நீதிமொழிகள் 23:10-18
நீதிமொழிகள் 23:10-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பூர்வகால எல்லைக் கல்லை நகர்த்தாதே; தந்தையற்றவர்களின் நிலங்களை கொஞ்சம் கொஞ்சமாக அபகரித்துக்கொள்ளாதே. ஏனெனில் அவர்களை பாதுகாக்கிறவர் வல்லவர்; அவர் உனக்கெதிராக அவர்கள் சார்பாக வழக்காடுவார். நீ அறிவுறுத்தலுக்கு உன் இருதயத்தைச் சாய்; அறிவுள்ள வார்த்தைகளுக்கு செவிகொடு. பிள்ளையைத் தண்டித்துத் திருத்தாமல் விடாதே; அவர்களைப் பிரம்பினால் தண்டித்தால், அவர்கள் சாகமாட்டார்கள். நீ அவர்களைப் பிரம்பினால் தண்டித்து, அவர்களை மரணத்தினின்று காப்பாற்று. என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், உண்மையில் என் இருதயம் மகிழ்ச்சியடையும்; உனது உதடுகள் நீதியானவற்றைப் பேசும்போது, என் உள்ளம் மகிழும். நீ உன் இருதயத்தைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே, எப்பொழுதும் யெகோவாவுக்குப் பயந்து நடக்க வைராக்கியமாயிரு. அப்பொழுது உனக்கு எதிர்கால நம்பிக்கை நிச்சயமாகவே உண்டு, உனது எதிர்பார்ப்பும் வீண்போகாது.
நீதிமொழிகள் 23:10-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பழைய எல்லைக்கல்லை மாற்றாதே; திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே. அவர்களுடைய மீட்பர் வல்லவர்; அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார். உன் இருதயத்தைப் புத்திமதிக்கும், உன் காதுகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக. பிள்ளையை தண்டிக்காமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகமாட்டான். நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்திற்கு அவனுடைய ஆத்துமாவைத் தப்புவிப்பாயே. என் மகனே, உன்னுடைய இருதயம் ஞானமுள்ளதாக இருந்தால், என்னிலே என்னுடைய இருதயம் மகிழும். உன் உதடுகள் செம்மையானவைகளைப் பேசினால், என்னுடைய உள்மனம் மகிழும். உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே; நீ நாள்தோறும் யெகோவாவைப் பற்றும் பயத்தோடு இரு. நிச்சயமாகவே முடிவு உண்டு; உன்னுடைய நம்பிக்கை வீண்போகாது.
நீதிமொழிகள் 23:10-18 பரிசுத்த பைபிள் (TAERV)
பழைய சொத்துக்களின் எல்லையை மாற்றாதே. அநாதைகளுக்குரிய நிலத்தை அபகரிக்காதே. கர்த்தர் உனக்கு எதிராக இருப்பார். கர்த்தர் சர்வ வல்லமையுள்ளவர். அந்த அநாதைகளை அவரே பாதுகாக்கிறார். உனது போதகரைக் கவனி, உன்னால் முடிந்தவரை கற்றுக்கொள். தேவைப்படும்பொழுது குழந்தைக்குத் தண்டனை கொடு. அவனைப் பிரம்பால் அடித்தால் அது அவனை அழிக்காது. அவனைப் பிரம்பால் அடிப்பதன் மூலம் அவனது வாழ்க்கையைக் காப்பாற்றிவிடுகிறாய். என் மகனே! நீ அறிவாளியானால், நான் மிகவும் மகிழ்வேன். நீ சரியானவற்றைப் பேசுவதை நான் கேட்டால் என் மனதில் மிகவும் மகிழ்வேன். தீயவர்களைப் பார்த்து பொறாமைப்படாதே. ஆனால் எப்பொழுதும் உறுதியாக கர்த்தருக்கு மரியாதை செலுத்து. எப்பொழுதும் நம்பிக்கைக்கு இடம் உண்டு. உனது நம்பிக்கை வீண்போகாது.
நீதிமொழிகள் 23:10-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே; திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே. அவர்களுடைய மீட்பர் வல்லவர்; அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார். உன் இருதயத்தைப் புத்திமதிக்கும், உன் செவிகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக. பிள்ளையைத் தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான். நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே. என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், என்னிலே என் இருதயம் மகிழும். உன் உதடுகள் செம்மையானவைகளைப் பேசினால், என் உள்ளிந்திரியங்கள் மகிழும். உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமை கொள்ள விடாதே; நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு. நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.