எண்ணாகமம் 2:1-34
எண்ணாகமம் 2:1-34 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும் சொன்னதாவது: “இஸ்ரயேலர் சபைக் கூடாரத்தைச் சுற்றி சற்றுத் தொலைவில் தங்கள் முகாம்களை அமைக்கவேண்டும். ஒவ்வொருவனும் தன்தன் சின்னத்தின்கீழ் குடும்பத்தின் கொடியுடன் இருக்கவேண்டும்.” சூரிய உதயத்தை நோக்கிய கிழக்குப் பக்கத்தில், யூதாவின் முகாம் பிரிவுகள் தங்கள் சின்னத்தின்கீழ் முகாமிடவேண்டும். அம்மினதாபின் மகன் நகசோன், யூதா மக்களின் தலைவன். அவனுடைய பிரிவின் தொகை 74,600 பேர். இசக்காரின் கோத்திரத்தார் அவர்களுக்கு அருகில் முகாமிடவேண்டும். சூவாரின் மகன் நெதனெயேல், இசக்கார் மக்களுக்குத் தலைவன். அவனுடைய பிரிவின் தொகை 54,400 பேர். செபுலோனின் கோத்திரம் அடுத்ததாக இருக்கும். ஏலோனின் மகன் எலியாப், செபுலோன் மக்களுக்குத் தலைவன். அவனுடைய பிரிவின் தொகை 57,400 பேர். யூதாவின் பக்கத்துக்கு அவர்களுடைய பிரிவுகளின்படி நியமிக்கப்பட்ட எல்லா மனிதரும் 1,86,400 பேர். அவர்களே முதலில் புறப்படுவார்கள். தென்புறத்தில் ரூபனின் முகாம் பிரிவுகள், தங்கள் சின்னத்தின்கீழ் இருக்கும். சேதேயூரின் மகன் எலிசூர், ரூபன் மக்களுக்குத் தலைவன். அவனுடைய பிரிவின் தொகை 46,500 பேர். சிமியோன் கோத்திரம் அவர்களை அடுத்து முகாமிடவேண்டும். சூரிஷதாயின் மகன் செலூமியேல் சிமியோன் மக்களுக்குத் தலைவன். அவனுடைய பிரிவின் தொகை 59,300 பேர். காத் கோத்திரம் அடுத்ததாக இருக்கும். தேகுயேலின் மகன் எலியாசாப், காத் மக்களுக்குத் தலைவன். அவனுடைய பிரிவின் தொகை 45,650 பேர். ரூபனுடைய பக்கத்துக்கு அவர்களுடைய பிரிவுகளின்படி நியமிக்கப்பட்ட எல்லா மனிதரும் 1,51,450 பேர். அவர்கள் இரண்டாவதாகப் புறப்படுவார்கள். சபைக் கூடாரமும், லேவியரின் முகாமும் மற்ற முகாம்களுக்கு நடுவிலிருந்து புறப்படும். அவர்கள் தாம் முகாமிட்ட அதே ஒழுங்கின்படி ஒவ்வொருவரும் தன்தன் சின்னத்தின் கீழாகப் போவார்கள். மேற்குப் பக்கத்தில் எப்பிராயீமின் முகாமின் பிரிவுகள், தங்கள் கொடியின்கீழ் இருக்கும். அம்மியூதின் மகன் எலிஷாமா, எப்பிராயீம் மக்களுக்குத் தலைவன். அவனுடைய பிரிவின் தொகை 40,500 பேர். மனாசே கோத்திரம் அவர்களுக்கு அடுத்ததாக இருக்கும். பெதாசூரின் மகன் கமாலியேல், மனாசே மக்களுக்குத் தலைவன். அவனுடைய பிரிவின் தொகை 32,200 பேர். பென்யமீன் கோத்திரம் அதற்கு அடுத்ததாக இருக்கும். கீதெயோனின் மகன் அபீதான், பென்யமீன் மக்களுக்குத் தலைவன். அவனுடைய பிரிவின் தொகை 35,400 பேர். எப்பிராயீமின் பக்கத்திற்கு அவர்களுடைய பிரிவுகளின்படி நியமிக்கப்பட்ட எல்லா மனிதரும் 1,08,100 பேர். அவர்கள் மூன்றாவதாகப் புறப்படுவார்கள். வடக்குப் பக்கத்தில் தாண் முகாமின் பிரிவுகள் தங்கள் சின்னத்தின்கீழ் இருக்கும். அம்மிஷதாயின் மகன் அகியேசேர், தாண் மக்களுக்குத் தலைவன். அவனுடைய பிரிவின் தொகை 62,700 பேர். ஆசேர் கோத்திரம் அவர்களை அடுத்ததாக முகாமிடவேண்டும். ஓகிரானின் மகன் பாகியேல், ஆசேர் மக்களுக்குத் தலைவன். அவனுடைய பிரிவின் தொகை 41,500 பேர். நப்தலி கோத்திரம் அடுத்ததாக இருக்கும். ஏனானின் மகன் அகீரா, நப்தலி மக்களுக்குத் தலைவன். அவனுடைய பிரிவின் தொகை 53,400 பேர். தாணின் பக்கத்திற்கு நியமிக்கப்பட்ட மனிதர்களின் மொத்தத்தொகை 1,57,600 பேர். அவர்கள் கடைசியாக