எஸ்றா 9:10-15

எஸ்றா 9:10-15 IRVTAM

இப்பொழுதும் எங்கள் தேவனே, நாங்கள் இனி என்னசொல்லுவோம்; தேவரீர் உமது ஊழியக்காரர்களாகிய தீர்க்கதரிசிகளைக்கொண்டு போதித்த உமது கற்பனைகளை விட்டுவிட்டோம். நீங்கள் குடியேறுகிறதற்கு உட்பிரவேசிக்கும் தேசமானது; தேசாதேசங்களுடைய மக்களின் அசுத்தத்தினாலும், அவர்கள் அதை ஒரு முனைதொடங்கி மறுமுனைவரை நிறையச் செய்த அவர்களுடைய அருவருப்புகளினாலும் அவர்களுடைய அசுத்தத்தாலும், தீட்டுப்பட்டதாயிருக்கிறது. ஆதலால் நீங்கள் பலத்துக்கொண்டு, தேசத்தின் நன்மையைச் சாப்பிட்டு, அதை நித்தியகாலமாக உங்கள் பிள்ளைகளுக்கு சொத்தாகப் பின்வைக்கும்படிக்கு, நீங்கள் உங்கள் மகள்களை அவர்களுடைய மகன்களுக்குக் கொடுக்காமலும், அவர்களுடைய மகள்களை உங்கள் மகன்களுக்குக் கொள்ளாமலும், அவர்களுடைய சமாதானத்தையும் நன்மையையும் ஒருக்காலும் நாடாமலும் இருப்பீர்களாக என்றீரே. இப்பொழுதும் எங்கள் தேவனே, எங்கள் பொல்லாத செயல்களினாலும், எங்கள் பெரிய குற்றத்தாலும், இவைகளெல்லாம் எங்கள்மேல் வந்தும், தேவரீர் எங்கள் அக்கிரமத்திற்குத்தக்க ஆக்கினையை எங்களுக்கு இடாமல், எங்களை இப்படித் தப்பவிட்டிருக்கும்போது, நாங்கள் உமது கற்பனைகளை வீணாக்கவும், இந்த அருவருப்புகளுள்ள மக்களோடே சம்பந்தம் கலக்கவும் முடியுமோ? அப்படிச் செய்தால், எங்களில் ஒருவரும் மீந்து தப்பாதபடிக்கு, தேவரீர் எங்களை நிர்மூலமாக்கும்வரை எங்கள்மேல் கோபமாயிருப்பீர் அல்லவோ? இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, நீர் நீதியுள்ளவர்; ஆகையால் இந்நாளில் இருக்கிறதுபோல, நாங்கள் தப்பி மீந்திருக்கிறோம்; இதோ, நாங்கள் உமக்கு முன்பாகக் குற்றத்திற்குள்ளானவர்கள்; இதின் காரணமாக நாங்கள் உமக்கு முன்பாக நிற்கத்தக்கவர்கள் அல்ல என்று விண்ணப்பம் செய்தேன்.