1
தானியேலின் பயிற்சி
1யூதா மாகாணத்தின் அரசன் யோயாக்கீம் ஆட்சி செய்த மூன்றாம் வருடத்தில், பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து அதை முற்றுகையிட்டான். 2அப்போது ஆண்டவர், யூதாவின் அரசன் யோயாக்கீமை, இறைவனின் வீட்டிலுள்ள சில பொருட்களுடன் நேபுகாத்நேச்சாரின் அதிகாரத்துக்குக் கையளித்தார்#1:2 அதிகாரத்துக்குக் கையளித்தார் – எபிரேய மொழியில் கையில் கொடுத்தார் என்றுள்ளது. நேபுகாத்நேச்சார் இவற்றை பாபிலோனிலுள்ள தன் தெய்வத்தின் வீட்டுக்கு எடுத்துச் சென்று, அவற்றைத் தனது தெய்வத்துக்குரிய திரவிய களஞ்சியத்தில் வைத்தான்.#1:2 2 நாளா. 36:7
3அதன் பின்னர் அரசன் தன் அரண்மனை அதிகாரிகளின் தலைவனாகிய அஸ்பேனாஸிடம், “நீ இஸ்ரயேலின் அரச குடும்பத்திலிருந்தும், உயர்குடி மக்களிலிருந்தும் சில வாலிபர்களைத் தெரிவுசெய்து கொண்டுவா” என அவனுக்கு உத்தரவிட்டான். 4“அந்த வாலிபர்கள் சரீர குறைபாடு எதுவும் அற்றவர்களாகவும், வசீகரமானவர்களாகவும் இருக்கவேண்டும். அத்துடன் அவர்கள் எல்லாவிதமான கல்வியை கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளவர்களும், அறிவில் சிறந்தவர்களும், புரிந்துணர்வுள்ளவர்களும், அரண்மனையில் பணி செய்யத் தகுதியுடையவர்களுமாய் இருக்கவேண்டும். அவர்களுக்குப் பாபிலோனிய மொழியையும், இலக்கியங்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும்” என அரசன் கூறினான். 5அத்துடன், அரசனுடைய பந்தியில் அரசன் உண்ணும் உணவிலும், அருந்தும் திராட்சைரசத்திலுமிருந்து அவர்களுக்குரிய நாளாந்த பங்கை அரசன் ஒதுக்கிக் கொடுத்தான். இவ்வாறு அவர்கள், மூன்று வருடம் பயிற்சி பெறவேண்டும். பின்னர் அவர்கள் அரச பணியில் ஈடுபட வேண்டும் எனவும் அவன் கட்டளையிட்டான்.
6தெரிவுசெய்யப்பட்டவர்களில் யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவர்களான தானியேல், அனனியா, மிஷாயேல், அசரியா ஆகியோரும் இருந்தார்கள். 7அரசரின் பிரதம அதிகாரி, தானியேலுக்கு பெல்தெஷாத்சார் என்றும், அனனியாவுக்கு சாத்ராக் என்றும், மிஷாயேலுக்கு மேஷாக் என்றும், அசரியாவுக்கு ஆபேத்நேகோ என்றும் புதிய பெயர்களை#1:7 புதிய பெயர்களை – இவை பாபிலோனிய பெயர்கள் இட்டான்.
8ஆனால் தானியேலோ, அரச உணவினாலும் திராட்சைரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்திக் கொள்ளக்கூடாதென உறுதி பூண்டிருந்தான். எனவே, இவ்வாறாக தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி நடந்துகொள்ளத் தேவையான விசேட அனுமதியை பிரதம அதிகாரியிடம் கேட்டான். 9தானியேலுக்கு பிரதம அதிகாரி தயவும் அனுதாபமும் காண்பிக்கும்படியாக இறைவன் செய்திருந்தார். 10ஆயினும் பிரதம அதிகாரி தானியேலிடம், “உங்களுக்கு உணவையும் பானத்தையும் ஒழுங்கு செய்திருக்கும் என் தலைவனாகிய அரசனுக்கு நான் பயப்படுகிறேன். ஏனெனில் அவர் உங்களைப் பார்க்கும்போது, உங்கள் வயதையொத்த வாலிபர்களைவிட உங்கள் தோற்றம் களையிழந்து வாடிக் காணப்பட்டால், அரசன் என் தலையைத் துண்டித்துவிடுவார்” என்றான்.
