சகரியா 14:1-21

சகரியா 14:1-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எருசலேமே, யெகோவாவின் நாள் ஒன்று வருகிறது, அப்பொழுது உங்கள் பகைவர்கள் உங்களைக் கொள்ளையிட்டு, பொருட்களை உங்கள் முன்னிலையிலேயே பங்கிட்டுக் கொள்வார்கள். யெகோவாவே எருசலேமுக்கு எதிராகப் போரிடும்படி எல்லா நாடுகளையும் ஒன்றுதிரட்டுவார்; அந்த நகரம் கைப்பற்றப்படும், வீடுகள் கொள்ளையிடப்படும், பெண்கள் கற்பழிக்கப்படுவார்கள். நகர மக்களில் அரைப்பகுதியினர் நாடுகடத்தப்படுவார்கள், ஆனால் மீதியான மக்களோ நகரத்தைவிட்டு வெளியேற்றப்பட மாட்டார்கள். அப்பொழுது யெகோவா வெளியே போய் யுத்தநாளில் சண்டையிடுவதைப்போல் அந்த நாடுகளுக்கு விரோதமாக சண்டையிடுவார். அந்த நாளில் அவருடைய கால்கள் எருசலேமுக்குக் கிழக்கேயுள்ள ஒலிவமலையின்மேல் நிற்கும். அப்பொழுது ஒலிவமலையானது கிழக்கு மேற்கு என இரண்டாகப் பிளக்கப்படும். ஒரு பெரும் பள்ளத்தாக்கு உண்டாகி அம்மலையின் அரைப்பங்கு வடக்குப் புறமாகவும், மற்ற அரைப்பங்கு தெற்குப் புறமாகவும் பிரிந்து விலகும். நீங்களோ என் மலையின் பள்ளத்தாக்கின் வழியாகத் தப்பி ஓடிப்போவீர்கள். ஏனெனில் அந்தப் பள்ளத்தாக்கு ஆத்சால்வரை நீண்டிருக்கும். நீங்களோ யூதாவின் அரசனான உசியாவின் நாட்களில் உண்டான பூமியதிர்ச்சிக்குத் தப்பியோடியதைப்போல ஓடிப்போவீர்கள். அப்பொழுது என் இறைவனாகிய யெகோவா வருவார். அவருடன் பரிசுத்தர்கள் அனைவரும் வருவார்கள். அந்த நாளில் வெளிச்சமோ, குளிரோ, உறைபனியோ இராது. அந்த நாள் பகலுமின்றி, இரவுமின்றி ஒரு நிகரற்ற நாளாயிருக்கும். அது யெகோவாவினால் அறியப்பட்ட ஒரு நாள். ஆனால் மாலைப் பொழுதிலும் வெளிச்சம் திரும்பிவரும். அந்த நாளில் வாழ்வளிக்கும் தண்ணீர் எருசலேமிலிருந்து பாயும். அதன் அரைப்பங்கு கிழக்கே சவக்கடலுக்கும், அரைப்பங்கு மேற்கே மத்திய தரைக்கடலுக்கும் ஓடும். குளிர் காலத்திலும், கோடைகாலத்திலும் இவ்வாறே இருக்கும். யெகோவாவே பூமி முழுவதற்கும் அரசனாயிருப்பார். அந்நாளில் ஒரே யெகோவா இருப்பார், அவருடைய பெயர் ஒரே பெயராயிருக்கும். கேபா முதல் எருசலேமுக்குத் தெற்கேயுள்ள ரிம்மோன்வரை இருக்கும் நிலமெல்லாம் அரபா சமபூமியைப் போலாகும். எருசலேமோ, பென்யமீன் வாசல் தொடங்கி முதலாம் வாசல் வழியாக, மேலும் மூலைவாசல் வரையிலும், அனானயேல் கோபுரத்திலிருந்து, அரசனின் திராட்சை ஆலைவரையிலும் உயர்த்தப்பட்டு, தன் இடத்தில் நிலைநிற்கும். எருசலேம் குடியேற்றப்படும்; எருசலேம் இனி