YouVersion Logo
Search Icon

1 இராஜாக்கள் 1

1
சாலொமோன் அரசனாதல்
1அப்போது தாவீது அரசன் வயது முதிர்ந்தவனாக இருந்தான். அவனைப் போர்வைகளினால் மூடியபோதும் அவனது உடலில் உஷ்ணம் உண்டாகவில்லை. 2எனவே அவனுடைய பணியாட்கள் அவனிடம், “அரசனைப் பராமரிப்பதற்கு ஒரு கன்னிப்பெண்ணைத் தேடுவோம். அவள் அரசனுக்கு பணிவிடை செய்து எங்கள் ஆண்டவனாகிய அரசன் உஷ்ணமாக இருக்குமாறு அவருக்கு அருகில் படுத்துக்கொள்ளட்டும்” என்றார்கள்.
3அதன்படியே அவர்கள் இஸ்ரயேல் நாடு முழுவதிலும் அழகான ஒரு பெண்ணைத் தேடி, சூனேம் பட்டணத்தைச் சேர்ந்த அபிஷாக்கைக் கண்டு அவளை அரசனிடம் கொண்டுவந்தார்கள். 4அவள் அதிக அழகுள்ள பெண்ணாக இருந்தாள். அவள் அரசனுக்குப் பணிவிடை செய்து, அவனைப் பராமரித்து வந்தாள். ஆனால் அரசன் அவளுடன் பாலுறவு கொள்ளவில்லை.
5ஆகீத்துக்குப் பிறந்த அதோனியா, ஒருநாள் தன்னைத் தானே உயர்த்திக் கொண்டவனாக, “நான் அரசனாவேன்” என்று கூறி தேர்களையும், குதிரைகளையும், ஐம்பது பேரையும் தனக்கு முன்பாகச் ஓடுவதற்கு ஆயத்தப்படுத்தினான். 6அவனுடைய தந்தை, “நீ ஏன் இவ்விதம் நடந்துகொள்கின்றாய்?” என்று கேட்டு ஒருபோதும் அவனைக் கண்டித்ததில்லை. அப்சலோமுக்குப் பின்னர் பிறந்த இவன் மிகவும் அழகிய தோற்றமுள்ளவனாய் இருந்தான்.
7அதோனியா செருயாவின் மகன் யோவாபுடனும், மதகுருவான அபியத்தாருடனும் ஆலோசனை நடத்தியபோது, அவர்கள் அவனுக்கு உதவ உடன்பட்டார்கள். 8ஆனால் மதகுருவான சாதோக்கும், யோய்தாவின் மகன் பெனாயாவும், இறைவாக்கினனான நாத்தானும், சிமெயியும், ரேயியும் தாவீதின் மெய்க்காப்பாளர்களும் அதோனியாவுடன் சேரவில்லை.
9அதன் பின்னர் அதோனியா என்-ரொகேல் நீரூற்றருகே இருந்த சோகெலேத் கல்லின்மீது செம்மறியாடுகளையும் மாடுகளையும் கொழுத்த கன்றுகளையும் பலியிட்டான். மேலும் அவன் தன்னுடைய சகோதரர்களையும், அரசனின் மகன்மாரையும், யூதாவிலிருந்த அரச அதிகாரிகளான அனைத்து ஆட்களையும் அழைத்தான். 10ஆனால் இறைவாக்கினனான நாத்தானையோ, பெனாயாவையோ, பலசாலிகளையோ, தனது சகோதரன் சாலொமோனையோ அவன் அழைக்கவில்லை.
11அப்போது நாத்தான், சாலொமோனின் தாயாகிய பத்சேபாளிடம் போய், “ஆகீத்தின் மகனாகிய அதோனியா எங்கள் ஆண்டவனாகிய தாவீதுக்குத் தெரியாமல் அரசனாகியதை நீ கேள்விப்படவில்லையா? 12இப்போது நீ வா, உனது உயிரையும் உனது மகன் சாலொமோனின் உயிரையும் காப்பாற்ற நான் உனக்கு ஆலோசனை சொல்வேன். 13நீ தாவீது அரசனிடம் போய், ‘என் ஆண்டவனாகிய அரசே, அடியவளாகிய எனக்கு, “உனது மகன் சாலொமோனே எனக்குப் பின்னர் எனது அரியணையிலிருந்து அரசாளுவான்” என்று ஆணையிட்டீரல்லவா? அவ்வாறிருக்க ஏன் அதோனியா அரசனானான்?’ என்று கேள். 14அவ்வாறு நீ அரசனுடன் பேசிக் கொண்டிருக்கும்போதே நான் வந்து நீ கூறியவற்றை உறுதிப்படுத்துவேன்” என்றான்.
