மாற் 6:1-29
மாற் 6:1-29 IRVTAM
இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, அவர் வளர்ந்த ஊருக்கு வந்தார்; அவருடைய சீடர்களும் அவரோடு வந்தார்கள். ஓய்வுநாளானபோது, ஜெப ஆலயத்தில் போதகம்பண்ணினார். அதைக் கேட்ட அனைவரும் ஆச்சரியப்பட்டு, இவைகள் இவனுக்கு எங்கிருந்து வந்தது? இவன் கைகளினால் இப்படிப்பட்ட பலத்த செய்கைகளைச் செய்ய இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது? இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் என்பவர்களுடைய சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறல் அடைந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் சொந்த ஊரிலும், தன் உறவினர்களிலும், தன் வீட்டிலும்தான் மதிக்கப்படமாட்டான். மற்ற எல்லா இடங்களிலும் மதிக்கப்படுவான் என்றார். அங்கே அவர் சில நோயாளிகள்மேல்மட்டும் கரங்களை வைத்து, அவர்களைக் குணமாக்கினார், வேறு அற்புதங்கள் எதுவும் செய்யமுடியாமல். அவர்களுக்கு விசுவாசம் இல்லாததினால் அதைக்குறித்து ஆச்சரியப்பட்டு, மற்ற கிராமங்களுக்குச்சென்று, போதகம்பண்ணினார். இயேசு பன்னிரண்டு சீடர்களையும் அழைத்து, அசுத்தஆவிகளைத் துரத்த அவர்களுக்கு அதிகாரம் கொடுத்து, வழிக்குப் பையையோ, அப்பத்தையோ, இடுப்புக் கச்சையில் பணத்தையோ, எடுத்துக்கொண்டுபோகாமல், ஒரு தடியைமட்டும் எடுத்துக்கொண்டுபோகவும்; காலணிகளைப் போட்டுக்கொண்டுபோகவும், இரண்டு அங்கிகளை அணிந்துகொள்ளாமலிருக்கவும் கட்டளையிட்டார். பின்பு அவர்களைப் பார்த்து: நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டிற்குச் சென்றால், அந்த இடத்தைவிட்டுப் புறப்படும்வரை அங்கேயே தங்கியிருங்கள். யாராவது உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்களுடைய வசனங்களைக் கேட்காமலும் இருந்தால், நீங்கள் அந்த இடத்தைவிட்டுப் புறப்படும்போது, அவர்களுக்கு சாட்சியாக உங்களுடைய கால்களின் கீழே படிந்த தூசியை உதறிப்போடுங்கள். நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு சம்பவிப்பதைவிட சோதோம் கொமோரா பட்டணத்திற்கு சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை இரண்டு இரண்டுபேராக அனுப்பினார். அவர்கள் புறப்பட்டுப்போய்: மனந்திரும்புங்கள் என்று பிரசங்கித்து; அநேக பிசாசுகளைத் துரத்தி, அநேக நோயாளிகளை எண்ணெய் பூசி சுகமாக்கினார்கள். இயேசுவினுடைய பெயர் பிரசித்தமானதினால், ஏரோதுராஜா அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு: மரித்துப்போன யோவான்ஸ்நானன் உயிரோடு எழுந்தான், எனவே அவனிடம் இப்படிப்பட்டப் பலத்த செய்கைகள் வெளிப்படுகிறது என்றான். சிலர்: அவர் எலியா என்றார்கள். வேறுசிலர்: அவர் ஒரு தீர்க்கதரிசி அல்லது பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவனைப்போல இருக்கிறார் என்று சொன்னார்கள். ஏரோது அதைக் கேட்டபொழுது: அவன், நான் தலையை வெட்டிக்கொன்ற யோவான்தான்; அவன் உயிரோடு எழுந்தான் என்றான். ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைத் தனக்கு மனைவியாக்கி வைத்துக்கொண்டபோது, யோவான் ஏரோதைப் பார்த்து: நீர் உம்முடைய சகோதரன் மனைவியை வைத்துக்கொள்ளுவது நியாயம் இல்லை என்று சொன்னதினால், ஏரோது போர்வீரர்களை அனுப்பி, யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான். ஏரோதியாளும் அவனுக்குச் சதி நினைத்து, அவனைக் கொன்றுபோட மனதாயிருந்தாள்; ஆனாலும், அவளால் முடியாமல்போனது. ஏனென்றால், யோவான் நீதியும் பரிசுத்தமும் உள்ளவன் என்று ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் யோசனையின்படி அநேகக் காரியங்களைச் செய்து, விருப்பத்தோடு அவன் சொல்லைக் கேட்டுவந்தான். ஏரோது தன்னுடைய பிறந்தநாளிலே தன்னுடைய பிரபுக்களுக்கும், படைத்தளபதிகளுக்கும், கலிலேயா நாட்டின் பிரதான மனிதர்களுக்கும் ஒரு விருந்துபண்ணினபோது, ஏரோதியாளின் மகள் சபை நடுவே வந்து நடனம்பண்ணி, ஏரோதுவையும் அவனோடுகூட பந்தியில் இருந்தவர்களையும் சந்தோஷப்படுத்தினாள். அப்பொழுது, ராஜா சிறுபெண்ணை நோக்கி: உனக்கு வேண்டியதை என்னிடம் கேள், அதை உனக்குத் தருவேன் என்று சொல்லி; நீ என்னிடத்தில் எதைக்கேட்டாலும், அது என் ராஜ்யத்தில் பாதியானாலும், அதை உனக்குத் தருவேன் என்று அவளுக்கு வாக்குக்கொடுத்தான். அப்பொழுது, அவள் வெளியேபோய், நான் என்ன கேட்கவேண்டும் என்று தன் தாயிடம் கேட்டாள். அதற்கு அவள்: யோவான்ஸ்நானனுடைய தலையைக் கேள் என்றாள். உடனே அவள் ராஜாவிடம் சீக்கிரமாக வந்து: நீர் இப்பொழுதே ஒரு தட்டில் யோவான்ஸ்நானனுடைய தலையை வைத்து எனக்குத் தரவேண்டும் என்று கேட்டாள். அப்பொழுது ராஜா அதிக துக்கமடைந்தான்; ஆனாலும், வாக்குக் கொடுத்ததினாலும், அவனோடுகூட பந்தியில் இருந்தவர்களுக்காகவும், அவள் கேட்டுக்கொண்டதை மறுக்க அவனுக்கு மனம் இல்லாமல்; உடனே யோவான்ஸ்நானனுடைய தலையைக் கொண்டுவரும்படி போர்வீரனுக்குக் கட்டளைக் கொடுத்து அனுப்பினான். அப்படியே அவன்போய், காவல்கூடத்திலே அவனுடைய தலையை வெட்டி, அவன் தலையை ஒரு தட்டிலே கொண்டுவந்து, அதை அந்தச் சிறு பெண்ணுக்குக் கொடுத்தான்; அந்தச் சிறுபெண் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள். அவனுடைய சீடர்கள் அதைக் கேள்விப்பட்டு வந்து, அவன் சரீரத்தை எடுத்து, ஒரு கல்லறையில் வைத்தார்கள்.