ஒருபோதும் அழிக்கப்படமாட்டாது. அது பாதுகாப்பாயிருக்கும். எருசலேமுக்கு எதிராகப் போரிட்ட மக்கள் கூட்டங்கள் அனைவரையும் யெகோவா தாக்குவார். யெகோவாவினால் கொள்ளைநோய் கொண்டுவரப்படும்: அவர்கள் காலூன்றி நிற்கையிலேயே அவர்களின் உடலிலிருந்து தசை அழுகிப்போகும். அவர்கள் கண்கள் அதினதின் குழியிலேயே அழுகிப்போகும். அவர்கள் நாவுகளும் அவர்களின் வாய்க்குள்ளேயே அழுகிவிடும். அந்த நாளில் மனிதர் யெகோவாவிடமிருந்து வரும் பெரும் திகிலினால் சூழப்படுவார்கள். ஒவ்வொருவனும் மற்றொருவனின் கையைப் பற்றிப்பிடிப்பான்; அவர்கள் ஒருவரையொருவர் தாக்குவார்கள். யூதாவும் எருசலேமில் சண்டையிடும். சுற்றுப்புறங்களிலுள்ள நாடுகளின் செல்வங்களான தங்கமும், வெள்ளியும், உடைகளும் பெருந்திரளாய்ச் சேர்க்கப்படும். அதேபோன்ற ஒரு கொள்ளைநோய் அவர்களின் முகாம்களிலுள்ள குதிரைகள், கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள், கழுதைகள் மற்றும் அங்குள்ள மிருகங்கள் எல்லாவற்றையும் தாக்கும். ஆனால் அப்பொழுது எருசலேமைத் தாக்கிய, எல்லா நாடுகளிலும் சிலர் தப்பிப் பிழைத்திருப்பார்கள். அவர்கள் எல்லோரும், வருடந்தோறும் சேனைகளின் யெகோவாவாகிய அரசரை வழிபடவும், கூடாரப்பண்டிகையைக் கொண்டாடவும் எருசலேமுக்குப் போவார்கள். பூமியிலுள்ள மக்கள் கூட்டங்களில் யாராவது சேனைகளின் யெகோவாவாகிய அரசரை ஆராதிக்க எருசலேமுக்குப் போகாதிருந்தால், அவர்களுடைய இடங்களில் மழை பெய்யாது. எகிப்து நாட்டு மக்களும் போய் அதில் பங்கெடுக்காவிட்டால், அங்கும் மழை பெய்யாது. கூடாரப்பண்டிகையைக் கொண்டாடப் போகாத நாடுகளையும் யெகோவா அதே கொள்ளைநோயால் வாதிப்பார். இதுவே எகிப்தியருக்கு வரும் தண்டனை. கூடாரப்பண்டிகையைக் கொண்டாடப் போகாத எல்லா நாடுகளுக்கும் கொடுக்கப்படும் தண்டனையும் இதுவே. அந்த நாளில் குதிரைகளின் மணிகளில், “யெகோவாவுக்குப் பரிசுத்தம்” என்று பொறிக்கப்பட்டிருக்கும். ஆலயத்திலுள்ள சமையல் பானைகளும், பலிபீடத்திற்கு முன்பாக உள்ள தூய்மையான கிண்ணங்களைப்போல் இருக்கும். அப்பொழுது எருசலேமிலும், யூதாவிலும் உள்ள ஒவ்வொரு பானையும், சேனைகளின் கர்த்தருக்கு என்று தூய்மையாக்கப்பட்டதாக இருக்கும்; அங்கு பலியிட வருகிற யாவரும் அப்பானைகளில் சிலவற்றை எடுத்து அவைகளில் சமைப்பார்கள்; அந்த நாளில் சேனைகளின் யெகோவாவின் ஆலயத்தில், இனி ஒருபோதும் கானானியன் இருப்பதில்லை.

