சங்கீதம் 143:4-11

சங்கீதம் 143:4-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆகவே எல்லா நம்பிக்கையையும் இழந்து என் ஆவி எனக்குள் சோர்ந்துபோகிறது; பயத்தால் என் இருதயம் கலங்குகிறது. நான் முந்தின நாட்களை நினைக்கிறேன்; உமது செயல்களையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் செயல்களை யோசிக்கிறேன். நான் உம்மை நோக்கி என் கைகளை விரிக்கிறேன்; வறண்ட நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மேல் தாகம் கொண்டிருக்கிறது. யெகோவாவே, சீக்கிரமாய் எனக்குப் பதில் தாரும்; என் உள்ளம் சோர்ந்துபோகிறது; உமது முகத்தை என்னிடமிருந்து மறையாதேயும்; இல்லாவிட்டால், நான் மரணக் குழியில் இறங்குகிறவர்களைப் போலாகிவிடுவேன். காலை வேளையானது உமது உடன்படிக்கையின் அன்பின் செய்தியைக் கொண்டுவரட்டும், ஏனெனில் நான் என் நம்பிக்கையை உம்மிலேயே வைத்திருக்கிறேன்; நான் போகவேண்டிய வழியை எனக்குக் காண்பியும், ஏனெனில் என் உயிரை உம்மிடத்தில் ஒப்படைக்கிறேன். யெகோவாவே, என் பகைவரிடமிருந்து என்னைத் தப்புவியும்; ஏனெனில் நான் உமக்குள் என்னை மறைத்துக்கொள்கிறேன். நீரே என் இறைவன்; ஆதலால் உமது சித்தத்தைச் செய்ய எனக்குப் போதியும்; உமது நல்ல ஆவியானவர் என்னை நல்வழியில் நடத்துவாராக. யெகோவாவே, உமது பெயரின் மகிமைக்காக என் வாழ்வைக் காத்துக்கொள்ளும்; உமது நியாயத்தினிமித்தம் வேதனையிலிருந்து என்னை விடுவியும்.

சங்கீதம் 143:4-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

என்னுடைய ஆவி என்னில் தியங்குகிறது; என்னுடைய இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது. ஆரம்பநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் செயல்களை யோசிக்கிறேன். என்னுடைய கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்; வறண்ட நிலத்தைப்போல் என்னுடைய ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது. (சேலா) யெகோவாவே, சீக்கிரமாக எனக்குச் செவிகொடும், என்னுடைய ஆவி சோர்ந்து போகிறது; நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு, உமது முகத்தை எனக்கு மறைக்காமல் இரும். அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கச்செய்யும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன். யெகோவாவே, என்னுடைய எதிரிகளுக்கு என்னைத் தப்புவியும்; உம்மைப் புகலிடமாகக் கொள்ளுகிறேன். உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்தட்டும். யெகோவாவே, உம்முடைய பெயரினிமித்தம் என்னை உயிர்ப்பியும்; உம்முடைய நீதியின்படி என்னுடைய ஆத்துமாவை பிரச்சனைகளுக்கு நீங்கலாக்கிவிடும்.

சங்கீதம் 143:4-11 பரிசுத்த பைபிள் (TAERV)

நான் எல்லாவற்றையும் விட்டுவிடத் துணிகிறேன். என் தைரியத்தை நான் இழந்துகொண்டிருக்கிறேன். ஆனால் பல்லாண்டுகளுக்கு முன் நிகழ்ந்த காரியங்களை நான் நினைவுக்கூருகிறேன். நீர் செய்த பலக் காரியங்களையும் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். உமது மிகுந்த வல்லமையால் நீர் செய்தக் காரியங்களைக் குறித்து நான் பேசிக்கொண்டிருக்கிறேன்! கர்த்தாவே, நான் என் கரங்களைத் தூக்கி, உம்மிடம் ஜெபம் செய்கிறேன். வறண்ட நிலம் மழைக்காக எதிர் நோக்கியிருப்பதைப்போல நான் உமது உதவிக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன். விரையும், கர்த்தாவே, எனக்கு பதில் தாரும். நான் என் தைரியத்தை இழந்தேன். என்னிடமிருந்து அகன்று திரும்பிவிடாதேயும். கல்லறையில் மாண்டுகிடக்கும் மரித்தோரைப்போன்று நான் மரிக்கவிடாதேயும். கர்த்தாவே, இக்காலையில் உமது உண்மை அன்பை எனக்குக் காட்டும். நான் உம்மை நம்புகிறேன். நான் செய்யவேண்டியவற்றை எனக்குக் காட்டும். நான் என் உயிரை உமது கைகளில் தருகிறேன். கர்த்தாவே, நான் பாதுகாப்பு நாடி உம்மிடம் வருகிறேன். என் பகைவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். நான் செய்யவேண்டுமென நீர் விரும்புகின்றவற்றை எனக்குக் காட்டும். நீரே என் தேவன். கர்த்தாவே, என்னை வாழவிடும். அப்போது ஜனங்கள் உமது நாமத்தைத் துதிப்பார்கள். நீர் உண்மையாகவே நல்லவரென்பதை எனக்குக் காட்டும். என் பகைவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.

சங்கீதம் 143:4-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

என் ஆவி என்னில் தியங்குகிறது; என் இருதயம் எனக்குள் சோர்ந்து போகிறது. பூர்வநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் கிரியைகளை யோசிக்கிறேன். என் கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்; வறண்ட நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. (சேலா.) கர்த்தாவே, சீக்கிரமாய் எனக்குச் செவிகொடும், என் ஆவி தொய்ந்து போகிறது; நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு, உமது முகத்தை எனக்கு மறையாதேயும். அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். கர்த்தாவே, என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும்; உம்மைப் புகலிடமாகக் கொள்ளுகிறேன். உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக. கர்த்தாவே, உம்முடைய நாமத்தினிமித்தம் என்னை உயிர்ப்பியும்; உம்முடைய நீதியின்படி என் ஆத்துமாவை இடுக்கத்திற்கு நீங்கலாக்கிவிடும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்