YouVersion Logo
Search Icon

ஏசாயா 1

1
1உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா ஆகியோர் யூதாவின் அரசர்களாக அவரவர் ஆட்சி செய்த காலப்பகுதிகளில் ஆமோஸின் மகன் ஏசாயா, யூதா நாட்டையும் எருசலேம் பட்டணத்தையும் குறித்துக் கண்ட தரிசனம்.
யூதாவுக்கு கர்த்தரின் நியாயத்தீர்ப்பு
2வானங்களே, கேளுங்கள், பூமியே, கவனித்துக் கேள்!
ஏனெனில் கர்த்தர் பேசியிருக்கின்றார்:
“நான் என் பிள்ளைகளை பராமரித்து வளர்த்தெடுத்தேன்;
ஆனால் அவர்கள் எனக்கெதிராகக் கலகம் செய்தார்கள்.
3எருது தனது எஜமானையும்,
கழுதை தனது எஜமானின் தொழுவத்தையும் அறியும்.
ஆனால் இஸ்ரயேலர் என்னை அறியாமலும்,
என் மக்கள் என்னைப் புரிந்துகொள்ளாமலும் இருக்கின்றார்கள்.”
4ஐயோ! பாவம் நிறைந்த இனம்,
அக்கிரமத்தை சுமந்த மக்கள்,
தீயவர்களின் தலைமுறை,
கேட்டில் நடக்கும் பிள்ளைகள்!
இவர்கள் கர்த்தரைக் கைவிட்டு,
இஸ்ரயேலின் பரிசுத்தரை அவமதித்து,
முற்றிலும் பின்வாங்கிப் போனார்கள்.
5ஏன் நீங்கள் இன்னும் அடிக்கப்பட வேண்டும்?
ஏன் நீங்கள் தொடர்ந்தும் கலகம் செய்கின்றீர்கள்?
உங்கள் தலை முழுவதும் காயமடைந்தும்,
உங்கள் இருதயம் முழுவதுமாய் மயங்கியும் இருக்கின்றதே!
6உங்கள் உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை வரை,
எதிலுமே ஆரோக்கியமில்லை.
ஆறாத புண்களும், அடிகாயங்களும்,
சீழ்வடியும் புண்களுமே இருக்கின்றன.
அவை சுத்தமாக்கப்படாமலும், கட்டப்படாமலும்,
எண்ணெய் பூசி குணமாக்கப்படாமலும் இருக்கின்றது.
7உங்கள் தேசம் பாழடைந்தது;
உங்கள் பட்டணங்கள் தீயினால் எரிந்து போயின,
உங்கள் கண்கள் முன்பாக
உங்கள் நாடு அந்நியரால் கொள்ளையிடப்படுகின்றது;
அது பிறநாட்டவரால் தோற்கடிக்கப்பட்டு பாழடைந்ததைப் போல் இருக்கின்றது!
8சீயோன் மகள்#1:8 சீயோன் மகள் அல்லது எருசலேம் பட்டணம்.
திராட்சைத் தோட்டத்திலுள்ள கொட்டில் போலவும்,
வெள்ளரித் தோட்டத்திலுள்ள குடிசை போலவும்,
முற்றுகையிடப்பட்ட பட்டணம் போலவும் கைவிடப்பட்டிருக்கின்றாள்.
9சேனைகளின் கர்த்தர்
நம்மில் ஒரு சிலரைத் தப்பிப்பிழைக்க விடாமல் இருந்திருந்தால்,
நாம் சோதோமைப் போலாகி,
கொமோராவுக்கு ஒத்தவர்களாயிருப்போம்#1:9 சோதோம் மற்றும் கொமோரா ஆகிய இரண்டு நகரங்களும் அவர்களுடைய பாவத்தினால் அழிக்கப்பட்டன. ஆதி. 19.
10சோதோமின் ஆளுநர்களே,
கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்;
கொமோராவின் மக்களே,
நமது இறைவனின் அறிவுறுத்தலுக்குச் செவிசாயுங்கள்!
11“உங்கள் ஏராளமான பலிகள்
எனக்கெதற்கு?”
என கர்த்தர் கேட்கின்றார்.
“செம்மறியாட்டுக்கடாக்களின் தகனபலிகளும்,
கொழுத்த மந்தைகளின் கொழுப்பும், எனக்குச் சலித்துவிட்டன;
காளைகள், செம்மறியாட்டுக்குட்டிகள், வெள்ளாட்டுக்கடாக்களுடைய இரத்தத்தில்
நான் மகிழ்வதில்லை.
12நீங்கள் என் முன்னிலையில் வரும்போது,
இவற்றையெல்லாம் கொண்டுவந்து,
இவ்வாறு எனது முற்றங்களை மிதிக்க வேண்டுமென உங்களிடம் கூறியவர் யார்?
13உங்களது வீணான காணிக்கைகளைக் கொண்டுவருவதை நிறுத்துங்கள்!
உங்களது தூபம் எனக்கு அருவருப்பாயிருக்கின்றது.
மாதப்பிறப்பு நாட்கள், ஓய்வுநாட்கள், சபை ஒன்றுகூடல்கள் போன்ற
அக்கிரமமான ஒன்றுகூடுதல்களை இனி என்னால் சகிக்க முடியாது.
14உங்களது மாதப்பிறப்பு நாட்களையும்,
உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கின்றது.
