YouVersion Logo
Search Icon

வெளி 8

8
அத்தியாயம் 8
ஏழாம் முத்திரையும், பொற்கலசமும்
1அவர் ஏழாம் முத்திரையை உடைத்தபோது, பரலோகத்தில் ஏறக்குறைய அரைமணிநேரம் வரை அமைதி உண்டானது. 2பின்பு, தேவனுக்குமுன்பாக நிற்கிற ஏழு தூதர்களையும் பார்த்தேன்; அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டது. 3வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான்; சிங்காசனத்திற்கு முன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் எல்லாப் பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடு அதிகமான தூபவர்க்கம் செலுத்தும்படி அவனுக்குக் கொடுக்கப்பட்டது. 4அப்படியே பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது தூதனுடைய கையில் இருந்து தேவனுக்குமுன்பாக எழும்பியது. 5பின்பு, அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்; உடனே சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமி அதிர்ச்சியும் உண்டானது.
எக்காளங்கள்
6அப்பொழுது, ஏழு எக்காளங்களை வைத்திருந்த ஏழு தூதர்கள் எக்காளம் ஊதுகிறதற்குத் தங்களை ஆயத்தப்படுத்தினார்கள். 7முதலாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இரத்தம் கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி, பூமியிலே கொட்டப்பட்டது; அதினால் மரங்களில் மூன்றில் ஒரு பங்கு வெந்துபோனது, பசும்புல்லெல்லாம் எரிந்துபோனது. 8இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அக்கினியால் எரிகிற பெரிய மலைபோல ஒன்று கடலிலே போடப்பட்டது. அதனால் கடலில் மூன்றில் ஒரு பங்கு இரத்தமாக மாறியது. 9கடலில் இருந்த உயிருள்ள படைப்புகளில் மூன்றில் ஒரு பங்கு மரித்துப்போனது; கப்பல்களில் மூன்றில் ஒரு பங்கு சேதமானது. 10மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது; அது ஆறுகளில் மூன்றில் ஒருபங்கின்மேலும், நீரூற்றுகளின்மேலும் விழுந்தது. 11அந்த நட்சத்திரத்திற்கு எட்டி என்று பெயர்; அதினால் தண்ணீரில் மூன்றில் ஒரு பங்கு எட்டியைப்போலக் கசப்பானது; இப்படிக் கசப்பான தண்ணீரினால் மனிதர்களில் அநேகர் மரித்தார்கள். 12நான்காம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது சூரியனில் மூன்றில் ஒருபங்கும், சந்திரனில் மூன்றில் ஒருபங்கும், நட்சத்திரங்களில் மூன்றில் ஒருபங்கும் சேதமானது, அவைகளில் மூன்றில் ஒரு பங்கு இருள் அடைந்தது; பகலிலும் மூன்றில் ஒரு பங்கு பிரகாசம் இல்லாமல்போனது, இரவிலும் அப்படியே ஆனது. 13பின்பு, ஒரு கழுகு வானத்தின் நடுவிலே பறந்து வருவதைப் பார்த்தேன்; அவன் அதிக சத்தமாக: இனி எக்காளம் ஊதப்போகிற மற்ற மூன்று தூதர்களுடைய எக்காள சத்தங்களினால் பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ (ஆபத்துவரும்) என்று சொல்வதைக்கேட்டேன்.

Currently Selected:

வெளி 8: IRVTam

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in