ஆதியாகமம் 46

46
எகிப்தில் யாக்கோபு
1இஸ்ரயேல் தனக்குரிய எல்லாவற்றுடனும் புறப்பட்டு பெயெர்செபா பட்டணத்தை அடைந்தபோது, அங்கே தன் தந்தை ஈசாக்கின் இறைவனுக்குப் பலிகளைச் செலுத்தினான்.
2அன்றிரவே இறைவன் இஸ்ரயேலுக்குக் காட்சியளித்து, “யாக்கோபே! யாக்கோபே!” என்று அழைத்தார்.
அதற்கு அவன், “இதோ இருக்கின்றேன்” என்றான்.
3அப்போது அவர், “நான் இறைவன், நானே உன் தந்தையின் இறைவன். நீ எகிப்துக்குப் போகப் பயப்படாதே, அங்கே நான் உன்னை ஒரு பெரிய இனமாக்குவேன். 4நீ எகிப்துக்குப் போகையில் உன்னுடன்கூட வருவேன், நிச்சயமாக உன்னை மறுபடியும் இங்கே#46:4 இங்கே – கானான் நாட்டுக்கு கொண்டுவருவேன். நீ மரணிக்கும்போது, உன் கண்களை மூடிவிட யோசேப்பு உன் அருகில் இருப்பான்” என்றார்.
5பின்பு யாக்கோபு பெயெர்செபாவை விட்டுப் புறப்பட்டான்; இஸ்ரயேலின் மகன்மார் தங்களுடைய தந்தை யாக்கோபையும், தங்கள் பிள்ளைகளையும், தங்கள் மனைவிமாரையும் பார்வோன் அனுப்பிய வண்டிகளில் ஏற்றிச் சென்றார்கள். 6அத்துடன் யாக்கோபும் அவன் சந்ததியினரும், தங்களுடைய கால்நடைகளுடனும், கானானில் சம்பாதித்த அனைத்து பொருட்களுடனும் எகிப்துக்குப் போனார்கள். 7யாக்கோபு தன்னுடன் தன் சந்ததியினரான மகன்மாரையும் பேரன்களையும் மகள்மாரையும் பேத்திகளையும் அழைத்துக்கொண்டு எகிப்துக்குப் போனான்.
8யாக்கோபுடன் எகிப்துக்குப் போன அவனுடைய சந்ததியினரான இஸ்ரயேலரின் பெயர்களாவன:
யாக்கோபின் மூத்த மகன் ரூபன்.
9ரூபனின் மகன்மார்:
ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ என்பவர்கள்.
10சிமியோனின் மகன்மார்:
யெமுயேல், யாமின், ஓகாத், யாகின், சோகார், கானானியப் பெண்ணின் மகன் சாவூல் என்பவர்கள்.
11லேவியின் மகன்மார்:
கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
12யூதாவின் மகன்மார்:
ஏர், ஓனான், சேலா, பேரேஸ், சேரா என்பவர்கள். ஆனால் ஏர் மற்றும் ஓனான் என்பவர்கள் கானான் நாட்டில் மரணித்து போனார்கள்.
பேரேஸின் மகன்மார்:
எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.
13இசக்காருடைய மகன்மார்:
தோலா, பூவா, யாசூப், சிம்ரோன் என்பவர்கள்.
14செபுலோனுடைய மகன்மார்:
செரேத், ஏலோன், யாலயேல் என்பவர்கள்.
15பதான்-அராமிலே மகள் தீனாளைத் தவிர யாக்கோபுக்கு லேயாள் பெற்றெடுத்த மகன்மார் இவர்களே. அவனுடைய மகன்மாரும் மகள்மாரும் எல்லோரும் முப்பத்து மூன்று பேர்.
16காத்துடைய மகன்மார்:
சிப்பியோன், அகி, சூனி, எஸ்போன், ஏரி, அரோதி, அரேலி என்பவர்கள்.
17ஆசேருடைய மகன்மார்:
இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரியா என்பவர்கள். இவர்களுடைய சகோதரி செராள் என்பவள்.
பெரியாவின் மகன்மார்:
ஏபேர், மல்கியேல் என்பவர்கள்.
18லாபான் தன்னுடைய மகள் லேயாளுக்குக் கொடுத்த பெண்ணான, சில்பாள் மூலம் யாக்கோபுக்குக் கிடைத்த பிள்ளைகள் இவர்களே. இவள் மூலமாக யாக்கோபின் வம்சத்தார் எல்லோருமாக மொத்தம் பதினாறு பேர்.
