எரேமியா 42:1-22

எரேமியா 42:1-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது இராணுவ அதிகாரிகள் எல்லோரும் கரேயாவின் மகன் யோகனான், ஓசாயாவின் மகன் யெசனியா மற்றும் சிறியோர், பெரியோர் உட்பட எல்லா மக்களும், இறைவாக்கினன் எரேமியாவிடம் வந்தார்கள். அவர்கள் அவனிடம், “தயவுசெய்து எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டு, இங்கு மீதியாயிருக்கும் எல்லோருக்காகவும் உன் இறைவனாகிய யெகோவாவிடம் மன்றாடு. ஏனெனில் நீ இப்பொழுது பார்க்கிறபடி, ஒருகாலத்தில் நாங்கள் அநேகராயிருந்தோம். இப்பொழுதோ சிலர் மட்டுமே மீதியாயிருக்கிறோம். நாங்கள் எங்கே போகவேண்டும், என்ன செய்யவேண்டும் என்பதை உன் இறைவனாகிய யெகோவா எங்களுக்குச் சொல்லும்படி அவரிடம் மன்றாடு” என்று சொன்னார்கள். அதற்கு இறைவாக்கினன் எரேமியா, “நீங்கள் சொன்னதை நான் கேட்டேன். நீங்கள் கேட்டுக்கொண்டபடியே, உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் நிச்சயமாக நான் மன்றாடுவேன். யெகோவா சொல்லும் எல்லாவற்றையும் ஒன்றும் மறைக்காமல் உங்களுக்குச் சொல்வேன்” என்றான். அப்பொழுது அவர்கள் எரேமியாவிடம், “உம்முடைய இறைவனாகிய யெகோவா எங்களிடம் கூறும்படி, உமக்கு எவைகளைச் சொல்லி அனுப்புகிறாரோ, அவைகளின்படியெல்லாம் நாங்கள் செய்யாதே போனால், யெகோவா எங்களுக்கெதிராக உண்மையும், நம்பத்தகுந்த சாட்சியுமாய் இருப்பாராக. அவை சாதகமானவையோ, சாதகமில்லாதவையோ, எதுவானாலும் உம்மை அனுப்புகிற நாங்கள் எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படிவோம். நாங்கள் எங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு கீழ்ப்படிவதால் இவை நமக்கு நன்மையாகவே முடியும்” என்றார்கள். பத்து நாட்களின்பின் யெகோவாவின் வார்த்தை எரேமியாவுக்கு வந்தது. அப்பொழுது அவன் கரேயாவின் மகன் யோகனானையும், அவனுடன்கூட இருந்த இராணுவத் தளபதிகளையும், சிறியவர்களும், பெரியவர்களுமான யாவரையும் ஒன்றாய் வரும்படி அழைத்தான். அவன் அவர்களிடம், “நீங்கள் உங்கள் விண்ணப்பத்தை, இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்குமுன் கொண்டுபோகும்படி என்னை அனுப்பினீர்கள். அவர் சொல்வதாவது: ‘நீங்கள் தொடர்ந்து யூதாவிலேயே தங்கியிருப்பீர்களானால், நான் உங்களைக் கட்டியெழுப்புவேன்; இடித்து வீழ்த்தமாட்டேன். உங்களை நாட்டுவேன்; பிடுங்கி எறியமாட்டேன். ஏனெனில் நான் உங்கள்மீது வரப்பண்ணின பேராபத்தைக் குறித்து வருந்துகிறேன். நீங்கள் இப்பொழுது பயப்படுகிற, பாபிலோன் அரசனைக் குறித்துப் பயப்படவேண்டாம்; அவனுக்கு அஞ்சவும் வேண்டாம் என்று யெகோவா அறிவிக்கிறார். ஏனெனில் நான் உங்களுடனேகூட இருக்கிறேன். நான் உங்களைக் காப்பாற்றி உங்களை அவனுடைய கையிலிருந்து மீட்பேன். அவன் உங்களில் இரக்கங்கொண்டு, உங்களை உங்கள் நாட்டிலேயே திரும்பவும் குடியமர்த்தும்படி, நான் உங்களுக்கு இரக்கம் காட்டுவேன்.’ “ஆயினும் நீங்கள், ‘நாங்கள் இந்த நாட்டில் தங்கியிருக்கமாட்டோம்’ என்று சொல்லி உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போவீர்களானால், ‘நாம் எகிப்திற்குப்போய் வாழ்வோம்; அங்கே யுத்தத்தைக் காணவோ, எக்காள சத்தத்தைக் கேட்கவோ, அப்பமின்றிப் பசியாயிருக்கவோமாட்டோம்’ என்று சொல்வீர்களானால், யூதாவில் மீந்திருக்கும் மக்களே, யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்; இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: ‘நீங்கள் எகிப்திற்குப்போய் அங்கே குடியிருக்கத் தீர்மானித்திருப்பீர்களானால், நீங்கள் பயப்படும் வாள் அங்கே உங்களை மேற்கொள்ளும். நீங்கள் பயப்படுகிற பஞ்சம் எகிப்தில் உங்களைத் தொடர்ந்து வரும். அங்கேயே நீங்கள் இறந்துபோவீர்கள். உண்மையிலேயே எகிப்திற்குப்போய் அங்கே குடியிருப்பதற்குத் தீர்மானித்திருக்கிறவர்கள் அங்கே வாளினாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் சாவார்கள். நான் அவர்கள்மீது கொண்டுவரப்போகும் பேராபத்துக்கு அவர்களில் ஒருவனாவது தப்புவதுமில்லை; மீதியாயிருப்பதுமில்லை.’ இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வதாவது: ‘எருசலேமில் வாழ்ந்தவர்கள் மீது என் கோபமும், கடுங்கோபமும் ஊற்றப்பட்டதுபோல, நீங்களும் எகிப்திற்குப் போகும்போது என் கடுங்கோபம் உங்கள்மீது ஊற்றப்படும். நீங்கள் சாபத்திற்கும், பயங்கரத்திற்கும், கண்டிப்புக்கும், அவமானத்திற்கும் ஆளாவீர்கள். இந்த இடத்தை நீங்கள் இனி ஒருபோதும் காணமாட்டீர்கள்.’ “யூதாவில் மீதியாயிருப்பவர்களே, யெகோவா உங்களிடம், ‘எகிப்திற்குப் போகவேண்டாம்’ என்று கூறியிருக்கிறார். இதை நிச்சயமாய் அறிந்துகொள்ளுங்கள். இதுபற்றி இன்று நான் உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில் நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் என்னை அனுப்பி, ‘எங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் எங்களுக்காக மன்றாடும். அவர் எதைக் கூறுகிறாரோ, அதை எங்களிடம் கூறும். நாங்கள் அதைச் செய்வோம்’ என்றெல்லாம் கூறியது ஒரு பெரும் பிழையாகிவிட்டது. நான் இன்று உங்களுக்கு அவைகளைச் சொல்லியிருக்கிறேன். ஆனாலும் உங்கள் இறைவனாகிய யெகோவா என்னை உங்களிடம் அனுப்பிச் சொன்ன எல்லாவற்றிற்கும் இன்னும் நீங்கள் கீழ்ப்படியவில்லை. ஆகவே இதை இப்பொழுது நிச்சமாய் அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் போய்க் குடியிருக்க விரும்பும் இடத்தில் வாளாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் சாவீர்கள் என்கிறார்” என்றான்.

