36
1அவ்வாறே பெசலெயேலும், அகோலியாவும், அத்துடன் பரிசுத்த இடத்தை அமைக்கும் அனைத்து வேலைகளையும் எவ்வாறு செய்வதென்ற கர்த்தரால் கொடுக்கப்பட்ட அறிவையும், ஆற்றலையும், திறமையையும் பெற்றிருந்த ஒவ்வொரு கைவினைஞனும் கர்த்தரின் கட்டளைப்படியே அவ்வேலைகளைச் செய்யவேண்டும்” என்றார்.
2பின்பு மோசே பெசலெயேலையும், அகோலியாபையும் கர்த்தரினால் ஆற்றல் வழங்கப்பட்ட, பணி செய்வதற்கு மனவிருப்பமுள்ள கைவினைஞர்கள் எல்லோரையும் அழைப்பித்தார். 3பரிசுத்த இடத்தை அமைக்கும் பணிகளைச் செய்வதற்கு, இஸ்ரயேல் மக்கள் கொண்டுவந்திருந்த காணிக்கைகளை எல்லாம் மோசேயிடமிருந்து அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். மக்கள் சுயவிருப்பக் காணிக்கைகளைத் தொடர்ந்தும் காலைதோறும் கொண்டுவந்தார்கள். 4அதனால் பரிசுத்த இடத்து பணியைச் செய்துகொண்டிருந்த கைவினைஞர்கள் தாங்கள் செய்வதைவிட்டு, 5மோசேயிடம் வந்து, “கர்த்தர் செய்யும்படி கட்டளையிட்ட பணிக்கு, தேவைக்கு அதிகமான பொருட்களை மக்கள் கொண்டுவருகின்றார்கள்” என்று சொன்னார்கள்.
6அப்போது மோசே, “இனிமேல் எந்த ஒரு மனிதனோ, பெண்ணோ பரிசுத்த இடத்துக்கென்று காணிக்கையாக எதையும் கொண்டுவர வேண்டாம்” என உத்தரவிட்டார். அது முகாமெங்கும் உள்ள மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. இவ்விதமாக மக்கள் மேலதிகமாக பொருட்கள் கொண்டுவருவது நிறுத்தப்பட்டது. 7ஏனெனில், அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பதற்குத் தேவையானவற்றைவிட அதிகமான பொருட்கள் ஏற்கெனவே அவர்களிடம் இருந்தன.
இறைபிரசன்னக் கூடாரம்
8வேலையாட்களுள் கைவினைஞர்கள் தரமாய் திரிக்கப்பட்ட மென்பட்டு, நீல நூல், ஊதா நூல், கருஞ்சிவப்பு நூல் ஆகியவற்றைக்கொண்டு பத்து திரைச்சீலைகளைச் செய்தார்கள். அதில் கேருபீன்களை கைவினைஞர்களுடைய வேலையால் அலங்கரித்து, அவற்றால் இறைபிரசன்னக் கூடாரத்தை அமைத்தார்கள். 9திரைகள் எல்லாம் இருபத்தெட்டு முழம் நீளமும், நான்கு முழம் அகலமும்#36:9 சுமார் 3 அடி நீளம், 6 அடி அகலம் அல்லது 13 மீற்றர் நீளம், 1.8 மீற்றர் அகலம் கொண்ட ஒரே அளவுள்ளனவாய் இருந்தன. 10பின்பு ஐந்து திரைகளை ஒன்றாக இணைத்து, மற்றைய ஐந்து திரைகளையும் அதேவிதமாக இணைத்தார்கள். 11இணைக்கப்பட்ட ஒரு தொகுதி திரையின் கடைசித் திரையின் ஓரம் முழுவதும் நீலத் துணியினால் வளையங்களைச் செய்தார்கள். அவ்விதமே இணைக்கப்பட்ட மற்றத் திரையின் தொகுதியின் ஓரம் முழுவதும் செய்தார்கள். 12வளையங்கள் ஒன்றுக்கொன்று எதிராய் இருக்கும்படி, ஒரு தொகுதி திரையில் கடைசித் திரையின் ஒரு விளிம்பில் ஐம்பது வளையங்களையும், மறு தொகுதி திரையின், ஒரு விளிம்பில் ஐம்பது வளையங்களையும் அமைத்தார்கள். 13பின்னர் ஐம்பது தங்கக் கொழுக்கிகளைச் செய்து, இரண்டு தொகுதித் திரைகளையும் ஒன்றாய் இணைத்தார்கள். இவ்வாறு இறைபிரசன்னக் கூடாரம் ஒரே அமைப்பாய் ஆக்கப்பட்டது.