தங்கள் கொடிகளின் கீழ் புறப்படுவார்கள். அவரவருடைய குடும்பங்களின்படி கணக்கிடப்பட்ட இஸ்ரயேலர்கள் இவர்களே. அவர்களுடைய பிரிவுகளின்படி முகாம்களில் இருந்த எல்லோருடைய எண்ணிக்கை 6,03,550 பேர். ஆனாலும், யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி, லேவியர் மற்ற இஸ்ரயேலருடன் கணக்கிடப்படவில்லை. அப்படியே யெகோவா மோசேக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் இஸ்ரயேலர் செய்தார்கள். அந்த முறையாக அவர்கள் தங்கள் கொடிகளின் கீழே முகாமிட்டு இருந்தார்கள். அவ்விதமாகவே அவர்கள் போகும்போது ஒவ்வொருவரும் தன் வம்சத்துடனும், குடும்பத்துடனும் புறப்பட்டார்கள்.
எண்ணாகமம் 2:1-34 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி: “இஸ்ரவேல் சந்ததியார்கள் அவரவர் தங்கள் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தைச் சேர்ந்த தங்கள் தங்கள் கொடியருகில் தங்களுடைய கூடாரங்களைப் போட்டு, ஆசரிப்புக் கூடாரத்திற்கு எதிராகச் சுற்றிலும் முகாமிடவேண்டும். யூதாவின் முகாமின் கொடியை உடைய இராணுவங்கள் சூரியன் உதிக்கும் கிழக்குப்புறத்திலே முகாமிடவேண்டும்; அம்மினதாபின் மகனாகிய நகசோன் யூதா சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும். எண்ணப்பட்ட அவனுடைய இராணுவத்தில் இருந்தவர்கள் 74,600 பேர். அவன் அருகே இசக்கார் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; சூவாரின் மகன் நெதனெயேல் இசக்கார் சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும். எண்ணப்பட்ட அவனுடைய இராணுவத்தில் இருந்தவர்கள் 54,400 பேர். அவன் அருகே செபுலோன் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; ஏலோனின் மகனாகிய எலியாப் செபுலோன் சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும். அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 57,400 பேர். எண்ணப்பட்ட யூதாவின் முகாமைச்சேர்ந்தவர்கள் எல்லோரும் தங்களுடைய இராணுவங்களின்படியே 1,86,400 பேர்; இவர்கள் பயணத்தில் முதல் முகாமாகப் போகவேண்டும். “ரூபனுடைய முகாமின் கொடியையுடைய இராணுவங்கள் தென்புறத்தில் முகாமிடவேண்டும்; சேதேயூரின் மகனாகிய எலிசூர் ரூபன் சந்ததியாருக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும். அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 46,500 பேர். அவன் அருகே சிமியோன் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; சூரிஷதாயின் மகனாகிய செலூமியேல் சிமியோன் சந்ததியாருக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும். அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 59,300 பேர். அவன் அருகே காத் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; ரேகுவேலின் மகனாகிய எலியாசாப் காத் சந்ததியாருக்கு படைத்தலைவனாக இருக்கவேண்டும். அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து அறுநூற்று ஐம்பது 45,650 பேர். எண்ணப்பட்ட ரூபனின் முகாமைச்சேர்ந்தவர்கள் எல்லோரும் தங்களுடைய இராணுவங்களின்படியே 1,51,450 பேர்; இவர்கள் பயணத்தில் இரண்டாம் முகாமாகப் போகவேண்டும். “பின்பு ஆசரிப்புக் கூடாரம் லேவியர்களின் இராணுவத்தோடு முகாம்களின் நடுவே பிரயாணப்பட்டுப் போகவேண்டும்; எப்படி