ரோமர் 15:14-33

ரோமர் 15:14-33 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எனக்கு பிரியமானவர்களே, நீங்கள் நன்மையினால் நிறைந்தவர்கள் என்றும், அறிவில் நிறைவுபெற்றவர்களென்றும், ஒருவருக்கொருவர் அறிவுறுத்தலைக் கொடுக்கும் ஆற்றல் உடையவர்கள் என்றும் உறுதியாக நான் நம்புகிறேன். ஆனால் நான் சில விஷயங்களைத் திரும்பவும் உங்களுக்கு நினைப்பூட்டுவதற்காகவேத் துணிவுடன் இங்கே எழுதியிருக்கிறேன். ஏனெனில் இறைவன் எனக்குக் கொடுத்த கிருபையின்படி, யூதரல்லாதவர்களுக்கு இறைவனுடைய நற்செய்தியைப் பிரசித்தம் பண்ணும் ஆசாரிய ஊழியத்தைச் செய்துகொண்டிருக்கும் கிறிஸ்து இயேசுவின் ஊழியனாய் நான் இருக்கிறேன். யூதரல்லாத மக்கள் பரிசுத்த ஆவியானவராலே பரிசுத்தம் பண்ணப்பட்டு இறைவனுக்கு ஏற்ற ஒரு காணிக்கையாகும்படி, நான் அவர்களை அர்ப்பணிக்கிறேன். ஆகவே நான் இறைவனுக்குச் செய்கின்ற இந்தப் பணியின் நிமித்தம், கிறிஸ்து இயேசுவில் பெருமிதம் அடைகிறேன். யூதரல்லாதவர்களை இறைவனுக்குக் கீழ்ப்படிய வழிநடத்தும்படி, கிறிஸ்து என் மூலமாய் சொன்னவைகளினாலும், செய்தவைகளினாலும் செய்திருக்கிற அவை அடையாளங்களையும் அற்புதங்களையும் ஆவியானவருடைய வல்லமையினாலேயே நடந்தேறினதைத் தவிர, வேறு எதையும் குறித்து நான் பேசத்துணிய மாட்டேன். எனவே எருசலேமிலிருந்து இல்லிரிக்கம் என்னும் நாடுவரைக்கும், முழுவதுமாய் நான் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்தேன். வேறொருவர் போட்ட அஸ்திபாரத்தின்மேல் நான் கட்டக்கூடாது என்பதற்காக கிறிஸ்துவைக்குறித்து அறிவிக்கப்படாத இடங்களிலே, நற்செய்தியை அறிவிப்பதே எப்பொழுதும் என் விருப்பமாயிருக்கிறது. வேதவசனத்தில் எழுதியிருக்கிறபடியே: “அவரைக்குறித்து அறிவிக்கப்படாதவர்கள் காண்பார்கள், கேள்விப்படாதவர்கள் விளங்கிக்கொள்வார்கள்.” இதன்படியே நான் இப்படிச் செய்தேன். இதனாலேயே நான் உங்களிடம் வருவதற்கு பலமுறைகள் நினைத்தும் அடிக்கடி தடைகள் ஏற்பட்டன. ஆனால் இப்பொழுதோ இந்தப் பகுதிகளில் நான் பணிசெய்ய வேண்டிய எந்தவொரு இடமும் இல்லை. அத்துடன் பலவருடங்களாக நான் உங்களைக் காணவும் ஆவலாயிருக்கிறேன். எனவே நான் ஸ்பெயினுக்குப் போகும்போது, உங்களிடமும் வருவதற்குத் திட்டமிட்டிருக்கிறேன். போகும் வழியில் உங்களையும் சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கின்றேன். உங்களோடு சிறிது காலத்தை மகிழ்ச்சியாய் கழித்துவிட்டு, அங்கிருந்து உங்கள் உதவியோடு, எனது பயணத்தைத் தொடருவதற்கு தீர்மானித்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது எருசலேமில் இருக்கிற பரிசுத்தவான்களுக்கு பணிசெய்வதற்காக நான் அங்கு போகின்றேன். மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள திருச்சபைகள் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களிடையே ஏழைகளாய் இருக்கிறவர்களுக்கு உதவிசெய்ய முன்வந்திருக்கிறார்கள். அவர்கள் அதைச் செய்ய விருப்பம் கொண்டிருக்கிறார்கள்; உண்மையில் அப்படிச் செய்வதற்கு அவர்கள் கடமைப்பட்டும் இருக்கிறார்கள். ஏனெனில் யூதரல்லாத மக்கள் யூதர்களுடைய ஆவிக்குரிய ஆசீர்வாதங்களில் பங்கு பெற்றிருப்பதினால், இவர்கள் தங்கள் உலகப் பொருட்களை யூதர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கடமைப்பட்டிருக்கிறார்கள். எனவே நான் இந்தப் பணியை முடித்துக் கொண்டபின்பு, அவர்கள் இந்தப் பண உதவியைப் பெற்றுக்கொண்டார்கள் என்பதையும் உறுதிப்படுத்தியபின், ஸ்பெயினுக்குப் போகும் வழியில் உங்களையும் வந்து சந்திப்பேன். நான் உங்களிடம் வரும்போது, கிறிஸ்துவினுடைய முழுநிறைவான ஆசீர்வாதத்துடன் வருவேன் என்பது நிச்சயம். பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், பரிசுத்த ஆவியானவருடைய அன்பினாலும் நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறதாவது: “எனக்காக இறைவனிடத்தில் மன்றாடி, எனது போராட்டத்தில் என்னுடன் இணைந்துகொள்ளுங்கள். யூதேயாவிலிருக்கிற அவிசுவாசிகளிடமிருந்து நான் தப்புவிக்கப்பட வேண்டும் என்றும், எருசலேமில் நான் செய்கின்ற பணி அங்கிருக்கிற பரிசுத்தவான்களுக்கு ஏற்புடையதாய் இருக்கவேண்டும் என்றும் மன்றாடுங்கள். அப்பொழுது இறைவனுடைய திட்டத்தின்படியே நான் மகிழ்ச்சியுடன் உங்களிடம் வந்து, உங்களுடன் சேர்ந்து உற்சாகமடைவேன். சமாதானத்தையும் அமைதியையும் கொடுக்கும் இறைவன் உங்கள் அனைவருடனும் இருப்பாராக” ஆமென்.

ரோமர் 15:14-33 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

என் சகோதரர்களே, நீங்கள் நற்குணத்தினால் நிறைந்தவர்களும், எல்லா அறிவினாலும் நிரப்பப்பட்டவர்களும், ஒருவருக்கொருவர் புத்திசொல்ல வல்லவர்களுமாக இருக்கிறீர்கள் என்று நானும் உங்களைக்குறித்து நிச்சயித்திருக்கிறேன். அப்படியிருந்தும், சகோதரர்களே, யூதரல்லாதவர்கள் பரிசுத்த ஆவியானவராலே பரிசுத்தமாக்கப்பட்டு, தேவனுக்குப் பிரியமான பலியாகும்படி, நான் தேவனுடைய நற்செய்தி ஊழியத்தை நடத்தும் ஆசாரியனாக இருந்து யூதரல்லாதவர்களுக்கு இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனாவதற்கு, தேவன் எனக்கு அளித்த கிருபையினாலே உங்களுக்கு ஞாபகப்படுத்துவதற்காக இவைகளை நான் அதிக தைரியமாக எழுதினேன். எனவே, நான் தேவனுக்குரியவைகளைக்குறித்து இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மேன்மை பாராட்டமுடியும். யூதரல்லாதவர்களை வார்த்தையினாலும் செய்கையினாலும் கீழ்ப்படியப்பண்ணுவதற்கு, அற்புத அடையாளங்களின் பலத்தினாலும், தேவ ஆவியானவரின் பலத்தினாலும், கிறிஸ்துவானவர் என்னைக்கொண்டு