யாத்திராகமம் 28
28
ஆசாரியரின் உடைகள்
1“உன் சகோதரன் ஆரோனையும், அவன் மகன்களான நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் ஆகியோரையும் இஸ்ரயேலர் மத்தியிலிருந்து உன்னிடம் அழைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் ஆசாரியர்களாக எனக்கு ஊழியம் செய்யும்படி இதைச் செய்யவேண்டும். 2உன் சகோதரனாகிய ஆரோனுக்கு மதிப்பும், கனமும் கொடுக்கும்படி அவனுக்குப் பரிசுத்த உடைகளைச் செய்யவேண்டும். 3இவ்விதமான காரியங்களில், நான் ஞானத்தைக் கொடுத்திருக்கும் எல்லா திறமையுள்ள மனிதரிடமும் நீ பேசவேண்டும். ஆரோன் ஆசாரியனாக எனக்கு ஊழியம் செய்யும்படி அவனுடைய அர்ப்பணிப்புக்காக அவனுக்கான உடைகளைச் செய்யும்படி அவர்களுக்குச் சொல்லவேண்டும். 4அவர்கள் செய்யவேண்டிய உடைகள்: ஒரு மார்பு அணி, ஒரு ஏபோத், ஒரு மேலங்கி, நெய்யப்பட்ட ஒரு உள் அங்கி, ஒரு தலைப்பாகை, ஒரு இடைப்பட்டி ஆகியவையே. உன் சகோதரன் ஆரோனும், அவன் மகன்களும் எனக்கு ஆசாரியர்களாக ஊழியம் செய்யும்படி, திறமையுள்ளவர்கள் இந்த பரிசுத்த உடைகளைத் தயாரிக்க வேண்டும். 5அவர்கள் தங்கம், நீலம், ஊதா, கருஞ்சிவப்பு, மென்பட்டு நூல்களை பயன்படுத்த வேண்டும்.
ஏபோத்
6“தங்கத்தையும், நீலநூலையும், ஊதா நூலையும், கருஞ்சிவப்பு நூலையும், திரிக்கப்பட்ட மென்பட்டையும் கொண்டு திறமையான கைவினைக் கலைஞனின் வேலைப்பாடாய் ஏபோத்தைச் செய்யவேண்டும். 7அதை அணிந்துகொள்ளத்தக்க விதமாய் அதன் இரண்டு முனைகளிலும் தோளுக்கான இரண்டு பட்டிகள் அதில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். 8அதன் நுட்பமாக நெய்யப்பட்ட அதன் இடைப்பட்டியும் அதைப் போலவே இருக்கவேண்டும். அது ஏபோத்துடன் ஒரே இணைப்பாக தங்கம், நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல், திரித்த மென்பட்டு ஆகியவற்றால் செய்யப்படவேண்டும்.
9“இரண்டு கோமேதகக் கற்களை எடுத்து அவற்றில் இஸ்ரயேலின் மகன்களின் பெயர்களைச் செதுக்கு. 10அவர்கள் பிறந்த வரிசையின்படியே ஆறு மகன்களின் பெயர்கள் ஒரு கல்லிலும், மற்ற ஆறு மகன்களின் பெயர்கள் மற்றொரு கல்லிலும் செதுக்கப்பட வேண்டும். 11இரத்தினங்களில் முத்திரையை வெட்டிச் செய்வதுபோல், அந்த இரண்டு கற்களிலும் இஸ்ரயேலின் மகன்களின் பெயர்களைச் செதுக்கி வைக்கவேண்டும். பின்பு அந்தக் கற்களை தங்கச்சரிகை வேலைப்பாடுகளில் பதிக்கவேண்டும். 12பின்பு அவற்றை இஸ்ரயேலின் மகன்களின் ஞாபகார்த்தக் கற்களாக ஏபோத்தின் தோள் துண்டுகளில் கட்டவேண்டும். ஆரோன் இந்தப் பெயர்களை யெகோவாவுக்கு முன்பாக ஒரு ஞாபகார்த்தமாய் தன் தோள்களில் சுமக்கவேண்டும். 13தங்கச்சரிகை வேலைப்பாடுகளைச் செய்து, 14அத்துடன் சுத்தத் தங்கத்தினால் கயிறுபோல பின்னப்பட்ட இரண்டு சங்கிலிகளைச் செய்து, அவற்றை அந்தச் சரிகை வேலைப்பாட்டுடன் தொடுத்துக்கொள்ள வேண்டும்.