சகரியா 14:1-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இதோ, யெகோவாவுடைய நியாயதீர்ப்பு நாள் வருகிறது, உன்னில் கொள்ளையானது உன் நடுவிலே பங்கிடப்படும். எருசலேமிற்கு விரோதமாக போரிடச் சகல தேசங்களையும் கூட்டுவேன்; நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; பெண்கள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனிதர்கள் சிறைப்பட்டுப்போவார்கள்; மீதியான மக்களோ நகரத்தைவிட்டு வெளியேற்றப்படுவதில்லை. யெகோவா புறப்பட்டு, போர்செய்கிற நாளிலே போராடுவதுபோல் அந்த தேசங்களோடே போராடுவார். அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமிற்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் மையத்திலே கிழக்கு மேற்காக எதிராகப் பிளந்துபோகும்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும். அப்பொழுது யெகோவாவின் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாக ஓடிப்போவீர்கள்; மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால்வரை போகும்; நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனதுபோல ஓடிப்போவீர்கள்; என் தேவனாகிய யெகோவா வருவார்; தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள். அந்நாளில் வெளிச்சம் இல்லாமல், ஒருநேரம் பிரகாசமும் ஒருநேரம் மப்புமாயிருக்கும். ஒருநாள் உண்டு, அது யெகோவாவுக்குத் தெரிந்தது; அது பகலுமல்ல இரவுமல்ல; ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும். அந்நாளிலே ஜீவதண்ணீர்கள் எருசலேமிலிருந்து புறப்பட்டு, பாதி கிழக்குச் சமுத்திரத்திற்கும், பாதி மேற்குச் சமுத்திரத்திற்கும் போய், மழைக்காலத்திற்கும் கோடைக்காலத்திற்கும் இருக்கும். அப்பொழுது யெகோவா பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே யெகோவா இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும். தேசமெல்லாம் கேபாதுவங்கி எருசலேமிற்குத் தெற்கே இருக்கிற ரிம்மோன்வரைக்கும் சமபூமியாக மாற்றப்படும்; எருசலேமோ உயர்ந்ததாகி, தன் இடத்திலே பென்யமீன் வாசல்தொடங்கி முதல்வாசலென்கிற இடம்வரை, கோடிவாசல் வரைக்கும், அனானெயேல் கோபுரம் துவங்கி ராஜாவின் திராட்சை ஆலைகள்வரை குடியேற்றப்பட்டிருக்கும். அதிலே மக்கள் வாசம்செய்வார்கள்; இனிச் சங்கரிப்பில்லாமல் எருசலேம் சுகமாகத் தங்கியிருக்கும். எருசலேமிற்கு விரோதமாக போர்செய்த எல்லா மக்களையும் யெகோவா வாதிக்கும் வாதையாவது: அவர்கள் காலூன்றி நிற்கும்போதும் அவர்களுடைய சதை அழிந்துபோகும்; அவர்கள் கண்கள் தங்கள் குழிகளிலே கெட்டுப்போகும்; அவர்கள் நாவு அவர்கள் வாயிலே அழுகிப்போகும். அந்நாளிலே யெகோவால் பெரிய கலக்கம் அவர்களுக்குள் உண்டாகும்; அவனவன் தன்தன் அயலானின் கையைப் பிடிப்பான்; அவனவனுடைய கை அவனவன் அயலானுடைய கைக்கு விரோதமாக எழும்பும். யூதாவும் எருசலேமிலே போர்செய்யும்; அப்பொழுது சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளுடைய ஆஸ்தியாகிய பொன்னும் வெள்ளியும் ஆடைகளும் மகா திரளாகக் கூட்டப்படும். அந்த முகாம்களில் இருக்கும் குதிரைகள், கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள், கழுதைகள் முதலான எல்லா மிருகஜீவன்களுக்கும் வரும் வாதையும், அந்த வாதையைப்போலவே இருக்கும். பின்பு, எருசலேமுக்கு விரோதமாக வந்திருந்த எல்லா ஜாதிகளிலும் மீதியான யாவரும் சேனைகளின் யெகோவாகிய ராஜாவைத் தொழுதுகொள்ளும்படிக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிப்பதற்காக, வருடாவருடம் வருவார்கள். அப்பொழுது பூமியின் வம்சங்களில் சேனைகளின் யெகோவாகிய ராஜாவைத் தொழுதுகொள்ள எருசலேமுக்கு வராதவர்கள் எவர்களோ அவர்கள்மேல் மழை பெய்வதில்லை. எகிப்தின் வம்சம் எருசலேமுக்கு வராமல் சேராமலும்போனால் அவர்களுக்கு மழை பொழியாது, கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத மக்களைக் யெகோவா வாதிக்கும் வாதையே அவர்கள்மேலும் வரும். இது எகிப்தியருடைய பாவத்திற்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத சகல மக்களுடைய பாவத்திற்கும் வரும் தண்டனை. அந்நாளிலே குதிரைகளின் மணிகளிலே யெகோவாவுக்குப் பரிசுத்தம் என்னும் விலாசம் எழுதியிருக்கும்; யெகோவாவுடைய ஆலயத்திலுள்ள பானைகள் பலிபீடத்திற்கு முன்பாக இருக்கிற பாத்திரங்களைப் போலிருக்கும். அப்பொழுது எருசலேமிலும் யூதாவிலுமுள்ள எல்லாப் பானைகளும் சேனைகளின் யெகோவாவுக்குப் பரிசுத்தமாயிருக்கும்; பலியிடுகிற யாவரும் வந்து அவைகளில் எடுத்து, அவைகளில் சமைப்பார்கள்; அந்நாள்முதல் சேனைகளுடைய யெகோவாவின் ஆலயத்திலே எந்தவொரு கானானியனும் இருப்பதில்லை.

