சகரியா 13:1-9
சகரியா 13:1-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“அந்த நாளிலே தாவீதின் குடும்பத்தினருக்காகவும் எருசலேமின், குடிமக்களுக்காகவும் ஊற்றொன்று திறக்கப்படும். அது அவர்களைப் பாவத்திலிருந்தும், அசுத்தத்திலிருந்தும் கழுவி சுத்திகரிக்கும். “அந்த நாளில், நான் நாட்டிலிருந்து விக்கிரங்களின் பெயரை அகற்றிவிடுவேன், அவை இனி ஒருபோதும் நினைக்கப்படுவதில்லை” என சேனைகளின் யெகோவா கூறுகிறார். “பொய் தீர்க்கதரிசிகளையும், அசுத்த ஆவியையும் நாட்டிலிருந்து நீக்குவேன். இனி ஒருவன் பொய் தீர்க்கதரிசனம் சொல்வானாகில், அவனைப் பெற்ற தாய் தகப்பன் அவனிடம், ‘நீ யெகோவாவின் பெயரில் பொய் சொன்னாய். ஆதலால் நீ சாகவேண்டும்’ என அவனுக்குச் சொல்வார்கள். அவன் தீர்க்கதரிசனம் சொல்லும்போதோ, அவனுடைய பெற்றோர்கள் அவனைக் கத்தியால் குத்துவார்கள். “அந்த நாளில் பொய் தீர்க்கதரிசி ஒவ்வொருவனும், தன்னுடைய தரிசனங்களைக்குறித்து வெட்கமடைவான், அதனால் அவன் மக்களை ஏமாற்றும் நோக்கத்தோடு இறைவாக்கு உரைப்போருக்குரிய ஆட்டு மயிர் உடையை உடுத்தமாட்டான். அவனோ, ‘நான் ஒரு தீர்க்கதரிசி அல்ல, நான் ஒரு விவசாயி; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைவாங்கினான் என்பான்.’ ஒருவன் அவனிடம், ‘உன் உடலில் இந்தக் காயங்கள் எப்படி உண்டாயின?’ எனக் கேட்டால், அதற்கு அவன், ‘என் நண்பர்களின் வீட்டிலே நான் பட்ட காயங்கள்’ என்பான். “வாளே, என் மேய்ப்பனுக்கு எதிராக விழித்தெழு, எனக்கு நெருங்கிய மனிதனுக்கு எதிராய் விழித்தெழு!” என சேனைகளின் யெகோவா சொல்கிறார். “மேய்ப்பனை அடி; செம்மறியாடுகளும் சிதறடிக்கப்படும். நானோ அதின் குட்டிகளுக்கு எதிராக என் கையைத் திருப்புவேன். நாடு முழுவதிலும் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் வெட்டுண்டு அழிந்துபோவார்கள்” என்று யெகோவா சொல்கிறார். எனினும், “மூன்றில் ஒரு பங்கு மீதியாய் அதில் விடப்படும். இந்த மூன்றில் ஒரு பங்கையும் நான் நெருப்புக்குள் கொண்டுவருவேன், வெள்ளியைப்போல் அவர்களைச் சுத்தமாக்கி, தங்கத்தைப்போல் அவர்களைச் சோதிப்பேன். அவர்கள் என் பெயரைச்சொல்லிக் கூப்பிடுவார்கள். நான் அவர்களுக்குப் பதிலளிப்பேன். நான், ‘இவர்கள் என் மக்கள்,’ என்பேன். அவர்களும், ‘யெகோவாவே எங்கள் இறைவன்’ என்பார்கள்.”
