யோபு 33
33
அத்தியாயம் 33
1“யோபே, என் நியாயங்களைக் கேளும்;
என் வார்த்தைகளுக்கெல்லாம் செவிகொடும்.
2இதோ, என் வாயை இப்போது திறந்தேன்;
என் வாயிலிருக்கிற என் நாவானது பேசும்.
3என் வார்த்தைகள் என் இருதயத்தின் உண்மைக்கு ஒத்திருக்கும்;
நான் அறிந்ததை என் உதடுகள் சுத்தமாக பேசும்.
4தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்;
சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர்கொடுத்தது.
5உம்மால் முடிந்தால் எனக்கு மறுமொழி கொடும்;
நீர் ஆயத்தப்பட்டு எனக்கு முன்பாக நில்லும்.
6இதோ, உம்மைப்போல நானும் தேவனால் உண்டானவன்;
நானும் மண்ணினால் உருவாக்கப்பட்டவன்.
7இதோ, நீர் எனக்குப் பயப்பட்டுக் கலங்கத் தேவையில்லை;
என் கை உம்மேல் பாரமாயிருக்காது.
8நான் என் காதாலே கேட்க நீர் சொன்னதும்,
நான் கேள்விப்பட்ட உம்முடைய வார்த்தைகளின் சத்தமும் என்னவென்றால்:
9நான் மீறுதல் இல்லாத சுத்தமுள்ளவன்,
நான் குற்றமற்றவன், என்னில் பாவமில்லை.
10இதோ, என்னில் அவர் குற்றம் கண்டுபிடிக்கப்பார்க்கிறார்,
என்னைத் தமக்கு எதிரியாக நினைத்துக்கொள்ளுகிறார்.
11அவர் என் கால்களைத் தொழுவத்திலே அடைத்து,
என் நடைகளையெல்லாம் காவல் வைக்கிறார் என்று சொன்னீர்.
12இதிலே நீர் நீதியுள்ளவர் அல்லவென்று உமக்கு மறுமொழியாகச் சொல்லுகிறேன்;
மனிதனைவிட தேவன் பெரியவராயிருக்கிறார்.
13அவர் தம்முடைய செயல்கள் எல்லாவற்றையும் குறித்துக்
பதில் #33:13 தேவன் மனிதர்களின் காரியத்தில் பதில் தருவதில்லை சொல்லவில்லையென்று நீர் அவருடன் ஏன் வழக்காடுகிறீர்?
14தேவன் ஒரு முறை சொல்லியிருக்கிற காரியத்தை
இரண்டாம் முறை பார்த்து மாற்றுகிறவரல்லவே.
15ஆழ்ந்த தூக்கம் மனிதர்மேல் இறங்கி,
அவர்கள் படுக்கையின்மேல் படுத்திருக்கும்போது,
16அவர் இரவு நேரத்துத் தரிசனமான சொப்பனத்திலே மனிதருடைய காதுகளுக்குத் தாம் செய்யும் காரியத்தை வெளிப்படுத்தி,
அதை அவர்களுக்கு வரும் தண்டனையினாலே பயமுறுத்தி,
17மனிதன் தன்னுடைய செயலைவிட்டு நீங்கவும்,
மனிதருடைய பெருமை அடங்கவும் செய்கிறார்.
18இவ்விதமாக அவனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கும்,
அவன் உயிரைப் பட்டய வெட்டுக்கும் தப்புவிக்கிறார்.
19அவன் தன் படுக்கையிலே வாதையினாலும்,
தன் எல்லா எலும்புகளிலும் கடுமையான வியாதியினாலும் தண்டிக்கப்படுகிறான்.
20அவன் உயிர் அப்பத்தையும்,
அவனுடைய ஆத்துமா ருசிகரமான ஆகாரத்தையும் வெறுக்கும்.
21அவனுடைய உடல் காணப்படாமல் அழிந்து,
மூடப்பட்டிருந்த அவனுடைய எலும்புகள் வெளிப்படுகிறது.
22அவனுடைய ஆத்துமா பாதாளத்திற்கும், அவனுடைய உயிர் மரணத்திற்கும் நெருங்குகிறது.
23ஆயிரத்தில் ஒருவராகிய பரிந்துபேசுகிற தேவ தூதனானவர் மனிதனுக்குத் தம்முடைய நிதானத்தை அறிவிப்பதற்கு,
அவனுக்கு சாதகமாக இருந்தாரென்றால்,
24அவர் அவனுக்கு இரங்கி, அவன் படுகுழியில் இறங்காமல் இருக்க:
நீர் அவனைக் காப்பாற்றும்;
மீட்கும் பொருளை நான் கண்டுபிடித்தேன் என்பார்.
25அப்பொழுது அவனுடைய உடல் வாலிபத்தில் இருந்ததைவிட ஆரோக்கியமடையும்;
தன் இளவயது நாட்களுக்குத் திரும்புவான்.
26அவன் தேவனை நோக்கி விண்ணப்பம் செய்யும்போது,
அவன் அவருடைய சமுகத்தைக் கெம்பீரத்துடன் பார்க்கும்படி அவர் அவன்மேல் பிரியமாகி,
அந்த மனிதனுக்கு அவனுடைய நீதியின் பலனைக் கொடுப்பார்.
27அவன் மனிதரை நோக்கிப் பார்த்து:
நான் பாவம் செய்து செம்மையானதைப் புரட்டினேன்,
அது எனக்குப் பலன் கொடுக்கவில்லை.
28என் ஆத்துமா படுகுழியில் இறங்காமல் இருக்க,
அவர் அதை காப்பாற்றுவார்
ஆகையால் என் உயிர் வெளிச்சத்தைக் காணும் என்று சொல்லுவான்.
29இதோ, தேவன் மனிதனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கு விலக்குகிறதற்கும்,
அவனை உயிருள்ளோரின் வெளிச்சத்தினாலே பிரகாசிப்பதற்கும்,
30அவர் இவைகளையெல்லாம் அவனிடத்தில் பலமுறை நடப்பிக்கிறார்.
31யோபே, நீர் கவனித்து என் சொல்லைக் கேளும்;
நான் பேசப்போகிறேன், நீர் மவுனமாயிரும்.
32சொல்லவேண்டிய நியாயங்கள் இருந்ததென்றால்,
எனக்குப் பதில் கொடும்;
நீர் பேசும், உம்மை நீதிமானாக நிரூபிக்க எனக்கு ஆசையுண்டு.
33ஒன்றும் இல்லாதிருந்ததென்றால் நீர் என் சொல்லைக் கேளும்,
மவுனமாயிரும், நான் உமக்கு ஞானத்தைப் போதிப்பேன்” என்றான்.
اکنون انتخاب شده:
யோபு 33: IRVTam
هایلایت
کپی
مقایسه
به اشتراک گذاشتن
می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.