எசேக்கியேல் 14

14
விக்கிரக ஆராதனை கண்டிக்கப்படுதல்
1இஸ்ரயேலின் முதியவர்கள் சிலர் எனக்கு முன்பாக வந்து அமர்ந்தார்கள். 2அப்பொழுது யெகோவாவினுடைய வார்த்தை எனக்கு வந்தது, 3“மனுபுத்திரனே, இந்த மனிதர் தங்கள் இருதயங்களில் விக்கிரகங்களை வைத்திருக்கிறார்கள். தங்களை அக்கிரமத்திற்கு வழிநடத்தும் காரியங்களைத் தங்கள் கண்முன் வைத்திருக்கிறார்கள். இப்படியானவர்கள் என்னிடம் விசாரணை செய்ய நான் இடமளிக்க வேண்டுமோ? 4ஆகையால் நீ அவர்களோடு பேசிச் சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: எந்தவொரு இஸ்ரயேலனாவது, தன் இருதயத்தில் விக்கிரகங்களை வைத்துக்கொண்டவனாய், தங்களை அக்கிரமத்திற்கு வழிநடத்தும் காரியங்களைத் தங்கள் கண்முன் வைத்துக்கொண்டு இறைவாக்கினன் ஒருவனிடம்போனால், யெகோவாவாகிய நான் அவனுடைய பெரும் விக்கிரக ஆராதனைக்கு ஏற்பவே பதிலளிப்பேன். 5தங்களுடைய விக்கிரகங்களின் நிமித்தம், என்னைவிட்டு விலகிப்போன இஸ்ரயேல் மக்களின் இருதயங்களை மீண்டும் நான் என் பக்கம் திருப்புவதற்காக இவ்வாறு செய்வேன்.’
6“ஆதலால் நீ இஸ்ரயேல் குடும்பத்தாரிடம் சொல்லவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. மனந்திரும்புங்கள்; உங்கள் விக்கிரங்களை விட்டுத் திரும்புங்கள். எல்லா அருவருப்பான பழக்கவழக்கங்களைவிட்டு உங்கள் முகத்தைத் திருப்புங்கள்.
7“ ‘இஸ்ரயேலனாவது, இஸ்ரயேல் நாட்டில் வாழும் பிறநாட்டானாவது என்னைவிட்டுப் பிரிந்து, தன் இருதயத்தில் விக்கிரகங்களை வைத்துக்கொண்டும், தங்களை அக்கிரமத்திற்கு வழிநடத்தும் காரியங்களைத் தங்கள் முன் வைத்துக்கொண்டும் என்னிடம் விசாரிப்பதற்காக இறைவாக்கினரிடம் போவானானால், யெகோவாவாகிய நானே அவனுக்குப் பதிலளிப்பேன். 8நான் அவனுக்கு விரோதமாக என் முகத்தைத் திருப்பி, அவனை ஒரு உதாரணமாகவும் ஒரு பழமொழியாகவும் வைத்து, அவனை என் மக்களிலிருந்து முற்றிலும் அகற்றிவிடுவேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
9“ ‘ஆனால் அப்படி ஆலோசனை கேட்கும்போது தீர்க்கதரிசி ஒருவன் ஏமாந்து, பொய்த் தீர்க்கதரிசனம் சொல்வதற்குத் துணிவுகொண்டால், யெகோவாவாகிய நானே அவனை அவ்வாறான துணிகரத்திற்குட்படுத்தினேன். அவனுக்கு விரோதமாக என் கரத்தை நீட்டி, இஸ்ரயேல் மக்கள் மத்தியிலிருந்து அவனை அழிப்பேன். 10அவர்கள் தங்கள் குற்றத்தைச் சுமப்பார்கள். தீர்க்கதரிசி குற்றவாளியாயிருப்பது போலவே, அவனிடம் ஆலோசனை கேட்க வந்தவனும் குற்றவாளி. ஆகவே நான் அவர்களைத் தண்டிப்பேன். 11அப்பொழுது இஸ்ரயேல் மக்கள் இனியொருபோதும் என்னைவிட்டு வழிதவறிப் போகமாட்டார்கள். பாவங்களினால் தங்களைக் கறைப்படுத்திக்கொள்ளவும் மாட்டார்கள். அவர்கள் என் மக்களாயிருப்பார்கள். நான் அவர்களின் இறைவனாயிருப்பேன் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்’ ” என்றார்.
யெகோவாவின் தண்டனை நிச்சயம்
