யாக்கோபு 1
1
1இறைவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாயிருக்கிற யாக்கோபு,
வெவ்வேறு நாடுகளில் சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் எழுதுகிறதாவது:
வாழ்த்துகள்.
சோதனைகள்
2பிரியமானவர்களே, நீங்கள் பலவித விசுவாச கஷ்டங்களுக்கு உள்ளாகும் போதெல்லாம், அதை மிகுந்த சந்தோஷமானதாகவே கருதவேண்டுமென்று எண்ணிக்கொள்ளுங்கள். 3ஏனெனில் உங்கள் விசுவாசம் பரீட்சிக்கப்படும்போது, அது உங்களில் மனவுறுதியை உண்டாக்குகிறது என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 4மனவுறுதி உங்களில் முழுமையாய் செயலாற்றுகிறபொழுது, நீங்கள் முதிர்ச்சி பெற்றவர்களாயும், எதிலுமே குறைவுபடாது முழுநிறைவு பெற்றவர்களாயும் இருப்பீர்கள். 5உங்களில் யாராவது ஞானத்தில் குறைவுள்ளவராக இருந்தால், அவர்கள் இறைவனிடம் கேட்கவேண்டும். அப்பொழுது அது அவர்களுக்குக் கொடுக்கப்படும். ஏனெனில் இறைவன் குற்றங்குறை பாராமல், எல்லோருக்கும் தாராளமாய்க் கொடுக்கிறவராய் இருக்கிறார். 6ஆனாலும், நீங்கள் கேட்கும்போது, விசுவாசத்துடன் கேட்கவேண்டும், சந்தேகப்படக்கூடாது. ஏனெனில் சந்தேகப்படுகிறவர்கள், காற்றினால் அங்குமிங்கும் அடிக்கப்படுகிற கடலின் அலையைப் போலிருக்கிறார்கள். 7சந்தேகப்படுகிறவர்கள் தாங்கள் கர்த்தரிடமிருந்து எதையாவது பெறலாமென்று நினைக்கக்கூடாது; 8அப்படிப்பட்டவர்கள் இருமனமுடையவர்கள். அவர்கள் செய்வதிலெல்லாம் உறுதியற்றவர்களாய் இருக்கிறார்கள்.
9தாழ்ந்த நிலைமையில் இருக்கின்ற ஒரு சகோதரன் உயர்ந்த நிலைமையைக் குறித்து மேன்மைப்பாராட்டட்டும். 10செல்வந்தனாய் இருக்கின்ற சகோதரனோ, தாழ்மையுள்ள மனப்பான்மையைக்குறித்து மேன்மைப்பாராட்டட்டும். ஏனெனில் காட்டுப் பூவைப்போல் செல்வந்தன் மறைந்துபோவான். 11கடும் வெயிலுடன் சூரியன் மேலே எழும்ப, செடி வாடிப்போகிறது; அதன் பூக்களும் உதிர்ந்து விழுகின்றன, அதன் அழகும் அழிந்துபோகிறது. இவ்விதமாகவே செல்வந்தனும் தனது வழிகளில் வீழ்ச்சியடைவான்.
12கஷ்டங்கள் மத்தியில் மனவுறுதியுடன் நின்று வெற்றிகொள்ளும் மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன். ஏனெனில் அவன் கஷ்டங்களில் உறுதியாய் நின்றபின், இறைவன் தம்மில் அன்பாயிருக்கிறவர்களுக்கு கொடுப்பதாக வாக்குப்பண்ணியிருக்கிற ஜீவக்கிரீடத்தைப் பெற்றுக்கொள்வான்.
