ஆதியாகமம் 21:9-19

ஆதியாகமம் 21:9-19 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆனாலும், எகிப்தியப் பெண்ணான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற மகன், தன் மகனைக் கேலி பண்ணுகிறதை சாராள் கண்டாள். அப்பொழுது அவள் ஆபிரகாமிடம், “இந்த அடிமைப் பெண்ணையும் அவள் மகனையும் வெளியே அனுப்பிவிடும்; உரிமைச்சொத்தில் இந்த அடிமைப்பெண்ணின் மகன் என் மகன் ஈசாக்குடன் சொத்துரிமையை ஒருபோதும் பகிர்ந்துகொள்ளக் கூடாது” என்றாள். தன் மகனைக் குறித்த இந்தக் காரியம் ஆபிரகாமை வெகுவாய்த் துயரப்படுத்தியது. அப்பொழுது இறைவன் ஆபிரகாமிடம், “அந்தச் சிறுவனையும், உன் பணிப்பெண்ணையும் குறித்து அதிகம் கவலைப்படாதே. சாராள் சொல்வதை எல்லாம் கேள், ஏனெனில் ஈசாக்கின் மூலமே உனக்கு சந்ததிகள் உண்டாகும். பணிப்பெண்ணின் மகனும் உன் சந்ததியானபடியால், அவனையும் ஒரு நாடாக்குவேன்” என்றார். மறுநாள் அதிகாலையில் ஆபிரகாம் கொஞ்சம் உணவையும், ஒரு தோல் குடுவையில் தண்ணீரையும் எடுத்து ஆகாரிடம் கொடுத்தான். அவன் அவற்றை அவளுடைய தோளில் வைத்து, மகனுடன் அவளை அனுப்பிவிட்டான். அவள் தன் வழியே போய் பெயெர்செபாவின் வனாந்திரத்தில் அலைந்து திரிந்தாள். தோல் குடுவையின் தண்ணீர் முடிந்ததும், அவள் புதர்ச்செடிகள் ஒன்றின்கீழ் தன் மகனை விட்டு, “பிள்ளை சாகிறதை என்னால் பார்க்க முடியாது” என்று சொல்லி அவன் இருக்கும் இடத்திலிருந்து ஒரு அம்பு பாயும் தூரத்தில் போய் உட்கார்ந்து, அவள் சத்தமாய் அழத்தொடங்கினாள். இறைவன் பிள்ளை அழும் சத்தத்தைக் கேட்டார், இறைவனின் தூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு, “ஆகாரே, நடந்தது என்ன? பயப்படாதே; அங்கே உன் மகன் அழும் சத்தத்தை இறைவன் கேட்டார். அவனைத் தூக்கி, அவனைக் கையில் பிடித்துக்கொண்டு போ. அவனை ஒரு பெரிய நாடாக்குவேன்” என்றார். பின்பு இறைவன் அவளுடைய கண்களைத் திறந்தார், அப்போது அவள் தண்ணீருள்ள ஒரு கிணற்றைக் கண்டாள். அவள் தன் குடுவையில் நீரை நிரப்பி தன் மகனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.

ஆதியாகமம் 21:9-19 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு எகிப்து தேசத்தைச் சேர்ந்த ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற மகன் கேலி செய்கிறதை சாராள் கண்டு, ஆபிரகாமை நோக்கி: “இந்த அடிமைப்பெண்ணையும் அவளுடைய மகனையும் துரத்திவிடும்; இந்த அடிமைப்பெண்ணின் மகன் என் மகனாகிய ஈசாக்கோடு வாரிசாக இருப்பதில்லை” என்றாள். தன் மகனைக்குறித்துச் சொல்லப்பட்ட இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாக இருந்தது. அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி: “அந்தச் சிறுவனையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாக இருக்கவேண்டாம்; ஈசாக்கின் வழியாக உன் சந்ததி தோன்றும்; ஆகவே சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள். அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாக இருப்பதால், அவனையும் ஒரு தேசமாக்குவேன்” என்றார். ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு தோல்பையில் தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்து, சிறுவனையும் ஒப்படைத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுப்போய், பெயர்செபாவின் வனாந்திரத்திலே அலைந்து திரிந்தாள். தோல்பையிலிருந்த தண்ணீர் தீர்ந்தபின்பு, அவள் சிறுவனை ஒரு செடியின் கீழே விட்டு, “சிறுவன் தாகத்தினால் சாகிறதை நான் பார்க்கமாட்டேன்” என்று, அவனைவிட்டு அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள். தேவன் சிறுவனின் சத்தத்தைக் கேட்டார்; தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு: “ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, சிறுவன் இருக்கும் இடத்தில் தேவன் அவனுடைய சத்தத்தைக் கேட்டார். நீ எழுந்து சிறுவனை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக்கொண்டுபோ, அவனைப் பெரிய தேசமாக்குவேன் என்றார். தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு கிணற்றைக் கண்டு, போய், தோல்பையில் தண்ணீரை நிரப்பி, சிறுவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.