15அப்போது பத்சேபாள் வயது முதிர்ந்தவனாயிருந்த அரசனின் அறைக்குள் அவனைப் பார்க்கச் சென்றாள். அங்கு சூனேம் ஊரைச் சேர்ந்தவளான அபிஷாக் அரசனுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தாள். 16பத்சேபாள் அரசனின் முன் தலைகுனிந்து முழந்தாளிட்டாள்.
அப்போது அரசன் அவளைப் பார்த்து, “உனக்கு என்ன வேண்டும்?” எனக் கேட்டான்.
17அதற்கு அவள், “என் ஆண்டவனே, ‘உனது மகன் சாலொமோனே எனக்குப் பின்னர் எனது அரியணையிலிருந்து அரசாளுவான்’ என்று உமது இறைவனாகிய கர்த்தரின் பெயரில் உமது அடியவளாகிய எனக்கு ஆணையிட்டுக் கூறினீர் அல்லவா? 18ஆனால் இதோ இப்போது அதோனியா அரசனாகியது என் ஆண்டவனாகிய அரசனுக்குத் தெரியாது. 19அவன் பெருந்தொகையான மாடுகளையும் கொழுத்த கன்றுகளையும் செம்மறியாடுகளையும் பலி செலுத்தி, அரசனின் அனைத்து மகன்மாரையும், மதகுருவான அபியத்தாரையும், இராணுவத் தளபதியான யோவாபையும் அழைத்தான். ஆனால் உமது அடியவனாகிய சாலொமோனை அழைக்கவில்லை. 20என் ஆண்டவனாகிய அரசே, இப்போது என் ஆண்டவனாகிய அரசனின் அரியணையில் அவருக்குப் பின் யார் அரசனாய் இருப்பான் என்று அறிவதற்காக அனைத்து இஸ்ரயேலருடைய கண்களும் உம்மை நோக்கி இருக்கின்றன. 21இல்லாவிட்டால் என் தலைவனாகிய அரசன் இறந்து, உமது முற்பிதாக்களுடன் அடக்கம் செய்யப்பட்ட பின்பு, நானும் எனது மகன் சாலொமோனும் குற்றவாளிகளாகக் கருதப்படுவோம்” என்றாள்.
22அவள் இவ்வாறு அரசனுடன் பேசிக் கொண்டிருக்கும்போதே இறைவாக்கினன் நாத்தான் அங்கு வந்தான். 23“இறைவாக்கினன் நாத்தான் இங்கு வந்திருக்கின்றான்” என்று அரசனுக்கு அறிவிக்கப்பட்டது. அப்போது நாத்தான் அரசனிடம் வந்து, தரைவரைக்கும் தலையைக் குனிந்து வணங்கினான்.
24நாத்தான் அரசனிடம், “ஆண்டவனாகிய அரசே! உமக்குப்பின் அதோனியாவே அரசனாக உமது அரியணையில் அமருவான் என்று எப்போதாவது நீர் அறிவித்திருக்கின்றீரா? 25இன்று அவன் போய் பெருந்தொகையான மாடுகளையும் கொழுத்த கன்றுகளையும் அநேக செம்மறியாடுகளையும் பலி செலுத்தியிருக்கின்றான். அவன் அரசனின் அனைத்து மகன்மாரையும், இராணுவத் தளபதிகளையும், மதகுரு அபியத்தாரையும் அழைத்திருக்கின்றான். அவர்கள் இப்போது அவனுடன் உண்டு குடித்து, ‘அரசனாகிய அதோனியா நீடூழி வாழ்க!’ என்று ஆர்ப்பரிக்கின்றார்கள். 26ஆனால் உமது அடியவனாகிய என்னையும், மதகுரு சாதோக்கையும், யோய்தாவின் மகனான பெனாயாவையும், உமது அடியவனாகிய சாலொமோனையும் அவன் அழைக்கவில்லை. 27தமக்குப் பின்பு யார் அரியணையில் அமர வேண்டும் என, தமது பணியாட்களுக்கு அறிவிக்காமல் எங்கள் அரசனாகிய ஆண்டவனே செய்த ஒரு காரியமோ இது?” என்று கேட்டான்.