முகாமிடுகிறார்களோ, அப்படியே அவரவர் தங்களுடைய வரிசையிலே தங்களுடைய கொடிகளோடு பிரயாணமாகப் போகவேண்டும். “எப்பிராயீமுடைய முகாமின் கொடியையுடைய இராணுவங்கள் மேற்கு புறத்தில் இறங்கவேண்டும், அம்மியூதின் மகனாகிய எலிஷாமா எப்பிராயீமின் சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும். அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 40,500 பேர். அவன் அருகே மனாசே கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; பெதாசூரின் மகனாகிய கமாலியேல் மனாசே சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும். அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 32,200 பேர். அவன் அருகே பென்யமீன் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; கீதெயோனின் மகனாகிய அபீதான் பென்யமீன் சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும். அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 35,400 பேர். எண்ணப்பட்ட எப்பிராயீமின் முகாமைச்சேர்ந்தவர்கள் எல்லோரும் தங்களுடைய இராணுவங்களின்படியே 1,08,100 பேர்; இவர்கள் பயணத்தில் மூன்றாம் முகாமாகப் போகவேண்டும். “தாணுடைய முகாமின் கொடியையுடைய இராணுவங்கள் வடபுறத்தில் இறங்கவேண்டும்; அம்மிஷதாயின் மகனாகிய அகியேசேர் தாண் வம்சத்திற்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும். அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 62,700 பேர். அவன் அருகே ஆசேர் கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; ஓகிரானின் மகனாகிய பாகியேல் ஆசேர் சந்ததிக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும். அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 41,500 பேர். அவன் அருகே நப்தலி கோத்திரத்தார் முகாமிடவேண்டும்; ஏனானின் மகனாகிய அகீரா நப்தலி சந்ததியாருக்குப் படைத்தலைவனாக இருக்கவேண்டும். அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 53,400 பேர். எண்ணப்பட்ட தாணின் முகாமைச்சேர்ந்தவர்கள் எல்லோரும் 1,57,600 பேர்; இவர்கள் தங்களுடைய கொடிகளோடு கடைசியிலும் போகவேண்டும்”. இவர்களே தங்கள் தங்கள் முன்னோர்களின் வம்சத்தின்படி இஸ்ரவேல் மக்களில் எண்ணப்பட்டவர்கள். முகாம்களிலே தங்கள் தங்கள் இராணுவங்களின்படியே எண்ணப்பட்டவர்கள் எல்லோரும் 6,03,550 பேராயிருந்தார்கள். லேவியர்களோ, யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி, இஸ்ரவேல் மக்களுக்குள்ளே எண்ணப்படவில்லை. யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரவேல் மக்கள் செய்து, தங்கள் தங்கள் கொடிகளின்கீழ் முகாமிட்டு, தங்கள் தங்கள் முன்னோர்களின் வம்சங்களின்படியே பயணப்பட்டுப் போனார்கள்.
எண்ணாகமம் 2:1-34 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும், “இஸ்ரவேல் ஜனங்கள் ஆசரிப்புக் கூடாரத்தைச் சுற்றியே, தங்கள் முகாமை அமைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழுவும், தங்களுக்கென்று தனியான கொடியை வைத்துக்கொள்ள வேண்டும். தங்கள் குழுக்கொடியின் அருகிலேயே, ஒவ்வொருவனும் தங்க வேண்டும். “யூதா முகாமின் கொடியானது சூரியன் உதிக்கின்ற, கிழக்குத் திசையில் இருக்க வேண்டும். யூதாவின் கோத்திரம், அக்கொடியின் அருகிலேயே தங்கள் முகாம்களை அமைத்துக்கொள்ள