YouVersion Logo
Search Icon

உபாகமம் 1

1
ஓரேபை விட்டு வெளியேற கட்டளை
1மோசே யோர்தான் நதிக்குக் கிழக்கேயுள்ள அரபா பாலைவனத்தில் இஸ்ரயேலர் எல்லோரிடமும் உரையாற்றினார். அப்பாலைவனம் சூப் என்னும் இடத்துக்கு எதிராகவும், பாரானுக்கும், தோப்பேல், லாபான், ஆஸ்ரோத், திசாகாபு ஆகிய நகரங்களுக்கு நடுவிலும் இருக்கின்றது. 2ஓரேபிலிருந்து#1:2 ஓரேபிலிருந்து சீனாய் மலை சேயீர் மலைப் பாதையின் ஊடாக, காதேஸ்-பர்னேயாவுக்கு நடந்து செல்வதானால் பதினொரு நாட்கள் எடுக்கும்.#1:2 சுமார் 260 கிலோ மீற்றர்
3இஸ்ரயேலரைப் பற்றி கர்த்தர் தனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும், நாற்பதாம் வருடம் பதினோராம் மாதம் முதலாம் திகதியன்று மோசே அவர்களுக்கு அறிவித்தார். 4எஸ்போன் நகரிலிருந்து ஆட்சி செய்த எமோரியரின் அரசனாகிய சீகோனைத் தோற்கடித்த பின்பும், அஸ்தரோத் நகரிலிருந்து ஆட்சி செய்த பாசானின் அரசனாகிய ஓக் என்பவனை எத்ரேயி நகரில் தோற்கடித்த பின்பும் இது நடைபெற்றது.
5அதன்படி, யோர்தான் நதிக்குக் கிழக்கே உள்ள மோவாப் பிரதேசத்திலே மோசே இந்த சட்டங்களை விபரிக்கத் தொடங்கியபோது சொன்னதாவது:
6நமது இறைவனாகிய கர்த்தர் ஓரேபிலே நமக்குச் சொன்னது என்னவென்றால், “நீங்கள் இந்த மலையடிவாரத்தில் தங்கியிருந்தது போதும். 7நீங்கள் முகாமிலிருந்து புறப்பட்டு முன்னேறிச் செல்லுங்கள். எமோரியரின் மலைநாட்டுக்கும், அரபாவிலுள்ள அவர்களுடைய அயலவர்கள், மலைநாடுகள், மேற்கு மலையடிவாரங்கள், தெற்கு, கரையோர நாடுகள் ஆகிய அயல்நாடுகளில் உள்ள மக்களிடம் சென்று, கானான் நாட்டுக்கும் லெபனோனுக்கும் மற்றும் யூப்ரட்டீஸ் எனப்பட்ட பெரிய நதிவரை போங்கள். 8பாருங்கள், இப்பிரதேசத்தை நான் உங்களுக்கென்று கொடுத்திருக்கின்றேன். உங்கள் முற்பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கும் அவர்களது பின்வரும் சந்ததிகளுக்கும் கொடுப்பேன் என்று கர்த்தர் ஆணையிட்ட அந்த நாட்டுக்குப் போய், அதை உங்களுக்கு உரிமையாக்கிக் கொள்ளுங்கள்” என்றார்.
தலைவர்களை நியமித்தல்
9அந்நாட்களில் நான் உங்களுக்குச் சொல்லியிருந்ததாவது: “நான் உங்களைத் தனியே சுமக்க முடியாதபடி நீங்கள் அதிக பாரமாயிருக்கின்றீர்கள். 10உங்கள் இறைவனாகிய கர்த்தர், இன்று நீங்கள் வானத்து நட்சத்திரங்களைப் போல் அநேகராயிருக்கும்படி, எண்ணிக்கையில் உங்களைப் பெருகச் செய்தார். 11உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய கர்த்தர், உங்களை இன்னும் ஆயிரம் மடங்காகப் பெருகச் செய்து, தாம் வாக்குக் கொடுத்தபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக! 12ஆனால் உங்களுடைய பிரச்சினைகளையும், தாங்க முடியாத தொல்லைகளையும், உங்கள் வாக்குவாதங்களையும் நான் தனியே சுமப்பது எப்படி? 13ஆகவே நீங்கள் உங்கள் கோத்திரங்கள் ஒவ்வொன்றிலுமிருந்து ஞானமும், புரிந்துணர்வும், அனுபவமும் உள்ள சில மனிதரைத் தேர்ந்தெடுங்கள். அவர்களை உங்கள் தலைவர்களாக நான் நியமிப்பேன்” என்றேன்.