அவை எனக்கு சுமையாகிவிட்டன;
நான் அவற்றைச் சுமந்து இளைத்துப் போனேன்.
15நீங்கள் மன்றாடுவதற்காகக் கைகளை உயர்த்தும்போது,
உங்களிடமிருந்து நான் என் கண்களை மறைத்துக்கொள்வேன்;
நீங்கள் அநேக மன்றாடுதல்களைச் செய்தாலும்,
நான் செவிமடுக்க மாட்டேன்.
“உங்கள் கைகள் இரத்தக் கறையால்#1:15 இரத்தக் கறையால் குற்றம் செய்யாதவர்களின் இரத்தம் நிறைந்திருக்கின்றன!
16“உங்களைக் கழுவித் தூய்மைப்படுத்துங்கள்.
உங்கள் கொடிய செயல்களை எனது பார்வையிலிருந்து அகற்றி,
தீமை செய்வதை நிறுத்துங்கள்.
17நல்லது செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியைத் தேடுங்கள்.
ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.
திக்கற்றவர்களுக்கு நியாயம் செய்யுங்கள்;
கணவனை இழந்தவளின் வழக்கை விசாரியுங்கள்.
18“வாருங்கள், இப்போது நாம் வாதிடுவோம்”
என்று கர்த்தர் கூறுகின்றார்.
“உங்கள் பாவங்கள் செந்நிறமாய் இருந்தாலும்,
அவை பனி போல் வெண்மையாகும்;
அவை கருஞ்சிவப்பாய் இருந்தாலும்,
பஞ்சைப் போல் வெண்மையாகும்.
19நீங்கள் விருப்பத்துடன் கீழ்ப்படிந்தால்,
நிலத்தின் சிறந்த பலனை உட்கொள்வீர்கள்.
20ஆனால் எதிர்த்துக் கலகம் செய்வீர்களாயின்,
வாளுக்கு இரையாவீர்கள்.”
ஏனெனில் கர்த்தரின் வாய் இதை சொல்லியிருக்கின்றது.
21பாருங்கள், எவ்வளவு உண்மையாக இருந்த பட்டணம்#1:21 பட்டணம் எருசலேம்
இவ்வாறு விலைமாதுவாகிப் போனது
முன்பு அது நியாயத்தால் நிரம்பியிருந்தது;
நீதி அதில் குடியிருந்ததே,
இப்பொழுதோ அது கொலைகாரரின் வசிப்பிடம்.
22உன் வெள்ளி களிம்பாகிவிட்டது,
உன் சிறந்த திராட்சைரசம் தண்ணீர் கலப்படமாயிற்று.
23உனது ஆளுநர்கள் கலகக்காரர்கள்,
திருடரின் தோழர்கள்;
ஒவ்வொருவனும் இலஞ்சத்தை விரும்பி,
பரிசுகளை நாடி ஓடுகின்றான்.
அவர்கள் அநாதைகளுக்கு நியாயம் செய்யாதிருக்கின்றார்கள்;
கணவனை இழந்தவளின் வழக்கை எடுத்துப் பேசாதிருக்கின்றார்கள்.
24ஆகவே, ஆண்டவர், சேனைகளின் கர்த்தராகிய
இஸ்ரயேலின் வல்லவர் அறிவிக்கின்றார்:
“ஓ! நான் என் எதிரிகள்மீது என் கோபத்தை ஊற்றி,
என் பகைவர்களைப் பழிவாங்குவேன்.
25நான் என் கரத்தை உனக்கு எதிராகத் திருப்புவேன்;
நான் உன்னை உருக்கி, உனது களிம்பை முற்றிலும் நீக்கி,
உன் அழுக்கு அனைத்தையும் அப்புறப்படுத்துவேன்.
26முன்பிருந்தது போல்,
நான் உன்னுடைய நியாயாதிபதிகளை மீண்டும் அமர்த்துவேன்.
ஆரம்பத்தில் இருந்தது போலவே உன் ஆலோசகர்களையும் மீண்டும் தருவேன்.
அதன் பின்னர் நீ நீதியின் நகரம் என்றும்,
உண்மையுள்ள நகரம் என்றும் அழைக்கப்படுவாய்.”
27சீயோன் நியாயத்தினால் மீட்கப்பட்டு,
அங்கு மனந்திரும்புவோர் நீதியினால் மீட்கப்படுவார்கள்.
28ஆனால் கலகக்காரரும் பாவிகளும் ஒருமித்து நொறுக்கப்படுவார்கள்;
கர்த்தரைவிட்டு விலகுகின்றவர்களோ அழிந்து போவார்கள்.
29“நீங்கள் விரும்பிய
கர்வாலி மரங்களின் பொருட்டு வெட்கப்படுவீர்கள்;
நீங்கள் தெரிந்துகொண்ட
தோப்புகளின் பொருட்டு அவமானப்படுவீர்கள்.
30நீங்கள் இலையுதிர்ந்த கர்வாலி மரம் போலவும்,
தண்ணீரில்லாத பூங்கா போலவும் இருப்பீர்கள்.
31வலிமையுள்ளவன் காய்ந்த கூளம் போலவும்,
அவனுடைய செயல் ஒரு நெருப்புப் பொறி போலவுமாகி
இரண்டும் அணைப்பாரின்றி
ஒருமித்து எரிந்துபோகும்.”

Currently Selected:

ஏசாயா 1: TRV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in