வேண்டும். அம்மினதாபின் குமாரனான நகசோன், யூதாவின் கோத்திரத்துக்குத் தலைவனாக இருப்பான். அவர்கள் குழுவில் 74,600 ஆண்கள் இருந்தனர். “இசக்காரின் கோத்திரம், யூதாவின் கோத்திரத்திற்கு அருகில் தங்கியிருக்க வேண்டும். சூவாரின் குமாரனான நெதனேயேல், இசக்கார் ஜனங்களின் தலைவனாய் இருப்பான். அவனுடைய குழுவில் 54,400 ஆண்கள் இருந்தனர். “செபுலோனின் கோத்திரமானது, யூதாவின் கோத்திரத்துக்கு அருகில் தங்கியிருக்க வேண்டும். ஏலோனின் குமாரனான எலியாப், செபுலோன் ஜனங்களின் தலைவனாவான். அவர்கள் குழுவில் 57,400 ஆண்கள் இருந்தனர். “யூதாவின் முகாமில் மொத்தம் 1,86,400 ஆண்கள் இருந்தனர். இவர்கள் அனைவரும், தங்கள் கோத்திரங்களின்படி பிரிக்கப்பட்டார்கள். ஜனங்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போகும்போது, யூதாவின் கோத்திரமே முதலில் செல்லும். “ரூபனுடைய முகாமின் கொடியைக் கொண்ட படைகள், பரிசுத்தக் கூடாரத்தின் தென்பகுதியில் இருக்கும். ஒவ்வொரு குழுவும் இக்கொடியின் அருகில் இருக்கும். சேதேயூரின் குமாரனான எலிசூர், ரூபன் ஜனங்களின் தலைவனாக இருப்பான். இக்குழுவில் 46,500 ஆண்கள் இருந்தனர். “சிமியோனின் கோத்திரம், ரூபனின் கோத்திரத்தின் அருகில் இருக்கும். சூரிஷதாவின் குமாரனான செலூமியேல், சிமியோன் ஜனங்களின் தலைவனாக இருப்பான். இக்குழுவில் 59,300 ஆண்கள் இருந்தனர். “காத்தின் கோத்திரமும், ரூபனின் கோத்திரத்தின் அருகில் இருக்கும். தேகுவேலின் குமாரனாகிய எலியாசாப், காத் ஜனங்களின் தலைவனாயிருப்பான். இக்குழுவில் 45,650 ஆண்கள் இருந்தனர். “ரூபனின் முகாமில் எல்லா கோத்திரங்களிலிருந்தும் மொத்தம் 1,51,450 ஆண்கள் இருந்தனர். ஜனங்கள் ஓரிடத்திலிருந்து, இன்னொரு இடத்திற்குப் போகும்போது இக்குழு இரண்டாவதாகச் செல்லும். “ஜனங்கள் பயணம் செய்யும்போது, அடுத்ததாக லேவியரின் குழு செல்ல வேண்டும். ஆசாரிப்புக் கூடாரமானது அவர்களுடைய எல்லா முகாம்களுக்கும் நடுவே இருக்க வேண்டும். அவர்கள் செல்லுகிற வரிசைப்படியே தங்கள் முகாம்களையும் அமைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் குடும்பக் கொடிகளோடுதான் பயணம் செய்யவேண்டும். “எப்பிராயீமுடைய முகாமின் கொடியையுடைய படைகள் மேற்கு பக்கத்தில் தங்கள் முகாமை அமைத்துக்கொள்ள வேண்டும். அம்மியூதின் குமாரனான எலிஷாமா எப்பிராயீமின் ஜனங்களுக்குத் தலைவனாக இருப்பான். இக்குழுவில் மொத்தம் 40,500 ஆண்கள் இருந்தனர். “மனாசேயின் கோத்திரமானது எப்பிராயீமுடைய குடும்பத்துக்கு அருகில் தங்க வேண்டும். பெதாசூரின் குமாரனான கமாலியேல், மனாசே ஜனங்களுக்குத் தலைவனாக இருப்பான். இக்குழுவில் மொத்தம் 32,200 ஆண்கள் இருந்தனர். “பென்யமீனின் கோத்திரமும் எப்பிராயீமுடைய குடும்பத்துக்கு அருகில் தங்க வேண்டும். கீதெயோனின் குமாரனாகிய அபீதான் பென்யமீன் ஜனங்களுக்குத் தலைவனாக இருப்பான். அக்குழுவில் உள்ள ஆண்களின் எண்ணிக்கை 35,400 ஆகும். “எப்பிராயீமின் குழு தங்கி இருக்கும் இடத்தில், மொத்தத்தில் 1,08,100 ஆண்கள் இருந்தார்கள். ஜனங்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போகும்போது, மூன்றாவதாக இவர்கள் செல்ல வேண்டும். “தாண் குழுவின் கொடியானது வடக்குப் புறத்தில் இருக்க வேண்டும். தாணின் கோத்திரங்கள், அங்கே தங்கள் முகாம்களை