14அப்போது, “நீர் முன் வைத்த யோசனை நல்லது” என்பதாக நீங்கள் பதிலளித்தீர்கள்.
15எனவே நான் உங்கள் கோத்திரங்களில் ஞானமும் நற்பெயரும் கொண்ட மனிதரை உங்களது தலைவர்களாய் இருக்கும்படி நியமித்தேன். அவர்களை உங்கள் ஆயிரம் பேருக்கும், நூறு பேருக்கும், ஐம்பது பேருக்கும், பத்துப் பேருக்கும் தளபதிகளாகவும், கோத்திரங்களுக்கு அதிகாரிகளாகவும் நியமித்தேன். 16அந்நேரத்தில் நான் உங்கள் நீதிபதிகளுக்குக் கட்டளையிட்டுச் சொன்னதாவது: “உங்கள் சகோதரர்களின் வாக்குவாதங்களைக் கேட்டு, அது இஸ்ரயேல் சகோதரர்களுக்கு இடையிலான ஒரு வழக்காக இருந்தாலும் சரி, அல்லது ஒரு இஸ்ரயேலனுக்கும் ஒரு அந்நியனுக்கும் இடையிலான ஒரு வழக்காக இருந்தாலும் சரி நியாயமாக நீதி வழங்குங்கள். 17நீதி வழங்குவதில் பாரபட்சம் காட்டாதீர்கள்; பெரியவர்களையும் சிறியவர்களையும் ஒரேவிதமாய் விசாரணை செய்யுங்கள். எந்த மனிதனுக்கும் பயப்பட வேண்டாம். ஏனெனில் நியாயத்தீர்ப்பு இறைவனுக்கே உரியது. உங்களுக்குக் கடினமாய் காணப்படும் வழக்குகளை என்னிடம் கொண்டுவாருங்கள். அவற்றை நான் விசாரிப்பேன்” என்றேன். 18அக்காலத்தில் நீங்கள் செய்யவேண்டிய எல்லாவற்றையும் நான் உங்களுக்குச் சொல்லியிருந்தேன்.
உளவாளிகள் அனுப்பப்படுதல்
19பின்பு, நமது இறைவனாகிய கர்த்தரின் கட்டளைப்படியே நாம் ஓரேபிலிருந்து புறப்பட்டு, எமோரியரின் மலைநாட்டை நோக்கிப் போனோம். பின்பு நீங்கள் கண்ட அந்த விசாலமும், பயங்கரமுமான பாலைவனத்தின் வழியே அங்கு போய் காதேஸ்-பர்னேயாவை அடைந்தோம். 20அப்போது நான் உங்களிடம், “நம் இறைவனாகிய கர்த்தர் நமக்குக் கொடுக்கும் எமோரியரின் மலைநாட்டுக்கு நீங்கள் வந்து சேர்ந்துவிட்டீர்கள். 21பாருங்கள், உங்கள் இறைவனாகிய கர்த்தர் இந்த நாட்டை உங்களுக்குக் கொடுத்திருக்கின்றார். உங்கள் முற்பிதாக்களுடைய இறைவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் போய் அதை உங்களுக்கு உரிமையாக்கிக் கொள்ளுங்கள். பயப்பட வேண்டாம்; கலங்க வேண்டாம்.” என்று சொன்னேன்.
22அப்போது நீங்கள் எல்லோரும் என்னிடம் வந்து, “நாம் அங்கு போவதற்குமுன் அந்நாட்டை உளவு பார்க்க சில மனிதர்களை அனுப்புவோம். நாம் செல்லும் வழியையும், நாம் போய்ச் சேரவேண்டிய பட்டணங்களையும் பற்றிய விபரங்களை அவர்கள் கொண்டுவரட்டும்” என்றீர்கள்.