மார்பு அணி
15“திறமையான கைவினைக் கலைஞனின் வேலைப்பாடாக தீர்மானங்கள் எடுப்பதற்கான ஒரு மார்பு அணியைச் செய்யவேண்டும். ஏபோத்தைப்போலவே அதைத் தங்கம், நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல், திரித்த மென்பட்டு ஆகியவற்றைக்கொண்டு அதைச் செய்யவேண்டும். 16அது ஒரு சாண் நீளம், ஒரு சாண் அகலம் கொண்ட சதுரமாகவும், இரண்டாக மடிக்கப்பட்டதாகவும் இருக்கவேண்டும். 17அதன்மேல் நான்கு வரிசைகளில் இரத்தினக் கற்களைப் பதிக்கவேண்டும். முதல் வரிசையில் பத்மராகம், புஷ்பராகம், மாணிக்கம்; 18இரண்டாம் வரிசையில் மரகதம், இந்திரநீலம், வைரம்; 19மூன்றாம் வரிசையில் கெம்பு, வைடூரியம், சுகந்தி; 20நான்காம் வரிசையில் படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி ஆகியவை இருக்கவேண்டும். அவற்றைத் தங்கச்சரிகை வேலையாக பதித்து வைக்கவேண்டும். 21இஸ்ரயேலின் மகன்களின் பெயர்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கற்களாக, பன்னிரண்டு கற்கள் இருக்கவேண்டும். பன்னிரண்டு கோத்திரங்களின் பெயர்களும் ஒவ்வொரு கல்லிலும் முத்திரையைப்போல் பொறிக்கப்பட வேண்டும்.
22“மார்பு அணிக்காக கயிறுபோல் பின்னப்பட்ட ஒரு சங்கிலியைச் சுத்தத் தங்கத்தினால் செய்யவேண்டும். 23அதற்காக இரண்டு தங்க வளையங்களைச் செய்து மார்பு அணியின் இரண்டு மூலைகளிலும் தொடுக்கவேண்டும். 24அந்த இரண்டு தங்கச்சங்கிலிகளையும் மார்பு அணியின் மூலைகளிலுள்ள இரண்டு வளையங்களோடு தொடுக்கவேண்டும். 25சங்கிலிகளின் மற்ற இரண்டு முனைகளையும் ஏபோத்தின் முன்பக்கத்தில் உள்ள தோள்பட்டியுடன் இணைந்திருக்கும் சரிகை வேலைப்பாடுகளுடன் தொடுக்கவேண்டும். 26இரண்டு தங்க வளையங்களைச் செய்து, அவற்றை ஏபோத்துடன் ஒட்டியிருக்கும் மார்பு அணியின் உட்புற விளிம்பில், இரண்டு மூலைகளிலும் தொடுக்கவேண்டும். 27வேறு இரண்டு தங்க வளையங்களைச் செய்து, ஏபோத்திலுள்ள இடைப்பட்டிக்கு மேலாக உள்ள இணைப்புக்குச் சமீபமாய், ஏபோத்தின் முன்பக்கத்தில் இருக்கிற தோள்பட்டிகளின் அடிப்பக்கத்தில் தொடுக்கவேண்டும். 28மார்பு அணி ஏபோத்தில் இருந்து விலகாதபடி, அதை இடைப்பட்டியுடன் இணைத்து, மார்பு அணியின் வளையங்களை ஏபோத்தின் வளையங்களுடன் நீலநிற நாடாவினால் இணைத்துக் கட்டவேண்டும்.
29“ஆரோன் பரிசுத்த இடத்திற்குள் போகும்போதெல்லாம், இஸ்ரயேலின் மகன்களின் பெயர்களை தன் இருதயத்திற்கு மேலுள்ள தீர்மானத்திற்கான மார்பு அணியின்மேல் நிரந்தரமான ஒரு ஞாபகச்சின்னமாக, யெகோவாவுக்குமுன் சுமப்பான். 30யெகோவா முன்னிலையில் ஆரோன் வரும்போதெல்லாம், அவனுடைய இருதயத்தின்மேல் இருக்கும்படி ஊரீம், தும்மீம்#28:30 தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்வதற்காக பயன்படுத்தப்பட்ட புனித பொருள்களாகும். ஆகியவற்றை அந்த மார்பு அணியில் வைக்கவேண்டும். இவ்வாறு ஆரோன் இஸ்ரயேலருக்கான தீர்மானங்களைச் செய்யும் சாதனங்களை எப்பொழுதும் யெகோவா முன்னிலையில் தன் இருதயத்திற்கு மேல் சுமப்பான்.