சகரியா 13:1-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அந்நாளிலே பாவத்தையும் அழுக்கையும் நீக்க, தாவீதின் குடும்பத்தாருக்கும் எருசலேமின் குடிமக்களுக்கும் திறக்கப்பட்ட ஒரு ஊற்று உண்டாயிருக்கும். அந்நாளிலே நான் விக்கிரகங்களின் பெயரும் தேசத்தில் இல்லாதபடிக்கு அழிப்பேன்; அவைகள் இனி நினைக்கப்படுவதில்லை; தரிசனம் சொல்லுகிறவர்களையும், அசுத்த ஆவியையும் தேசத்திலிருந்து போய்விடவும் செய்வேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். இனி ஒருவன் தரிசனம் சொன்னால், அவனைப்பெற்ற அவன் தகப்பனும் தாயும் அவனை நோக்கி: நீ யெகோவாவுடைய நாமத்தைக்கொண்டு பொய்பேசுகிறதினால் நீ உயிரோடிருக்கக்கூடாது என்று சொல்லி, அவனைப்பெற்ற அவன் தகப்பனும் தாயும் அவன் தரிசனம் சொல்லும்போது அவனைக் குத்திப்போடுவார்கள். அந்நாளிலே தரிசனம் சொல்லுகிற அவனவன் தான் சொன்ன தரிசனத்தினால் வெட்கப்பட்டு, பொய் சொல்லும்படிக்கு இனி கம்பளியைப் போர்த்துக்கொள்ளாமல், நான் தரிசனம் சொல்லுகிறவன் அல்ல, நான் நிலத்தைப் பயிரிடுகிறவன்; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைவாங்கினான் என்பான். அப்பொழுது ஒருவன் அவனை நோக்கி: உன் கைகளில் இருக்கிற இந்த தழும்புகள் என்னவென்று கேட்டால், என் சிநேகிதரின் வீட்டிலே காயப்பட்டதினால் உண்டானவைகள் என்பான். பட்டயமே, என் மேய்ப்பன்மேலும் என் தோழனாகிய மனிதன்மேலும் எழும்பு என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; மேய்ப்பனை வெட்டு, அப்பொழுது ஆடுகள் சிதறிப்போகும்; ஆனாலும் என் கரத்தைச் சிறுவர்கள்மேல் திரும்பவைப்பேன். தேசமெங்கும் சம்பவிக்கும் காரியம் என்னவென்றால், அதில் இருக்கிற இரண்டு பங்கு மனிதர்கள் அழிக்கப்பட்டு இறந்துபோவார்கள்; மூன்றாம் பங்கோ அதில் மீதியாயிருக்கும். அந்த மூன்றாம் பங்கை நான் நெருப்புக்குட்படச்செய்து, வெள்ளியை உருக்குகிறதுபோல அவர்களை உருக்கி, பொன்னைப் புடமிடுகிறதுபோல அவர்களைப் புடமிடுவேன்; அவர்கள் என் நாமத்தைத் தொழுதுகொள்வார்கள்; நான் அவர்களுடைய விண்ணப்பத்தைக் கேட்பேன்; இது என் மக்களென்று நான் சொல்லுவேன், யெகோவா என் தேவன் என்று அவர்கள் சொல்லுவார்கள்.
சகரியா 13:1-9 பரிசுத்த பைபிள் (TAERV)
ஆனால் அந்நேரத்தில், தாவீதின் குடும்பத்தாருக்கும், எருசலேமின் குடிமக்களுக்கும் ஒரு புதிய நீரூற்று திறக்கப்படும். அந்த ஊற்று அவர்களின் பாவத்தைக் கழுவி அந்த ஜனங்களைச் சுத்தப்படுத்தும். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “அந்நேரத்தில் நான் பூமியிலுள்ள அனைத்து விக்கிரகங்களையும் நீக்குவேன். ஜனங்கள் அவற்றின் பெயர்களைக் கூட நினைவில் வைத்திருக்கமாட்டார்கள். நான் பூமியிலிருந்து கள்ளத்தீர்க்கதரிசிகளையும், சுத்தமற்ற ஆவிகளையும் நீக்குவேன். ஒருவன் தொடர்ந்து தீர்க்கதரிசனம் சொன்னால் பின்னர் அவன் தண்டிக்கப்படுவான். அவன் பெற்றோர்கள் அவனது சொந்த தாயும் தந்தையும் அவனிடம், ‘நீ கர்த்தர் நாமத்தால் பொய் சொன்னாய். எனவே நீ மரிக்க வேண்டும்!’ என்று சொல்வார்கள். அவனது சொந்த தாயும் தந்தையும் அவனைத் தீர்க்கதரிசனம் சொன்னதற்காகக் குத்திக்கொல்வார்கள். அந்நேரத்தில் தீர்க்கதரிசிகள் தமது தரிசனங்களுக்காவும், தீர்க்கதரிசனங்களுக்காகவும் வெட்கப்படுவார்கள். அவர்கள் தாம் தீர்க்கதரிசிகள் என்பதைக் காட்டும் முரட்டு ஆடையை அணியமாட்டார்கள். கள்ளத் தீர்க்கதரிசனங்களால் ஜனங்களை ஏமாற்றுவதற்கு அவர்கள் அவ்வாடைகளை அணிவதில்லை. அந்த ஜனங்கள் சொல்வார்கள்: ‘நான் தீர்க்கதரிசி அல்ல. நான் ஒரு விவசாயி. நான் குழந்தைப் பருவத்திலிருந்தே விவசாய வேலையைச் செய்து வருகிறேன்.’ ஆனால் மற்ற ஜனங்களோ, ‘உங்கள் கைகளில் ஏன் இந்த காயங்கள்?’ என்று கேட்பர். அவனோ, ‘நான் என் நண்பனின் வீட்டில் அடிக்கப்பட்டேன்’” என்பான். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “வாளே, மேய்ப்பனைத் தாக்கு. என் நண்பனைத் தாக்கும் மேய்ப்பனைத் தாக்கு. அந்த மந்தை ஓடிச் செல்லும். நான் அந்தச் சிறியவர்களையும் தண்டிப்பேன். இந்த நாட்டிலுள்ள மூன்றில் இரண்டு பங்கு ஜனங்கள் காயப்பட்டு மரிப்பார்கள். ஆனால் மூன்றில் ஒரு பங்கினர் பிழைப்பார்கள். பின்னர் நான் மீதியானவர்களைச் சோதிப்பேன். நான் அவர்களுக்கு அநேக துன்பங்களைக் கொடுப்பேன். அத்துன்பங்கள் வெள்ளியைச் சுத்தமான வெள்ளி என்று நிரூபிக்கும் நெருப்பைப் போன்றிருக்கும். ஒருவன் தங்கத்தைச் சோதிப்பது போல நான் அவர்களைச் சோதிப்பேன். பின்னர், அவர்கள் என்னை உதவிக்காக வேண்டுவார்கள். நான் அவர்களுக்குப் பதிலுரைப்பேன். நான், ‘நீங்கள் எனது ஜனங்கள்’ என்பேன். அவர்கள், ‘கர்த்தர் எங்கள் தேவன்’” என்பார்கள்.
சகரியா 13:1-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அந்நாளிலே பாவத்தையும் அழுக்கையும் நீக்க, தாவீதின் குடும்பத்தாருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் திறக்கப்பட்ட ஒரு ஊற்று உண்டாயிருக்கும். அந்நாளிலே நான் விக்கிரகங்களின்பேரும் தேசத்தில் இராதபடிக்கு அழிப்பேன்; அவைகள் இனி நினைக்கப்படுவதில்லை; தரிசனம் சொல்லுகிறவர்களையும், அசுத்த ஆவியையும் தேசத்திலிருந்து போய்விடவும்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். இனி ஒருவன் தரிசனம் சொன்னால், அவனைப்பெற்ற அவன் தகப்பனும் அவன் தாயும் அவனை நோக்கி: நீ கர்த்தருடைய நாமத்தைக்கொண்டு பொய்பேசுகிறபடியால் நீ உயிரோடிருக்கப்படாது என்று சொல்லி, அவனைப்பெற்ற அவன் தகப்பனும் அவன் தாயும் அவன் தரிசனம் சொல்லும்போது அவனைக் குத்திப்போடுவார்கள். அந்நாளிலே தரிசனம் சொல்லுகிற அவனவன் தான் சொன்ன தரிசனத்தினால் வெட்கப்பட்டு, பொய் சொல்லும்படிக்கு இனி மயிர்ப்போர்வையைப் போர்த்துக்கொள்ளாமல், நான் தரிசனம் சொல்லுகிறவன் அல்ல, நான் நிலத்தைப் பயிரிடுகிறவன்; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைகொண்டான் என்பான். அப்பொழுது ஒருவன் அவனை நோக்கி: உன் கைகளில் இருக்கிற இந்த வடுக்கள் ஏதென்று கேட்டால், என் சிநேகிதரின் வீட்டிலே காயப்பட்டதினால் உண்டானவைகள் என்பான். பட்டயமே, என் மேய்ப்பன்மேலும் என் தோழனாகிய புருஷன்மேலும் எழும்பு என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; மேய்ப்பனை வெட்டு, அப்பொழுது ஆடுகள் சிதறிப்போகும்; ஆனாலும் என் கரத்தைச் சிறுவர்மேல் திரும்பவைப்பேன். தேசமெங்கும் சம்பவிக்கும் காரியம் என்னவென்றால், அதில் இருக்கிற இரண்டு பங்கு மனுஷர் சங்கரிக்கப்பட்டு மாண்டுபோவார்கள்; மூன்றாம் பங்கோ அதில் மீதியாயிருக்கும். அந்த மூன்றாம் பங்கை நான் அக்கினிக்குட்படப்பண்ணி, வெள்ளியை உருக்குகிறதுபோல அவர்களை உருக்கி, பொன்னைப் புடமிடுகிறதுபோல அவர்களைப் புடமிடுவேன்; அவர்கள் என் நாமத்தைத் தொழுதுகொள்வார்கள்; நான் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்பேன்; இது என் ஜனமென்று நான் சொல்லுவேன், கர்த்தர் என் தேவன் என்று அவர்கள் சொல்லுவார்கள்.