எரேமியா 42:1-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது எல்லா இராணுவச்சேர்வைக்காரரும், கரேயாவின் மகனாகிய யோகனானும், ஓசாயாவின் மகனாகிய யெசனியாவும், சிறியோர்முதல் பெரியோர்வரையுள்ள எல்லா மக்களும் சேர்ந்துவந்து, தீர்க்கதரிசியாகிய எரேமியாவை நோக்கி: உம்முடைய தேவனாகிய யெகோவா நாங்கள் நடக்கவேண்டிய வழியையும், செய்யவேண்டிய காரியத்தையும் எங்களுக்குத் தெரிவிப்பதற்காக, நீர் எங்கள் விண்ணப்பத்திற்கு இடங்கொடுத்து, மீதியாயிருக்கிற இந்த எல்லா மக்களாகிய எங்களுக்காக உம்முடைய தேவனாகிய யெகோவாவை நோக்கி ஜெபம்செய்யும். உம்முடைய கண்கள் எங்களைக் காண்கிறபடியே திரளான மக்களில் கொஞ்சம் நபர்களே மீதியாயிருக்கிறோம் என்றார்கள். அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி அவர்களை நோக்கி: நீங்கள் சொன்னதைக் கேட்டேன்; இதோ, உங்கள் வார்த்தையின்படியே உங்கள் தேவனாகிய யெகோவாவை நோக்கி ஜெபம்செய்வேன்; யெகோவா உங்களுக்கு மறுஉத்திரவாகச் சொல்லும் எல்லா வார்த்தைகளையும் நான் உங்களுக்கு ஒன்றையும் மறைக்காமல் அறிவிப்பேன் என்றான். அப்பொழுது அவர்கள் எரேமியாவை நோக்கி: உம்முடைய தேவனாகிய யெகோவா உம்மைக்கொண்டு எங்களுக்குச் சொல்லியனுப்பும் எல்லா வார்த்தைகளின்படியும் நாங்கள் செய்யாவிட்டால், யெகோவா நமக்கு நடுவே சத்தியமும் உண்மையுமான சாட்சியாயிருப்பாராக. அது நன்மையானாலும் தீமையானாலும் சரி, எங்கள் தேவனாகிய யெகோவாவின் சத்தத்திற்கு நாங்கள் கீழ்ப்படிவதினால் எங்களுக்கு நன்மையுண்டாக நாங்கள் உம்மை அனுப்புகிற எங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து நடப்போம் என்றார்கள். பத்துநாள் சென்றபின்பு, யெகோவாவுடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டானது. அப்பொழுது அவன், கரேயாவின் மகனாகிய யோகனானையும், அவனுடன் இருந்த எல்லாப் போர்வீரர்களையும், சிறியோர்முதல் பெரியோர்வரை உண்டான எல்லா மக்களையும் அழைத்து, அவர்களை நோக்கி: உங்களுக்காக விண்ணப்பம் செய்வதற்கு நீங்கள் என்னை அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் இந்தத் தேசத்தில் தங்கியிருந்தால், நான் உங்களைக் கட்டுவேன், உங்களை இடிக்கமாட்டேன்; உங்களை நாட்டுவேன், உங்களைப் பிடுங்கமாட்டேன்; நான் உங்களுக்குச் செய்திருக்கிற தீங்குக்கு மனம் வருந்தினேன். நீங்கள் பயப்படுகிற பாபிலோன் ராஜாவுக்குப் பயப்படவேண்டாம், அவனுக்குப் பயப்படாதிருப்பீர்களாக என்று யெகோவா சொல்லுகிறார், உங்களைக் காப்பாற்றுவதற்காகவும், உங்களை அவன் கைக்கு விடுவிப்பதற்காகவும் நான் உங்களுடன் இருந்து, அவன் உங்களுக்கு இரங்குகிறதற்கும், உங்கள் சொந்ததேசத்திற்கு உங்களைத் திரும்பிவரச்செய்கிறதற்கும் உங்களுக்கு இரக்கம் செய்வேன். நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்தைக் கேட்காமல், நாங்கள் இந்தத் தேசத்தில் இருக்கிறதில்லையென்றும், நாங்கள் போரைக் காணாததும், எக்காள சத்தத்தைக் கேளாததும், உணவு குறைவினால் பட்டினியாக இராததுமான எகிப்து