சங்கீதம் 105:1-45

சங்கீதம் 105:1-45 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவாவுக்கு நன்றி செலுத்தி, அவருடைய பெயரை பறைசாற்றுங்கள்; அவர் செய்தவற்றை நாடுகளுக்குள் தெரியப்படுத்துங்கள். அவரைப் பாடுங்கள், அவருக்குத் துதி பாடுங்கள்; அவருடைய அதிசயமான செயல்களையெல்லாம் எடுத்துச் சொல்லுங்கள். அவருடைய பரிசுத்த பெயரில் பெருமிதம் கொள்ளுங்கள்; யெகோவாவைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக. யெகோவாவையும் அவர் வல்லமையையும் நோக்கிப்பாருங்கள்; எப்பொழுதும் அவர் முகத்தையே தேடுங்கள். அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், அவர் கொடுத்த நியாயத்தீர்ப்புகளையும் நினைவிற்கொள்ளுங்கள். அவருடைய ஊழியராம் ஆபிரகாமின் சந்ததிகளே, அவர் தெரிந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே, நீங்கள் இவற்றை நினைவிற்கொள்ளுங்கள். அவரே நமது இறைவனாகிய யெகோவா; அவரது நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் உள்ளன. அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவுகூருகிறார், ஆயிரம் தலைமுறைகளுக்கு அவர் செய்த வாக்குறுதியையும், ஆபிரகாமோடு அவர் செய்த உடன்படிக்கையையும், ஈசாக்கிற்கு அவர் இட்ட ஆணையையும் நினைவுகூருகிறார். அவர் அதை யாக்கோபுக்கு ஒரு விதிமுறையாகவும், இஸ்ரயேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்திச் சொன்னதாவது: “உங்களுடைய உரிமைச்சொத்தாக, கானான் நாட்டை நான் உனக்குக் கொடுப்பேன்.” அவர்கள் எண்ணிக்கையில் கொஞ்சமாய், உண்மையிலேயே மிகச் சிலராகவும், வேற்று நாட்டினராகவும் இருந்தபோது, அவர்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கும், ஒரு அரசிலிருந்து இன்னொரு அரசிற்கும் அலைந்து திரிந்தார்கள். அவர்களை ஒடுக்குவதற்கு அவர் யாரையும் அனுமதிக்கவில்லை; அவர்களுக்காக அவர் அரசர்களைக் கண்டித்துச் சொன்னதாவது: “நான் அபிஷேகம் செய்தவர்களைத் தொடவேண்டாம்; என் இறைவாக்கினருக்குத் தீமை செய்யவேண்டாம்.” எகிப்து நாட்டிலே அவர் பஞ்சத்தை வரும்படிச் செய்து, அவர்களுடைய உணவு விநியோகத்தை நிறுத்தினார்; அவர் அடிமையாக விற்கப்பட்ட யோசேப்பை என்ற ஒரு மனிதனை, அவர்களுக்குமுன் எகிப்திற்கு அனுப்பிவைத்தார். எகிப்தியர் அவனுடைய கால்களை விலங்கிட்டு காயப்படுத்தினார்கள்; அவனுடைய கழுத்து இரும்புகளால் பிணைக்கப்பட்டது. அவன் முன்பு சொன்னவை நிறைவேறுமளவும், யெகோவாவினுடைய வார்த்தை அவனை உண்மையானவன் என்று நிரூபிக்கும் வரைக்கும் அவ்வாறு நடந்தது. எகிப்திய அரசன் ஆள் அனுப்பி அவனை விடுவித்தான்; மக்களின் அதிகாரி அவனை விடுதலை செய்தான். அரசன் அவனைத் தன் வீட்டிற்குத் தலைவனாக்கி, தன் உடைமைகளுக்கு எல்லாம் அதிபதியாக்கினான். தான் விரும்பியபடி இளவரசர்களுக்கு அறிவுறுத்தவும், ஆலோசகர்களுக்கு ஞானத்தைப் போதிக்கவும் அரசன் யோசேப்பை நியமித்தான். அப்பொழுது இஸ்ரயேல் எகிப்திற்கு வந்தான்; யாக்கோபு காமின் நாட்டில் வேறுநாட்டைச் சேர்ந்த ஒருவனைப்போல் வாழ்ந்தான். யெகோவா தம் மக்களை பலுகிப் பெருகச்செய்தார்; அவர்களுடைய பகைவரைப் பார்க்கிலும், அதிக வலிமை உள்ளவர்களாக்கினார். அவர் எகிப்தியர்கள் இஸ்ரயேலரை வெறுக்கவும், அவருடைய ஊழியருக்கு விரோதமாக சூழ்ச்சி செய்யவும், எகிப்தியரின் இருதயங்களை மாற்றினார். அவர் தமது அடியானாகிய மோசேயையும், தாம் தெரிந்தெடுத்த ஆரோனையும் அனுப்பினார். இவர்கள் எகிப்தியர் மத்தியில் அற்புத அடையாளங்களையும், காமின் நாட்டிலே அதிசயங்களையும் செய்தார்கள். யெகோவாவினுடைய வார்த்தைகளுக்கு விரோதமாக எகிப்தியர் கலகம் செய்தார்கள் அல்லவோ? அதினால் அவர் இருளை அனுப்பி நாட்டை இருளாக்கினார். அவர்களுடைய நீர்நிலைகளை அவர் இரத்தமாக மாற்றினார், அவர்களுடைய மீன்கள் மாண்டுபோனது. அவர்களுடைய நாடு தவளைகளால் நிறைந்தது; அவை அவர்களுடைய ஆளுநர்களின் படுக்கை அறைகளுக்குள்ளும் சென்றன. இறைவன் கட்டளையிட, ஈக்கள் கூட்டமாக அங்கே திரண்டு வந்தன; கொசுக்கள் எகிப்திய நாடெங்கும் நிறைந்தன. அவர் அவர்களுக்கு மழைக்குப் பதிலாக கல்மழையை மின்னலுடன் அவர்களுடைய நாடெங்கிலும் வரச்செய்தார். அவர்களுடைய திராட்சைக் கொடிகளையும், அத்திமரங்களையும் வீழ்த்தி, அவர்களுடைய நாட்டிலிருந்த மரங்களை முறித்தார். அவர் கட்டளையிட, கணக்கற்ற வெட்டுக்கிளிகளும், பச்சைப்புழுக்களும் வந்தன. அவை அவர்களுடைய நாட்டிலிருந்த பசுமையான எல்லாவற்றையும் அவர்களுடைய நிலத்தின் விளைச்சல்களையும் தின்று போட்டது. பின்பு அவர் எகிப்து நாட்டின் முதற்பிறந்த எல்லாவற்றையும், அவர்களுடைய ஆண்மையின் முதற்பேறான மகன்களையும் மரிக்கச் செய்தார். அவர் இஸ்ரயேலரை நிறைய வெள்ளியோடும் தங்கத்தோடும் புறப்படச் செய்தார், அவர்களுடைய கோத்திரங்களில் ஒருவரும் தளர்ந்து போகவில்லை. இஸ்ரயேலரைப் பற்றிய பயம் எகிப்தியரைப் பிடித்திருந்ததால், இஸ்ரயேலர் புறப்பட்டபோது எகிப்தியர் அகமகிழ்ந்தார்கள். யெகோவா ஒரு மேகத்தை தன் மக்களுக்கு நிழலாகப் பரப்பினார்; இரவிலே வெளிச்சம் கொடுப்பதற்கு நெருப்பையும் தந்தார். அவர்கள் கேட்டபோது, அவர்களுக்குக் காடைகளை வரச்செய்தார்; பரலோகத்தின் அப்பத்தினால் அவர்களைத் திருப்தியாக்கினார். அவர் கற்பாறையைத் பிளந்தார், தண்ணீர் பீறிட்டுப் பாய்ந்தது; அது ஒரு நதியைப்போல் பாலைவனத்தில் ஓடியது. ஏனெனில் அவர் தமது அடியானாகிய ஆபிரகாமுக்குத் தாம் கொடுத்த, தமது பரிசுத்த வாக்குத்தத்தத்தை நினைவிற்கொண்டார். அவர் தமது மக்களைக் களிப்போடு வெளியே கொண்டுவந்தார்; தாம் தெரிந்துகொண்டவர்களை மகிழ்ச்சியின் ஆரவாரத்தோடு வெளியே கொண்டுவந்தார். அவர் பிற நாடுகளை அவர்களுக்குக் கொடுத்தார்; அவர்கள் மற்றவர்களின் கடின உழைப்பின் பலனுக்கு உரிமையாளர்கள் ஆனார்கள். அவருடைய ஒழுங்குவிதிகளைக் கைக்கொண்டு, அவருடைய சட்டங்களைக் கடைப்பிடிக்கும்படியாகவே, யெகோவா இப்படிச் செய்தார்.

சங்கீதம் 105:1-45 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவாவை துதித்து, அவருடைய பெயரை பிரபலமாக்குங்கள், அவருடைய செய்கைகளை தேசங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள். அவரைப் பாடி, அவரைப் புகழுங்கள்; அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள். அவருடைய பரிசுத்த பெயரைக் குறித்து மேன்மைபாராட்டுங்கள்; யெகோவாவை தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக. யெகோவாவையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தைத் தொடர்ந்து தேடுங்கள். அவருடைய ஊழியனாகிய ஆபிரகாமின் சந்ததியே! அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் மக்களே! அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், அவர் வாயிலிருந்து புறப்படும் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள். அவரே நம்முடைய தேவனாகிய யெகோவா, அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும். ஆயிரம் தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வார்த்தையும், ஆபிரகாமோடு அவர் செய்த உடன்படிக்கையையும், அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருக்கிறார். அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், இஸ்ரவேலுக்கு நிரந்தர உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி: உங்களுடைய சுதந்தரபாகமான கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார். அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத் தொகைக்குட்பட்ட சில மக்களுமாக இருந்தார்கள். அவர்கள் ஒரு தேசத்தைவிட்டு மறு தேசத்திற்கும், ஒரு ராஜ்ஜியத்தைவிட்டு மறுதேசத்திற்கும் போனார்கள். அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடுக்காமல், அவர்களுக்காக ராஜாக்களைக் கடிந்துகொண்டு: நான் அபிஷேகம்செய்தவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார். அவர் தேசத்திலே பஞ்சத்தை வரவழைத்து, உணவு என்னும் ஆதரவுகோலை முற்றிலும் முறித்தார். அவர்களுக்கு முன்னாலே ஒரு மனிதனை அனுப்பினார்; யோசேப்பு சிறையாக விற்கப்பட்டான். அவனுடைய கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள்; அவனுடைய உயிர் இரும்பில் அடைபட்டிருந்தது. யெகோவா சொன்ன வார்த்தை நிறைவேறும்வரை அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது. ராஜா ஆள் அனுப்பி, அவனைக் கட்டவிழ்க்கச் சொன்னான்; மக்களின் அதிபதி அவனை விடுதலை செய்தான். தன்னுடைய பிரபுக்களை அவனுடைய மனதின்படி கட்டவும், தன்னுடைய மூப்பர்களை ஞானிகளாக்கவும், அவனைத் தன்னுடைய வீட்டுக்கு அதிகாரியும், தன்னுடைய செல்வங்களுக்கெல்லாம் ஆளுனராகவும் ஏற்படுத்தினார். அப்பொழுது இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்; யாக்கோபு காமின் தேசத்திலே அந்நியனாக இருந்தான். அவர் தம்முடைய மக்களை மிகவும் பலுகச்செய்து, அவர்களுடைய எதிரிகளைவிட அவர்களைப் பலவான்களாக்கினார். தம்முடைய மக்களைப் பகைக்கவும், தம்முடைய ஊழியக்காரர்களை வஞ்சனையாக நடத்தவும், அவர்களுடைய இருதயத்தை மாற்றினார். தம்முடைய ஊழியனாகிய மோசேயையும் தாம் தெரிந்துகொண்ட ஆரோனையும் அனுப்பினார். இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும், காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள். அவர் இருளை அனுப்பி, காரிருளை உண்டாக்கினார்; அவருடைய வார்த்தைகளை எதிர்ப்பவர்கள் இல்லை. அவர்களுடைய தண்ணீர்களை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய மீன்களை சாகடித்தார். அவர்களுடைய தேசம் தவளைகளை அதிகமாகப் பிறக்கவைத்தது; அவர்களுடைய ராஜாக்களின் அறைவீடுகளிலும் அவைகள் வந்தது. அவர் கட்டளையிட, அவர்களுடைய எல்லைகளிலெங்கும் வண்டுகளும் பேன்களும் வந்தது. அவர்களுடைய மழைகளைக் கல்மழையாக்கி, அவர்களுடைய தேசத்திலே ஜூவாலிக்கிற நெருப்பை வரச்செய்தார். அவர்களுடைய திராட்சைச்செடிகளையும் அத்திமரங்களையும் அழித்து, அவர்களுடைய எல்லைகளிலுள்ள மரங்களையும் முறித்தார். அவர் கட்டளையிட, எண்ணிமுடியாத வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் வந்து, அவர்களுடைய தேசத்திலுள்ள எல்லா தாவரங்களையும் அரித்து, அவர்களுடைய நிலத்தின் கனியைத் தின்றுபோட்டது. அவர்களுடைய தேசத்திலே முதற்பிறப்புகள் அனைத்தையும், அவர்களுடைய பெலனில் முதற்பெலனான எல்லோரையும் அழித்தார். அப்பொழுது அவர்களை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படச்செய்தார்; அவர்கள் கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை. எகிப்தியர்கள் அவர்களுக்குப் பயந்ததினால், அவர்கள் புறப்பட்டபோது மகிழ்ந்தார்கள். அவர் மேகத்தை மறைவுக்காக விரித்து, இரவை வெளிச்சமாக்குகிறதற்காக நெருப்பையும் தந்தார். இஸ்ரவேலர்கள் உணவு கேட்டார்கள், அவர் காடைகளை வரச்செய்தார்; வான அப்பத்தினாலும் அவர்களைத் திருப்தியாக்கினார். கன்மலையைத் திறந்தார், தண்ணீர்கள் புறப்பட்டு, வனாந்திரத்தில் ஆறாக ஓடினது. அவர் தம்முடைய பரிசுத்த வாக்குத்தத்தத்தையும், தம்முடைய ஊழியனாகிய ஆபிரகாமையும் நினைத்து, தம்முடைய மக்களை மகிழ்ச்சியோடும், தாம் தெரிந்துகொண்டவர்களைக் கெம்பீர சத்தத்தோடும் புறப்படச்செய்து, தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும், தமது நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படிக்கும், அவர்களுக்கு அந்நியர்களுடைய தேசங்களைக் கொடுத்தார்; அந்நிய மக்களுடைய உழைப்பின் பலனைச் சுதந்தரித்துக்கொண்டார்கள். அல்லேலூயா.

சங்கீதம் 105:1-45 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தருக்கு நன்றி கூறுங்கள். அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள். அவர் செய்யும் அற்புதங்களைத் தேசங்களுக்குக் கூறுங்கள். கர்த்தரை நோக்கிப் பாடுங்கள். அவருக்குத் துதிகளைப் பாடுங்கள். அவர் செய்யும் வியக்கத்தக்க காரியங்களைக் குறித்துக் கூறுங்கள். கர்த்தருடைய பரிசுத்த நாமத்தைக் குறித்துப் பெருமைகொள்ளுங்கள். ஜனங்களாகிய நீங்கள் கர்த்தரைத் தேடிவந்தீர்கள். சந்தோஷமாயிருங்கள்! வல்லமைக்காக கர்த்தரிடம் போங்கள். உதவிக்காக எப்போதும் அவரிடம் போங்கள். அவர் செய்யும் வியப்பிற்குரிய காரிங்களை நினைவுகூருங்கள். அவர் செய்த அதிசயங்களையும் ஞானமுள்ள முடிவுகளையும் எண்ணிப் பாருங்கள். நீங்கள் அவரது பணியாளாகிய ஆபிரகாமின் சந்ததியினர். நீங்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட யாக்கோபின் சந்ததியினர். கர்த்தரே நமது தேவன். கர்த்தர் உலகம் முழுவதையும் ஆளுகிறார். தேவனுடைய உடன்படிக்கையை என்றென்றும் நினைவுகூருங்கள். ஆயிரம் தலைமுறை வரையிலும் அவரது கட்டளைகளை நினைவுகூருங்கள். தேவன் ஆபிரகாமோடு ஒரு உடன்படிக்கை செய்தார். தேவன் ஈசாக்கோடு ஒரு வாக்குறுதியைச் செய்தார். பின்பு அவர் அதனை யாக்கோபிற்கு ஒரு சட்டமாகச் செய்தார். தேவன் இஸ்ரவேலோடு ஒரு உடன்படிக்கை செய்தார். அது என்றென்றும் தொடரும்! தேவன்: “நான் கானானின் தேசத்தை உனக்குக் கொடுப்பேன். அத்தேசம் உனக்குச் சொந்தமாகும்” என்றார். ஆபிரகாமின் குடும்பம் சிறியதாயிருந்தபோது தேவன் அவ்வாக்குறுதியை அளித்தார். அவர்கள் அங்கு அந்நியராகச் சில காலத்தைக் கழித்தனர். அவர்கள் ஒரு அரசிலிருந்து மற்றோர் அரசிற்கும், ஒரு தேசத்திலிருந்து மற்றொரு தேசத்திற்கும் பயணம் செய்தார்கள். ஆனால் ஜனங்கள் அவர்களைத் தகாதபடி நடத்த தேவன் அனுமதிக்கவில்லை. அவர்களைத் துன்புறுத்தாதபடிக்கு தேவன் ராஜாக்களை எச்சரித்தார். தேவன், “நான் தேர்ந்தெடுத்த ஜனங்களுக்குத் தீமை செய்யாதீர்கள். எனது தீர்க்கதரிசிகளுக்கு எந்தத் தீமையும் செய்யாதீர்கள்” என்றார். தேவன் தேசத்தில் பஞ்சம் வரப்பண்ணினார். ஜனங்களுக்கு உண்பதற்குத் தேவையான உணவு இருக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு முன்னே தேவன் யோசேப்பு என்ற மனிதனை அனுப்பினார். யோசேப்பு ஒரு அடிமையாக விற்கப்பட்டான். யோசேப்பின் கால்களை அவர்கள் ஒரு கயிற்றால் கட்டினார்கள். அவன் கழுத்தைச் சுற்றிலும் ஒரு இரும்பு வளையத்தை அணிவித்தார்கள். அவர் சொன்ன காரியங்கள் அப்படியே நிகழும்வரை யோசேப்பு அடிமையாக இருந்தான். யோசேப்பு நேர்மையானவன் என்பதை கர்த்தருடைய செய்தி நிரூபித்தது. எனவே எகிப்திய ராஜா அவனை விடுதலை செய்தான். தேசத்தின் தலைவன் அவனைச் சிறையினின்று விடுவித்தான். அவர் அவனுக்குத் தமது வீட்டின் பொறுப்பைக் கொடுத்தார். அவருக்குச் சொந்தமான அனைத்தையும் யோசேப்பு கண்காணித்து வந்தான். பிற தலைவர்களுக்கு யோசேப்பு ஆணைகள் அளித்தான். யோசேப்பு முதியவர்களுக்குக் கற்பித்தான். பின்பு இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான். யாக்கோபு காமின் நாட்டில் வாழ்ந்தான். யாக்கோபின் குடும்பம் பெருகிற்று. அவர்களின் பகைவர்களைக் காட்டிலும் அவர்கள் பலவான்களானார்கள். எனவே எகிப்தியர்கள் யாக்கோபின் குடும்பத்தைப் பகைக்கத் தொடங்கினார்கள். அவர்களின் அடிமைகளுக்கு எதிரான திட்டங்கள் வகுத்தார்கள். எனவே தேவன் தமது தாசனாகிய மோசேயை அனுப்பினார். தேவன் தேர்ந்தெடுத்த ஆசாரியனாக ஆரோன் இருந்தான். காமின் நாட்டில் பல அதிசயங்களைச் செய்வதற்கு தேவன் மோசேயையும் ஆரோனையும் பயன்படுத்தினார். தேவன் மிகக் கடும் இருளை அனுப்பினார். ஆனால் எகிப்தியர்கள் அவருக்குச் செவி சாய்க்கவில்லை. எனவே தேவன் தண்ணீரை இரத்தமாக்கினார். எல்லா மீன்களும் மடிந்தன. அவர்கள் நாடு தவளைகளால் நிரம்பிற்று. ராஜாவின் படுக்கையறையில் கூட தவளைகள் இருந்தன. தேவன் கட்டளையிட்டார். ஈக்களும் பேன்களும் வந்தன. அவை எங்கும் நிரம்பின. தேவன் கல்மழையைப் பெய்யப்பண்ணினார். நாடு முழுவதையும் மின்னல் பாதித்தது. தேவன் அவர்களது திராட்சைக் கொடிகளையும் அத்திமரங்களையும் அழித்தார். அந்நாட்டின் ஒவ்வொரு மரத்தையும் தேவன் அழித்தார். தேவன் கட்டளையிட்டார், வெட்டுக்கிளிகளும் புல்புழுக்களும் வந்தன. அவை எண்ணமுடியாத அளவு இருந்தன! வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் நாட்டின் எல்லா தாவரங்களையும், வயலின் எல்லா பயிர்களையும் தின்றன. பின்பு தேவன் நாட்டின் முதற்பேறான ஒவ்வொன்றையும் கொன்றார். தேவன் முதலில் பிறந்த குமாரர்களைக் கொன்றார். பின்பு தேவன் தமது ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றார். அவர்கள் பொன்னையும் வெள்ளியையும் எடுத்துச் சென்றனர். தேவனுடைய ஜனங்கள் எவரும் தடுக்கிவிழவில்லை. தேவனுடைய ஜனங்கள் செல்வதைக் கண்டு எகிப்து மகிழ்ந்தது. ஏனெனில் அவர்கள் தேவனுடைய ஜனங்களுக்கு அஞ்சினார்கள். தேவன் தமது மேகத்தை ஒரு போர்வையாகப் பரப்பினார். தமது ஜனங்களுக்கு இரவில் ஒளி தரும்படி ஒரு நெருப்புத்தூணை தேவன் பயன்படுத்தினார். ஜனங்கள் உணவுக்காக வேண்டினார்கள், தேவன் காடைகளைக் கொணர்ந்தார். தேவன் பரலோகத்திலிருந்து மிகுதியான உணவைக் கொடுத்தார். தேவன் கன்மலையைப் பிளந்தார், தண்ணீர் கொப்பளித்து வெளியேறிற்று. பாலைவனத்தில் ஒரு நதி ஓட ஆரம்பித்தது. தேவன் அவரது பரிசுத்த வாக்குறுதியை நினைவுக்கூர்ந்தார். தேவன் அவரது தாசனாகிய ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியை நினைவுக்கூர்ந்தார். தேவன் அவரது ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே வரவழைத்தார். மகிழ்ச்சியான பாடல்களைப் பாடிக்கொண்டு ஜனங்கள் களிப்போடு எகிப்தைவிட்டுப் புறப்பட்டு வந்தார்கள்! பிற ஜனங்கள் வாழ்ந்துகொண்டிருந்த நாட்டை தேவன் தமது ஜனங்களுக்குக் கொடுத்தார். பிற ஜனங்கள் உழைத்துப் பெற்ற பொருட்களை தேவனுடைய ஜனங்கள் பெற்றனர். ஏன் தேவன் இதைச் செய்தார்? அப்போதுதான் அவரது ஜனங்கள் அவரளித்த சட்டங்களுக்குக் கீழ்ப்படிய முடியும். அவர்கள் கவனமாக அவரது போதனைகளுக்குக் கீழ்ப்படிய முடியும்.

சங்கீதம் 105:1-45 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள், அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள். அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள். அவருடைய பரிசுத்த நாமத்தைக் குறித்து மேன்மை பாராட்டுங்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக. கர்த்தரை யும், அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள். அவருடைய தாசனாகிய ஆபிரகாமின் சந்ததியே! அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் புத்திரரே! அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவு கூருங்கள். அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர், அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும். ஆயிரந்தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வாக்கையும், ஆபிரகாமோடே அவர் பண்ணின உடன்படிக்கையையும், அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருக்கிறார். அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், இஸ்ரவேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி: உங்கள் சுதந்தரபாகமான கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார். அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத் தொகைக்குட்பட்ட சொற்ப ஜனங்களும் பரதேசிகளுமாயிருந்தார்கள். அவர்கள் ஒரு ஜனத்தைவிட்டு மறு ஜனத்தண்டைக்கும், ஒரு ராஜ்யத்தைவிட்டு மறு தேசத்தாரண்டைக்கும் போனார்கள். அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்கள் நிமித்தம் ராஜாக்களைக் கடிந்துகொண்டு: நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார். அவர் தேசத்திலே பஞ்சத்தை வருவித்து, ஆகாரமென்னும் ஆதரவு கோலை முற்றிலும் முறித்தார். அவர்களுக்கு முன்னாலே ஒரு புருஷனை அனுப்பினார்; யோசேப்பு சிறையாக விற்கப்பட்டான். அவன் கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள்; அவன் பிராணன் இரும்பில் அடைபட்டிருந்தது. கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது. ராஜா ஆள் அனுப்பி, அவனைக் கட்டவிழ்க்கச்சொன்னான்; ஜனங்களின் அதிபதி அவனை விடுதலைபண்ணினான். தன் பிரபுக்களை அவன் மனதின்படி கட்டவும், தன் மூப்பர்களை ஞானிகளாக்கவும், அவனைத் தன் வீட்டுக்கு ஆண்டவனும், தன் ஆஸ்திக்கெல்லாம் அதிபதியுமாக்கினான். அப்பொழுது இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்; யாக்கோபு காமின் தேசத்திலே பரதேசியாயிருந்தான். அவர் தம்முடைய ஜனங்களை மிகவும் பலுகப்பண்ணி, அவர்களுடைய சத்துருக்களைப் பார்க்கிலும் அவர்களைப் பலவான்களாக்கினார். தம்முடைய ஜனங்களைப் பகைக்கவும், தம்முடைய ஊழியக்காரரை வஞ்சனையாய் நடத்தவும், அவர்களுடைய இருதயத்தை மாற்றினார். தம்முடைய தாசனாகிய மோசேயையும் தாம் தெரிந்துகொண்ட ஆரோனையும் அனுப்பினார். இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும், காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள். அவர் இருளை அனுப்பி, அந்தகாரத்தை உண்டாக்கினார்; அவருடைய வார்த்தைகளை எதிர்ப்பாரில்லை. அவர்களுடைய தண்ணீர்களை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய மச்சங்களைச் சாகப்பண்ணினார். அவர்களுடைய தேசம் தவளைகளைத் திரளாய்ப் பிறப்பித்தது; அவர்களுடைய ராஜாக்களின் அறைவீடுகளிலும் அவைகள் வந்தது. அவர் கட்டளையிட, அவர்களுடைய எல்லைகளிலெங்கும் வண்டுகளும், பேன்களும் வந்தது. அவர்களுடைய மழைகளைக் கல் மழையாக்கி, அவர்களுடைய தேசத்திலே ஜுவாலிக்கிற அக்கினியை வரப் பண்ணினார். அவர்களுடைய திராட்சச் செடிகளையும் அத்திமரங்களையும் அழித்து, அவர்களுடைய எல்லைகளிலுள்ள மரங்களையும் முறித்தார். அவர் கட்டளையிட, எண்ணிமுடியாத வெட்டுக்கிளிகளும், பச்சைப்புழுக்களும் வந்து, அவர்களுடைய தேசத்திலுள்ள சகல பூண்டுகளையும் அரித்து, அவர்களுடைய நலத்தின் கனியைத் தின்று போட்டது. அவர்களுடைய தேசத்திலே தலைச்சன்கள் அனைத்தையும், அவர்களுடைய பெலனில் முதற்பெலனான யாவரையும் சங்கரித்தார். அப்பொழுது அவர்களை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படப்பண்ணினார்; அவர்கள் கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை. எகிப்தியர் அவர்களுக்குப் பயந்ததினால், அவர்கள் புறப்பட்டபோது மகிழ்ந்தார்கள். அவர் மேகத்தை மறைவுக்காக விரித்து, இரவை வெளிச்சமாக்குகிறதற்காக அக்கினியையும் தந்தார். கேட்டார்கள், அவர் காடைகளை வரப்பண்ணினார்; வான அப்பத்தினாலும் அவர்களைத் திருப்தியாக்கினார். கன்மலையைத் திறந்தார், தண்ணீர்கள் புறப்பட்டு, வறண்ட வெளிகளில் ஆறாய் ஓடிற்று. அவர் தம்முடைய பரிசுத்த வாக்குத்தத்தத்தையும், தம்முடைய தாசனாகிய ஆபிரகாமையும் நினைத்து, தம்முடைய ஜனத்தைக் களிப்போடும், தாம் தெரிந்துகொண்டவர்களைக் கெம்பீர சத்தத்தோடும் புறப்படப்பண்ணி, தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும், தமது நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படிக்கும், அவர்களுக்குப் புறஜாதிகளுடைய தேசங்களைக் கொடுத்தார்; அந்நிய ஜனங்களுடைய பிரயாசத்தின் பலனைச் சுதந்தரித்துக்கொண்டார்கள். அல்லேலூயா.

சங்கீதம் 105:1-45

சங்கீதம் 105:1-45 TAOVBSIசங்கீதம் 105:1-45 TAOVBSIசங்கீதம் 105:1-45 TAOVBSI