23நீங்கள் சொன்ன யோசனை எனக்கும் நல்லதாகக் காணப்பட்டது; எனவே நான் ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒவ்வொருவராக, உங்களிலிருந்து பன்னிரண்டு பேரைத் தெரிவுசெய்து அனுப்பினேன். 24அவர்கள் புறப்பட்டு மலைநாட்டுக்கு ஏறிச்சென்று, அங்கிருந்து எஸ்கோல் பள்ளத்தாக்குக்கு வந்து நாட்டை ஆராய்ந்து பார்த்தார்கள். 25அவர்கள் அந்நாட்டின் பழங்களில் சிலவற்றை எடுத்துக் கொண்டுவந்து, “நமது இறைவனாகிய கர்த்தர் நமக்குக் கொடுக்கும் நாடு நல்லது” என்று விபரம் சொன்னார்கள்.
கர்த்தருக்கு எதிரான கலகம்
26அவ்வாறிருந்தும் நீங்கள் அங்கு ஏறிப்போக மனதில்லாதவர்களாய், உங்களுடைய இறைவனாகிய கர்த்தரின் கட்டளைக்கு விரோதமாகக் கலகம் செய்தீர்கள். 27நீங்கள் உங்கள் கூடாரங்களிலிருந்து முணுமுணுத்து, “கர்த்தர் எங்களை வெறுக்கின்றார்; அதனால்தான் எங்களை அழிப்பதற்காக எமோரியரின் கையில் ஒப்படைக்கும்படி எகிப்திலிருந்து எங்களை வெளியே கொண்டுவந்தார். 28நாங்கள் எங்கே போவது? நாம் அனுப்பிய எங்கள் சகோதரர்கள் திரும்பி வந்து ‘அந்த மக்கள் எங்களைவிட பலமும் உயரமுமாய் இருக்கின்றார்கள்; அவர்களுடைய பட்டணங்கள் பெரியவையாகவும், அவற்றின் மதில்கள் வானத்தைத் தொடுமளவுக்கும் இருக்கின்றன. மேலும் நாங்கள் ஏனாக்கியரையும்#1:28 ஏனாக்கியரையும் – உயரமும் அதிக பலமும் கொண்டவர்கள். அங்கே கண்டோம்’ என்று கூறி எங்களை மனந்தளரச் செய்து விட்டார்களே” என்று சொன்னீர்கள்.
29அப்போது நான் உங்களிடம், “திகிலடைய வேண்டாம்; அவர்களுக்குப் பயப்படவும் வேண்டாம். 30உங்களுக்கு முன்பாகச் செல்லும் உங்கள் இறைவனாகிய கர்த்தர், உங்கள் கண்களுக்கு முன்பாக எகிப்தில் செய்தது போல், உங்களுக்காக யுத்தம் செய்வார். இந்த இடத்தை நீங்கள் வந்து சேரும்வரை, 31நீங்கள் சென்ற வழிகளிலெல்லாம் ஒரு தந்தை தன் மகனைச் சுமந்துசெல்லுவது போல, உங்கள் இறைவனாகிய கர்த்தர் உங்களை எப்படிச் சுமந்தார் என்பதை அங்கே கண்டீர்களே” என்றேன்.
32அவ்வாறிருந்தும் நீங்கள் உங்கள் இறைவனாகிய கர்த்தரிடம் நம்பிக்கை வைக்கவில்லை. 33உங்கள் இறைவனாகிய கர்த்தர் உங்களுக்கு முகாம் அமைக்க வேண்டிய இடங்களைத் தேடும் வகையிலும், நீங்கள் போக வேண்டிய வழியை உங்களுக்குக் காட்டும்படியாகவும் இரவில் நெருப்பிலும், பகலில் மேகத்திலும் உங்கள் பயணத்தில் உங்களுக்கு முன்னால் சென்றார்.