தேசத்துக்கே போய், அங்கே தங்கியிருப்போம் என்றும் சொல்வீர்களேயாகில், யூதாவில் மீந்திருக்கிறவர்களே, அதைக்குறித்து உண்டான யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்: நீங்கள் எகிப்திற்குப் போக உங்கள் முகங்களைத் திருப்பி, அங்கே தங்கப்போவீர்களானால், நீங்கள் பயப்படுகிற பட்டயம் எகிப்து தேசத்தில் உங்களைப் பிடிக்கும்; நீங்கள் சந்தேகப்படுகிற பஞ்சம் எகிப்தில் உங்களைத் தொடர்ந்துவரும். அங்கே இறப்பீர்கள். எகிப்திலே தங்கவேண்டுமென்று அவ்விடத்திற்குத் தங்கள் முகங்களைத் திருப்பின எல்லா மனிதருக்கும் என்ன சம்பவிக்குமென்றால், பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் இறப்பார்கள்; நான் அவர்கள்மேல் வரச்செய்யும் தீங்கினால் அவர்களில் மீதியாகிறவர்களும் தப்புகிறவர்களுமில்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். என் கோபமும் என் கடுங்கோபமும் எருசலேமின் குடிமக்கள்மேல் எப்படி மூண்டதோ, அப்படியே என் கடுங்கோபம் நீங்கள் எகிப்திற்குப் போகும்போது, உங்கள்மேல் மூளும்; நீங்கள் சாபமாகவும் பாழாகவும் பழிப்பாகவும் நிந்தையாகவும் இருந்து, இவ்விடத்தை இனிக் காணாதிருப்பீர்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். யூதாவில் மீதியானவர்களே, எகிப்திற்குப் போகாதிருங்கள் என்று யெகோவா உங்களைக்குறித்துச் சொன்னாரென்பதை இந்நாளில் உங்களுக்குச் சாட்சியாக அறிவித்தேன் என்று அறியுங்கள். உங்கள் ஆத்துமாக்களுக்கு விரோதமாக உங்களை மோசம்போக்கினீர்கள்; நீ எங்கள் தேவனாகிய யெகோவாவை நோக்கி: எங்களுக்காக விண்ணப்பம்செய்து, எங்கள் தேவனாகிய யெகோவா சொல்வதையெல்லாம் எங்களுக்கு அறிவிக்கவேண்டும்; அதின்படியே செய்வோம் என்று நீங்கள் சொல்லி, என்னை உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்கு அனுப்பினீர்கள். நான் இந்நாளில் அதை உங்களுக்கு அறிவித்தேன்; ஆனாலும், உங்கள் தேவனாகிய யெகோவாவின் சத்தத்திற்கும், அவர் என்னைக்கொண்டு உங்களுக்குச் சொல்லியனுப்பின எந்தக்காரியத்தையும் கவனித்துக் கேட்காமற்போனீர்கள். இப்போதும் தங்கியிருப்பதற்கு நீங்கள் போக விரும்புகிற இடத்தில்தானே பட்டயத்தாலும் பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் மரணமடைவீர்களென்று நிச்சயமாய் அறியுங்கள் என்றான்.

எரேமியா 42:1-22 பரிசுத்த பைபிள் (TAERV)

அவர்கள் கெருத் கிம்காமினில் இருக்கும் போது, யோகனானும் ஓசாயாவின் குமாரனான யெசனியாவும் தீர்க்கதரிசி எரேமியாவிடம் சென்றனர். எல்லாப் படை அதிகாரிகளும் யோகனான் மற்றும் யெசனியாவுடன் சென்றனர். முக்கியத்துவம் குறைந்த ஜனங்களில் இருந்து முக்கியத்துவம் மிகுந்த ஜனங்கள் வரை அனைத்து ஜனங்களும் எரேமியாவிடம் சென்றனர். அந்த ஜனங்களனை வரும் எரேமியாவிடம், “எரேமியா, நாங்கள் என்ன சொல்கிறோம் என்பதை தயவுசெய்துக் கேளும். யூதாவின் வம்சத்திலிருந்து தப்பிப் பிழைத்த இந்த ஜனங்களுக்காக உமது தேவனாகிய கர்த்தரிடம் ஜெபம் செய்யும். எரேமியா, எங்களில் நிறைய பேர் மீதியாக