சகரியா 14:1-21 பரிசுத்த பைபிள் (TAERV)

பார், கர்த்தருக்கு நியாயந்தீர்க்க சிறப்பான நாள் இருக்கிறது. நீங்கள் அள்ளி வந்த செல்வங்கள் உங்கள் நகரில் பங்கிடப்படும். நான் எல்லா தேசங்களையும் எருசலேமிற்கு எதிராகப் போரிட கூட்டுவேன். அவர்கள் நகரைக் கைப்பற்றி வீடுகளை அழிப்பார்கள். பெண்கள் கற்பழிக்கப்படுவார்கள். ஜனங்களின் பாதிபேர் கைதிகளாக கொண்டுப் போகப்படுவார்கள். ஆனால் மீதியுள்ளவர்கள், நகருக்கு வெளியே கொண்டு செல்லப்படமாட்டார்கள். பின்னர் கர்த்தர் அந்நாடுகளோடு போரிடச் செய்வார். இது உண்மையான போராக இருக்கும். அந்நேரத்தில், அவர் எருசேலேமிற்கு கிழக்கே உள்ள ஒலிவ மலைமேல் நிற்பார். ஒலிவமலை பிளக்கும். அதன் ஒரு பகுதி வடக்குக்கும் மற்றொரு பகுதி தெற்கிற்கும் நகரும். ஒரு ஆழமான பள்ளத்தாக்கு கிழக்கிலிருந்து மேற்காக திறந்துக்கொள்ளும். அம்மலைப் பள்ளத்தாக்கு உங்களை நெருங்க, நெருங்க நீங்கள் தப்பி ஓட முயல்வீர்கள். நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட பூகம்பத்திற்குப் பயந்து ஓடியதுபோன்று ஓடுவீர்கள். ஆனால் எனது தேவனாகிய கர்த்தர் வருவார். அவரோடு அவரது பரிசுத்தமானவர்களும் வருவார்கள். அது மிகவும் விசேஷமான நாளாக இருக்கும். அங்கு வெளிச்சமும், குளிரும், மப்பும் இருக்கிறது. கர்த்தர் மட்டுமே அந்த நாளை அறிவார். ஆனால் அங்கே இரவோ, பகலோ இருக்காது. பின்னர், வழக்கமாக இருள் வரும் நேரத்தில் இன்னும் வெளிச்சம் இருக்கும். அந்நேரத்தில், எருசலேமிலிருந்து தொடர்ந்து தண்ணீர் பாயும். அந்த தண்ணீரோடை இரண்டாகப் பிரிந்து ஒன்று கிழக்காகவும், இன்னொன்று மேற்கே மத்தியதரைக் கடலுக்கும் பாயும். இது ஆண்டு முழுவதும் கோடைக் காலத்திலும், மழைகாலத்திலும் பாய்ந்துகொண்டிருக்கும் அந்நேரத்தில் உலகம் முழுவதற்கும் கர்த்தரே ராஜாவாக இருப்பார். கர்த்தர் ஒருவரே, அவரது நாமம் ஒன்றே. அந்நேரத்தில், எருசலேமைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் அரபா பாலைவனமாக காலியாக இருக்கும். நாடானது கேபா தொடங்கி எருசலேமிற்கு தெற்கேயுள்ள ரிம்மோன் வரைக்கும் பாலைவனமாகும். ஆனால் எருசலேம் நகரம் முழுவதும் மீண்டும் கட்டப்படும். பென்யமீன் வாசல் தொடங்கி முதல்வாசல் (மூலை வாசல்) வரைக்கும் அனானெயேல் கோபுரம் தொடங்கி ராஜாவின் திராட்சை ஆலைகள் வரை குடியேற்றப்பட்டிருக்கும். ஜனங்கள் அங்கே வாழப்போவார்கள். இனி மேல் அவர்களை எந்தப் பகைவரும் அழிக்க வரமாட்டார்கள். எருசலேம் பாதுகாப்பாக இருக்கும். ஆனால் எருசலேமிற்கு எதிராக போரிட்ட நாடுகளை