ஓசியா 6:1-11
ஓசியா 6:1-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
வாருங்கள், நாம் யெகோவாவிடம் திரும்புவோம். அவர் நம்மைக் காயப்படுத்தினார், ஆயினும், அவரே நம்மை சுகப்படுத்துவார். அவர் நம்மை நொறுக்கினார், ஆயினும், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார். நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருக்கும்படி இரண்டு நாட்களுக்குப்பின்பு அவர் நமக்குப் புத்துயிரூட்டுவார்; மூன்றாம் நாளிலோ நம்மை எழுப்புவார். நாம் யெகோவாவை அறிந்துகொள்வோமாக; நாம் தொடர்ந்து அவரைப்பற்றி அறிய முயற்சிப்போமாக. சூரியன் உதிப்பது நிச்சயம்போல, அவர் தோன்றுவார் என்பதும் நிச்சயம். அவர் மழையைப்போலவும், பூமியை நனைக்கும் வசந்தகால மழையைப்போல் வருவார். எப்பிராயீமே, நான் உன்னை என்ன செய்வேன்? யூதாவே, நான் உன்னை என்ன செய்வேன்? உங்களது அன்பு காலையில் தோன்றும் மேகம்போலவும், விடியும்போது மறைந்துபோகும் பனிபோலவும் இருக்கிறது. அதனால்தான் நான் இறைவாக்கினர்மூலம் உங்களை வெட்டினேன்; என் வாயின் வார்த்தையினால் உங்களைக் கொன்றேன்; என் நியாயத்தீர்ப்பு உங்கள்மேல் ஒளிபோல் வெளிப்படும். நான் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்; தகன காணிக்கைகளை அல்ல, இறைவனை அறியும் அறிவையே விரும்புகிறேன். ஆனால், ஆதாமைப்போல் அவர்கள் என் உடன்படிக்கையை மீறி, அங்கே எனக்கு துரோகம் பண்ணினார்கள். கீலேயாத் கொடுமையானவர்களின் பட்டணம்; அது இரத்தம் தோய்ந்த அடிச்சுவடுகளால் கறைப்பட்டிருக்கிறது. கொள்ளையர் கூட்டம் ஒருவனுக்காகப் பதுங்கிக் காத்திருப்பதுபோல, ஆசாரியர்களின் கூட்டமும் இருக்கிறார்கள். அவர்கள் சீகேமுக்குப் போகும் வழியிலே கொலைசெய்து, வெட்கக்கேடான குற்றங்களை செய்கிறார்கள். இஸ்ரயேல் குடும்பத்தாரே, உங்கள் நாட்டில் கொடூரமான செயலைக் கண்டேன்; எப்பிராயீமோ வேசித்தனத்தில் ஈடுபட்டிருக்கிறது, இஸ்ரயேல் தீட்டுப்பட்டிருக்கிறது. யூதாவே, உனக்கும் ஒரு அறுவடை நியமிக்கப்பட்டிருக்கிறது.
ஓசியா 6:1-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவாவிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைக் கீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார். இரண்டுநாட்களுக்குப்பின்பு அவர் நம்மை உயிர்ப்பிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்புவார்; அப்பொழுது நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருப்போம். அப்பொழுது நாம் அறிவடைந்து, யெகோவாவை அறியும்படி தொடர்ந்து போவோம்; அவருடைய புறப்படுதல் சூரிய உதயம்போல ஆயத்தமாயிருக்கிறது; அவர் மழையைப்போலவும், பூமியின்மேல் பெய்யும் முன்மழை பின்மழையைப்போலவும் நம்மிடத்தில் வருவார். எப்பிராயீமே, உனக்கு என்ன செய்வேன்? யூதாவே, உனக்கு என்ன செய்வேன்? உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் தோன்றும் பனியைப்போலவும் ஒழிந்துபோகிறது. ஆகையால் தீர்க்கதரிசிகளைக்கொண்டு அவர்களை வெட்டினேன்; என் வாயின் வார்த்தைகளைக்கொண்டு அவர்களைக் கொன்றேன்; உன்மேல் வரும் தண்டனைகள் வெளிச்சத்தைப்போல் வெளிப்படும். பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப்பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும் விரும்புகிறேன். அவர்களோ ஆதாமைப்போல் உடன்படிக்கையை மீறி, அங்கே எனக்கு விரோதமாகத் துரோகம் செய்தார்கள். கீலேயாத், அக்கிரமம் செய்கிறவர்களின் பட்டணம்; அது இரத்தக்காலடிகளால் மிதிக்கப்பட்டிருக்கிறது. கொள்ளைக்காரர்களின் கூட்டங்கள் ஒருவனுக்குக் காத்திருக்கிறதுபோல, சீகேமுக்குப் போகிற வழியிலே கொலைசெய்கிற ஆசாரியர்களின் கூட்டம் காத்திருக்கிறது; கேடான காரியங்களையே செய்கிறார்கள். பயங்கரமான காரியத்தை இஸ்ரவேல் வம்சத்தாரில் கண்டேன்; அங்கே எப்பிராயீமின் விபசாரம் உண்டு; இஸ்ரவேல் தீட்டுப்பட்டுப்போயிற்று. யூதாவே, உனக்கு ஒரு அறுப்புக்காலம் நியமிக்கப்பட்டிருக்கிறது.