இருக்கவில்லை என்பதை நீர் பார்க்கமுடியும். ஒரு காலத்தில் நாங்கள் ஏராளமாக இருந்தோம். எரேமியா, நாங்கள் எங்கே போக வேண்டும், நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று உமது தேவனாகிய கர்த்தர் என்ன கூறுகிறார் என்று கர்த்தரிடம் ஜெபம்செய்துக்கேளும்” என்றனர். பிறகு, எரேமியா தீர்க்கதரிசி, “நான் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதைப் புரிந்துக்கொள்கிறேன். நீங்கள் கேட்டுக்கொண்டபடி நான் உங்கள் தேவனாகிய கர்த்தரிடம் ஜெபம் செய்கிறேன். கர்த்தர் சொல்கிற எல்லாவற்றையும் நான் உங்களுக்குச் சொல்வேன். நான் உங்களிடமிருந்து எதையும் மறைக்கமாட்டேன்” என்றான். பிறகு, அந்த ஜனங்கள் எரேமியாவிடம், “நாங்கள், உமது தேவனாகிய கர்த்தர் சொன்னபடி செய்யாவிட்டால், பிறகு கர்த்தரே எங்களுக்கு எதிரான உண்மையான நம்பிக்கையுள்ள சாட்சியாக இருப்பார் என்று நம்புவோம். உமது தேவனாகிய கர்த்தர் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று சொல்லவே உம்மை அனுப்பியுள்ளார் என அறிகிறோம். நாங்கள் அச்செய்தியை விரும்புகிறோமா அல்லது அச்செய்தியை விரும்பவில்லையா என்பது ஒரு பொருட்டன்று. நமது தேவனாகிய கர்த்தருக்கு நாங்கள் அடிபணிவோம். நாங்கள் உம்மை எங்களுக்கான செய்தியை அறியவே அனுப்புகிறோம். அவர் என்ன சொல்கிறாரோ அதற்கு நாங்கள் அடிபணிவோம். பிறகு எங்களுக்கு நல்லவை நடக்கும். ஆம் நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு அடிபணிவோம்” என்றனர். பத்து நாட்கள் முடிந்ததும், கர்த்தரிடமிருந்து செய்தி எரேமியாவிற்கு வந்தது. பிறகு எரேமியா, கரேயாவின் குமாரனான யோகனானையும் அவனுடனிருந்த படை அதிகாரிகளையும் சேர்ந்து அழைத்தான். எரேமியா, முக்கியத்துவம் குறைந்த ஆட்களிலிருந்து முக்கியத்துவம் மிகுந்த ஆட்கள்வரை அனைத்து ஜனங்களையும் அழைத்தான். பிறகு அவர்களிடம் எரேமியா, “இஸ்ரவேலர்களின் தேவனாகிய ஆண்டவர் கூறுவது இதுதான், நீங்கள் என்னை அவரிடம் அனுப்பினீர்கள். நான் தேவனோடு வழக்காடி நான் அவரிடத்தில் நீங்கள் கேட்க விரும்பியதை கேட்டேன். கர்த்தர் சொல்கிறது இதுதான். ‘ஜனங்களாகிய நீங்கள் யூதாவில் தங்கினால் நான் உங்களைப் பலமுள்ளவர்களாகச் செய்வேன். நான் உங்களை அழிக்கமாட்டேன். நான் உங்களை நடுவேன். நான் உங்களைத் தள்ளமாட்டேன். நான் இவற்றைச் செய்வேன். ஏனென்றால், நான் உங்களுக்கு ஏற்படுத்திய பயங்கரமான செயல்களுக்காக வருத்தப்படுகிறேன். இப்போது நீங்கள் பாபிலோன் ராஜாவுக்குப் பயப்படுகிறீர்கள். ஆனால் பாபிலோன் ராஜாவுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம்’ இதுதான் கர்த்தருடைய வார்த்தை, ‘ஏனென்றால் நான் உங்களுடன் இருக்கிறேன். நான் உங்களைக் காப்பாற்றுவேன். நான் உங்களை விடுவிப்பேன். நான் உங்களை அவனுடைய கைகளிலிருந்து தப்புவிப்பேன். நான் உங்களிடம் தயவாய் இருப்பேன். பாபிலோனின் ராஜாவும் உங்களை இரக்கத்தோடு நடத்துவான். அவன் உங்களை திரும்பவும் உங்கள் நாட்டுக்குக் கொண்டு வருவான்.’ ஆனால் நீங்கள், ‘நாங்கள் யூதாவில் தங்கமாட்டோம்’ என்று சொல்லலாம். அவ்வாறு நீங்கள் சொன்னால் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு அடிபணிய மறுக்கிறீர்கள். நீங்கள், ‘இல்லை. நாங்கள் போய் எகிப்தில் வாழ்வோம். எகிப்திலே நாங்கள் போரினிமித்தமாக கவலைப்படமாட்டோம். நாங்கள் எக்காளத்தின் சத்தத்தைக் கேட்கமாட்டோம். எகிப்தில் நாங்கள் பசியோடு இருக்கமாட்டோம்’ என்று சொல்லலாம். நீங்கள் அவ்வாறு சொன்னால், பிறகு கர்த்தர் சொல்லும் வார்த்தையைக் கேளுங்கள். யூதாவில் உயிர் பிழைத்தவர்களே கேளுங்கள். இதுதான் இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்வது: ‘நீங்கள் எகிப்துக்குப் போய் வாழ வேண்டும் என்று முடிவு செய்தால் பிறகு இவை எல்லாம் நிகழும். நீங்கள் போரின் வாளுக்கு அஞ்சுகிறீர்கள். ஆனால் இது அங்கே உங்களைத் தோற்கடிக்கும். நீங்கள் பசியைப் பற்றி கவலைப்படுகிறீர்கள். ஆனால் எகிப்தில் நீங்கள் பசியோடு இருப்பீர்கள். நீங்கள் அங்கே மரிப்பீர்கள். எகிப்துக்குச் செல்லவேண்டும் என்று முடிவு செய்த ஒவ்வொருவரும் வாள் அல்லது பசி அல்லது பயங்கர நோயால் மரிப்பார்கள். எகிப்துக்குப் போகிற ஒருவனும் உயிர் பிழைக்கமாட்டான். நான் அவர்களுக்குக் கொண்டு வருகிற பயங்கரமானவற்றிலிருந்து ஒருவன் கூட தப்பிக்கமாட்டான்.’ “இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: ‘எருசலேமிற்கு எதிராக கோபத்தை நான் காண்பித்தேன். எருசலேமில் வாழ்ந்த ஜனங்களை நான் தண்டித்தேன். அதே வழியில் எகிப்திற்குச் செல்கிற ஒவ்வொருவரிடமும் எனது கோபத்தைக் காட்டுவேன். மற்றவர்களுக்குத் தீமை ஏற்படுவதைப்பற்றி ஜனங்கள் பேசும்போது உங்களை சான்றாகக் காட்டுவார்கள். நீங்கள் ஒரு சாப வார்த்தைப்போன்று ஆவீர்கள். ஜனங்கள் உங்களை எண்ணி அவமானம் அடைவார்கள். ஜனங்கள் உங்களை நிந்திப்பார்கள். நீங்கள் யூதாவை மீண்டும் பார்க்கமாட்டீர்கள்.’ “யூதாவில் உயிர் பிழைத்தவர்களே, கர்த்தர் உங்களுக்கு, ‘எகிப்திற்குப் போக வேண்டாம்’ என்று நான் இப்பொழுது எச்சரிக்கிறேன். நீங்கள் தவறு செய்துக்கொண்டிருக்கிறீர்கள். இது உங்கள் மரணத்துக்குக் காரணம் ஆகும். நீங்கள் என்னிடம், ‘எங்களுக்காக எங்கள் தேவனாகிய கர்த்தரிடம் ஜெபம் செய். கர்த்தர் என்ன செய்யவேண்டுமென்று சொல்கிறாரோ அனைத்தையும் சொல். நாங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறோம்’ என்றீர்கள். எனவே இன்று, நான் உங்களிடம் கர்த்தருடைய செய்தியைச் சொல்லியிருக்கிறேன். ஆனால், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குக் கீழ்ப்படியவில்லை. அவர் என்னை உங்களிடம் அனுப்பி வைத்து நீங்கள் செய்யவேண்டியவற்றை உங்களுக்கு சொல்ல சொன்னதை எல்லாம் நீங்கள் செய்யாமலிருக்கிறீர்கள். எனவே, இப்போது நீங்கள் உறுதியாக புரிந்துக்கொள்ளுங்கள். நீங்கள் எகிப்திற்குச் சென்று வாழ விரும்புகிறீர்கள். ஆனால் எகிப்தில் இவை எல்லாம் உங்களுக்கு ஏற்படும். நீங்கள் வாள் அல்லது பசி அல்லது பயங்கரமான நோயால் மரிப்பீர்கள்” என்றான்.

