1 தெசலோனிக்கேயர் 2:7-12

1 தெசலோனிக்கேயர் 2:7-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆனால், நாங்கள் ஒரு தாய் தன்னுடைய குழந்தையைப் பராமரிப்பதுபோல, உங்களுடனே கனிவாய் நடந்து கொண்டோம். நாங்கள் உங்களில் அதிக அன்பாய் இருந்ததினால், உங்களுடன் இறைவனுடைய நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் மட்டுமல்ல, எங்களுடைய வாழ்க்கையையும் உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி கொண்டோம்; ஏனெனில், நீங்கள் எங்களின் அன்புக்குரியவர்களானீர்கள். பிரியமானவர்களே, நாங்கள் பட்ட பிரயாசமும் கஷ்டமும் உங்களுக்கு நிச்சயமாக நினைவிருக்குமே; இறைவனுடைய நற்செய்தியை நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்தபோது யாருக்கும் நாங்கள் சுமையாய் இராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்தோம். நற்செய்தியை விசுவாசித்தவர்களாகிய உங்களிடையே, நாங்கள் எவ்வளவு பரிசுத்தமாயும், நீதியாயும், குற்றம் காணப்படாமலும் நடந்தோம் என்பதற்கு நீங்களும் சாட்சி, இறைவனும் சாட்சியாய் இருக்கிறார். ஒரு தந்தை தனது பிள்ளைகளை நடத்துவதுபோலவே, நாங்கள் உங்கள் ஒவ்வொருவரையும் நடத்தினோம் என்பது உங்களுக்குத் தெரியும். நாங்கள் உங்களை உற்சாகப்படுத்தி, ஆறுதல்படுத்தினோம். தம்முடைய அரசுக்குள்ளும் மகிமைக்குள்ளும் உங்களை அழைக்கிற இறைவனுக்கேற்ற வாழ்க்கையை வாழுங்கள் என்று உங்களை ஊக்குவித்தோம்.

1 தெசலோனிக்கேயர் 2:7-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல நாங்கள் உங்களிடம் கனிவாக நடந்துகொண்டோம்; நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாக இருந்து, தேவனுடைய நற்செய்தியை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்களுடைய உயிரையும் உங்களுக்குக் கொடுக்க விருப்பமாக இருந்தோம். சகோதரர்களே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாக இருக்கும்; உங்களில் ஒருவனுக்கும் பாரமாக இல்லாதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய நற்செய்தியை உங்களுக்குப் பிரசங்கித்தோம். விசுவாசிகளாகிய உங்களுக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும் நீதியும் பிழையில்லாமலும் நடந்தோம் என்பதற்கு நீங்களும் சாட்சி, தேவனும் சாட்சி. மேலும், தம்முடைய ராஜ்யத்திற்கும் மகிமைக்கும் உங்களை அழைத்த தேவனுக்கு நீங்கள் தகுதியுள்ளவர்களாக நடக்கவேண்டுமென்று, தகப்பன் தன் பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, நாங்கள் உங்களில் ஒவ்வொருவனுக்கும் புத்தியும், பாராட்டுதலும், எச்சரிப்புமாகச் சொன்னதை அறிந்திருக்கிறீர்கள்.

1 தெசலோனிக்கேயர் 2:7-12 பரிசுத்த பைபிள் (TAERV)

நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலர். எனவே நாங்கள் உங்களோடு இருக்கும்போது சில காரியங்களை நீங்கள் செய்யும் பொருட்டு உங்கள் மீது அதிகாரம் செலுத்தி இருக்ககூடும். எனினும் நாங்கள் மென்மையாகவே நடந்துகொண்டோம். ஒரு தாய் தன் குழந்தையைப் பாதுகாப்பது போன்று இருந்தோம். உங்களை நாங்கள் பெரிதும் நேசித்தோம். எனவே, தேவனுடைய நற்செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைந்தோம். அதோடு மட்டுமல்லாமல், எங்கள் வாழ்க்கையையும் உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ந்தோம். சகோதர சகோதரிகளே! நாங்கள் எவ்வளவு கடுமையாக உழைத்தோம் என்பதை நீங்கள் நினைவில் வைத்திருப்பதை நான் அறிவேன். இரவும் பகலுமாக நாங்கள் பணியாற்றினோம். தேவனுடைய நற்செய்தியைப் பரப்பும்பொழுது உங்களில் எவர்மீதும் எவ்விதமான பொருளாதார பாரத்தையும் சுமத்த விரும்பவில்லை. விசுவாசிகளாகிய உங்களோடு நாங்கள் இருந்தபோது தூய்மையும் நீதியும் உள்ள வழியில் குற்றமற்று வாழ்ந்தோம். இது உண்மை என உங்களுக்குத் தெரியும். தேவனுக்கும் இது உண்மை எனத் தெரியும். ஒரு தந்தை தன் பிள்ளைகளை நடத்துவது போன்று நாங்கள் உங்களை நடத்தினோம் என்பது உங்களுக்குத் தெரியும். நாங்கள் உங்களைப் பலப்படுத்தினோம். உங்களுக்கு ஆறுதல் அளித்தோம். தேவனுக்கான நல்வாழ்க்கையை வாழுமாறு கூறினோம். தேவன் தமது இராஜ்யத்திற்கும் மகிமைக்கும் உங்களை அழைக்கிறார்.

1 தெசலோனிக்கேயர் 2:7-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

உங்களிடத்தில் பட்சமாய் நடந்துகொண்டோம்; பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல, நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாயிருந்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந்தோம். சகோதரரே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாயிருக்கும்; உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களிடத்தில் பிரசங்கித்தோம். விசுவாசிகளாகிய உங்களுக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும் நீதியும் பிழையின்மையுமாய் நடந்தோமென்பதற்கு நீங்களும் சாட்சி, தேவனும் சாட்சி. மேலும், தம்முடைய ராஜ்யத்திற்கும் மகிமைக்கும் உங்களை அழைத்த தேவனுக்கு நீங்கள் பாத்திரராய் நடக்கவேண்டுமென்று, தகப்பன் தன் பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, நாங்கள் உங்களில் ஒவ்வொருவனுக்கும் புத்தியும் தேறுதலும் எச்சரிப்பும் சொன்னதை அறிந்திருக்கிறீர்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்