34நீங்கள் கூறியவற்றைக் கர்த்தர் கேட்டபோது, அவர் கோபம்கொண்டு கடுமையாக ஆணையிட்டுச் சொன்னதாவது: 35“நான் உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட அந்த நல்ல நாட்டை இந்த தீய சந்ததியினரைச் சேர்ந்த ஒருவரேனும் காணப் போவதில்லை. 36எப்புன்னேயின் மகனாகிய காலேப் மாத்திரமே அந்த நாட்டைக் காண்பான். அவன் காலடி வைத்த நாட்டை அவனுக்கும் அவனுடைய சந்ததிக்கும் மட்டுமே கொடுப்பேன்; ஏனென்றால் அவன் கர்த்தரை முழு இருதயத்தோடு பின்பற்றியிருக்கின்றான்” என்றார்.
37உங்களாலே கர்த்தர் என்மீதும் கோபம்கொண்டு: “நீயும் அதற்குள் போக மாட்டாய். 38ஆனால் உன்னுடைய உதவியாளன் நூனின் மகனாகிய யோசுவா அதற்குள் போவான். அவனைத் தைரியப்படுத்து, இஸ்ரயேலர் அந்த நாட்டை உரிமையாக்குவதற்காக அவனே அவர்களை வழிநடத்துவான். 39‘கைதிகளாக்கப்பட்டு கொண்டு செல்லப்படுவார்கள்’ என்று நீங்கள் குறிப்பிட்ட உங்கள் சிறு குழந்தைகளும், நன்மை தீமை அறியாதிருக்கின்ற உங்கள் பிள்ளைகளுமாகிய அவர்களே அந்நாட்டுக்குள் போவார்கள். நான் அந்த நாட்டை அவர்களுக்கே கொடுப்பேன். அவர்கள் அதை உரிமையாக்கிக் கொள்வார்கள். 40நீங்களோ, திரும்பி செங்கடலுக்குப் போகும் வழியான பாலைவனத்தை நோக்கிப் போங்கள்” என்று சொன்னார்.
41அப்போது நீங்கள் அதற்கு பதிலளித்து, “நாங்கள் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தோம். எங்கள் இறைவனாகிய கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டபடியே, நாங்கள் சென்று யுத்தம் செய்வோம்” என்றீர்கள். மலைநாட்டுக்கு ஏறிப்போவது சுலபம் என எண்ணி நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டீர்கள்.
42ஆனால் கர்த்தர் என்னிடம், “நீங்கள் யுத்தம் செய்ய மேலே ஏறிச் செல்ல வேண்டாம். நான் உங்களுடன் இருக்க மாட்டேன். நீங்கள் உங்கள் பகைவரால் தோற்கடிக்கப்படுவீர்கள் என்று அவர்களுக்குச் சொல்” என்று சொன்னார்.
43நான் அதை உங்களுக்குக் கூறியும், நீங்கள் எனக்குச் செவிசாய்க்கவில்லை. கர்த்தரின் கட்டளைக்கு விரோதமாகக் கலகம் செய்து, அகந்தையுடன் அணிவகுத்தவர்களாய் மலைநாட்டுக்கு ஏறினீர்கள். 44அப்போது மலைநாட்டில் வாழ்ந்த எமோரியர் உங்களுக்கு எதிராக வந்தார்கள்; அவர்கள் தேனீக்கள் போன்று உங்களைத் துரத்தி, சேயீரிலிருந்து#1:44 சேயீரிலிருந்து – இதன் மறுபெயர் ஏதோம். இங்குதான் ஏசாவின் சந்ததியினர் வாழ்ந்து வந்தனர் ஓர்மா நகரம்வரை உள்ள வழியெல்லாம் உங்களை அடித்து வீழ்த்தினார்கள். 45நீங்கள் திரும்பி வந்தபோது, உதவி கேட்டு கர்த்தரிடம் புலம்பி அழுதீர்கள்; ஆனால் அவர் உங்கள் புலம்பலுக்குச் செவிசாய்க்கவோ கவனம் செலுத்தவோ இல்லை. 46ஆகவே நீங்கள் காதேசில் தங்கி, அங்கே அநேக நாட்களைக் கழித்தீர்கள்.

Currently Selected:

உபாகமம் 1: TRV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in