12யெகோவாவினுடைய வார்த்தை எனக்கு வந்தது. அவர் என்னிடம், 13“மனுபுத்திரனே, ஒரு நாடு எனக்கெதிராய் பாவம் செய்து உண்மையற்றதாய் இருந்தால், நான் அதற்கு விரோதமாக என் கரத்தை நீட்டுவேன். அதற்கு உணவளிப்பதை நிறுத்தி, பஞ்சத்தை அனுப்பி அதன் மக்களையும் அவர்களுடைய மிருகங்களையும் கொல்லுவேன். 14அப்பொழுது அங்கே நோவா, தானியேல், யோபு ஆகிய மூவரும் இருந்தாலுங்கூட, அவர்கள் தங்கள் நீதியின் நிமித்தம் தங்களை மட்டுமே தப்புவித்துக்கொள்ளக்கூடும் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
15“அல்லது, நான் காட்டு மிருகங்களை அந்த நாட்டின் வழியாக அனுப்பினால், அவை அந்த நாட்டிலுள்ளவர்களைப் பிள்ளையற்றவர்களாக்கும். ஒருவரும் அந்த நாட்டின் வழியாகப்போக இயலாதபடி, அது மிருகங்களின் நிமித்தம் பாழாய்ப்போகும். 16நான் வாழ்வது நிச்சயம்போலவே, அங்கு அவ்வேளையில் இவர்கள் மூவரும் இருந்தாலுங்கூட, அவர்களால் தம் சொந்த மகன்களையோ மகள்களையோ தப்புவிக்கவும் முடியாது. அவர்கள் மாத்திரமே தப்புவார்கள். ஆனால் நாடோ பாழாய்ப்போகும் என்பதும் நிச்சயம் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
17“இல்லையெனில், நான் அந்நாட்டிற்கு எதிராக வாளை வரச்செய்து, ‘வாள் நாட்டை ஊடுருவிச் செல்லட்டும்’ என்று சொல்வேனாகில், நான் அங்குள்ள மக்களையும் அவர்களுடைய மிருகங்களையும் கொல்லுவேன். 18நான் வாழ்வது நிச்சயம்போலவே, நான் அப்படிச் செய்தால், இந்த மூவரும் அங்கு இருந்தாலுங்கூட அவர்களால் தங்கள் சொந்த மகன்களையோ, மகள்களையோ தப்புவிக்கவும் முடியாது. அவர்கள் மாத்திரமே தப்புவார்கள் என்பதும் நிச்சயம் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
19“இல்லையெனில், நான் அந்நாட்டில் கொள்ளைநோயை அனுப்பி, நான் எனது கோபத்தினால் இரத்தம் சிந்தப்பண்ணி, அங்குள்ள மனிதரையும், அவர்களுடைய மிருகங்களையும் கொலைசெய்வேனாகில், 20நான் வாழ்வது நிச்சயம்போலவே, நோவா, தானியேல், யோபு ஆகிய அந்த மூவரும் அங்கிருந்தாலுங்கூட, அவர்களால் தங்கள் மகனையோ மகளையோ தப்புவிக்கவும் முடியாது. தங்கள் நீதியினால் அவர்கள் மட்டுமே தப்புவார்கள் என்பதும் நிச்சயம் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
21“ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நான் எருசலேமுக்கு விரோதமாக மனிதரையும் அவர்களுடைய மிருகங்களையும் கொல்லுவதற்கு வாள், பஞ்சம், காட்டுமிருகம், கொள்ளைநோய் ஆகிய நான்கு பயங்கரத் தீர்ப்புகளையும் அனுப்பும்போது, அவைகளிலும் இது எவ்வளவு அதிக கொடியதாயிருக்கும்! 22அப்படியிருந்தும், அங்கிருந்து தப்பிப்பிழைத்த சில மகன்களும், மகள்களும், வெளியே கொண்டுவரப்படுவார்கள். அவர்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டு உங்களிடத்திற்கே வருவார்கள். அவர்களுடைய ஒழுக்கக்கேட்டையும் அவர்களுடைய நடத்தையையும் நீங்கள் காணும்போது எருசலேமின்மீது நான் வரப்பண்ணின தீங்கையும், அதன்மீது வரப்பண்ணின ஒவ்வொரு அழிவையும் குறித்து ஆறுதல் அடைவீர்கள். 23நீங்கள் அவர்களுடைய ஒழுக்கக்கேட்டையும் நடத்தையையும் காணும்போது, நான் காரணமில்லாமால் ஒன்றும் செய்யவில்லை என்று அறிவீர்கள். அப்பொழுது நீங்கள் ஆறுதல் அடைவீர்கள் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.”

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

எசேக்கியேல் 14: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்