ஆதியாகமம் 21:9-19 பரிசுத்த பைபிள் (TAERV)

ஆகார் என்னும் எகிப்திய அடிமைப்பெண் ஆபிரகாமின் முதல் குமாரனைப் பெற்றிருந்தாள். சாராள் அவனைப் பார்த்தாள். அவன் கேலிச் செய்துகொண்டிருப்பதைக் கண்டு அவளுக்கு அவன் மேல் எரிச்சல் வந்தது. சாராள் ஆபிரகாமிடம், “இந்த அடிமைப் பெண்ணையும் அவள் குமாரனையும் வெளியே தள்ளும். நாம் சாகும்போது நமக்குரிய அனைத்தையும் ஈசாக்கே பெற வேண்டும். அந்த அடிமைப் பெண்ணின் குமாரன் அதில் பங்கு போடுவதை நான் விரும்பவில்லை” என்றாள். இது ஆபிரகாமுக்கு துயரத்தைத் தந்தது. அவன் தன் குமாரன் இஸ்மவேலைப்பற்றிக் கவலைப்பட ஆரம்பித்தான். ஆனால் தேவன் ஆபிரகாமிடம், “அடிமைப் பெண்ணையும், அவள் குமாரனையும்பற்றிக் கவலைப்படாதே, சாராள் விரும்புவது போலவே செய். ஈசாக்கு ஒருவனே உனது வாரிசு. ஆனால் நான் உனது அடிமைப் பெண்ணின் குமாரனையும் ஆசீர்வதிப்பேன். அவனும் உன் குமாரன் என்பதால் அவனிடமிருந்தும் ஒரு பெரிய தேசத்தை உருவாக்குவேன்” என்றார். மறுநாள் அதிகாலையில் ஆபிரகாம் கொஞ்சம் தண்ணீரும், உணவும் எடுத்து அவற்றை ஆகாரிடம் கொடுத்தான். அவள் அவற்றை எடுத்துக்கொண்டு தன் மகனோடு வெளியேறி, பெயெர்செபா பாலைவனத்தில் அலைந்து திரிந்தாள். கொஞ்ச நேரம் கழிந்ததும் தண்ணீர் தீர்ந்து போனதால் குடிப்பதற்கு எதுவும் இல்லாமல் போயிற்று. எனவே ஆகார் தன் குமாரனை ஒரு புதரின் அடியில் விட்டாள். ஆகார் கொஞ்ச தூரம் போய் உட்கார்ந்தாள். அவள் தன் குமாரன் தண்ணீர் இல்லாமலேயே மரித்துப்போவான் என்று எண்ணினாள். அவன் மரிப்பதை அவள் பார்க்க விரும்பவில்லை. எனவே அவள் அங்கே உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள். சிறுவனின் அழுகையை தேவன் கேட்டார். தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு: “ஆகாரே! உனக்கு என்ன நடந்தது? அஞ்ச வேண்டாம், கர்த்தர் சிறுவனின் அழுகையைக் கேட்டார். போய் சிறுவனுக்கு உதவி செய், அவனது கையைப் பிடித்து வழிநடத்திச்செல். நான் அவனை ஏராளமான ஜனங்களுக்குத் தந்தையாக்குவேன்” என்றார். பிறகு தேவன், ஆகாரை ஒரு கிணற்றைப் பார்க்கும்படிச் செய்தார். அவள் அந்த கிணற்றின் அருகே சென்று, தன் பை நிறைய தண்ணீரை நிரப்பியதுடன், தன் குமாரனுக்கும் குடிக்கக் கொடுத்தாள்.

ஆதியாகமம் 21:9-19 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு எகிப்து தேசத்தாளாகிய ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரன் பரியாசம்பண்ணுகிறதைச் சாராள் கண்டு, ஆபிரகாமை நோக்கி: இந்த அடிமைப் பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும்; இந்த அடிமைப்பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்திரவாளியாயிருப்பதில்லை என்றாள். தன் மகனைக்குறித்துச் சொல்லப்பட்ட இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது. அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி: அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள். அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால், அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார். ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுப்போய், பெயர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள். துருத்தியிலிருந்த தண்ணீர் செலவழிந்தபின்பு, அவள் பிள்ளையை ஒரு செடியின் கீழே விட்டு, பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று, எதிராக அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள். தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார்; தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு: ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார். நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக் கொண்டுபோ, அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார். தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்