தாவீது சாலொமோனை அரசனாகத் தெரிவுசெய்தல்
28அப்போது தாவீது அரசன், “பத்சேபாளை இங்கு அழையுங்கள்” என்று கூறினான். அவள் உள்ளே வந்து அவனுக்கு முன்பாக நின்றாள்.
29அப்போது அரசன் ஆணையிட்டுச் சொன்னதாவது: “என்னை அனைத்து ஆபத்திலிருந்தும் விடுவித்த உயிருள்ளவராகிய கர்த்தர்மீது ஆணையிட்டுக் கூறுகின்றேன், 30எனக்குப் பின் உனது மகன் சாலொமோனே அரசனாவான் என்றும், அவனே எனது அரியணையில் எனது இடத்தில் அமருவான் என்றும் முன்பு இஸ்ரயேலின் இறைவனாகிய கர்த்தரின் பெயரால் நான் உனக்கு ஆணையிட்டுச் சொன்னதை இன்று நிறைவேற்றுவேன்” என்றான்.
31பின்பு பத்சேபாள் மறுபடியும் தரை மட்டும் குனிந்து அரசனை வணங்கிய பின்னர், அரசனுக்கு முன் முழந்தாளிட்டு, “என் தலைவனாகிய தாவீது அரசன் நீடூழி வாழ்க!” என்றாள்.
32அப்போது தாவீது அரசன், “மதகுருவான சாதோக்கையும், இறைவாக்கினனான நாத்தானையும், யோய்தாவின் மகன் பெனாயாவையும் அழையுங்கள்” என்றான். அவர்கள் அரசனின் முன்பாக வந்தபோது அவன் அவர்களிடம், 33“என் மகன் சாலொமோனை என் சொந்தக் கோவேறு கழுதையில் ஏற்றி, அவனை உங்கள் ஆண்டவனுடைய பணியாட்களுடன் கீகோன் நீரூற்றருகே அழைத்துச் செல்லுங்கள். 34அங்கே மதகுருவான சாதோக்கும், இறைவாக்கினன் நாத்தானும் அவனை இஸ்ரயேலின் அரசனாக அபிஷேகம் செய்யட்டும். அதன் பின்னர் எக்காளங்களை ஊதி, ‘சாலொமோன் அரசன் நீடூழி வாழ்க!’ என்று ஆர்ப்பரியுங்கள். 35பின்பு அவனோடு நீங்கள் வரவேண்டும்; அவன் அரசனாக எனது அரியணையில் அமர்ந்து, எனது இடத்தில் அரசாள வேண்டும். இஸ்ரயேலுக்கும் யூதாவுக்கும் நான் அவனை ஆட்சியாளனாக நியமித்திருக்கின்றேன்” என்றான்.
36யோய்தாவின் மகனான பெனாயா அரசனிடம், “ஆமென்! என் ஆண்டவனாகிய அரசனின் இறைவனாகிய கர்த்தரும் அவ்வாறே அறிவிப்பாராக. 37கர்த்தர் என் ஆண்டவனாகிய அரசனோடு இருந்தது போல, சாலொமோனோடும்கூட இருந்து, அவனுடைய அரியணையை என் ஆண்டவனாகிய தாவீது அரசனின் அரியணையைப் பார்க்கிலும் இன்னும் பெரிதாக்குவாராக!” என்றான்.
38அவ்வாறே மதகுரு சாதோக்கும், இறைவாக்கினன் நாத்தானும், யோய்தாவின் மகனான பெனாயாவும், கிரேத்தியரும், பிலேத்தியரும் போய் அரசன் தாவீதின் கோவேறு கழுதையில் சாலொமோனை ஏற்றி அவனை கீகோன் நீரூற்றருகே அழைத்துச் சென்றார்கள். 39மதகுரு சாதோக் பரிசுத்த கூடாரத்திலிருந்த தைலக் குப்பியை எடுத்து சாலொமோனை அபிஷேகம் செய்தான். பின்பு அவர்கள் எக்காளங்களை ஊதியபோது, அனைத்து மக்களும், “சாலொமோன் அரசன் நீடூழி வாழ்க!” என்று ஆர்ப்பரித்தார்கள். 40அதன் பின்னர் அனைத்து மக்களும் நிலம் அதிரும்படியான சத்தத்துடன் புல்லாங்குழலை ஊதிக்கொண்டு, பெரும் குதூகலத்துடன் அவனுக்குப் பின்னால் சென்றார்கள்.