கர்த்தர் தண்டிப்பார். அவர்களுக்குப் பயங்கரமான நோய் ஏற்பட காரணமாக இருப்பார். அங்கு ஜனங்கள் இன்னும் நின்றுகொண்டிருக்கும்போதே அவர்களின் தோல் அழுகும். அவர்களின் கண்கள் இமைக்குள்ளும் நாக்குகள் வாய்க்குள்ளும் அழுகிப் போகும். அந்தப் பயங்கரமான நோய் எதிரியின் கூடாரத்தில் இருக்கும். அவர்களின் குதிரைகள் கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள், கழுதைகள் எல்லாம் அந்நோயால் பீடிக்கப்படும். அந்நேரத்தில், அந்த ஜனங்கள் கர்த்தருக்கு உண்மையில் பயப்படுவார்கள். அவர்கள் ஒருவரையொருவர் பிடித்து பற்றிக்கொண்டு சண்டையிடுவார்கள். யூதாவின் ஜனங்கள் எருசலேமில் போரிடுவார்கள். ஆனால், அவர்கள் நகரத்தைச் சுற்றியுள்ள நாடுகளிலிருந்து செல்வத்தைப் பெறுவார்கள். அவர்கள் மிகுதியாக பொன், வெள்ளி, ஆடை ஆகியவற்றைப் பெறுவார்கள். எருசலேமில் போரிட வந்த ஜனங்களில் சிலர் பிழைப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் ராஜாவாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தரை தொழுதிட வருவார்கள். அவர்கள் அடைக்கல கூடாரப் பண்டிகையை கொண்டாட வருவார்கள். பூமியிலுள்ள எந்த ஒரு குடும்பத்திலுள்ள ஜனங்களும் ராஜாவை, சர்வ வல்மையுள்ள கர்த்தரை தொழுதிட எருசலேம் செல்லாமல் இருந்தால், பிறகு கர்த்தர் அவர்கள் மழை பெறாமல் போகும்படிச் செய்வார். எகிப்திலுள்ள குடும்பத்தார்கள் எவரும் அடைக்கல கூடார பண்டிகை கொண்டாட வராமல் போனால், பின்னர் கர்த்தர் பகைவரது நாடுகளுக்குக் கொடுத்த நோயை அவர்கள் பெறும்படிச் செய்வார். அது தான் எகிப்துக்கான தண்டனையாக இருக்கும். அடைக்கல கூடார பண்டிகையைக் கொண்டாட வராத மற்ற நாடுகளுக்கும் இதுதான் தண்டனை. அந்நேரத்தில், அனைத்தும் தேவனுக்கு உரியதாகும். குதிரைகளின் மணிகளில் கூட கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று பொறிக்கப்பட்டிருக்கும். கர்த்தருடைய ஆலயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து பானைகளும் பலிபீடத்திற்கு முன்பாக இருக்கும் பாத்திரங்களைப் போன்று முக்கியமானதாக இருக்கும். உண்மையில், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள ஒவ்வொரு பானைக்கும் சர்வ வல்லமையுள்ள கர்த்தருக்கு “பரிசுத்தம்” என்ற முத்திரையிருக்கும். கர்த்தருக்கு தகன பலிகளை செலுத்தும் ஒவ்வொருவரும் வந்து அவற்றில் சமைத்து உண்ண முடியும். அந்நேரத்தில், அங்கு வியாபாரிகள் எவரும் சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய ஆலயத்தில் பொருட்களை விற்கவும் வாங்கவும்மாட்டார்கள்.