எரேமியா 42:1-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது எல்லா இராணுவச்சேர்வைக்காரரும், கரேயாவின் குமாரனாகிய யோகனானும், ஓசாயாவின் குமாரனாகிய யெசனியாவும், சிறியோர்முதல் பெரியோர்மட்டுமான சகல ஜனங்களும் சேர்ந்துவந்து, தீர்க்கதரிசியாகிய எரேமியாவை நோக்கி: உம்முடைய தேவனாகிய கர்த்தர் நாங்கள் நடக்கவேண்டிய வழியையும், செய்யவேண்டிய காரியத்தையும் எங்களுக்குத் தெரியப்பண்ணும்படிக்கு, நீர் எங்கள் விண்ணப்பத்துக்கு இடங்கொடுத்து, மீதியாயிருக்கிற இந்தச் சகல ஜனங்களாகிய எங்களுக்காக உம்முடைய தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணும். உம்முடைய கண்கள் எங்களைக்காண்கிறபடியே திரளான ஜனங்களில் கொஞ்சப்பேரே மீந்திருக்கிறோம் என்றார்கள். அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி அவர்களை நோக்கி: நீங்கள் சொன்னதைக் கேட்டேன்; இதோ, உங்கள் வார்த்தையின்படியே உங்கள் தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணுவேன்; கர்த்தர் உங்களுக்கு மறுஉத்தரவாகச் சொல்லும் எல்லா வார்த்தைகளையும் நான் உங்களுக்கு ஒன்றையும் மறைக்காமல் அறிவிப்பேன் என்றான். அப்பொழுது அவர்கள் எரேமியாவை நோக்கி: உம்முடைய தேவனாகிய கர்த்தர் உம்மைக்கொண்டு எங்களுக்குச் சொல்லியனுப்பும் எல்லா வார்த்தைகளின்படியும் நாங்கள் செய்யாவிட்டால், கர்த்தர் நமக்கு நடுவே சத்தியமும் உண்மையுமான சாட்சியாயிருக்கக்கடவர். அது நன்மையானாலும் தீமையானாலும் சரி, எங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்கு நாங்கள் கீழ்ப்படிவதினால் எங்களுக்கு நன்மையுண்டாகும்படி நாங்கள் உம்மை அனுப்புகிற எங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிந்து நடப்போம் என்றார்கள். பத்துநாள் சென்றபின்பு, கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாயிற்று. அப்பொழுது அவன், கரேயாவின் குமாரனாகிய யோகனானையும், அவனோடிருந்த எல்லா இராணுவச் சேர்வைக்காரரையும், சிறியோர்முதல் பெரியோர்மட்டும் உண்டான சகல ஜனங்களையும் அழைத்து, அவர்களை நோக்கி: உங்களுக்காக விண்ணப்பஞ்செய்யும்படிக்கு நீங்கள் என்னை அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீங்கள் இந்த தேசத்திலே தரித்திருந்தால், நான் உங்களைக் கட்டுவேன், உங்களை இடிக்கமாட்டேன்; உங்களை நாட்டுவேன், உங்களைப் பிடுங்கமாட்டேன்; நான் உங்களுக்குச் செய்திருக்கிற தீங்குக்கு மனஸ்தாபப்பட்டேன். நீங்கள் பயப்படுகிற பாபிலோன் ராஜாவுக்குப் பயப்படவேண்டாம், அவனுக்குப் பயப்படாதிருப்பீர்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார், உங்களை இரட்சிக்கும்படிக்கும், உங்களை அவன் கைக்குத் தப்புவிக்கும்படிக்கும் நான் உங்களுடனே