14இறைபிரசன்னக் கூடாரத்தின் மேலாக ஒரு கூடாரத்தைப் போடுவதற்கு ஆட்டு உரோமத்தினால் பதினொரு திரைகளைச் செய்தார்கள். 15அந்த பதினொரு திரைகளும், ஒவ்வொன்றும் முப்பது முழம் நீளமும், நான்கு முழம் அகலமும்#36:15 சுமார் 45 அடி நீளம், 6 அடி அகலம் அல்லது 14 மீற்றர் நீளம், 1.8 மீற்றர் அகலம் கொண்ட ஒரே அளவுள்ளனவாய் இருந்தன. 16அவர்கள் ஐந்து திரைகளை ஒரு தொகுதியாகவும், மற்றைய ஆறு திரைகளை இன்னொரு தொகுதியாகவும் இணைத்தார்கள். 17பின்பு அவர்கள் ஒரு தொகுதி திரையில் கடைசித் திரையின் ஓரம் முழுவதும் ஐம்பது வளையங்களை அமைத்தார்கள். மற்றைய தொகுதி கடைசித் திரையின் ஒரு ஓரம் முழுவதும் அவ்வாறே அமைத்தார்கள். 18அவர்கள் அந்தக் கூடாரத்தை ஒன்றாய் இணைப்பதற்க்கு ஐம்பது வெண்கலக் கொழுக்கிகளைச் செய்தார்கள். 19பின்பு சிவப்புச் சாயம் தோய்க்கப்பட்ட ஆட்டுக்கடாத் தோல்களினால் அக் கூடாரத்துக்கு ஒரு மூடுதிரையையும் செய்தார்கள். அந்த மூடுதிரைக்கு மேலாகப் போடுவதற்குக் கடற்பசுத் தோலினால் இன்னுமொரு மூடுதிரையைச் செய்தார்கள்.#36:19 யாத். 37:7
20இறைபிரசன்னக் கூடாரத்துக்கென நிமிர்ந்து நிற்கும் மரச்சட்டங்களை சித்தீம் மரத்தினால் செய்தார்கள். 21ஒவ்வொரு மரச்சட்டமும் பத்து முழம் நீளமும், ஒன்றரை முழம் அகலமுமாயிருந்தது.#36:21 சுமார் 15 அடி நீளம், 2 1/4 அடி அகலம் அல்லது 4.5 மீற்றர் நீளம், 68 சென்ரிமீற்றர் அகலம் 22அவை ஒன்றுக்கொன்று சமாந்தரமாய் இருக்கும்படி இரண்டு நாண்கள் அமைக்கப்பட்டிருந்தன. இறைபிரசன்னக் கூடாரத்தின் மரச்சட்டங்களையெல்லாம் அவர்கள் இவ்விதமாக செய்தார்கள். 23இறைபிரசன்னக் கூடாரத்தின் தெற்குப் பக்கத்துக்கென அவர்கள் இருபது மரச்சட்டங்களைச் செய்தார்கள். 24ஒவ்வொரு நாணின் முனையையும் தாங்கி நிற்க ஒரு அடித்தளப்படி ஒவ்வொரு மரச்சட்டத்துக்கும் கீழே இரு அடித்தளங்களாக நாற்பது வெள்ளி அடித்தளங்களைச் செய்தார்கள். 25இறைபிரசன்னக் கூடாரத்தின் வடக்குப் பக்கமான மறுபக்கத்துக்கும் அவர்கள் இருபது மரச்சட்டங்களைச் செய்தார்கள். 26அவற்றுக்கு ஒவ்வொரு மரச்சட்டத்துக்குக் கீழும் இரண்டு அடித்தளங்களாக நாற்பது வெள்ளி அடித்தளங்களை செய்தார்கள். 27இவ்வாறு அவர்கள் இறைபிரசன்னக் கூடாரத்தின் மேற்குப் பக்கத்தின் கடைசி முனைக்கு ஆறு மரச்சட்டங்களைச் செய்தார்கள். 