செய்தவைகளைத்தவிர வேறொன்றையும் சொல்ல நான் துணியவில்லை. இப்படி எருசலேமிலிருந்து ஆரம்பித்து, இல்லிரிக்கம் தேசம்வரைக்கும், கிறிஸ்துவின் நற்செய்தியைப் பூரணமாகப் பிரசங்கம் செய்திருக்கிறேன். மேலும் அவருடைய செய்தியை அறியாமல் இருந்தவர்கள் பார்ப்பார்கள் என்றும், கேள்விப்படாமல் இருந்தவர்கள் உணர்ந்துகொள்வார்கள் என்றும் எழுதியிருக்கிறபடியே, நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டாமல் கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்படாத இடங்களில் நற்செய்தியை அறிவிக்கும்படி விரும்புகிறேன். உங்களிடம் வருவதற்கு இதினாலே அநேகமுறை தடைபட்டேன். இப்பொழுது இந்தப் பகுதிகளிலே எனக்கு இடம் இல்லதாதினாலும், உங்களிடம் வரும்படி அநேக வருடமாக எனக்கு அதிக விருப்பம் உண்டாயிருக்கிறபடியினாலும், நான் ஸ்பானியா தேசத்திற்கு பயணம்செய்யும்போது உங்களிடம் வந்து, உங்களைப் பார்க்கவும், உங்களிடம் கொஞ்சம் திருப்தியடைந்தபின்பு, அந்த இடத்திற்கு உங்களால் நான் வழியனுப்பப்படவும், எனக்கு நேரம் கிடைக்கும் என்று நம்பியிருக்கிறேன். இப்பொழுதோ பரிசுத்தவான்களுக்கு உதவிசெய்வதற்காக நான் எருசலேமுக்குப் பயணம் செய்ய இருக்கிறேன். மக்கெதோனியாவிலும், அகாயாவிலும் உள்ளவர்கள் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குள்ளே இருக்கிற ஏழைகளுக்கு சில பொருளுதவிகளைச் செய்ய விருப்பமாக இருக்கிறார்கள்; இப்படிச்செய்வது நல்லதென்று நினைத்தார்கள்; இப்படிச் செய்கிறதற்கு அவர்கள் கடனாளிகளாகவும் இருக்கிறார்கள். எப்படியென்றால், யூதரல்லாதவர்கள் அவர்களுடைய ஞானநன்மைகளில் பங்குபெற்றிருக்க, சரீர நன்மைகளால் அவர்களுக்கு உதவிசெய்ய இவர்கள் கடனாளிகளாக இருக்கிறார்களே. இந்தக் காரியத்தை நான் நிறைவேற்றி, இந்தப் பலனை அவர்கள் கையிலே பத்திரமாக ஒப்புவித்தப்பின்பு, உங்களுடைய ஊர்வழியாக ஸ்பானியாவிற்குப் போவேன். நான் உங்களிடம் வரும்போது கிறிஸ்துவினுடைய நற்செய்தியின் சம்பூரணமான ஆசீர்வாதத்தோடு வருவேன் என்று அறிந்திருக்கிறேன். மேலும் சகோதரர்களே, தேவ விருப்பத்தினாலே நான் சந்தோஷத்தோடு உங்களிடம் வந்து உங்களோடு ஓய்வெடுப்பதற்காக, யூதேயாவிலிருக்கிற அவிசுவாசிகளுக்கு நான் தப்புவிக்கப்படுவதற்காகவும், நான் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குச் செய்யப்போகிற தர்மஉதவிகள் அவர்களால் அங்கீகரிக்கப்படுவதற்காகவும், நீங்கள் தேவனை நோக்கி செய்யும் ஜெபங்களில், நான் போராடுவதுபோல நீங்களும் என்னோடு சேர்ந்து போராடவேண்டும் என்று நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், பரிசுத்த ஆவியானவருடைய அன்பினாலும், உங்களை வேண்டிக்கொள்கிறேன். சமாதானத்தின் தேவன் உங்கள் அனைவரோடும் இருப்பாராக. ஆமென்.

ரோமர் 15:14-33 பரிசுத்த பைபிள் (TAERV)

எனது சகோதர சகோதரிகளே! நீங்கள் நன்மையால் நிறைந்திருப்பதாக நம்புகிறேன். உங்களுக்குத் தேவையான அறிவு உங்களிடம் இருப்பது எனக்குத் தெரியும். நீங்கள் ஒருவருக்கொருவர் கற்பிக்கும் தகுதி பெற்றவர்கள். நீங்கள் நினைவுபடுத்திக்கொள்ளத்தக்க சிலவற்றைப் பற்றி நான் வெளிப்படையாகவே எழுதியிருக்கிறேன். தேவன் எனக்குச் சிறப்பான வரத்தைக் கொடுத்திருப்பதால் நான் இதனைச் செய்தேன். என்னை இயேசு கிறிஸ்துவின் ஊழியனாக தேவன் ஆக்கினார். நான் யூதரல்லாதவர்களுக்கு உதவும்பொருட்டு என்னை தேவன் ஊழியனாக்கினார். நற்செய்தியைக் கற்றுக்கொடுப்பதின் மூலம் தேவனுக்கு சேவை செய்கிறேன். யூதரல்லாதவர்கள் தேவனால் ஏற்றுக்கொள்ளத்தக்க காணிக்கை ஆகும்பொருட்டு நான் இதனைச் செய்கிறேன். அவர்கள் தேவனுக்காகப் பரிசுத்த ஆவியானவரால் பரிசுத்தமாக்கப்பட்டனர். நான் தேவனுக்காகக் கிறிஸ்துவுக்குள் செய்த பணிகளுக்காகப் பெருமை கொள்கிறேன். நான் செய்து முடித்த செயல்களைப் பற்றி நானே பேசுவதில்லை. யூதரல்லாதவர்கள் தேவனுக்கு அடிபணிய, என் மூலம் கிறிஸ்து செய்த செயல்களைப் பற்றி மட்டுமே பேசுவேன். நான் செய்ததும், சொன்னதுமான காரியங்கள் மூலமே அவர்கள் தேவனுக்குப் பணிந்தனர். அற்புதங்களையும், வல்லமைகளையும். பெருங்காரியங்களையும் பார்த்தும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை உணர்ந்தும் அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்தனர். நான் எருசலேமிலிருந்து கிறிஸ்துவின் நற் செய்தியை அறிவிக்க தொடங்கி, இல்லிரிக்கம் நகர்வரை என் பணியை முடித்திருக்கிறேன். கிறிஸ்துவைப் பற்றிக் கேள்விப்படாத மக்கள் இருக்கும் இடங்களில் நற்செய்தியைப் போதிக்கவே எப்போதும் நான் விரும்புகிறேன். மற்றவர்கள் ஏற்கெனவே தொடங்கிவிட்ட பணிகளை நான் போய்த் தொட விரும்பாததால் நான் இவ்வாறு செய்கிறேன். ஆனால், “அவரைப் பற்றி கேட்டிராத மக்கள் அவரைப் பார்ப்பார்கள். அவரைப் பற்றி அறியாத மக்கள் அவரைப் புரிந்துகொள்வார்கள்.” என்று ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கிறது. அதனால் தான் உங்களிடம் வருவதிலிருந்து பலமுறை நிறுத்தப்பட்டேன். நான் இந்தத் திசைகளில் இப்போது எனது பணியை முடித்துவிட்டேன். பல ஆண்டுகளாக உங்களைக் காண விரும்பியிருக்கிறேன். நான் ஸ்பானிய நாட்டிற்குப் போகும்போது உங்களிடம் வந்து உங்களைக் கண்டு கொள்ளவும், நான் உங்களோடு தங்கியிருந்து மகிழ்ச்சி அடைவேனென்றும் நம்புகிறேன். என் பயணத்துக்கு நீங்களும் உதவி செய்யலாம். தேவனுடைய மக்களுக்கு உதவுவதற்காக இப்பொழுது நான் எருசலேமுக்குச் செல்கிறேன். எருசலேமிலுள்ள தேவனுடைய மக்களில் சிலர் வறுமையில் உள்ளனர். மக்கதோனியா, அகாயா போன்ற நாடுகளில் உள்ள விசுவாசிகள் கொடுப்பதில் மகிழ்ச்சியடைவார்கள். அவர்களே எருசலேமில் உள்ள விசுவாசிகளுக்கு உதவிசெய்து வருகின்றனர். இப்படிச் செய்வது நல்லதென்று எண்ணினார்கள். இப்படிச் செய்கிறதற்கு அவர்கள் கடனாளியாகவும் இருக்கிறார்கள். எப்படியென்றால் புறஜாதியினர் அவர்களுடைய ஞான நன்மைகளில் பங்கேற்கின்றனர். சரீர நன்மைகளில் அவர்களுக்கு உதவுகின்றனர். அவர்கள் இவ்விதம் கடனாளியாயிருக்கிறார்களே. எருசலேமில் உள்ள ஏழை மக்கள் அவர்களுக்காக வழங்கப்பட்ட பொருளை அடையவேண்டும். இதை முடித்த பிறகு ஸ்பானியாவுக்குப் புறப்படுவேன். வழியில் உங்களைப் பார்ப்பேன். நான் உங்களைப் பார்க்க வரும்போது, கிறிஸ்துவின் முழுமையான ஆசீர்வாதத்தை உங்களுக்குக் கொண்டு வருவேன் என்பதை நான் அறிவேன். சகோதர சகோதரிகளே! நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமும் பரிசுத்த ஆவியானவரின் அன்பின் மூலமும் உங்களை வேண்டுகிறேன். நீங்கள் பிரார்த்தனை செய்யும்போது எனது போராட்டங்களில் பங்கு கொள்ளுங்கள். தேவனிடம் பிரார்த்தனை செய்யும்போது நினைவு கொள்ளுங்கள். யூதேயாவிலுள்ள நம்பிக்கையற்றவர்களிடமிருந்து நான் தப்பித்துக்கொள்ளும் பொருட்டு பிரார்த்தனை செய்யுங்கள். எருசலேமிலுள்ள விசுவாசிகளுக்கு நான் செய்யப்போகும் உதவி அவர்களால் மகிழ்ச்சியுடன் ஏற்கப்படவும் பிரார்த்தனை செய்யுங்கள். பிறகு, தேவனுடைய விருப்பம் இருந்தால் நான் உங்களிடம் வருவேன். நான் மகிழ்ச்சியோடு வருவேன். உங்களோடு ஓய்வுகொள்ளுவேன். சமாதானத்தின் தேவன் உங்கள் அனைவரோடும் இருப்பாராக ஆமென்.

ரோமர் 15:14-33 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

என் சகோதரரே, நீங்கள் நற்குணத்தினால் நிறைந்தவர்களும், சகல அறிவினாலும் நிரப்பப்பட்டவர்களும், ஒருவருக்கொருவர் புத்திசொல்ல வல்லவர்களுமாயிருக்கிறீர்களென்று நானும் உங்களைக் குறித்து நிச்சயித்திருக்கிறேன். அப்படியிருந்தும், சகோதரரே, புறஜாதியாராகிய பலி பரிசுத்த ஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட்டு, தேவனுக்குப் பிரியமான பலியாகும்படிக்கு, நான் தேவனுடைய சுவிசேஷ ஊழியத்தை நடத்தும் ஆசாரியனாயிருந்து புறஜாதிகளுக்கு இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனாகும்பொருட்டு, தேவன் எனக்கு அளித்த கிருபையினாலே உங்களுக்கு ஞாபகப்படுத்தும்படிக்கு இவைகளை நான் அதிக தைரியமாய் எழுதினேன். ஆதலால் நான் தேவனுக்குரியவைகளைக்குறித்து இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மேன்மைபாராட்ட எனக்கு இடமுண்டு. புறஜாதியாரை வார்த்தையினாலும் செய்கையினாலும் கீழ்ப்படியப்பண்ணும்படிக்கு, அற்புத அடையாளங்களின் பலத்தினாலும், தேவ ஆவியின் பலத்தினாலும், கிறிஸ்துவானவர் என்னைக்கொண்டு நடப்பித்தவைகளைச் சொல்வதல்லாமல் வெறொன்றையும் சொல்ல நான் துணிவதில்லை. இப்படி எருசலேம் துவக்கிச் சுற்றிலும், இல்லிரிக்கம் தேசம்வரைக்கும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பூரணமாய்ப் பிரசங்கித்திருக்கிறேன். மேலும் அவருடைய செய்தியை அறியாதிருந்தவர்கள் காண்பார்களென்றும், கேள்விப்படாதிருந்தவர்கள் உணர்ந்துகொள்வார்களென்றும் எழுதியிருக்கிறபடியே, நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டாதபடிக்கு கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன். உங்களிடத்தில் வருகிறதற்கு இதினாலே அநேகந்தரம் தடைபட்டேன். இப்பொழுது இந்தத் திசைகளிலே எனக்கு இடமில்லாதபடியினாலும், உங்களிடத்தில் வரும்படி அனேக வருஷமாய் எனக்கு மிகுந்த விருப்பம் உண்டாயிருக்கிறபடியினாலும், நான் ஸ்பானியா தேசத்திற்குப் பிரயாணம்பண்ணுகையில் உங்களிடத்தில் வந்து, உங்களைக் கண்டுகொள்ளவும், உங்களிடத்தில் சற்றுத் திருப்தியடைந்த பின்பு, அவ்விடத்திற்கு உங்களால் வழிவிட்டனுப்பப்படவும், எனக்குச் சமயங்கிடைக்குமென்று நம்பியிருக்கிறேன். இப்பொழுதோ பரிசுத்தவான்களுக்கு உதவிசெய்யுங்காரியமாக நான் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ண எத்தனமாயிருக்கிறேன். மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ளவர்கள் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குள்ளே இருக்கிற தரித்திரருக்காகச் சில பொருள்சகாயம்செய்ய விருப்பங்கொண்டிருக்கிறார்கள்; இப்படிச்செய்வது நல்லதென்று எண்ணினார்கள்; இப்படிச் செய்கிறதற்கு அவர்கள் கடனாளிகளாயும் இருக்கிறார்கள். எப்படியென்றால், புறஜாதியார் அவர்களுடைய ஞானநன்மைகளில் பங்குபெற்றிருக்க, சரீரநன்மைகளால் அவர்களுக்கு உதவிசெய்ய இவர்கள் கடனாளிகளாயிருக்கிறார்களே. இந்தக் காரியத்தை நான் நிறைவேற்றி, இந்தப் பலனை அவர்கள் கையிலே பத்திரமாய் ஒப்புவித்தபின்பு, உங்கள் ஊர் வழியாய் ஸ்பானியாவுக்குப் போவேன். நான் உங்களிடத்தில் வரும்போது கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் சம்பூரணமான ஆசீர்வாதத்தோடே வருவேனென்று அறிந்திருக்கிறேன். மேலும் சகோதரரே, தேவசித்தத்தினாலே நான் சந்தோஷத்துடனே உங்களிடத்தில் வந்து உங்களோடு இளைப்பாறும்படியாக, யூதேயாவிலிருக்கிற அவிசுவாசிகளுக்கு நான் தப்புவிக்கப்படும்படிக்கும், நான் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குச் செய்யப்போகிற தர்மசகாயம் அவர்களால் அங்கிகரிக்கப்படும்படிக்கும், நீங்கள் தேவனை நோக்கிச் செய்யும் ஜெபங்களில், நான் போராடுவதுபோல நீங்களும் என்னோடுகூடப் போராடவேண்டுமென்று நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிமித்தமும், ஆவியானவருடைய அன்பினிமித்தமும், உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன். சமாதானத்தின் தேவன் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக. ஆமென்.