யாத்திராகமம் 8

8
1அதன் பின்னர் கர்த்தர் மோசேயிடம் சொன்னதாவது: “நீ பார்வோனிடம் போய், ‘கர்த்தர் சொல்கின்றதாவது: என்னை வழிபடுவதற்கு என் மக்களைப் போக விடு. 2நீ அவர்களைப் போகவிட மறுத்தால், உன் நாடு முழுவதையும் தவளைகளினால் வாதிப்பேன். 3நைல் நதி தவளைகளால் பெருகும். அவை உன் அரண்மனைக்குள்ளும் உன் படுக்கையறைக்குள்ளும், உன் கட்டிலின்மேலும், உன் அதிகாரிகளின் வீடுகளுக்குள்ளும், உன் மக்கள்மேலும், உன் சூட்டடுப்புகளுக்குள்ளும், மா பிசைகின்ற பாத்திரங்களுக்குள்ளும் வந்து ஏறும். 4தவளைகள் உன்மீதும், உன் மக்கள்மீதும், உன் அலுவலர்கள்மீதும் வந்து ஏறும்’ என்று சொல்” என்றார்.
5பின்னும் கர்த்தர் மோசேயிடம், “நீ ஆரோனை நோக்கி, ‘நீ உன் கையில் கோலை எடுத்து, உனது கையை நீரோடைகள்மேலும் வாய்க்கால்கள்மேலும் குளங்கள்மேலும் நீட்டி, எகிப்து நாட்டின்மீது தவளைகள் வரும்படி செய்’ என்று சொல்” என்றார்.
6அவ்வாறே ஆரோன் எகிப்திலுள்ள நீர் நிலைகள்மேல் தன் கையை நீட்டினான், அப்போது தவளைகள் மேலே ஏறி நாட்டை மூடிக்கொண்டன. 7எகிப்திய மந்திரவாதிகளும் தங்கள் மாயவித்தைகளினால் அவ்வாறே செய்து, எகிப்து நாட்டின்மீது தவளைகளை வரச் செய்தார்கள்.
8அப்போது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து, “இந்தத் தவளைகள் என்னையும் என் நாட்டு மக்களையும்விட்டு நீங்கும்படி கர்த்தரிடம் மன்றாடு. அப்போது நான் கர்த்தருக்குப் பலிகளைச் செலுத்த உங்கள் மக்களைப் போகவிடுவேன்” என்றான்.
9மோசே பார்வோனிடம், “தவளைகள் நைல் நதியில் மட்டும் இருக்கவும், உம்மிடத்திலிருந்தும் உமது வீடுகளிலிருந்தும் நீங்கவும், உமக்காகவும் உமது அதிகாரிகளுக்காகவும் உமது மக்களுக்காகவும் நான் மன்றாடுவதற்கான நேரத்தை நீரே தீர்மானித்து எனக்குத் தெரியப்படுத்தும்” என்றார்.
10“நாளைக்கு” என்று பார்வோன் பதிலளித்தான்.
அதற்கு மோசே, “நீர் சொன்னபடியே ஆகும். அப்போது எங்கள் இறைவனாகிய கர்த்தருக்கு நிகரானவர் எவரும் இல்லையென்று நீர் அறிந்துகொள்வீர். 11தவளைகள் உம்மையும், உமது வீடுகளையும், உமது அலுவலர்களையும், உமது மக்களையும்விட்டு நீங்கிவிடும்; அவை நைல் நதியில் மட்டும் இருக்கும்” என்றார்.
12மோசேயும் ஆரோனும் பார்வோனிடமிருந்து போன பின்பு, பார்வோன்மேல் வந்த தவளைகளைக் குறித்து, மோசே கர்த்தரை நோக்கி மன்றாடினார். 13மோசே கேட்டபடியே கர்த்தர் செய்தார். வீடுகளிலும், முற்றங்களிலும், வயல்களிலுமுள்ள தவளைகளெல்லாம் இறந்து போயின. 14தவளைகள் குவியலாகக் குவிக்கப்பட்டன, அவற்றால் நாடெங்கும் துர்நாற்றமெடுத்தது. 15ஆனால், நிவாரணம் கிடைத்ததை பார்வோன் கண்டதும், கர்த்தர் மோசேக்குச் சொல்லியிருந்தபடியே அவன் தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, மோசேக்கும் ஆரோனுக்கும் செவிமடுக்கவில்லை.
மூன்றாம் வாதையாகிய பேன்கள்
16பின்பு கர்த்தர் மோசேயிடம், “நீ ஆரோனிடம் சொல்ல வேண்டியதாவது, நீ உன் கோலை நீட்டி நிலத்தின் புழுதியை#8:16 புழுதியை அல்லது மண் அடி. அப்போது எகிப்து நாடு எங்குமுள்ள புழுதி பேன்களாக மாறும்” என்றார். 17அவர்கள் அவ்வாறே செய்தார்கள். ஆரோன் கோலைப் பிடித்திருந்த தன் கையை நீட்டி நிலத்தின் புழுதியை அடித்ததும், மனிதர்கள்மீதும் மிருகங்கள்மீதும் பேன்கள் வந்தன. எகிப்து நாடு முழுவதிலுமுள்ள புழுதி பேன்களாக மாறிற்று. 18ஆனால் மந்திரவாதிகள் தங்கள் மாயவித்தைகளினால் பேன்களை உருவாக்க முயன்றபோது, அவர்களால் முடியாது போயிற்று.
