YouVersion Logo
Search Icon

2 நாளா 31

31
அத்தியாயம் 31
1இவைகளெல்லாம் முடிந்தபின்பு, வந்திருந்த இஸ்ரவேலர்கள் எல்லோரும் யூதாவின் பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், யூதா பென்யமீன் எங்கும் எப்பிராயீமிலும் மனாசேயிலும் இருந்த சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மேடைகளையும் பீடங்களையும் இடித்து, அவைகளையெல்லாம் இடித்துப்போட்டார்கள்; பின்பு இஸ்ரவேல் மக்கள் எல்லோரும் அவரவர் தங்கள் ஊர்களிலிருக்கிற தங்கள் சொந்த இருப்பிடத்திற்குத் திரும்பினார்கள்.
ஆராதனைக்காக கொடுக்கப்பட்ட பங்களிப்புகள்
2எசேக்கியா, ஆசாரியர்கள் லேவியருடைய குழுக்களை அவர்கள் வரிசைகளின்முறையேயும், ஒவ்வொருவரையும் அவர்கள் ஊழியத்தின்முறையேயும் ஒழுங்குபடுத்தி, ஆசாரியர்களையும் லேவியர்களையும், சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தவும், யெகோவாவுடைய ஆலயத்தின் வாசல்களில் ஊழியம்செய்து துதித்து ஸ்தோத்திரிக்கவும் ஒழுங்குபடுத்தினான். 3ராஜா யெகோவாவுடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறமுறையில் காலைமாலைகளில் செலுத்தவேண்டிய சர்வாங்க தகனபலிகளுக்கும், ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் பண்டிகைகளிலும் செலுத்தவேண்டிய சர்வாங்க தகனபலிகளுக்கும் தன் சொத்துக்களிலிருந்து எடுத்துத் தன் பங்கைக் கொடுத்தான். 4ஆசாரியர்களும் லேவியர்களும் யெகோவாவுடைய நியாயப்பிரமாணத்தை உற்சாகமாகக் கைக்கொள்ள, அவர்களுக்குரிய பாகத்தைக் கொடுக்க மக்களுக்கும் எருசலேமின் குடிகளுக்கும் கட்டளையிட்டான். 5இந்த வார்த்தை பிரபலமானபோது, இஸ்ரவேல் மக்கள் தானியத்திலும், திராட்சைரசத்திலும், எண்ணெயிலும், தேனிலும், நிலத்தின் எல்லா வரவிலும் முதற்பலன்களைத் திரளாகக் கொண்டுவந்து, சகலத்திலும் தசமபாகத்தைப் பரிபூரணமாகக் கொடுத்தார்கள். 6யூதாவின் பட்டணங்களில் குடியிருந்த இஸ்ரவேல் வம்சத்தாரும், யூதா வம்சத்தாரும், மாடுகளிலும் ஆடுகளிலும் தசமபாகத்தையும், தங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பரிசுத்தம் செய்யப்பட்டவைகளில் தசமபாகத்தையும் கொண்டுவந்து குவியல் குவியலாக வைத்தார்கள். 7மூன்றாம் மாதத்தில் குவியல் செய்யத்துவங்கி ஏழாம் மாதத்தில் முடித்தார்கள். 8எசேக்கியாவும் பிரபுக்களும் வந்து, அந்தக் குவியல்களைப் பார்க்கும்போது, யெகோவாவுக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, அவருடைய மக்களாகிய இஸ்ரவேலைப் புகழ்ந்தார்கள். 9அந்தக் குவியல்களைக் குறித்து எசேக்கியா, ஆசாரியர்களையும் லேவியர்களையும் விசாரித்தபோது, 10சாதோக்கின் சந்ததியானாகிய அசரியா என்னும் பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: இந்தக் காணிக்கையைக் யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரத் தொடங்கினதுமுதல் நாங்கள் சாப்பிட்டுத் திருப்தியடைந்தோம்; இன்னும் மீதம் இருக்கிறது; யெகோவா தம்முடைய மக்களை ஆசீர்வதித்ததால் இந்தத் திரளான தானியக் குவியல் மீந்திருக்கிறது என்றான். 