1
சாலொமோன் ஞானத்தைக் கேட்டல்
1தாவீது அரசனின் மகன் சாலொமோன் தனது இராச்சியத்தின்மீது தன்னை மிகவும் உறுதியாக நிலைப்படுத்தினான்; இறைவனாகிய கர்த்தர் அவனோடிருந்து அவனை மிகவும் மேன்மைப்படுத்தினார்.
2ஒருநாள் சாலொமோன், அனைத்து இஸ்ரயேலரின் ஆயிரம் வீரர்களின் தளபதிகளுடனும், நூறு வீரர்களின் தளபதிகளுடனும், நீதிபதிகளுடனும், இஸ்ரயேலின் எல்லாத் தலைவர்களுடனும், குடும்பங்களின் தலைவர்களுடனும் பேசினான். 3சாலொமோனும் கூடியிருந்தவர்கள் எல்லோரும் கிபியோன் பட்டணத்தில் உள்ள உயரமான இடத்துக்குப்#1:3 உயரமான இடத்துக்கு அல்லது வழிபாட்டு மேடை போனார்கள். ஏனெனில் அங்கே கர்த்தரின் ஊழியக்காரரான மோசே பாலைவனத்தில் அமைத்த இறைவனின் இறைபிரசன்னக் கூடாரம் இருந்தது. 4அப்போது தாவீது இறைவனின் பெட்டியை கீரியாத்-யாரீம் நகரிலிருந்து அதற்கென தான் ஆயத்தப்படுத்திய இடத்துக்குக் கொண்டுவந்தான். ஏனெனில் அவன் எருசலேமில் அதற்காக ஒரு கூடாரம் அமைத்திருந்தான். 5ஆனால் ஊரின் மகனான ஊரியின் மகன் பெசலெயேல் அமைத்திருந்த ஒரு வெண்கல பலிபீடம் கிபியோனில் கர்த்தரின் கூடாரத்துக்கு முன்னால் இருந்தது. எனவே அந்த இடத்தில் சாலொமோனும் கூடியிருந்த மக்களும் கர்த்தரிடத்தில் விசாரித்தார்கள்#1:5 விசாரித்தார்கள் அல்லது வழிபட்டார்கள். 6இறைபிரசன்னக் கூடாரத்தில் கர்த்தருக்கு முன்பாக அமைந்திருந்த வெண்கல பலிபீடத்தில் சாலொமோன் ஆயிரம் தகனபலிகளைச் செலுத்தினான்.
7அந்த இரவில் இறைவன் சாலொமோனுக்குக் தோன்றி, “உனக்கு எது வேண்டுமோ அதைக் கேள்” என்றார்.
8அதற்குப் பதிலாக சாலொமோன் இறைவனிடம், “நீர் எனது தந்தை தாவீதுக்கு உமது நிலையான அன்பை அதிகமாய்க் காட்டி, அவருடைய இடத்தில் என்னை அரசனாக்கினீர். 9இப்போதும் இறைவனாகிய கர்த்தரே, எனது தந்தையான தாவீதுக்கு நீர் கொடுத்த வாக்குறுதி உறுதிப்படட்டும். ஏனெனில் பூமியின் துகள்களைப் போல் ஏராளமான மக்களுக்கு என்னை அரசனாக்கியிருக்கின்றீர். 10எனவே இந்த மக்களை வழிநடத்துவதற்கு வேண்டிய ஞானத்தையும், அறிவையும் எனக்குத் தந்திடுவீர். ஏனெனில் இந்த பெருந்திரளான உமது மக்களை ஆட்சி செய்ய யாரால் முடியும்?” எனப் பதிலளித்தான்.
11சாலொமோனிடம் இறைவன், “இதுவே உனது இருதயத்தில் இருந்தபடியால், நீ செல்வத்தையோ, செழிப்பையோ, மதிப்பையோ, உன் பகைவர்களின் மரணத்தையோ, அல்லது உனக்கு நீண்ட ஆயுளையோ கேட்கவில்லை. மாறாக நான் உன்னை அரசனாக்கிய என் மக்களை ஆள்வதற்கு ஞானத்தையும் அறிவையும் கேட்டிருக்கின்றாய். 12ஆகவே உனக்கு ஞானமும் அறிவும் கொடுக்கப்படும். அத்துடன் உனக்கு முன்னர் இருந்த எந்த அரசனுக்கும் உனக்குப் பின்னர் வரும் எந்த அரசனுக்கும் இல்லாத செல்வத்தையும், செழிப்பையும், மதிப்பையும் உனக்குக் கொடுப்பேன்” என்றார்.
13அதன் பின்னர் சாலொமோன் கிபியோனின் உயரமான இடத்திலிருந்த இறைபிரசன்னக் கூடாரத்திலிருந்து எருசலேமுக்குப் போய், அங்கே இஸ்ரயேலை அரசாண்டான்.
14சாலொமோன் தேர்களையும் குதிரைகளையும் பெருந்திரளாய்ச் சேர்த்தான். அவனிடம் 1,400 தேர்களும், 12,000 குதிரைகளும் இருந்தன. அவன் தேர்களை அவற்றுக்குரிய பட்டணங்களிலும், அரசனாகிய தன்னிடத்தில் எருசலேமிலும் வைத்திருந்தான். 15அரசன் எருசலேமில் தங்கத்தையும் வெள்ளியையும் கற்களைப் போல சாதாரணமாகவும், கேதுரு மரங்களை யூதாவின் மலையடிவாரங்களில் வளரும் காட்டத்திமரங்களைப் போல ஏராளமாகவும் கிடைக்கும்படி செய்தான். 16சாலொமோனுடைய குதிரைகள் எகிப்திலிருந்தும், சிலிசியாவிலிருந்தும்#1:16 சிலிசியாவிலிருந்தும் அல்லது கூவிலிருந்து கொண்டுவரப்பட்டன. அரச வர்த்தகர்கள் அவற்றை சந்தைவிலைக்கு சிலிசியாவிலிருந்து வாங்கினார்கள். 17எகிப்திலிருந்து ஒரு இரதத்தை அறுநூறு சேக்கல்#1:17 அறுநூறு சேக்கல் – சுமார் 15 ராத்தல் அல்லது 6.9 கிலோ கிராம் வெள்ளிக்கும், ஒரு குதிரையை நூற்றைம்பது சேக்கல்#1:17 நூற்றைம்பது சேக்கல் – சுமார் 3.75 ராத்தல் அல்லது 1.7 கிலோ கிராம் வெள்ளிக்கும் இறக்குமதி செய்தனர். அத்துடன் அவற்றை அவர்கள் ஏத்திய அரசர்களுக்கும், சீரிய அரசர்களுக்கும் ஏற்றுமதி செய்தனர்.