சகரியா 14:1-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இதோ, கர்த்தருடைய நாள் வருகிறது, உன்னில் கொள்ளையானது உன் நடுவிலே பங்கிடப்படும். எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன்; நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; ஸ்திரீகள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனுஷர் சிறைப்பட்டுப்போவார்கள்; மீதியான ஜனமோ நகரத்தை விட்டு அறுப்புண்டுபோவதில்லை. கர்த்தர் புறப்பட்டு, யுத்தநாளிலே போராடுவதுபோல் அந்த ஜாதிகளோடே போராடுவார். அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோகும்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும். அப்பொழுது என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய் ஓடிப்போவீர்கள்; மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால்மட்டும் போகும்; நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனதுபோல் ஓடிப்போவீர்கள்; என் தேவனாகிய கர்த்தர் வருவார்; தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள். அந்நாளில் வெளிச்சம் இல்லாமல், ஒருவேளை பிரகாசமும் ஒருவேளை மப்புமாயிருக்கும். ஒருநாள் உண்டு, அது கர்த்தருக்குத் தெரிந்தது; அது பகலுமல்ல இரவுமல்ல; ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும். அந்நாளிலே ஜீவதண்ணீர்கள் எருசலேமிலிருந்து புறப்பட்டு, பாதி கிழக்குச் சமுத்திரத்துக்கும், பாதி மேற்குச் சமுத்திரத்துக்கும் போய், மாரிக்காலத்துக்கும் கோடைகாலத்துக்கும் இருக்கும். அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும். தேசமெல்லாம் கேபாதொடங்கி எருசலேமுக்குத் தெற்கே இருக்கிற ரிம்மோன்வரைக்கும் சமபூமியாகத் திருத்தப்படும்; எருசலேமோ உயர்ந்ததாகி, தன் ஸ்தானத்திலே பென்யமீன் வாசல்தொடங்கி முதல்வாசலென்கிற ஸ்தலமட்டும் கோடிவாசல் வரைக்கும், அனானெயேல் கோபுரம் துவக்கி ராஜாவின் திராட்ச ஆலைகள்மட்டும் குடியேற்றப்பட்டிருக்கும். அதிலே ஜனங்கள் வாசம்பண்ணுவார்கள்; இனிச் சங்கரிப்பில்லாமல் எருசலேம் சுகமாய்த் தங்கியிருக்கும். எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணின எல்லா ஜனங்களையும் கர்த்தர் வாதிக்கும் வாதையாவது: அவர்கள் காலூன்றி நிற்கையிலும் அவர்களுடைய சதை அழிந்துபோகும்; அவர்கள் கண்கள் தங்கள் குழிகளிலே கெட்டுப்போகும்; அவர்கள் நாவு அவர்கள் வாயிலே அழுகிப்போகும். அந்நாளிலே கர்த்தரால் பெரிய கலக்கம் அவர்களுக்குள் உண்டாகும்; அவனவன் தன்தன் அயலானின் கையைப் பிடிப்பான்; அவனவனுடைய கை அவனவன் அயலானுடைய கைக்கு விரோதமாக எழும்பும். யூதாவும் எருசலேமிலே யுத்தம்பண்ணும்; அப்பொழுது சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளுடைய ஆஸ்தியாகிய பொன்னும் வெள்ளியும் வஸ்திரங்களும் மகா திரளாகக் கூட்டப்படும். அந்தப்பாளையங்களில் இருக்கும் குதிரைகள், கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள், கழுதைகள் முதலான எல்லா மிருகஜீவன்களுக்கும் வரும் வாதையும், அந்த வாதையைப்போலவே இருக்கும். பின்பு, எருசலேமுக்கு விரோதமாக வந்திருந்த எல்லா ஜாதிகளிலும் மீதியான யாவரும் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ளும்படிக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்கும்படிக்கும், வருஷாவருஷம் வருவார்கள். அப்பொழுது பூமியின் வம்சங்களில் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ள எருசலேமுக்கு வராதவர்கள் எவர்களோ அவர்கள்மேல் மழை வருஷிப்பதில்லை. மழை வருஷிக்காத எகிப்தின் வம்சம் வராமலும் சேராமலும்போனால், கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத ஜாதிகளைக் கர்த்தர் வாதிக்கும் வாதையே அவர்கள்மேலும்வரும். இது எகிப்தியருடைய பாவத்துக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத சகல ஜாதிகளுடைய பாவத்துக்கும் வரும் ஆக்கினை. அந்நாளிலே குதிரைகளின் மணிகளிலே கர்த்தருக்குப் பரிசுத்தம் என்னும் விலாசம் எழுதியிருக்கும்; கர்த்தருடைய ஆலயத்திலுள்ள பானைகள் பலிபீடத்துக்கு முன்பாக இருக்கிற பாத்திரங்களைப் போலிருக்கும். அப்பொழுது எருசலேமிலும் யூதாவிலுமுள்ள எல்லாப் பானைகளும் சேனைகளின் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்; பலியிடுகிற யாவரும் வந்து அவைகளில் எடுத்து, அவைகளில் சமைப்பார்கள்; அந்நாள்முதல் சேனைகளுடைய கர்த்தரின் ஆலயத்திலே யாதொரு கானானியனும் இருப்பதில்லை.