அமைத்திருப்பார்கள். அம்மிஷதாயின் குமாரனான அகியேசேர், தாண் ஜனங்களின் தலைவனாக இருப்பான். இந்தக் குழுவில் 62,700 ஆண்கள் இருந்தனர். “ஆசேரின் கோத்திரத்தினர் தாணின் கோத்திரத்தினரை அடுத்து இருப்பார்கள். ஓகிரானின் குமாரனான பாகியேல், ஆசேர் ஜனங்களின் தலைவனாக இருப்பான். இக்குழுவில், 41,500 ஆண்கள் இருந்தனர். “நப்தலியின் கோத்திரத்தினரும் தாணின் கோத்திரத்தினருக்கு அடுத்துக் கூடாரமிட்டு இருப்பார்கள். ஏனானின் குமாரனாகிய அகீரா, நப்தலி ஜனங்களின் தலைவனாக இருப்பான். இக்குழுவில் 53,400 ஆண்கள் இருந்தனர். “தாணின் குழு தங்கி இருக்கும் இடத்தில் மொத்தத்தில் 1,57,600 ஆண்கள் இருந்தார்கள். மக்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லும்போது, கடைசியில் செல்ல வேண்டியவர்கள் இவர்களே, ஒவ்வொருவரும் தங்கள் குடும்பக் கொடிகளோடு இருக்க வேண்டும்” என்று கூறினார். இவர்கள்தான் இஸ்ரவேல் ஜனங்கள். அவர்கள் குடும்பவாரியாகக் கணக்கிடப்பட்டனர். எல்லா முகாம்களிலும் இருந்த மொத்த இஸ்ரவேல் ஆண்களின் எண்ணிக்கை 6,03,550 ஆகும். மோசே கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து, லேவியர்களை மற்ற இஸ்ரவேல் ஜனங்களோடு சேர்த்து எண்ணவில்லை. கர்த்தர் மோசேயிடம் சொன்னபடி, இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாவற்றையும் செய்து முடித்தனர். ஒவ்வொரு குழுவும் தமது சொந்தக் கொடியின் கீழ் தங்கி இருந்தது. அனைவரும் தங்கள் குடும்பம், மற்றும் கோத்திரத்தின்படியே பிரயாணப்பட்டு போனார்கள்.
எண்ணாகமம் 2:1-34 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இஸ்ரவேல் புத்திரர் அவரவர் தங்கள் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின் விருதாகிய தங்கள் தங்கள் கொடியண்டையிலே தங்கள் கூடாரங்களைப் போட்டு, ஆசரிப்புக் கூடாரத்திற்கு எதிராகச் சுற்றிலும் பாளயமிறங்கக்கடவர்கள். யூதாவின் பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் சூரியன் உதிக்கும் கீழ்ப்புறத்திலே பாளயமிறங்கவேண்டும்; அம்மினதாபின் குமாரனாகிய நகசோன் யூதா சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். எண்ணப்பட்ட அவனுடைய சேனை எழுபத்துநாலாயிரத்து அறுநூறுபேர். அவன் அருகே இசக்கார் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; சூவாரின் குமாரன் நெதனெயேல் இசக்கார் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். எண்ணப்பட்ட அவனுடைய சேனை ஐம்பத்து நாலாயிரத்து நானூறுபேர். அவன் அருகே செபுலோன் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; ஏலோனின் குமாரனாகிய எலியாப் செபுலோன் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தேழாயிரத்து நானூறுபேர். எண்ணப்பட்ட யூதாவின் பாளயத்தார் எல்லாரும் தங்கள் சேனைகளின்படியே இலட்சத்து எண்பத்து ஆறாயிரத்து நானூறுபேர்; இவர்கள் பிரயாணத்திலே முதற்பாளயமாய்ப் போகக்கடவர்கள். ரூபனுடைய பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் தென்புறத்தில் பாளயமிறங்கவேண்டும்; சேதேயூரின் குமாரனாகிய எலிசூர் ரூபன் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறுபேர். அவன் அருகே சிமியோன் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; சூரிஷதாயின் குமாரனாகிய