YouVersion Logo
Search Icon

நீதிமொழிகள் 1

1
நோக்கமும் பொருளடக்கமும்
1இஸ்ரயேலின் அரசனும் தாவீதின் மகனுமான சாலொமோனின் நீதிமொழிகள்:
2இவற்றால் ஞானத்தையும் அறிவுரையையும் கற்றுக்கொண்டு,
நுண்ணறிவுள்ள வார்த்தைகளைப் புரிந்துகொள்ளலாம்;
3நீதி, நியாயம், நேர்மை என்பவற்றை
விவேகத்துடன் கையாள அறிவுரை கிடைக்கின்றது.
4இவை அறிவில் குறைந்தவர்களுக்கு விவேகத்தையும்,
வாலிபர்களுக்கு அறிவையும், புத்திக்கூர்மையையும் கொடுக்கின்றன.
5இவற்றைக் கேட்டு, ஞானமுள்ளவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ளட்டும்;
பகுத்தறிவுள்ளவர்கள் வழிநடத்துதலைப் பெற்றுக்கொள்ளட்டும்.
6இவற்றால் நீதிமொழிகளையும், உவமைகளையும்,
ஞானிகளின் வார்த்தைகளையும், புதிர்களையும் விளங்கிக்கொள்ளட்டும்.
7கர்த்தருக்குப் பயந்து நடப்பதே ஞானத்தின் ஆரம்பம்;
ஆனால் மூடர்கள் ஞானத்தையும் அறிவுரையையும் புறக்கணிக்கின்றார்கள்.
ஞானத்தை அடைவதற்கான புத்திமதிகள்
பாவிகளின் அழைப்பு குறித்த எச்சரிக்கை
8என் மகனே, உன் தந்தையின் அறிவுரைகளைக் கேள்;
உன் தாயின் போதனைகளை நிராகரிக்காதே.
9அவை உன் தலையைச் சிறப்பிக்கும் மலர் வளையமாகவும்,
உன் கழுத்தை அலங்கரிக்கும் பொன் மாலையாகவும் இருக்கும்.
10என் மகனே, பாவிகள் உன்னைக் கவர்ந்திழுக்க முயன்றால்,
அவர்களுக்கு இணங்காதே.
11அவர்கள் உன்னிடம், “நீ எங்களோடுகூட வா;
இரத்தம் சிந்தும்படி பதுங்கிக் காத்திருப்போம்,
அப்பாவியான மனிதரை பதுங்கியிருந்து பிடிப்போம்;
12பாதாளம் விழுங்குவது போல் அவர்களை உயிருடன் விழுங்குவோம்,
மரணக் குழிக்குள் போகின்றவர்களைப் போல் முழுமையாய் விழுங்குவோம்;
13பலவித விலையுயர்ந்த பொருட்களையும் கண்டுபிடித்து,
நமது வீடுகளைக் கொள்ளைப் பொருட்களால் நிரப்புவோம்;
14நீயும் எங்களுடன் பங்காளியாயிரு;
அனைத்தும் நமக்கு பொதுவாயிருக்கும்” என்று சொல்வார்களானால்,
15என் மகனே, நீ அவர்களுடைய வழியில் போகாதே;
அவர்களுடைய பாதையில் நடக்காதே.
16ஏனெனில் அவர்களுடைய கால்கள் தீமை செய்ய விரைந்து,
இரத்தம் சிந்த விரைகின்றன.
17பறவைகள் பார்த்திருக்கையில்,
வலை விரிப்பது பயனற்றதல்லவா!
18ஆனாலும் இந்த மனிதர்கள், தங்கள் சொந்த இரத்தத்தைச் சிந்துவதற்கு காத்திருந்து,
தங்களுக்காக பதுங்கியிருக்கிறார்கள்.
19தகாத முறையில் சம்பாதிக்கத் தேடுகின்ற அனைவரின் முடிவும் இதுவே;
அது அதைப் பெறுகின்றவர்களின் உயிரை எடுத்துவிடும்.
ஞானத்தைப் புறக்கணிக்காதிருக்க எச்சரிக்கை
20ஞானம் வீதியில் சத்தமிட்டு அழைக்கின்றது,
பொது இடங்களில் தனது குரலை எழுப்புகின்றது.
21அது இரைச்சலுள்ள வீதிகளின் சந்தியில் சத்தமிடுகின்றது,
பட்டணத்தின் வாசல்களில் நின்று உரையாற்றுகின்றது.
22“அறிவற்றவர்களே, எவ்வளவு காலம் அறியாமையை விரும்புவீர்கள்?
ஏளனம் செய்பவர்களே, எவ்வளவு காலம் ஏளனத்தில் மகிழ்ந்திருப்பீர்கள்?
மூடர்களே, நீங்கள் எவ்வளவு காலம் அறிவை வெறுப்பீர்கள்?
23நான் கடிந்து கொள்வதைக் கேட்டு நீங்கள் மனந்திரும்புங்கள்!
என் சிந்தனைகளை உங்களுக்குத் தெரியப்படுத்துவேன்,
என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரியப்படுத்துவேன்.
24ஆனால், நான் அழைத்தபோது நீங்கள் என்னைப் புறக்கணித்து,
நான் எனது கையை நீட்டியபோது ஒருவரும் அதைக் கவனிக்காதபடியினாலும்,
25நீங்கள் என் புத்திமதிகளையெல்லாம் தள்ளிவிட்டு,
நான் கடிந்துகொண்டதை ஏற்றுக்கொள்ளாதபடியினாலும்
26உங்களுக்குப் பேராபத்து வரும்போது நான் சிரிப்பேன்,
பேரழிவு உங்களை ஆட்கொள்கையில் ஏளனம் செய்வேன்;
27பேரழிவு உங்கள்மேல் புயலைப் போல் வரும்போதும்,
பேராபத்து சுழற்காற்றைப் போல் உங்களை அடித்துச் செல்லும்போதும்,
துன்பமும் தொல்லையும் உங்களைத் திணறடிக்கும்போதும் நான் உங்களை ஏளனம் செய்வேன்.
28“அப்போது அவர்கள் என்னை நோக்கி அழைப்பார்கள், நான் பதில் அளிக்க மாட்டேன்.
அவர்கள் என்னைத் தேடுவார்கள், ஆனால் என்னைக் கண்டடைந்துகொள்ள மாட்டார்கள்.
29ஏனெனில் அவர்கள் அறிவை வெறுத்து,
கர்த்தருக்குப் பயந்து நடப்பதைத் தெரிந்துகொள்ளாமல் போனார்கள்.
30அவர்கள் என் புத்திமதிகளை ஏற்றுக்கொள்ளாமல்,
நான் கடிந்துகொண்டதை புறக்கணித்தபடியால்,
31அவர்கள் தங்கள் நடத்தையின் பலனை அனுபவிப்பார்கள்,
தங்களுடைய சதித்திட்டங்களின் பலனால் நிரப்பப்படுவார்கள்.
32அறிவீனர்களின் தீய வழி அவர்களைக் கொல்லும்,
மூடர்களின் மனநிறைவு அவர்களை அழிக்கும்;
33ஆனால் எனக்குச் செவிமடுப்பவர் யாராயினும் பாதுகாப்பாக வாழ்வார்கள்,
அவர்கள் தீமைக்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பார்கள்.”

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in