ஓசியா 6:1-11 பரிசுத்த பைபிள் (TAERV)
“வா, நாம் கர்த்தரிடம் திரும்பிப் போவோம். அவர் நம்மைப் புண்படுத்தினார். ஆனால் அவர் நம்மைக் குணப்படுத்துவார். அவர் நம்மைக் காயப்படுத்தினார். ஆனால் அவர் நமக்குக் கட்டுகளைப் போடுவார். இரண்டு நாட்களுக்குப் பிறகு நமக்கு அவர் திரும்பவும் உயிரைக் கொண்டுவருவார். அவர் மூன்றாவது நாள் நம்மை எழுப்புவார். பிறகு நாம் அவரருகில் வாழ முடியும். கர்த்தரைப்பற்றி கற்றுக்கொள்வோம். கர்த்தரை அறிந்துக்கொள்ள மிகக் கடுமையாக முயல்வோம். அவர் வந்துக்கொண்டிருக்கிறார் என்பதை நாம் காலைநேரம் வந்துக்கொண்டிருக்கிறது என்பதைப் போன்று அறிகிறோம். கர்த்தர் நம்மிடம் பூமியை நனைக்க வரும் மழையைப்போன்று வருவார்.” “எப்பிராயீமே. நான் உன்னை என்ன செய்வது? யூதா, நான் உன்னை என்ன செய்வது? உனது விசுவாசம் காலை மூடுபனியைப் போன்று உள்ளது. உனது விசுவாசத் தன்மை காலையில் மறையும் பனித்துளியைப் போன்று உள்ளது. நான் தீர்க்கதரிசிகளைப் பயன்படுத்தி ஜனங்களுக்காக சட்டங்களைச் செய்தேன். எனது கட்டளைகளால் ஜனங்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால் அந்த முடிவுகளிலிருந்து நன்மைகள் வரும். ஏனென்றால் நான் பலிகளை அல்ல. விசுவாசமுள்ள அன்பையே விரும்புகிறேன். நான் ஜனங்கள் தகன பலிகளை கொண்டு வருவதையல்ல ஜனங்கள் தேவனை அறிந்துகொள்வதையே விரும்புகிறேன். ஆனால் ஜனங்கள் ஆதாமைப்போன்று உடன்படிக்கையை உடைத்தார்கள் அவர்கள் தமது நாட்டில் எனக்கு விசுவாசம் இல்லாதவர்களாய் இருந்தார்கள். கீலேயாத். தீமை செய்கிறவர்களின் நகரமாயிருக்கிறது. அங்கு ஜனங்கள் மற்றவர்களைத் தந்திரம் செய்து கொல்லுகிறார்கள். வழிப்பறிக்காரர்கள் மறைந்திருந்து மற்றவர்களைத் தாக்கக் காத்திருக்கிறார்கள். அதைப் போலவே, சீகேமுக்குப் போகும் சாலையில் அவ்வழியில் செல்லும் ஜனங்களைத் தாக்க ஆசாரியர்கள் காத்திருக்கின்றார்கள். அவர்கள் தீமைகளைச் செய்திருக்கிறார்கள். நான் இஸ்ரவேல் நாட்டில் பயங்கரமானவற்றைப் பார்த்திருக்கிறேன். எப்பிராயீம் தேவனுக்கு விசுவாசம் இல்லாமல் போனான். இஸ்ரவேல் பாவத்தால் அழுக்கானது. யூதா, உனக்கும் அறுவடைகாலம் இருக்கிறது. நான் எனது ஜனங்களைச் சிறைமீட்டு வரும்போது இது நிகழும்”
ஓசியா 6:1-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார். இரண்டுநாளுக்குப்பின்பு அவர் நம்மை உயிர்ப்பிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்புவார்; அப்பொழுது நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருப்போம். அப்பொழுது நாம் அறிவடைந்து, கர்த்தரை அறியும்படி தொடர்ந்து போவோம்; அவருடைய புறப்படுதல் அருணோதயம்போல ஆயத்தமாயிருக்கிறது; அவர் மழையைப்போலவும், பூமியின்மேல் பெய்யும் முன்மாரி பின்மாரியைப்போலவும் நம்மிடத்தில் வருவார். எப்பிராயீமே, உனக்கு என்ன செய்வேன்? யூதாவே, உனக்கு என்ன செய்வேன்? உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் தோன்றும் பனியைப்போலவும் ஒழிந்துபோகிறது. ஆகையால் தீர்க்கதரிசிகளைக்கொண்டு அவர்களை வெட்டினேன்; என் வாய்மொழிகளைக்கொண்டு அவர்களை அதம்பண்ணினேன்; உன்மேல் வரும் தண்டனைகள் வெளிச்சத்தைப்போல் வெளிப்படும். பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப்பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன். அவர்களோ ஆதாமைப்போல் உடன்படிக்கையை மீறி, அங்கே எனக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணினார்கள். கீலேயாத் அக்கிரமம் செய்கிறவர்களின் பட்டணம்; அது இரத்தக்காலடிகளால் மிதிக்கப்பட்டிருக்கிறது. பறிகாரரின் கூட்டங்கள் ஒருவனுக்குக் காத்திருக்கிறதுபோல, சீகேமுக்குப் போகிற வழியிலே கொலைசெய்கிற ஆசாரியரின் கூட்டம் காத்திருக்கிறது; தோஷமான காரியங்களையே செய்கிறார்கள். பயங்கரமான காரியத்தை இஸ்ரவேல் வம்சத்தாரில் கண்டேன்; அங்கே எப்பிராயீமின் வேசித்தனம் உண்டு; இஸ்ரவேல் தீட்டுப்பட்டுப்போயிற்று. யூதாவே, உனக்கு ஒரு அறுப்புக்காலம் நியமிக்கப்பட்டிருக்கிறது.