பிரச 3:1-13

பிரச 3:1-13 IRVTAM

ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலம் உண்டு; வானத்தின் கீழ் இருக்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு நேரம் உண்டு. பிறக்க ஒரு காலம் உண்டு, இறக்க ஒரு காலம் உண்டு; நட ஒரு காலம் உண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலம் உண்டு; கொல்ல ஒரு காலம் உண்டு, குணமாக்க ஒரு காலம் உண்டு; இடிக்க ஒரு காலம் உண்டு, கட்ட ஒரு காலம் உண்டு; அழ ஒரு காலம் உண்டு, சிரிக்க ஒரு காலம் உண்டு; புலம்ப ஒரு காலம் உண்டு, நடனமாட ஒரு காலம் உண்டு; கற்களை எறிந்துவிட ஒரு காலம் உண்டு, கற்களைச் சேர்க்க ஒரு காலம் உண்டு; தழுவ ஒரு காலம் உண்டு, தழுவாமல் இருக்க ஒரு காலம் உண்டு; தேட ஒரு காலம் உண்டு, இழக்க ஒரு காலம் உண்டு; காப்பாற்ற ஒரு காலம் உண்டு, எறிந்துவிட ஒரு காலம் உண்டு; கிழிக்க ஒரு காலம் உண்டு, தைக்க ஒரு காலம் உண்டு; மவுனமாக இருக்க ஒரு காலம் உண்டு, பேச ஒரு காலம் உண்டு; நேசிக்க ஒரு காலம் உண்டு, பகைக்க ஒரு காலம் உண்டு; யுத்தம்செய்ய ஒரு காலம் உண்டு, சமாதானப்படுத்த ஒரு காலம் உண்டு. வருத்தப்பட்டு பிரயாசப்படுகிறவனுக்கு அதினால் பலன் என்ன? மனிதர்கள் பாடுபடும்படி தேவன் அவர்களுக்கு நியமித்த தொல்லையைக் கண்டேன். அவர் அனைத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்களுடைய உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆரம்பம்முதல் முடிவுவரை செய்துவரும் செயல்களை மனிதன் கண்டுபிடிக்கமாட்டான். மகிழ்ச்சியாக இருப்பதும் உயிரோடிருக்கும்போது நன்மைசெய்வதையும்தவிர, வேறொரு நன்மையும் மனிதனுக்கு இல்லையென்று அறிந்தேன். அன்றியும் மனிதர்கள் எல்லோரும் சாப்பிட்டுக் குடித்து தங்களுடைய எல்லா பிரயாசத்தின் பலனையும் அனுபவிப்பது தேவனுடைய வெகுமதி.

பிரச 3:1-13 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்