இருந்து, அவன் உங்களுக்கு இரங்குகிறதற்கும், உங்கள் சுயதேசத்துக்கு உங்களைத் திரும்பிவரப்பண்ணுகிறதற்கும் உங்களுக்கு இரக்கஞ்செய்வேன். நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடாமல், நாங்கள் இந்த தேசத்திலே இருக்கிறதில்லையென்றும், நாங்கள் யுத்தத்தைக் காணாததும், எக்காள சத்தத்தைக் கேளாததும், அப்பத்தாழ்ச்சியினால் பட்டினியாய் இராததுமான எகிப்து தேசத்துக்கே போய், அங்கே தரித்திருப்போம் என்றும் சொல்வீர்களேயாகில், யூதாவில் மீந்திருக்கிறவர்களே, அதைக்குறித்து உண்டான கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்: நீங்கள் எகிப்துக்குப் போக உங்கள் முகங்களைத் திருப்பி, அங்கே தங்கப்போவீர்களானால், நீங்கள் பயப்படுகிற பட்டயம் எகிப்து தேசத்திலே உங்களைப் பிடிக்கும்; நீங்கள் ஐயப்படுகிற பஞ்சம் எகிப்திலே உங்களைத் தொடர்ந்துவரும், அங்கே சாவீர்கள். எகிப்திலே தங்கவேண்டுமென்று அவ்விடத்துக்குத் தங்கள் முகங்களைத் திருப்பின எல்லா மனுஷருக்கும் என்ன சம்பவிக்குமென்றால், பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் சாவார்கள்; நான் அவர்கள்மேல் வரப்பண்ணும் தீங்கினாலே அவர்களில் மீதியாகிறவர்களும் தப்புகிறவர்களுமில்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். என் கோபமும் என் உக்கிரமும் எருசலேமின் குடிகள்மேல் எப்படி மூண்டதோ, அப்படியே என் உக்கிரம் நீங்கள் எகிப்துக்குப் போகும்போது, உங்கள்மேல் மூளும்; நீங்கள் சாபமாகவும் பாழாகவும் பழிப்பாகவும் நிந்தையாகவும் இருந்து, இவ்விடத்தை இனிக் காணாதிருப்பீர்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். யூதாவில் மீதியானவர்களே, எகிப்துக்குப் போகாதிருங்கள் என்று கர்த்தர் உங்களைக்குறித்துச் சொன்னாரென்பதை இந்நாளில் உங்களுக்குச் சாட்சியாக அறிவித்தேன் என்று அறியுங்கள். உங்கள் ஆத்துமாக்களுக்கு விரோதமாய் உங்களை மோசம்போக்கினீர்கள்; நீ எங்கள் தேவனாகிய கர்த்தரை நோக்கி: எங்களுக்காக விண்ணப்பம்பண்ணி, எங்கள் தேவனாகிய கர்த்தர் சொல்வதையெல்லாம் எங்களுக்கு அறிவிக்கவேண்டும்; அதின்படியே செய்வோம் என்று நீங்கள் சொல்லி, என்னை உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்துக்கு அனுப்பினீர்கள். நான் இந்நாளில் அதை உங்களுக்கு அறிவித்தேன்; ஆனாலும், உங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்கும், அவர் என்னைக்கொண்டு உங்களுக்குச் சொல்லியனுப்பின எந்தக்காரியத்துக்கும் செவிகொடாமற்போனீர்கள். இப்போதும் தங்கியிருப்பதற்கு நீங்கள் போக விரும்புகிற ஸ்தலத்தில்தானே பட்டயத்தாலும் பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் சாவீர்களென்று நிச்சயமாய் அறியுங்கள் என்றான்.