இந்த வழியைப் பின்பற்றியவர்களை கொலைசெய்யும் அளவிற்கு துன்பப்படுத்தி இருக்கிறேன். இந்த வழியைப் பின்பற்றுகிற ஆண்களையும், பெண்களையும் கைதுசெய்து சிறையில் அடைத்தேன். இதைக்குறித்து பிரதான ஆசாரியனும், நீதிமன்றத்திலுள்ள அனைவரும் சாட்சி கொடுப்பார்கள். அவர்களிடமிருந்து தமஸ்குவிலுள்ள சகோதரர்களுக்குக் கொடுக்கும்படி கடிதங்களையும் பெற்றேன். இந்த வழியைப் பின்பற்றுகிறவர்களைத் தண்டிப்பதற்கென அவர்களைக் கைதுசெய்து, எருசலேமுக்குக் கொண்டுவரும்படி தமஸ்குவுக்குப் போனேன்.
“நான் தமஸ்குவை நெருங்கியபோது, மத்தியான வேளையானது. அப்பொழுது திடீரென வானத்திலிருந்து ஒரு பிரகாசமான ஒளி என்னைச் சுற்றிலும் பிரகாசித்தது. நான் தரையில் விழுந்தேன். ‘சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்?’ என்று ஒரு குரல் எனக்குச் சொல்வதைக் கேட்டேன்.
“ ‘அப்பொழுது நான், ஆண்டவரே, நீர் யார்?’ ” என்றேன்.
“அதற்கு அவர், ‘நான் நசரேயனாகிய இயேசு, நீ துன்புறுத்துவது என்னைத்தான்’ என்று சொன்னார். என்னுடனேகூட வந்தவர்கள் அந்த வெளிச்சத்தைக் கண்டார்கள். ஆனால், என்னுடன் பேசிக் கொண்டிருந்தவரின் குரலை அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை.
“அப்பொழுது நான் அவரிடம், ‘ஆண்டவரே, நான் என்ன செய்யவேண்டும்?’ என்று கேட்டேன்.
“அதற்கு அவர், ‘நீ எழுந்து, தமஸ்கு பட்டணத்திற்குள்ளே போ. நீ செய்ய வேண்டியதெல்லாம், அங்கே உனக்குச் சொல்லப்படும்’ என்றார். என்னுடனேகூட வந்தவர்கள் எனது கையைப் பிடித்து, தமஸ்கு பட்டணத்திற்குள்ளே என்னைக் கூட்டிக்கொண்டு சென்றார்கள். ஏனெனில், அந்த ஒளியின் பிரகாசத்தினால் நான் பார்வை இழந்துபோனேன்.
“பின்பு அனனியா என்னும் பெயருடைய ஒருவன் என்னைப் பார்க்க வந்தான். அவன் மோசேயின் சட்டத்தைப் பக்தியுடன் கைக்கொள்ளும் ஒருவனாயிருந்தான். தமஸ்குவில் வாழ்ந்த எல்லா யூதராலும், அவன் உயர்வாய் மதிக்கப்பட்டவனாகவும் இருந்தான். அவன் என் அருகே நின்று, ‘சகோதரனாகிய சவுலே, நீ உன் கண் பார்வையைப் பெற்றுக்கொள்!’ என்றான். அந்த வினாடியிலேயே, என்னால் அவனைப் பார்க்கமுடிந்தது.
“பின்பு அனனியா என்னிடம்: ‘நமது தந்தையரின் இறைவன் உன்னைத் தெரிந்தெடுத்திருக்கிறார். நீ அவருடைய திட்டத்தை அறியும்படிக்கும், நீதிமானாகிய அவரைக் காணும்படிக்கும், அவருடைய வாயிலிருந்து வார்த்தைகளைக் கேட்கும்படிக்கும் அவர் உன்னைத் தெரிந்திருக்கிறார். நீ கண்டதையும் கேட்டதையும் குறித்து, அனைவருக்கும் அவருடைய சாட்சியாய் இருப்பாய். இப்பொழுதும், நீ எதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறாய்? எழும்பி, அவருடைய பெயரைக் கூப்பிட்டு, திருமுழுக்கைப் பெற்றுக்கொண்டு, உன் பாவங்களைக் கழுவிக்கொள்’ என்றான்.
“பின்பு நான், எருசலேமுக்கு திரும்பிவந்து ஆலயத்தில் மன்றாடிக்கொண்டிருக்கையில், நான் ஆவிக்குட்பட்டேன். அப்பொழுது நான் கர்த்தரைக் கண்டேன். அவர் என்னிடம், ‘தாமதியாதே! எருசலேமைவிட்டு சீக்கிரமாய் புறப்படு. ஏனெனில், அவர்கள் என்னைக்குறித்து நீ சொல்லும் சாட்சியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்’ என்றார்.
“அப்பொழுது நான், ‘கர்த்தாவே, நான் ஒவ்வொரு ஜெப ஆலயத்திற்கும் போய், உம்மில் விசுவாசமாய் இருந்தவர்களைச் சிறையிலிட்டு அடித்தது இவர்களுக்குத் தெரியுமே. உமக்காக இரத்தச் சாட்சியாய் இறந்த ஸ்தேவான் கொலைசெய்யப்பட்டபோது, நானும் அங்கு நின்று அவர்களோடு உடன்பட்டேன். அத்துடன், அவனைக் கொன்றவர்களின் உடைகளுக்கும் நானே காவல் இருந்தேன்’ என்றேன்.
“அப்பொழுது கர்த்தர் என்னிடம், ‘நீ போ; நான் உன்னைத் தூரத்திலிருக்கிற யூதரல்லாதவர்களிடத்திற்கு அனுப்புவேன்’ என்றார்” என்று பவுல் பேசி முடித்தான்.