28இறைபிரசன்னக் கூடாரத்தின் கடைசி முனையிலுள்ள இரு பக்கத்து மூலைகளுக்கும் இரண்டு மரச்சட்டங்கள் செய்யப்பட்டன. 29இந்த இரு மூலைகளிலும் மரச்சட்டங்கள் இரட்டையாக நிறுத்தப்பட்டு, அடியிலிருந்து நுனிவரை ஒரே வளையத்தினால் இணைக்கப்பட்டன. இரண்டும் அவ்வாறே அமைக்கப்பட்டன. 30இவ்விதமாக எட்டு மரச்சட்டங்களின் கீழும் இவ்விரு அடித்தளங்களாக பதினாறு வெள்ளி அடித்தளங்கள் வைக்கப்பட்டன.
31அத்துடன் சித்தீம் மரத்தினால் குறுக்குச் சட்டங்களைச் செய்தார்கள். இறைபிரசன்னக் கூடாரத்தின் ஒரு பக்கத்திலுள்ள மரச்சட்டங்களுக்காக ஐந்து குறுக்குச் சட்டங்களையும், 32மற்றப் பக்கத்திலுள்ள மரச்சட்டங்களுக்கு ஐந்து குறுக்குச் சட்டங்களையும், இறைபிரசன்னக் கூடாரத்தின் அடிப்பகுதியின் முடிவில் மேற்குப் பக்கத்தின் கடைசி முனையிலுள்ள மரச்சட்டங்களுக்கென ஐந்து குறுக்குச் சட்டங்களையும் செய்தார்கள். 33நடுக் குறுக்குச் சட்டம் சட்டப்பலகைகளின் நடுவே ஒரு முனை தொடங்கி மறு முனை வரை நீண்டிருக்கும்படி செய்தார்கள். 34மரச்சட்டங்களைத் தங்கத் தகட்டால் மூடி, குறுக்குச் சட்டங்களை கொழுவுவதற்கென, தங்க வளையங்களையும் அதில் செய்தார்கள். குறுக்குச் சட்டங்களையும் தங்கத் தகட்டால் மூடினார்கள்.
35நீல நூல், ஊதா நூல், கருஞ்சிவப்பு நூல், திரித்த மென்பட்டுத் துணி ஆகியவற்றால் திரையைச் செய்து, அதில் கைவினைஞர்கள் கேருபீன்களையும் செய்தார்கள். 36அந்தத் திரையைத் தொங்க விடுவதற்கு சித்தீம் மரத்தினால் நான்கு தூண்களைச் செய்து, தங்கத் தகட்டால் அவற்றை மூடினார்கள். அவற்றுக்குத் தங்கத்தால் கொழுக்கிகளைச் செய்து, வெள்ளியினால் அதன் நான்கு அடித்தளங்களையும் வார்த்தார்கள். 37ஊசியால் செய்யப்பட்ட பூத் தையலால் கூடாரத்தின் வாசலுக்கு நீல நூல், ஊதா நூல், கருஞ்சிவப்பு நூல், திரித்த மென்பட்டுத் துணி ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட ஒரு திரைச்சீலையைச் செய்தார்கள். 38இத்திரைக்குக் கொழுக்கிகளை உடைய ஐந்து தூண்களைச் செய்தார்கள். கம்பங்களின் மேற்பகுதிகளையும், பட்டிகளையும் தங்கத் தகட்டால் மூடினார்கள். அவற்றுக்காக ஐந்து வெண்கல அடித்தளங்களையும் செய்தார்கள்.