செலூமியேல் சிமியோன் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தொன்பதினாயிரத்து முந்நூறுபேர். அவன் அருகே காத் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; தேகுவேலின் குமாரனாகிய எலியாசாப் காத் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து அறுநூற்று ஐம்பதுபேர். எண்ணப்பட்ட ரூபனின் பாளயத்தார் எல்லாரும் தங்கள் சேனைகளின்படியே இலட்சத்து ஐம்பத்து ஓராயிரத்து நானூற்று ஐம்பதுபேர்; இவர்கள் பிரயாணத்தில் இரண்டாம் பாளயமாய்ப் போகக்கடவர்கள். பின்பு ஆசரிப்புக்கூடாரம் லேவியரின் சேனையோடே பாளயங்களின் நடுவே பிரயாணப்பட்டுப் போகவேண்டும்; எப்படிப் பாளயமிறங்குகிறார்களோ, அப்படியே அவரவர் தங்கள் வரிசையிலே தங்கள் கொடிகளோடே பிரயாணமாய்ப் போகக்கடவர்கள். எப்பிராயீமுடைய பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் மேல்புறத்தில் இறங்கவேண்டும், அம்மியூதின் குமாரனாகிய எலிஷாமா எப்பிராயீமின் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பதினாயிரத்து ஐந்நூறுபேர். அவன் அருகே மனாசே கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; பெதாசூரின் குமாரனாகிய கமாலியேல் மனாசே சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் முப்பத்தீராயிரத்து இருநூறுபேர். அவன் அருகே பென்யமீன் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; கீதெயோனின் குமாரனாகிய அபீதான் பென்யமீன் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் முப்பத்தையாயிரத்து நானூறுபேர். எண்ணப்பட்ட எப்பிராயீமின் பாளயத்தார் எல்லாரும் தங்கள் சேனைகளின்படியே இலட்சத்து எண்ணாயிரத்து நூறுபேர்; இவர்கள் பிரயாணத்தில் மூன்றாம் பாளயமாய்ப் போகக்கடவர்கள். தாணுடைய பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் வடபுறத்தில் இறங்கவேண்டும்; அம்மிஷதாயின் குமாரனாகிய அகியேசேர் தாண் வம்சத்திற்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் அறுபத்தீராயிரத்து எழுநூறுபேர். அவன் அருகே ஆசேர் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; ஓகிரானின் குமாரனாகிய பாகியேல் ஆசேர் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தோராயிரத்து ஐந்நூறுபேர். அவன் அருகே நப்தலி கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; ஏனானின் குமாரனாகிய அகீரா நப்தலி சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்து மூவாயிரத்து நானூறுபேர். எண்ணப்பட்ட தாணின் பாளயத்தார் எல்லாரும் இலட்சத்து ஐம்பத்தேழாயிரத்து அறுநூறுபேர்; இவர்கள் தங்கள் கொடிகளோடே பின்பாளயமாய்ப் போகக்கடவர்கள். இவர்களே தங்கள் தங்கள் பிதாக்களின் வம்சத்தின்படி இஸ்ரவேல் புத்திரரில் எண்ணப்பட்டவர்கள். பாளயங்களிலே தங்கள் தங்கள் சேனைகளின்படியே எண்ணப்பட்டவர்கள் எல்லாரும் ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேராயிருந்தார்கள். லேவியரோ, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி, இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே எண்ணப்படவில்லை. கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் செய்து, தங்கள் தங்கள் கொடிகளின்கீழ் பாளயமிறங்கி, தங்கள் தங்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படியே பிரயாணப்பட்டுப் போனார்கள்.