11தானியேல், அனனியா, மிஷாயேல், அசரியா ஆகிய நால்வருக்கும் பொறுப்பானவனாக பிரதம அதிகாரியினால் நியமிக்கப்பட்ட மேற்பார்வையாளனிடம் தானியேல், 12“தயவுசெய்து பத்து நாட்களுக்கு உமது அடியவர்களாகிய எங்களை பரிசோதித்துப் பார்ப்பீராக! நாங்கள் உண்பதற்கு காய்கறி உணவையும், அருந்துவதற்குத் தண்ணீரையுமே அன்றி வேறொன்றும் எங்களுக்குத் தர வேண்டாம். 13அதன் பின்னர் அரச உணவை உண்கின்ற வாலிபருடைய தோற்றத்தோடு, எங்கள் தோற்றத்தை ஒப்பிட்டுப் பார்த்திடுவீராக. அதன்பின்பு அதற்கேற்றபடி, நீர் விரும்பும் வகையில் உமது அடியவர்களாகிய எங்களை நடத்துவீராக” என்றான். 14அவ்வாறே அவனும் இதற்கு இணங்கி, அவர்களைப் பத்து நாட்களாக பரிசோதித்துப் பார்த்தான்.
15பத்து நாட்கள் நிறைவுற்றபோது, அரச உணவை உட்கொண்ட வாலிபர்களைவிட, இவர்கள் ஆரோக்கியமாகவும், நல்ல புஷ்டியுடையவர்களாகவும் இருக்கக் காணப்பட்டார்கள். 16எனவே மேற்பார்வையாளன் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட சிறந்த உணவையும், அருந்தவேண்டிய திராட்சைரசத்தையும் அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக மரக்கறி உணவை அவர்களுக்குக் கொடுத்துவந்தான்.
17இறைவன் இந்த நான்கு வாலிபருக்கும் அறிவையும், எல்லாவித இலக்கியங்களையும் கல்வியையும் புரிந்துணரும் ஆற்றலையும் கொடுத்தார். அதற்கு மேலாக தானியேலினால் எல்லாவிதமான தரிசனங்களையும் கனவுகளையும் விளங்கிக்கொள்ளக் கூடியதாயிருந்தது.
18அவர்களைத் தனக்கு முன்பாக அழைத்து வருவதற்கென அரசன் நியமித்த நாளில்#1:18 நியமித்த நாளில் – அவர்களது மூன்று வருட பயிற்சிக்கு பின்னர். தானி. 1:5, பிரதம அதிகாரி அவர்களை அரசனாகிய நேபுகாத்நேச்சார் முன்னிலையில் அழைத்து வந்தான். 19அரசன் அவர்களோடு பேசியபோது தானியேல், அனனியா, மிஷாயேல், அசரியா ஆகியோருக்கு இணையாக அந்தக் குழுவினரிடையே ஒருவனேனும் இல்லாதிருப்பதைக் கண்டான்; ஆகவே அவர்கள் அரச பணிசெய்ய அமர்த்தப்பட்டார்கள். 20எல்லாவித ஞானத்தையும் பகுத்தறிவையும் குறித்து அரசன் அவர்களிடம் கேள்விகள் கேட்டபோது, தனது இராச்சியத்தில் உள்ள அனைத்து மந்திரவாதிகளையும் மாயவித்தைக்காரர்களையும்விட, பத்து மடங்கு சிறப்புடையவர்களாக இவர்கள் உள்ளனரென்பதை அரசன் கண்டறிந்தான்.
21பிற்காலத்தில் அரசாண்ட கோரேஸ் அரசனின் ஆட்சியின் முதலாம் வருடம் வரை தானியேல் அங்கு அரச சேவையில் இருந்தான்.