2 நாளா 30
30
அத்தியாயம் 30
எசேக்கியா பஸ்கா பண்டிகையைக் கொண்டாடுதல்
1அதன்பின்பு இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு பஸ்காவைக் கொண்டாட, எருசலேமில் இருக்கிற யெகோவாவுடைய ஆலயத்திற்கு வாருங்கள் என்று எசேக்கியா இஸ்ரவேல், யூதா எங்கும் ஆட்களை அனுப்பினதுமட்டுமல்லாமல், எப்பிராயீம் மனாசே கோத்திரங்களுக்கும் கடிதங்களை எழுதியனுப்பினான். 2பஸ்காவை இரண்டாம் மாதத்தில் கொண்டாட, ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் எருசலேமிலுள்ள சபையார் அனைவரும் யோசனை செய்திருந்தார்கள். 3ஆசாரியர்கள் போதுமான எண்ணிக்கையில் தங்களைப் பரிசுத்தம்செய்யாமலும், மக்கள் எருசலேமில் இன்னும் கூடிவராமலும் இருந்ததால், அதன் காலத்தில் அதைக் கொண்டாட முடியாமற்போனது. 4இந்தக் காரியம் ராஜாவின் பார்வைக்கும் அனைத்து சபையாரின் பார்வைக்கும் நியாயமாகக் காணப்பட்டது. 5எழுதியிருக்கிறபடி நீண்டகாலமாக அவர்கள் அதைக் கொண்டாடவில்லை; ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு பஸ்காவைக் கொண்டாட எருசலேமுக்கு வாருங்கள் என்று பெயெர்செபாமுதல் தாண் வரையுள்ள இஸ்ரவேல் தேசமெங்கும் அறிவிப்புக் கொடுக்கத் தீர்மானம் செய்தார்கள். 6அப்படியே ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் கொடுத்த கடிதங்களை தபால்காரர்கள் வாங்கி, ராஜாவுடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் யூதா எங்கும் போய்: இஸ்ரவேல் மக்களே, ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரவேல் என்பவர்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திரும்புங்கள்; அப்பொழுது அசீரியருடைய ராஜாக்களின் கைக்குத் தப்பியிருக்கிற மீதியான உங்களிடத்திற்கு அவர் திரும்புவார். 7தங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவுக்கு துரோகம்செய்த உங்கள் முற்பிதாக்களைப்போலவும் உங்கள் சகோதரர்களைப்போலவும் இருக்காதீர்கள்; அதற்காக, நீங்கள் காண்கிறபடியே, அவர்கள் அழிந்துபோகிறதற்கு ஒப்புக்கொடுத்தாரே. 8இப்போதும் உங்கள் முன்னோர்களைப்போல் உங்கள் கழுத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்; நீங்கள் யெகோவாவுக்கு உடன்பட்டு, அவர் சதாகாலத்திற்கும் பரிசுத்தம்செய்த அவருடைய பரிசுத்த ஸ்தலத்திற்கு வந்து, உங்கள் தேவனாகிய யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள்; அப்பொழுது அவருடைய கடுங்கோபம் உங்களை விட்டுத் திரும்பும். 9நீங்கள் கர்த்தரிடத்திற்குத் திரும்பினால், உங்கள் சகோதரர்களும் உங்கள் பிள்ளைகளும் தங்களை சிறைபிடித்தவர்களுக்கு முன்பாக இரக்கம் பெறுவதற்கும், இந்த தேசத்திற்குத் திரும்புவதற்கும் அது உதவியாயிருக்கும்; உங்கள் தேவனாகிய யெகோவா கிருபையும் இரக்கமும் உள்ளவர்; நீங்கள் அவரிடத்திற்குத் திரும்பினால், அவர் தம்முடைய முகத்தை உங்களைவிட்டு விலக்குவதில்லை என்றார்கள். 10அப்படி அந்த தபால்காரர்கள் எப்பிராயீம் மனாசே தேசங்களில் செபுலோன்வரைக்கும் ஊர் ஊராகச் சுற்றித் திரிந்தார்கள்; ஆனாலும் அவர்கள் இவர்களைப்பார்த்து நகைத்துப் பரியாசம் செய்தார்கள். 11ஆகிலும், ஆசேரிலும், மனாசேயிலும், செபுலோனிலும், சிலர் மனத்தாழ்மையாகி எருசலேமுக்கு வந்தார்கள். 12யூதாவிலும் யெகோவாவுடைய வார்த்தையின்படியே, ராஜாவும் பிரபுக்களும், கட்டளையிட்ட முறையின்படி செய்வதற்கு, தேவனுடைய கரம் அவர்களை ஒருமனப்படுத்தினது. 13அப்படியே இரண்டாம் மாதத்தில் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையைக் கொண்டாடத் திரளான மக்கள் எருசலேமில் மகாபெரிய சபையாகக் கூடினார்கள். 