41அதோனியாவும், அவனுடைய விருந்தாளிகள் யாவரும் தங்கள் விருந்து முடிவுறும் வேளையில் இதைக் கேட்டார்கள். எக்காள சத்தத்தைக் கேட்டதும் யோவாப், “பட்டணத்தில் கேட்கும் இந்த ஆரவாரம் என்ன?” என்று கேட்டான்.
42இவ்வாறு அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே மதகுருவான அபியத்தாரின் மகன் யோனத்தான் விரைவாக உள்ளே வந்துசேர்ந்தான். அதோனியா அவனிடம், “உள்ளே வா, உத்தமனான நீ ஒரு நல்ல செய்தியைத்தான் கொண்டுவருவாய்” என்றான்.
43அதற்கு யோனத்தான் அதோனியாவிடம், “அவ்வாறல்ல” என்றான். “எங்கள் ஆண்டவனாகிய அரசன் தாவீது, சாலொமோனை அரசனாக்கி இருக்கின்றார். 44அரசன் அவனை மதகுருவான சாதோக், இறைவாக்கினனான நாத்தான், யோய்தாவின் மகன் பெனாயா, கிரேத்தியர், பிலேத்தியர் ஆகியோருடன் அரசனின் கோவேறு கழுதையில் ஏற்றி அனுப்பியிருக்கின்றார். 45மதகுருவான சாதோக்கும், இறைவாக்கினனான நாத்தானும் அவனை கீகோனில் அரசனாக அபிஷேகம் செய்துள்ளனர். அங்கிருந்து அவர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் சென்றார்கள். அதனாலேயே பட்டணம் ஆர்ப்பரிக்கின்றது. நீங்கள் கேட்கும் சத்தம் அதுதான் என்றான். 46மேலும், சாலொமோன் அரச அரியணையில் அமர்ந்திருக்கின்றான். 47அத்துடன் அரசனின் அதிகாரிகள் அரசன் தாவீதிடம், ‘உமது இறைவன் சாலொமோனின் பெயரை உமது பெயரிலும் புகழுடையதாகவும், அவனுடைய அரியணையை உமது அரியணையிலும் பெரிதாகவும் மேன்மைப்படுத்துவாராக!’ என்று சொல்லி தாவீது அரசனை வாழ்த்துகின்றார்கள். அப்போது அரசன் தன் படுக்கையின்மீது தலைகுனிந்து வழிபட்டார். 48மேலும் அரசன், ‘எனக்குப் பின் ஒருவனை எனது அரியணையில் அமர்த்தி, இன்று என் கண்கள் காணும்படி செய்த இஸ்ரயேலின் இறைவனாகிய கர்த்தருக்குத் துதி உண்டாவதாக!’ என்று கூறினார்” என்றான்.
49இதைக் கேட்டதும் அதோனியாவும், அவனுடைய விருந்தாளிகளும் திடுக்கிட்டு எழுந்து சிதறுண்டு ஓடினார்கள். 50ஆனால் அதோனியா சாலொமோனுக்குப் பயந்தவனாக, எழுந்து போய் பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு நின்றான்.#1:50 யாத். 21:13-14 51பின்பு, “அரசன் சாலொமோனுக்குப் பயந்து அதோனியா பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு நின்று, ‘சாலொமோன் அரசன் வாளால் என்னைக் கொல்வதில்லை என இன்றைக்கு எனக்கு ஆணையிட்டுக் கூறவேண்டும்’ என்று கேட்கின்றான்” என்று சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டது.
52அதற்கு சாலொமோன் பதிலளித்து, “அவன் உத்தமனாக நடந்துகொண்டால், அவனுடைய தலைமுடியில் ஒன்றுகூட நிலத்தில் விழாது. ஆனால் அவனிடம் தீமை காணப்பட்டால் அவன் கொல்லப்படுவான்” என்று கூறினான். 53மேலும் அரசனாகிய சாலொமோன் அவனைப் பலிபீடத்திலிருந்து அழைத்துக்கொண்டு வரும்படி ஆட்களை அனுப்பினான். அதன்படி அவர்கள் அவனைக் அழைத்துக் கொண்டுவந்தனர். அவன் சாலொமோனின் முன்பாக வந்து வணங்கினான். அப்போது சாலொமோன் அவனைப் பார்த்து, “நீ உன் வீட்டுக்குப் போ” என்றான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in