேப்பும் மரியாளும் கலிலேயாவில் அவர்கள் வசித்து வந்த, தங்கள் சொந்த ஊரான நாசரேத்துக்குத் திரும்பிப் போனார்கள். 40பிள்ளை வளர்ந்து, பலம்கொண்டு, இறையறிவோடு ஞானம் நிறைந்தவராய் இருந்தார்; இறைவனின் கிருபையும் அவர்மீது இருந்தது.
ஆலயத்தில் சிறுவன் இயேசு
41இயேசுவின் பெற்றோர், ஒவ்வொரு வருடமும் பஸ்கா பண்டிகையைக்#2:41 பஸ்கா பண்டிகை – இது யூதர்கள், எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து கிடைத்த தமது விடுதலையை நினைவுகூர்ந்து ஆசரிக்கும் ஒரு முக்கியமான பண்டிகையாகும். கொண்டாடுவதற்கு எருசலேமுக்குப் போவது வழக்கம். 42இயேசுவுக்குப் பன்னிரண்டு வயதாயிருந்தபோது, வழக்கத்தின்படியே அவர்கள் பண்டிகைக்கு ஏறிச்சென்றார்கள். 43பண்டிகை முடிந்து அவருடைய பெற்றோர் வீடு திரும்புகையில், சிறுவன் இயேசுவோ எருசலேமில் தங்கிவிட்டார். ஆனால் பெற்றோர் அதை அறியாதிருந்தார்கள். 44தங்களோடு வந்தவர்களுடன் அவரும் இருக்கின்றார் என்று நினைத்துக்கொண்டு, அவர்கள் ஒருநாள் முழுவதும் பயணம் செய்தார்கள். பின்பு அவர்கள் தங்களுடைய உறவினர் மத்தியிலும் நண்பர் மத்தியிலும் அவரைத் தேடத் தொடங்கினார்கள். 45அவர்கள் இயேசுவைத் தேடியும் காணாததால், அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். 46மூன்று நாட்களுக்குப் பின் அவர் ஆலயத்தில் இருப்பதைக் கண்டார்கள். அவர் நீதிச்சட்ட ஆசிரியர்களுடன் அமர்ந்து, அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டும், அவர்களிடம் கேள்விகளைக் கேட்டுக்கொண்டும் இருந்தார். 47அவர் சொன்னதைக் கேட்ட எல்லோரும், அவருடைய அறிவாற்றலைக் குறித்தும், அவர் கொடுத்த பதில்களைக் குறித்தும் வியப்படைந்தார்கள். 48அவருடைய பெற்றோர் அவரைக் கண்டபோது, அவர்களும் வியப்படைந்தார்கள். அவருடைய தாய் அவரிடம், “மகனே, ஏன் எங்களுக்கு இவ்வாறு செய்தாய்? உனது தந்தையும் நானும் மிகுந்த கவலையுடன் உன்னைத் தேடிக் கொண்டிருந்தோமே” என்றாள்.
49அதற்கு இயேசு, “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள், நான் எனது பிதாவின் வீட்டிலிருக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டார். 50அவர்களோ, அவர் தங்களுக்குச் சொன்னதை புரிந்துகொள்ளவில்லை.
51பின்பு அவர் அவர்களோடு நாசரேத்திற்குப் போய், அங்கே அவர்களுக்கு கட்டுப்பட்டிருந்தார். ஆனால் அவருடைய தாயோ, இவற்றையெல்லாம் தன் உள்ளத்தில் வைத்துக்கொண்டாள். 52இயேசு ஞானத்திலும் சரீரத்திலும் விருத்தியடைந்தார்; இறைவனுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வளர்ந்தார்.
Currently Selected:
லூக்கா 2: TRV
Highlight
Share
Copy

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.