11அப்பொழுது எசேக்கியா யெகோவாவுடைய ஆலயத்தில் சேமிப்புக் கிடங்குகளை ஆயத்தப்படுத்தச் சொன்னான். 12அவர்கள் அவைகளை ஆயத்தப்படுத்தினபின்பு, அவைகளிலே காணிக்கைகளையும், தசம பாகத்தையும், பரிசுத்தம்செய்யப்பட்டவைகளையும் உண்மையாக எடுத்துவைத்தார்கள்; அவைகளின்மேல் லேவியனாகிய கொனனியா தலைவனும், அவன் தம்பியாகிய சிமேயி இரண்டாவதுமாக இருந்தான். 13ராஜாவாகிய எசேக்கியாவும், தேவனுடைய ஆலய விசாரணைக்காரனாகிய அசரியாவும் செய்த கட்டளையின்படியே, யெகியேலும், அசசியாவும், நாகாத்தும், ஆசகேலும், யெரிமோத்தும், யோசபாத்தும், ஏலியேலும், இஸ்மகியாவும், மாகாத்தும், பெனாயாவும், கொனனியாவின் கீழும் அவன் தம்பியாகிய சிமேயியின் கீழும் விசாரிப்புக்காரர்களாக இருந்தார்கள். 14கிழக்குவாசலைக் காக்கிற இம்னாவின் மகனாகிய கோரே என்னும் லேவியன், யெகோவாவுக்குச் செலுத்தப்பட்ட காணிக்கைகளையும் மகா பரிசுத்தமானவைகளையும் பங்கிட, தேவனுக்கு செலுத்தும் உற்சாகக் காணிக்கைகள்மேல் அதிகாரியாயிருந்தான். 15அவனுடைய கைக்கு உதவியாக ஆசாரியர்களின் பட்டணங்களில் குழுக்களின் முறையிலிருக்கிற தங்கள் சகோதரர்களிலே பெரியவனுக்கும் சிறியவனுக்கும் சரிசமமாகக் கொடுப்பதற்கு, உண்மையுள்ளவர்களாக எண்ணப்பட்ட ஏதேனும், மின்யமீனும், யெசுவாவும், செமாயாவும், அமரியாவும், செக்கனியாவும் ஏற்படுத்தப்பட்டார்கள். 16வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட மூன்று வயதுமுதல், அதற்கு மேற்பட்ட ஆண்பிள்ளைகளைத்தவிர, யெகோவாவுடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கிற அவரவருக்கும் தங்கள் குழுக்களின்படியே, தங்கள் முறைகளிலே தாங்கள் செய்கிற தங்கள் பணிவிடைக்குத்தக்கதாக அநுதின சம்பளம் கொடுக்கப்பட்டது. 17தங்கள் முன்னோர்களின் வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட தங்கள் குழுக்களின்படியே தங்கள் முறைகளிலிருக்கிற இருபது வயதுமுதல், அதற்கு மேற்பட்ட ஆசாரியர்களுக்கும், லேவியர்களுக்கும், 18அவர்களுடைய எல்லாக் கூட்டத்தின் அட்டவணையிலும் எழுதப்பட்ட அவர்களுடைய எல்லாக் குழந்தைகளுக்கும், மனைவிகளுக்கும், மகன்களுக்கும், மகள்களுக்கும் பங்கு கொடுத்தார்கள்; அவர்கள் பரிசுத்தமானதை உண்மையின்படி பரிசுத்தமாக விசாரித்தார்கள். 19ஆசாரியர்களில் அனைத்து ஆண்பிள்ளைகளுக்கும் லேவியர்களுக்குள்ளே அட்டவணையில் எழுதப்பட்டவர்கள் எல்லோருக்கும் சம்பளம் கொடுக்க, ஆசாரியர்களுடைய ஒவ்வொரு பட்டணத்தைச்சார்ந்த வெளிநிலங்களிலும் ஆரோன் வம்சத்தாரில் பேர்பேராகக் குறிக்கப்பட்ட மனிதர்கள் இருந்தார்கள். 20இந்த முறையில் எசேக்கியா யூதாவெங்கும் நடப்பித்து, தன் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நன்மையும் செம்மையும் உண்மையுமானதைச் செய்தான். 21அவன் தேவனுடைய ஆலயத்தின் வேலையிலும், தன் தேவனைத் தேடும்படிக்கு நியாயப்பிரமாணத்திற்கும் கற்பனைக்கும் அடுத்த காரியத்திலும் என்ன செய்யத் தொடங்கினானோ, அதையெல்லாம் தன் முழு இருதயத்தோடும் செய்து வெற்றிபெற்றான்.

Currently Selected:

2 நாளா 31: IRVTam

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for 2 நாளா 31