19யாக்கோபின் மனைவி ராகேலின் மகன்மார்:
யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள்.
20எகிப்திலே யோசேப்புக்கு மனாசேயும் எப்பிராயீமும் பிறந்தார்கள். ஓன் பட்டணத்து மதகுருவான போத்திபிராவின் மகள் ஆஸ்நாத் யோசேப்புக்குப் பெற்றெடுத்த மகன்மாரே அவர்கள்.
21பென்யமீனின் மகன்மார்:
பேலா, பெகேர், அஸ்பேல், கேரா, நாகமான், ஏகி, ரோஷ், முப்பீம், உப்பீம், ஆர்த் என்பவர்கள்.
22யாக்கோபுக்கு ராகேல் பெற்றெடுத்த மகன்மார் இவர்களே. அவர்கள் எல்லாமாக பதினான்கு பேர்.
23தாணுடைய மகன்:
ஊசிம்.
24நப்தலியின் மகன்மார்:
யாத்சியேல், கூனி, எத்சேர், சில்லேம் என்பவர்கள்.
25லாபான் தன் மகள் ராகேலுக்குக் கொடுத்த பணிப்பெண்ணான பில்காள், யாக்கோபுக்கு பெற்றெடுத்த மகன்மார் இவர்களே. அவர்கள் எல்லோரும் ஏழு பேர்.
26யாக்கோபுடன் எகிப்துக்குப் போன மகன்மாரின் மனைவிமாரைத் தவிர, நேரடியான சந்ததியினர் எல்லோரும் அறுபத்தாறு பேர். 27யோசேப்புக்கு எகிப்தில் பிறந்த இரண்டு மகன்மார் இருந்தார்கள். அவர்களுடன் யாக்கோபின் குடும்ப அங்கத்தினர்களும் சேர்த்து எல்லோருமாக எழுபது பேர்.
28யாக்கோபு தான் போகும் வழியில், யோசேப்பு வந்து தன்னைக் கோசேனில் சந்திக்கும்படியாக#46:28 சில மொழிபெயர்ப்புகளில் கோசேனுக்குப் போகும் வழியை அறியும்படி என்றுள்ளது யூதாவைத் தனக்கு முன்னால் அனுப்பி வைத்தான். அவர்கள் கோசேன் பிரதேசத்துக்கு வந்தபோது, 29யோசேப்பு தன் தந்தை இஸ்ரயேலைச் சந்திக்க தனது தேரை ஆயத்தப்படுத்தி கோசேனுக்குப் போனான். யோசேப்பு தனது தந்தை முன்பாகப் போனதுமே தன் தந்தையைக் கட்டிப்பிடித்து வெகுநேரம் அழுதான்.
30இஸ்ரயேல் யோசேப்பிடம், “நான் உன் முகத்தைக் கண்டதால் நீ உயிரோடிருக்கின்றாய் என்பதை அறிந்துகொண்டேன்; இனி நான் மரணிக்கவும் ஆயத்தமாயிருக்கின்றேன்” என்றான்.
31பின்பு யோசேப்பு தன் சகோதரர்களிடமும் தன் தந்தை குடும்பத்தாரிடமும், “நான் பார்வோனிடம் போய், ‘கானான் நாட்டில் வாழ்ந்த என் சகோதரர்களும் என் தந்தையின் குடும்பத்தாரும் என்னிடம் வந்திருக்கின்றார்கள். 32அவர்கள் மேய்ப்பர்கள்; அவர்கள் கால்நடைகளைக் கவனித்துக் கொள்கின்றார்கள்; அவர்கள் தங்கள் ஆட்டு மந்தைகளுடனும் மாட்டு மந்தைகளுடனும் தங்களுக்குச் சொந்தமான எல்லாவற்றுடனும் வந்திருக்கின்றார்கள்’ என்று சொல்வேன். 33பார்வோன் உங்களை அழைத்து, ‘உங்கள் தொழில் என்ன?’ என்று கேட்கும்போது, 34நீங்கள், ‘உமது அடியவராகிய நாங்களும் எங்கள் முற்பிதாக்களைப் போலவே, சிறுவயது முதற்கொண்டு மந்தை மேய்ப்பவர்கள்’ என்று சொல்லுங்கள். அப்போது நீங்கள் கோசேன் பகுதியில் குடியிருக்க அனுமதிக்கப்படுவீர்கள். ஏனெனில், எகிப்தியருக்கு மேய்ப்பர்கள் அருவருப்பானவர்கள்” என்றான்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

ஆதியாகமம் 46: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்