14அவர்கள் எழும்பி, எருசலேமில் இருந்த பலிபீடங்களையும், தூபபீடங்களையும் அகற்றி கீதரோன் ஆற்றிலே போட்டார்கள். 15பின்பு இந்த இரண்டாம் மாதம் பதினான்காம் தேதியில் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடித்தார்கள்; ஆசாரியர்களும் லேவியர்களும் வெட்கப்பட்டு, தங்களை சுத்தம்செய்து, சர்வாங்க தகனபலிகளைக் யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவந்து, 16தேவனுடைய மனிதனாகிய மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்ற தங்கள் முறைமையின்படியே தங்களுக்கு நியமித்த இடத்திலே நின்றார்கள்; ஆசாரியர்கள் லேவியர்களின் கையிலிருந்து இரத்தத்தை வாங்கித் தெளித்தார்கள். 17சபையிலே அநேகர் தங்களைப் பரிசுத்தம் செய்துகொள்ளாமல் இருந்தார்கள்; ஆகையால் சுத்தமில்லாத எல்லோரையும் யெகோவாவுக்குப் பரிசுத்தம்செய்ய, லேவியர்கள் அவர்களுக்காகப் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடிக்கும் காரியத்தை விசாரித்தார்கள். 18அதேனென்றால் எப்பிராயீம், மனாசே, இசக்கார், செபுலோன் மனிதர்களில் அநேகம் மக்கள் தங்களைச் சுத்தம் செய்துகொள்ளாமல் இருந்தும், எழுதப்பட்டிராத முறையில் பஸ்காவைச் சாப்பிட்டார்கள். 19எசேக்கியா அவர்களுக்காக விண்ணப்பம்செய்து, தங்கள் முன்னோர்களின் தேவனாகிய கர்த்தரான தேவனைத் தேட, தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் பரிசுத்த ஸ்தலத்திற்கேற்ற சுத்தம் அடையாமலிருந்தாலும், கிருபையுள்ள யெகோவா அவர்கள் எல்லோருக்கும் மன்னிப்பாராக என்றான். 20யெகோவா எசேக்கியாவின் விண்ணப்பத்தைக்கேட்டு, மக்களுக்கு உதவி செய்தார். 21அப்படியே எருசலேமிலே காணப்பட்ட இஸ்ரவேல் மக்கள் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழுநாட்களும் மகா ஆனந்தத்தோடு கொண்டாடினார்கள்; லேவியர்களும் ஆசாரியர்களும் அனுதினமும் கர்த்தருக்கென்று பேரோசையாகத் தொனிக்கும் கீதவாத்தியங்களால் யெகோவாவை துதித்துக்கொண்டிருந்தார்கள். 22யெகோவாவுக்கு அடுத்த காரியத்தில் நல்ல உணர்வுள்ள அனைத்து லேவியரோடும் எசேக்கியா ஆதரவாகப் பேசினான்; இப்படி அவர்கள் பண்டிகையின் ஏழு நாட்களும் சாப்பிட்டு, ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி, தங்கள் முன்னோர்களின் தேவனாகிய யெகோவாவை துதித்துக்கொண்டிருந்தார்கள். 23பின்பு வேறு ஏழுநாட்கள் கொண்டாட சபையார் எல்லோரும் யோசனைசெய்து, அந்த ஏழுநாட்களும் ஆனந்தத்தோடு கொண்டாடினார்கள். 24யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சபைக்கு ஆயிரம் காளைகளையும், ஏழாயிரம் ஆடுகளையும் கொடுத்தான்; பிரபுக்களும் சபைக்கு ஆயிரம் காளைகளையும், பத்தாயிரம் ஆடுகளையும் கொடுத்தார்கள்; ஆசாரியர்களில் அநேகம்பேர் தங்களைச் சுத்தம்செய்தார்கள். 25யூதாவின் சபையாரும், ஆசாரியர்களும், லேவியர்களும், இஸ்ரவேலிலிருந்து வந்த சபையாரும், இஸ்ரவேல் தேசத்திலிருந்து வந்த அந்நியரும், யூதாவில் குடியிருந்தவர்களும் மகிழ்ச்சியாயிருந்தார்கள். 26அப்படியே எருசலேமில் மகா சந்தோஷம் உண்டாயிருந்தது; தாவீதின் மகனாகிய சாலொமோன் என்னும் இஸ்ரவேலுடைய ராஜாவின் நாட்கள் முதற்கொண்டு இப்படி எருசலேமில் நடந்ததில்லை. 27லேவியரான ஆசாரியர்கள் எழுந்து நின்று, மக்களை ஆசீர்வதித்தார்கள்; அவர்களுடைய சத்தம் கேட்கப்பட்டு, அவர்களுடைய விண்ணப்பம் அவருடைய பரிசுத்த வாசஸ்தலமாகிய பரலோகத்தில் வந்து எட்டினது.
اکنون انتخاب شده:
2 நாளா 30: IRVTam
هایلایت
کپی
مقایسه
به اشتراک گذاشتن
می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.