ஓசியா 11:1-4

ஓசியா 11:1-4 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“இஸ்ரயேல் சிறுவனாக இருந்தபோதே, நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து நான் என் மகனை அழைத்தேன். ஆனால், எவ்வளவு அதிகமாய் நான் அவர்களை அழைத்தேனோ, அவ்வளவு அதிகமாய் அவர்கள் என்னைவிட்டுத் தூரமானார்கள். அவர்கள் பாகால் தெய்வங்களுக்குப் பலியிட்டு, உருவச் சிலைகளுக்குத் தூபங்காட்டினார்கள். எப்பிராயீமைக் கைபிடித்து நடக்கக் கற்றுக்கொடுத்தவர் நானே; ஆனாலும், அவர்களைப் பராமரித்தவர் நானே என்பதை அவர்கள் உணரவில்லை. நான் அவர்களை அன்பின் பிணைப்பினாலும் மனித தயவின் கயிறுகளினாலும் வழிநடத்தினேன். ஒரு சிறு குழந்தையை கன்னத்தில் தூக்கும் ஒருவரைப்போல இருந்தேன், அவர்களுடைய கழுத்திலிருந்த நுகத்தை அகற்றினேன், அவர்களுக்குக் குனிந்து உணவூட்டினேன்.

ஓசியா 11:1-4 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய மகனை வரவழைத்தேன். அவர்கள் தங்களை அழைக்கிறவர்களின் முகத்திற்கு விலகிப்போய்விட்டார்கள்; பாகால்களுக்குப் பலியிட்டு, சிலைகளுக்குத் தூபங்காட்டினார்கள். நான் எப்பிராயீமைக் கைபிடித்து நடக்கப் பழக்கினேன்; ஆனாலும் நான் தங்களைக் குணமாக்குகிறவரென்று அறியாமற்போனார்கள். மனிதரைக் கட்டி இழுக்கிற அன்பின் கயிறுகளால் நான் அவர்களை இழுத்தேன், அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த பாரத்தை எடுத்துப் போடுகிறவரைப்போல் இருந்து, அவர்கள் பக்கமாக சாய்ந்து, அவர்களுக்கு ஆகாரங்கொடுத்தேன்.

ஓசியா 11:1-4 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தர், “இஸ்ரவேல் குழந்தையாக இருக்கும்போது நான் (கர்த்தர்) அவனை நேசித்தேன். நான் என் குமாரனை எகிப்தை விட்டு வெளியே அழைத்தேன். ஆனால் நான் இஸ்ரவேலர்களை மிகுதியாக அழைக்க அவர்களும் என்னை விட்டு மிகுதியாக விலகினார்கள். இஸ்ரவேலர்கள் பாகாலுக்குப் பலிகளைக் கொடுத்தார்கள். அவர்கள் விக்கிரகங்களுக்கு நறுமணப் பொருட்களை எரித்தார்கள். “ஆனால் எப்பிராயீமை கைப்பிடித்து நடக்கப் பழக்கியது நான். நான் இஸ்ரவேலர்களை என் கைகளில் எடுத்தேன். அவர்களைக் குணப்படுத்தினேன். ஆனால் அவர்கள் அதனை அறியாமலிருக்கிறார்கள். நான் அவர்களைக் கயிறுகளால் வழி நடத்தினேன். ஆனால் அவை அன்பு என்னும் கயிறுகள். நான் விடுதலை அளிக்கும் மனிதனைப் போன்றவன். நான் கீழே குனிந்து அவர்களுக்கு ஆகாரம் கொடுத்தேன்.

ஓசியா 11:1-4 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன். அவர்கள் தங்களை அழைக்கிறவர்களின் முகத்துக்கு விலகிப்போய்விட்டார்கள்; பாகால்களுக்குப் பலியிட்டு, விக்கிரகங்களுக்குத் தூபங்காட்டினார்கள். நான் எப்பிராயீமைக் கைபிடித்து நடக்கப் பழக்கினேன்; ஆனாலும் நான் தங்களைக் குணமாக்குகிறவரென்று அறியாமற்போனார்கள். மனுஷரைக் கட்டி இழுக்கிற அன்பின் கயிறுகளால் நான் அவர்களை இழுத்தேன், அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த நுகத்தடியை எடுத்துப் போடுகிறவரைப்போல் இருந்து, அவர்கள் பட்சம் சாய்ந்து, அவர்களுக்கு ஆகாரங்கொடுத்தேன்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்