YouVersion Logo
Search Icon

மத்தேயு 4

4
இயேசு சோதிக்கப்படுதல்
1அதற்குப் பின்பு இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்காக ஆவியானவராலே பாலைவனத்துக்கு வழிநடத்தப்பட்டார். 2இயேசு இரவு பகல் நாற்பது நாட்கள் உபவாசித்து முடித்தபின், பசியாயிருந்தார். 3சோதனைக்காரன் இயேசுவினிடத்தில் வந்து, “நீர் இறைவனின் மகன் என்றால், இந்தக் கற்களிடம் அப்பமாகும்படி சொல்லும்” என்றான்.
4அதற்கு இயேசு, “ ‘மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல, இறைவனுடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையினாலும் வாழ்வான்’ என்று எழுதப்பட்டிருக்கிறது”#4:4 உபா. 8:3 எனப் பதிலளித்தார்.
5பின்பு சாத்தான் அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், ஆலயத்தின் மிக உயரமான முனையில் நிற்கச் செய்தான். 6அவன், “நீர் இறைவனுடைய மகனானால் கீழே குதியும். ஏனெனில்:
“ ‘இறைவன் தமது தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்.
உமது கால்கள் கல்லில் மோதாதபடி,
அவர்கள் உம்மைத் தமது கரங்களில் தாங்கிக்கொள்வார்கள்#4:6 சங். 91:11,12 என்று எழுதியிருக்கிறதே,’ ”
என்றான்.
7அதற்கு இயேசு, “உனது இறைவனாகிய கர்த்தரைச் சோதிக்க வேண்டாம் என்றும் எழுதியிருக்கிறதே”#4:7 உபா. 6:16 எனப் பதிலளித்தார்.
8மீண்டும், சாத்தான் அவரை மிக உயரமான மலைக்குக் கொண்டுபோனான் அங்கிருந்து உலகத்தின் எல்லா அரசுகளையும் அவற்றின் மகிமையையும் அவருக்குக் காண்பித்தான். 9“நீர் என்னை விழுந்து வணங்கினால், இவை எல்லாவற்றையும் நான் உமக்குத் தருவேன் என்றான்.”
10இயேசு அவனிடம், “சாத்தானே, என்னைவிட்டு அப்பாலே போ! ‘உனது இறைவனாகிய கர்த்தரை வழிபட்டு, அவர் ஒருவரையே பணிந்துகொள்’ ” என்றும் எழுதியிருக்கிறது#4:10 உபா. 6:13 என்று சொன்னார்.
11அப்பொழுது சாத்தான் அவரைவிட்டுச் சென்றான், தூதர்கள் வந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தார்கள்.
இயேசு பிரசங்கிக்க ஆரம்பித்தல்
12யோவான் சிறையில் அடைக்கப்பட்டதை இயேசு கேள்விப்பட்டபோது, அவர் கலிலேயாவுக்குத் திரும்பி வந்தார். 13அவர் நாசரேத்தை விட்டு கப்பர்நகூமுக்குப் போய், அங்கே வாழ்ந்தார், அது செபுலோன், நப்தலி பகுதிகளிலுள்ள கடற்கரைக்கு அருகே இருந்தது. 14இறைவாக்கினன் ஏசாயா மூலமாய்:
15“செபுலோன் நாடே, நப்தலி நாடே,
யோர்தானின் மறுபக்கமாக கடலுக்குப் போகும் வழியே,
யூதரல்லாதவர் வாழும் கலிலேயாவிலே,
16இருளில் வாழும் மக்கள்
பேரொளியைக் கண்டார்கள்;
மரண இருள்சூழ்ந்த நாட்டில் வாழ்வோர்மேல்
வெளிச்சம் பிரகாசித்தது,”#4:16 ஏசா. 9:1,2
என்று சொல்லப்பட்டவை நிறைவேறும்படியே இப்படி நடந்தது.
17அந்த வேளையிலிருந்து இயேசு, “மனந்திரும்புங்கள், பரலோக அரசு சமீபித்திருக்கிறது” என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
இயேசு முதல் சீடர்களை அழைத்தல்
18இயேசு கலிலேயா கடற்கரையில் நடந்து போகும்போது, பேதுரு என அழைக்கப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா ஆகிய இரண்டு சகோதரரைக் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். 19இயேசு அவர்களிடம், “வாருங்கள், என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களை இறைவனுடைய வழியில் மனிதரை நடத்துகிறவர்களாக மாற்றுவேன்” என்றார். 20உடனே அவர்கள் தங்கள் வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள்.
21இயேசு அங்கேயிருந்து போய்க்கொண்டிருக்கையில், வேறு இரண்டு சகோதரர்களான செபெதேயுவின் மகன் யாக்கோபையும், அவனுடைய சகோதரன் யோவானையும் கண்டார். அவர்கள் தங்கள் தகப்பன் செபதேயுவுடன் ஒரு படகில் இருந்து, தங்கள் வலைகளை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் கூப்பிட்டார். 22உடனே அவர்கள் படகையும், தங்கள் தகப்பனையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள்.
இயேசு நோயாளிகளைக் குணமாக்குதல்
23இயேசு கலிலேயா முழுவதும் சென்று, யூதரின் ஜெப ஆலயங்களில் போதித்து, பரலோக அரசின் நற்செய்தியைப் பிரசங்கித்தார், மக்களுக்கு இருந்த எல்லா விதமான வியாதிகளையும் நோய்களையும் குணமாக்கினார். 24இயேசுவைப்பற்றிய செய்தி, சீரியா முழுவதும் பரவியது. மக்கள் அவரிடம், பல்வேறு பிணிகளாலும் வாதைகளாலும் வேதனையுற்ற நோயாளிகளையும், தீய ஆவி பிடித்தவர்களையும், வலிப்பு உள்ளவர்களையும், முடக்குவாதம் உள்ளவர்களையும் கொண்டுவந்தார்கள்; இயேசு அவர்களைக் குணமாக்கினார். 25கலிலேயா, தெக்கப்போலி#4:25 அதாவது, பத்துப் பட்டணங்கள் எனப்படும் எருசலேம், யூதேயா மற்றும் யோர்தானுக்கு மறுபக்கத்திலுமிருந்து பெருந்திரளான மக்கள் இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள்.

Currently Selected:

மத்தேயு 4: TCV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy