சங்கீதம் 101:1-8

சங்கீதம் 101:1-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவாவே, நான் உமது அன்பையும் நீதியையும் குறித்துப் பாடுவேன்; உமக்கே நான் துதி பாடுவேன். நான் குற்றமற்ற வாழ்க்கையை வாழ கவனமாயிருப்பேன்; நீர் எப்பொழுது என்னிடத்தில் வருவீர்? நான் குற்றமற்ற இருதயத்துடன் என் வீட்டின் விவகாரங்களை நடத்துவேன். தீங்கான செயல்களை நான் என் கண்முன் வைக்கமாட்டேன். உண்மையற்ற மனிதரின் செயல்களை நான் வெறுக்கிறேன்; அவைகள் என்னைப் பற்றிக்கொள்ளாது. வஞ்சக இருதயமுடைய மனிதரை என்னைவிட்டுத் தூரமாய் விலக்கிவைப்பேன்; நான் தீமையோடு எவ்வித தொடர்பும் வைக்கமாட்டேன். தன் அயலாரை இரகசியமாய் அவதூறு செய்கிற மனிதரை நான் தண்டிப்பேன்; கர்வமான கண்களையும் பெருமையான இருதயத்தையும் கொண்ட மனிதரை நான் சகிக்கமாட்டேன். நாட்டில் உண்மையுள்ளவர்களாய் இருப்போர்மீது என் கண்கள் இருக்கும், அவர்கள் என்னோடு வாழ்வார்கள்; குற்றமற்றவனாய் நடப்பவர்களே எனக்கு ஊழியம் செய்வார்கள். வஞ்சனை செய்யும் யாரும் என் வீட்டில் வாழமாட்டார்கள்; பொய்ப் பேசுபவர் யாரும் என் சமுகத்தில் நிற்கவுமாட்டார்கள். நான் நாட்டிலுள்ள கொடியவர்கள் எல்லோரையும் காலைதோறும் தண்டிப்பேன்; தீங்குசெய்யும் ஒவ்வொருவரையும் யெகோவாவினுடைய நகரத்திலிருந்து அகற்றிவிடுவேன்.

சங்கீதம் 101:1-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இரக்கத்தையும், நியாயத்தையும் குறித்துப் பாடுவேன்; யெகோவாவே, உம்மை புகழ்ந்துபாடுவேன். உத்தமமான வழியிலே நேர்மையாக நடப்பேன்; எப்பொழுது என்னிடத்தில் வருவீர்! என்னுடைய வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன். தீங்கான காரியத்தை என்னுடைய கண்முன் வைக்கமாட்டேன்; வழி விலகுகிறவர்களின் செயல்களை வெறுக்கிறேன்; அது என்னைப் பற்றாது. மாறுபாடான மக்கள் என்னைவிட்டு விலகவேண்டும்; பொல்லாதவனை ஏற்கமாட்டேன். பிறனை இரகசியமாக அவதூறுசெய்கிறவனை அழிப்பேன்; பெருமைக் கண்ணனையும் திமிர்பிடித்த மனப்பான்மை உள்ளவனையும் பொறுக்கமாட்டேன். தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடு குடியிருக்கும்படி என்னுடைய கண்கள் அவர்கள்மேல் நோக்கமாக இருக்கும்; உத்தமமான வழியில் நடக்கிறவன் எனக்கு ஊழியம்செய்வான். கபடுசெய்கிறவன் என்னுடைய வீட்டுக்குள் இருப்பதில்லை; பொய்சொல்லுகிறவன் என்னுடைய கண்முன் நிலைப்பதில்லை. அக்கிரமக்காரர்கள் ஒருவரும் யெகோவாவுடைய நகரத்தில் இல்லாதபடி வேர் அறுக்கப்பட்டுபோக, தேசத்திலுள்ள அக்கிரமக்காரர்கள் அனைவரையும் அதிகாலமே அழிப்பேன்.

சங்கீதம் 101:1-8 பரிசுத்த பைபிள் (TAERV)

நான் அன்பையும் நியாயத்தையும் பற்றிப் பாடுவேன். கர்த்தாவே, நான் உம்மை நோக்கிப் பாடுவேன். நான் கவனமாகப் பரிசுத்த வாழ்க்கை வாழுவேன். என் வீட்டில் நான் பரிசுத்த வாழ்க்கை வாழுவேன். கர்த்தாவே, நீர் எப்போது என்னிடம் வருவீர். என் முன்னால் நான் விக்கிரகங்களை வைக்கமாட்டேன். ஜனங்கள் அப்படி உமக்கு எதிராகத் திரும்புவதை நான் வெறுக்கிறேன். நான் அதைச் செய்யமாட்டேன்! நான் நேர்மையாக இருப்பேன். நான் தீயக் காரியங்களைச் செய்யமாட்டேன். யாராவது ஒருவன் தனது அயலானைக் குறித்து இரகசியமாகத் தீயக் காரியங்களைக் கூறினால் நான் அவனைத் தடுத்துவிடுவேன். நான் பிறரைப் பெருமைப்படவோ, தாங்கள் பிறரை காட்டிலும் சிறந்தவர்கள் என்று எண்ணவோ விடமாட்டேன். நம்பத்தக்க ஜனங்களைத் தேசம் முழுவதும் தேடிப்பார்ப்பேன். அவர்கள் மட்டுமே எனக்கு சேவைச் செய்ய அனுமதிப்பேன். பரிசுத்த வாழ்க்கை வாழும் ஜனங்கள் மட்டுமே என் பணியாட்களாக முடியும். பொய்யர்கள் என் வீட்டில் வாழ நான் அனுமதிக்கமாட்டேன். என் அருகே பொய்யர்கள் தங்கவும் அனுமதியேன். இந்நாட்டில் வாழும் தீயோரை நான் எப்போதும் அழிப்பேன். கர்த்தருடைய நகரை விட்டுத் தீயோர் நீங்குமாறு நான் வற்புறுத்துவேன்.

சங்கீதம் 101:1-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இரக்கத்தையும் நியாயத்தையும் குறித்துப் பாடுவேன்; கர்த்தாவே, உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன். உத்தமமான வழியிலே விவேகமாய் நடப்பேன்; எப்பொழுது என்னிடத்தில் வருவீர்! என் வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன். தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன்; வழி விலகுகிறவர்களின் செய்கையை வெறுக்கிறேன்; அது என்னைப் பற்றாது. மாறுபாடான இருதயம் என்னை விட்டு அகலவேண்டும்; பொல்லாதவனை அறியமாட்டேன். பிறனை இரகசியமாய் அவதூறுபண்ணுகிறவனைச் சங்கரிப்பேன்; மேட்டிமைக் கண்ணனையும் பெருநெஞ்சுள்ளவனையும் பொறுக்கமாட்டேன். தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடே வாசம்பண்ணும்படி என் கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கும்; உத்தமமான வழியில் நடக்கிறவன் என்னைச் சேவிப்பான். கபடுசெய்கிறவன் என் வீட்டுக்குள் இருப்பதில்லை; பொய்சொல்லுகிறவன் என் கண்முன் நிலைப்பதில்லை. அக்கிரமக்காரர் ஒருவரும் கர்த்தருடைய நகரத்தில் இராதபடி வேர் அறுப்புண்டுபோக, தேசத்திலுள்ள அக்கிரமக்காரர் யாவரையும் அதிகாலமே சங்கரிப்பேன்.