மற்ற ஆசாரிய உடைகள்
31“ஏபோத்துடன் அணியும் மேலங்கி முழுவதும், நீலநிறத் துணியினாலேயே செய்யப்படவேண்டும். 32அதன் நடுப்பகுதியில் தலை நுழையும் துவாரம் இருக்கவேண்டும். அந்த துவாரம் கிழிந்து போகாதபடி, அதைச் சுற்றிலும் கழுத்துப்பட்டியைப் போன்ற ஒரு நெய்யப்பட்ட விளிம்பு இருக்கவேண்டும். 33மேலங்கிக்குக் கீழே ஓரத்தைச் சுற்றிலும் நீலநூல், ஊதாநூல், சிவப்புநூல் ஆகியவற்றால் மாதுளம் பழங்களைச் செய்து, அவைகளுக்கு இடையிடையே தங்க மணிகளைத் தொங்கவிட வேண்டும். 34மேலங்கிக்குக் கீழே ஓரத்தைச் சுற்றிலும் தங்க மணியும், மாதுளம் பழமும் மாறிமாறித் தொங்கவிட வேண்டும். 35ஆரோன் தன் ஆசாரிய ஊழியத்தைச் செய்யப்போகும்போது இந்த அங்கியை அணிந்துகொள்ள வேண்டும். யெகோவாவுக்குமுன் பரிசுத்த இடத்திற்குள் போகும்போதும், அங்கிருந்து வரும்போதும், அந்த மணியின் சத்தம் கேட்கும். எனவே அவன் சாகாதிருப்பான்.
36“சுத்தத் தங்கத்தினால் தகடு ஒன்றைச் செய்து அதில்,
யெகோவாவுக்குப் பரிசுத்தம்
என்று ஒரு முத்திரையைப்போல பொறிக்கவேண்டும்.
37“அதைத் தலைப்பாகையுடன் சேர்த்துக் கட்டும்படி ஒரு நீலநிற நாடாவை அதில் இணைக்க வேண்டும். அது தலைப்பாகையின் முன்பக்கத்தில் இருக்கவேண்டும். 38அது ஆரோனுடைய நெற்றியில் இருக்கவேண்டும். இஸ்ரயேலர் அர்ப்பணிக்கும் பரிசுத்த கொடைகள் எதுவானாலும், அவற்றுடன் சம்பந்தப்பட்ட குற்றத்தை அவன் சுமப்பான். அந்தக் கொடைகள் யெகோவாவினால் ஏற்றுக்கொள்ளப்படும்படி, அந்தத்தகடு அவனுடைய நெற்றியின்மேல் தொடர்ந்து இருக்கும்.
39“மென்பட்டு நூலினால் உள் அங்கியை நெய்து, மென்பட்டினால் தலைப்பாகையையும் செய்யவேண்டும். இடைப்பட்டி சித்திரத்தையற்காரனின் வேலையாய் இருக்கவேண்டும். 40ஆரோனுடைய மகன்களுக்கு மதிப்பையும், கனத்தையும் கொடுப்பதற்கு அவர்களுக்கும் உள் அங்கிகளையும், இடைப்பட்டிகளையும், அத்துடன் குல்லாக்களையும் செய்யவேண்டும். 41நீ அந்த உடைகளை உன் சகோதரன் ஆரோனுக்கும், அவன் மகன்களுக்கும் அணிவித்தபின், அவர்களை அபிஷேகித்து நியமனம் செய்யவேண்டும். அவர்கள் எனக்கு ஆசாரியர்களாக ஊழியம் செய்யும்படி, அவர்களை அர்ப்பணம் செய்யவேண்டும்.
42“அவர்களுடைய உடலை மூடுவதற்கான கால் சட்டையை மென்பட்டினால் செய்யவேண்டும். அவை இடுப்பிலிருந்து தொடைவரை இருக்கவேண்டும். 43ஆரோனும், அவன் மகன்களும் சபைக் கூடாரத்திற்குள் போகும்போதோ அல்லது பரிசுத்த இடத்தில் ஆசாரிய ஊழியம் செய்யும்படி பலிபீடத்தை நெருங்கும்போதோ, குற்றம் உள்ளவர்களாகிச் சாகாதபடி, அவற்றை அணிந்திருக்க வேண்டும்.
“இது ஆரோனுக்கும், அவனுக்குப் பின்வரும் அவன் சந்ததிகளுக்கும் நிரந்தர நியமமாய் இருக்கும்.”
Currently Selected:
யாத்திராகமம் 28: TCV
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.