மனிதர்கள்மீதும் மிருகங்கள்மீதும் பேன்கள் இருந்தன. 19அப்போது மந்திரவாதிகள் பார்வோனிடம், “இது இறைவனின் விரலேதான்#8:19 இறைவனின் விரலேதான் இறைவனே இதைச் செய்தார்” என்றார்கள். ஆனாலும் கர்த்தர் சொல்லியிருந்தபடியே பார்வோனின் இருதயம் கடினமாகி, அவன் அவர்களுக்கு#8:19 அவர்களுக்கு மோசேக்கும் ஆரோனுக்கும் செவிமடுக்கவில்லை.
நான்காம் வாதையாகிய வண்டுகள்
20அதன் பின்னர் கர்த்தர் மோசேயிடம் சொன்னதாவது: “நீ நாளை அதிகாலையில் எழுந்து பார்வோன் ஆற்றுக்குப் போகும்போது, அவனுக்கு முன்பாக நின்று அவனிடம், ‘கர்த்தர் சொல்வது இதுவே: என்னை வழிபடுவதற்கு, என் மக்களைப் போக விடு. 21என் மக்களைப் போகவிடாவிட்டால் உன்மீதும், உன் அதிகாரிகள்மீதும், உன் மக்கள்மீதும், உன் வீடுகளுக்குள்ளும் வண்டுகளை அனுப்புவேன். எகிப்தியருடைய வீடுகள் வண்டுகளால் நிறைந்திருக்கும். அவர்கள் நிலமும் அவைகளால் நிறைந்திருக்கும்.
22“ ‘ஆனாலும் அந்தநாளில் என் மக்கள் வாழும் கோசேன் பிரதேசத்தை நான் வேறுபடுத்துவேன்; அங்கு வண்டுக் கூட்டம் இருக்காது, அதனால் கர்த்தராகிய நான் இந்த பூமியின் நடுவே நானே கர்த்தர் என்பதை நீ அறிந்துகொள்வாய். 23இவ்வாறு என் மக்களுக்கும் உன் மக்களுக்கும் இடையில் வித்தியாசம்#8:23 வித்தியாசம் – எபிரேய மொழியில், விடுவிக்கும் செயல் என்றுள்ளது. ஏற்படுத்துவேன். இந்த அடையாளம் நாளைக்கே நிகழும்’ என்று சொல்” என்றார்.
24கர்த்தர் அவ்வாறே செய்தார். பார்வோனின் அரண்மனைக்குள்ளும், அவனது அலுவலர்களின் வீடுகளுக்குள்ளும் வண்டுகள் பெரும் கூட்டமாய் நிறைந்தன. எகிப்து நாடு முழுவதும் வண்டுகளால் பாழாய்ப் போயிற்று.
25அப்போது பார்வோன், மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து, “போங்கள், உங்கள் இறைவனுக்கு இந்த நாட்டுக்குள் பலி செலுத்துங்கள்” என்றான்.
26அதற்கு மோசே, “நாங்கள் அவ்வாறு செய்வது சரியல்ல; ஏனெனில் எங்கள் இறைவனாகிய கர்த்தருக்கு நாங்கள் செலுத்தும் பலிகள் எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கும். அவ்வாறு அவர்கள் பார்வையில் அருவருப்பாயிருக்கின்ற பலிகளை நாங்கள் செலுத்தினால், அவர்கள் எங்கள்மீது கல்லெறிய மாட்டார்களோ? 27எங்கள் இறைவனாகிய கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டபடி, அவருக்குப் பலிகளைச் செலுத்துவதற்கு நாங்கள் மூன்று நாட்கள் பிரயாணமாகப் பாலைவனத்துக்குப் போக வேண்டும்” என்றார்.
28அப்போது பார்வோன், “உங்கள் இறைவனாகிய கர்த்தருக்கு பாலைவனத்தில் பலி செலுத்தும்படி, நான் உங்களைப் போகவிடுவேன். ஆனால் நீங்கள் அதிக தூரம் போகக் கூடாது. இப்போது எனக்காக மன்றாடுங்கள்” என்றான்.
29அதற்கு மோசே, “நான் இங்கிருந்து போனவுடனேயே கர்த்தரிடம் மன்றாடுவேன்; நாளைக்கு வண்டுகள் பார்வோனையும், அவன் அலுவலர்களையும், அவன் மக்களையும்விட்டு நீங்கிவிடும். கர்த்தருக்குப் பலிகளைச் செலுத்த மக்களைப் போகவிடாதபடி மீண்டும் வஞ்சனையாய் நடவாமலிருக்க, பார்வோனாகிய நீர் நிச்சயப்படுத்திக்கொள்ளும்” என்றார்.
30பின்பு மோசே பார்வோனை விட்டுப் போய், கர்த்தரிடம் மன்றாடினார். 31மோசே கேட்டுக்கொண்டபடியே கர்த்தர் செய்தார். வண்டுகள் பார்வோனையும், அவன் அதிகாரிகளையும், நாட்டு மக்களையும்விட்டு நீங்கிற்று; எகிப்தில் ஒரு வண்டும் எஞ்சியிருக்கவில்லை. 32ஆயினும் இம்முறையும் பார்வோன் தன் மனதைக் கடினப்படுத்தி இஸ்ரயேல் மக்களைப் போக விடவில்லை.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

யாத்திராகமம் 8: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்