13சோதிக்கப்படும்போது, “இறைவன் என்னைச் சோதிக்கிறார்” என்று ஒருவனும் சொல்லக்கூடாது. ஏனெனில் இறைவன் தீமையினால் சோதிக்கப்படுகிறவரல்ல, அவர் யாரையும் அப்படிச் சோதிக்கிறவருமல்ல; 14ஆனால் ஒவ்வொருவனும் தனது சொந்தத் தீய ஆசையினாலேயே இழுப்புண்டும், கவரப்பட்டும் சோதிக்கப்படுகிறான். 15அப்பொழுது அந்த ஆசையானது கருத்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கின்றது; பாவம் முழு வளர்ச்சி பெறும்போது, அது மரணத்தை பிறப்பிக்கின்றது.
16எனக்கு பிரியமானவர்களே, ஏமாந்து போகவேண்டாம். 17நல்லதும் முழுநிறைவானதுமான நன்கொடை அனைத்தும், பரலோகத்திலிருக்கின்ற பிதாவினிடத்திலிருந்தே வருகின்றன. அவரே பரலோக வெளிச்சத்தின் பிதா, அவர் இடம் மாறும் நிழலைப்போல் மாறுகிறவரல்ல. 18பிதா படைத்தவை எல்லாவற்றிலும், நாம் முதற்கனிகளாய் இருக்கும்படி நம்மைத் தமது சித்தத்தின்படி, சத்திய வார்த்தையின் மூலமாக நமக்கு பிறப்பைக் கொடுத்தார்.
கேட்டலும் செயல்படுலும்
19பிரியமானவர்களே, நீங்கள் கவனிக்கவேண்டியது என்னவென்றால்: செவிகொடுத்துக் கேட்பதில் நீங்கள் துரிதமாயும், பேசுவதிலும் கோபிப்பதிலும் தாமதமாயும் இருக்கவேண்டும். 20ஏனெனில், இறைவன் நம்மில் விரும்பும் நீதியான வாழ்வை மனிதனுடைய கோபம் உண்டாக்குவதில்லை. 21எனவே, பரவியிருக்கின்ற எல்லா ஒழுக்கக்கேட்டையும் தீமையையும் உங்களைவிட்டு அகற்றுங்கள். நீங்களோ, உங்களுக்குள் நாட்டப்பட்டிருக்கும் வார்த்தையைத் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். அந்த வார்த்தையே உங்களை இரட்சிக்கும் வல்லமையுடையது.
22வார்த்தையை கேட்கிறவர்களாய் மட்டுமில்லாமல், அதன்படி செய்யுங்கள். இல்லையெனில், நீங்கள் உங்களையே ஏமாற்றிக்கொள்வீர்கள். 23வார்த்தையைக் கேட்டும் அதன்படி நடக்காதவன், தன்னுடைய முகத்தை கண்ணாடியில் பார்த்தும், 24தன்னில் இருந்த குறையை உடனே மறந்துபோகிற மனிதனுக்கு ஒப்பாயிருக்கிறான். 25ஆனால் நமக்கு விடுதலை கொடுக்கும் இந்த முழுநிறைவான சட்டத்தைக் கூர்ந்துகவனிக்கும் மனிதன், தான் கேட்டதை மறந்துவிடாமல், அதை கைக்கொண்டு தொடர்ந்து நடக்கவேண்டும். அப்படி நடந்தால், அவன் தன் செய்கையில் ஆசீர்வதிக்கப்படுவான்.
26யாராவது தங்களை பக்தியுள்ளவர்கள் என்று எண்ணினாலும், அவர்கள் தங்களுடைய நாவை அடக்காவிட்டால், தங்களையே ஏமாற்றிக்கொள்கிறார்கள். அவர்களுடைய பக்தியும் பயனற்றதே. 27கஷ்டப்படும் அநாதைகளையும் விதவைகளையும் பராமரிக்கிறதும், உலகத்தால் கறைபடாது தங்களைக் காத்துக்கொள்வதுமே, நம்முடைய பிதாவாகிய இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுகிற தூய்மையான, மாசற்ற பக்தியாயிருக்கிறது.
Currently Selected:
யாக்கோபு 1: TCV
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.