ஓசியா 12

12
1எப்பிராயீம் காற்றை மேய்கிறான்,
நாள் முழுவதும் கொண்டல் காற்றைப் பின்தொடர்ந்து செல்கிறான்.
அவன் பொய்களையும், வன்செயல்களையும் பெருகச் செய்கிறான்.
அவன் அசீரியாவோடு ஒப்பந்தம் செய்கின்றான்;
எகிப்துக்கு ஒலிவ எண்ணெய் அனுப்புகிறான்.
2யூதாவுக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டு கர்த்தரிடம் இருக்கின்றது.
யாக்கோபின் மக்களை அவர்களுடைய வழிகளுக்குத்தக்கதாக அவர் தண்டிப்பார்;
அவர்களுடைய செயல்களுக்கேற்றபடி அவர்களுக்குப் பிரதிபலன் செய்வார்.
3யாக்கோபு தாயின் கருப்பையிலேயே,
தனது சகோதரனின் குதிகாலைப் பிடித்துக்கொண்டான்;
மனிதனானபோது இறைவனோடு போராடினான்.
4அவன் தூதனுடனும் போராடி வெற்றிகொண்டான்;
அவன் அவருடைய தயவுக்காக அழுது மன்றாடினான்.
இறைவன் அவனைப் பெத்தேலில் கண்டு,
அங்கே அவனுடன்#12:4 அவனுடன் – எபிரேய மொழியில் நம்முடன் பேசினார்.
5சேனைகளின் இறைவனாகிய கர்த்தர் அவரே;
கர்த்தர் என்பது அவரது புகழ்வாய்ந்த பெயர்.
6நீங்கள் எல்லோரும் இறைவனிடம் திரும்பி வாருங்கள்.
அன்பையும் நீதியையும் கடைப்பிடியுங்கள்;
எப்பொழுதும் உங்கள் இறைவனுக்காகக் காத்திருங்கள்.
7ஆனால் இப்போது நீங்கள் கள்ளத் தராசுகளைப் பயன்படுத்துகிற
வியாபாரி போல் இருக்கின்றீர்கள்;
அவன் ஏமாற்றுவதையே விரும்புகின்றான்.
8அத்துடன் எப்பிராயீமோ,
“நான் மிகவும் பணக்காரன்; நான் செல்வந்தனாகிவிட்டேன்.
என் செல்வத்தின் பொருட்டு அவர்கள் என்னில்
அநியாயத்தையோ, பாவத்தையோ கண்டுபிடிக்க முடியாது”
என்று பெருமைப்படுகிறான்.
9“உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த
உங்கள் இறைவனாகிய கர்த்தர் நானே.
உங்களது நியமிக்கப்பட்ட பண்டிகையின் நாட்களில் இருப்பது போல்,
நான் மீண்டும் உங்களைக் கூடாரங்களில் குடியிருக்கச் செய்வேன்.
10அத்துடன் நான் இறைவாக்கினருடன் பேசி,
அவர்களுக்கு அநேக தரிசனங்களைக் கொடுத்தேன்;
அவர்களைக்கொண்டு உவமைகளினால் பேசினேன்.”
11கீலேயாத் நகரம் கொடுமையானதா?
அதன் மக்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள்;
கில்கால் நகரத்தில் காளைகளைப் பலியிடுகிறார்களா?
அவர்களுடைய பலிபீடங்கள் உழுத வயலிலுள்ள
கற்குவியலைப் போலாகும்.
12யாக்கோபு ஆராம் நாட்டுக்கு ஓடிப் போனான்;
இஸ்ரயேல் தனக்கு மனைவியைப் பெற்றுக்கொள்வதற்காக வேலை செய்தான்;
ஒரு மனைவியை பெறுவதற்காக செம்மறியாடுகளை மேய்த்தான்.
13கர்த்தர் இறைவாக்கினன்#12:13 இறைவாக்கினன் மோசே ஒருவனை அனுப்பி,
இஸ்ரயேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார்;
இறைவாக்கினன் மூலம் இஸ்ரயேலரைப் பராமரித்தார்.
14ஆயினும் எப்பிராயீம் ஆண்டவருக்கு அதிக கோபமூட்டியிருக்கிறான்;
எனவே அவனுடைய ஆண்டவர், அவனுடைய இரத்தப் பழியை அவன் மேலேயே சுமத்துவார்.
அவன் காட்டிய அவமதிப்புக்குத் தக்கவாறு அவனுக்குப் பதில் செய்வார்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

ஓசியா 12: TRV

சிறப்புக்கூறு

நகல்

ஒப்பீடு

பகிர்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்