நீதிமொழிகள் 4

4
1பிள்ளைகளே, உங்கள் தந்தையின் போதனைகளைக் கவனமுடன் கேளுங்கள். அப்பொழுது தான் நீங்கள் புரிந்துக்கொள்வீர்கள். 2ஏனென்றால் நான் உங்களுக்குப் போதிப்பவையெல்லாம் மிக முக்கியமானவை, நல்லவை. எனவே எனது போதனைகளை எக்காலத்திலும் மறக்கவேண்டாம்.
3ஒரு காலத்தில் நானும் இளமையாக இருந்தேன். நான் என் தந்தையின் சிறிய பையனாகவும், என் தாயின் ஒரே குமாரனாகவும் இருந்தேன். 4என் தந்தை இவற்றை எனக்குக் கற்றுத்தந்தார். அவர், “நான் சொல்லுகின்றவற்றை நினைவில் வைத்துக்கொள். எனது கட்டளைகளுக்கு அடிபணி. அப்போது நீ வாழ்வாய். 5ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் பெற்றுக்கொள். என் வார்த்தைகளை மறக்காதே. எப்பொழுதும் என் அறிவுரைகளைப் பின்பற்று. 6ஞானத்திலிருந்து விலகாதே. பிறகு ஞானம் உன்னைக் காப்பாற்றும். ஞானத்தை நேசி, ஞானம் உன்னைப் பாதுகாக்கும்” என்றார்.
7நீ ஞானத்தைப் பெற விரும்பும்போதே உன்னில் ஞானம் துவங்கும். எனவே, ஞானத்தைப் பெற உனக்குச் சொந்தமான எல்லாவற்றையும் பயன்படுத்து. பின்னர் நீ ஞானத்தைப் பெறுவாய். 8ஞானத்தை நேசி, ஞானம் உன்னைப் பெரியவனாக்கும். ஞானத்தை முக்கியமுள்ளதாக்கு. ஞானம் உனக்கு மதிப்பைக்கொண்டுவரும். 9உன் வாழ்வில் நிகழும் அனைத்திலும் ஞானமே மிக உயர்ந்ததாக இருக்கும்.
10மகனே, நான் சொல்வதைக் கவனி. நான் சொல்லுகிறபடி செய்தால் நீ நீண்ட காலம் வாழலாம். 11நான் உனக்கு ஞானத்தைப்பற்றிப் போதித்திருக்கிறேன். நான் நேரான பாதையில் உன்னை வழிநடத்திச் சென்றிருக்கிறேன். 12இப்பாதையில் தொடர்ந்து செல், உனது கால்கள் எந்த வலைக்குள்ளும் அகப்படாது. இடறிவிழாமல் உன்னால் ஓடமுடியும். நீ செய்ய முயலுகிற செயல்களில் எல்லாம் பாதுகாப்பாக இருக்கலாம். 13எப்போதும் இந்த அறிவுரைகளை நினைவில் வைத்துக்கொள். அவற்றை மறக்காதே. அவை உனது ஜீவனாகும்.
14தீயவர்கள் நடந்துசெல்லுகிற பாதையில் நீ போக வேண்டாம். அவர்களைப்போல வாழாதே. அவர்களைப் போன்று இருக்கவும் முயலவேண்டாம். 15பாவத்திலிருந்து விலகி இரு. அதன் அருகில் போகாதே. நேராகக் கடந்துசெல். 16தீமையைச் செய்துமுடிக்கும்வரை கெட்டவர்களால் தூங்கமுடியாது. அடுத்தவனைப் புண்படுத்தாமல் அவர்களால் தூங்கமுடியாது. 17அவர்களால் மற்றவர்களுக்குத் தீமை செய்யாமலும் மற்றவர்களைப் புண்படுத்தாமலும் வாழமுடியாது.
18நல்லவர்கள் அதிகாலை வெளிச்சத்தைப் போன்றவர்கள். சூரியன் உதிக்கும்போது நாளானது பிரகாசமும், மகிழ்ச்சியும் அடைகின்றது. 19ஆனால் தீயவர்களோ இருண்ட இரவைப் போன்றவர்கள். அவர்கள் இருளில் காணாமற்போவார்கள். அவர்கள் தங்களால் பார்க்க முடியாதவற்றில் விழுந்துவிடுவார்கள்.
20என் மகனே, நான் சொல்லுகின்றவற்றைக் கவனி. என் வார்த்தைகளை ஜாக்கிரதையுடன் கேள். 21என் வார்த்தைகள் உன்னைவிட்டுப் போகாதபடி பார்த்துக்கொள். நான் சொல்லுகின்றவற்றை நினைவுபடுத்திக்கொள். 22என்னைக் கவனிக்கின்றவர்களுக்கு எனது போதனைகள் வாழ்வைத் தரும். எனது வார்த்தைகள் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். 23உன் எண்ணங்களில் எச்சரிக்கையாக இருப்பது உனக்கு மிக முக்கியமானதாகும். உன் எண்ணங்கள் உன் வாழ்வைக் கட்டுப்படுத்தும்.
24உண்மையை வளைக்காதே. சரியில்லாதவற்றைச் சரியென்று சொல்லாதே. பொய்களைச் சொல்லாதே. 25நல்ல மற்றும் ஞானமுள்ள உன் குறிக்கோள்களிலிருந்து விலகிவிடாதே. 26நீ செய்கின்றவற்றில் எச்சரிக்கையாக இரு. நல்ல வாழ்க்கையை நடத்து. 27நேரான பாதையில் இருந்து விலகாதே. அப்பாதையே நல்லதும் சரியானதும் ஆகும். ஆனால் எப்பொழுதும் தீமையில் இருந்து விலகியிரு.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

நீதிமொழிகள் 4: TAERV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்