மல்கியா 1
1
1தேவனிடமிருந்து ஒரு செய்தி. இது கர்த்தரிடமிருந்து வந்த ஒரு செய்தி. மல்கியா இச்செய்தியை இஸ்ரவேலுக்குக் கொடுத்தார்.
தேவன் இஸ்ரவேலை நேசிக்கிறார்
2கர்த்தர், “ஜனங்களே, நான் உங்களை நேசிக்கிறேன்” என்றார்.
ஆனால் நீங்கள், “நீர் எங்களை நேசிப்பதை எது காட்டும்?” என்று கேட்டீர்கள்.
கர்த்தர், “ஏசா, யாக்கோபின் சகோதரன். சரியா? ஆனால் நான் யாக்கோபைத் தேர்ந்தெடுத்தேன். 3நான் ஏசாவை ஏற்றுக்கொள்ளவில்லை, நான் ஏசாவின் மலை நாட்டை அழித்தேன். ஏசாவின் நாடு அழிக்கப்பட்டது. இப்பொழுது அங்கே காட்டு நாய்கள் மட்டுமே வாழ்கின்றன” என்றார்.
4ஏதோமின் ஜனங்கள், “நாங்கள் அழிக்கப்பட்டோம். ஆனால் நாங்கள் திரும்பிப்போய் மீண்டும் எங்கள் நகரங்களைக் கட்டுவோம்” என்று சொல்லலாம்.
ஆனால் சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “அவர்கள் மீண்டும் அந்நகரங்களைக் கட்டினால் பிறகு நான் மீண்டும் அவைகளை அழிப்பேன்!” எனவே ஜனங்கள் ஏதோமை ஒரு கேட்டின் நாடு என்கின்றனர். கர்த்தர் என்றென்றும் வெறுக்கும் ஒரு தேசம்.
5ஜனங்களாகிய நீங்கள் இவற்றைப் பார்த்து நீங்கள், “கர்த்தர் பெரியவர், இஸ்ரவேலுக்கு வெளியிலும் பெரியவர்” என்றீர்கள்.
ஜனங்கள் தேவனை மதிப்பதில்லை
6சர்வ வல்லமையுள்ள கர்த்தர், “பிள்ளைகள் தமது பெற்றோரை மதிப்பார்கள். வேலைக்காரர்கள் தம் எஜமானரை மதிப்பார்கள். நான் உனது தந்தை. நீ ஏன் என்னை மதிப்பதில்லை? நான் உனது ஆண்டவர். நீ ஏன் எனக்கு மரியாதை தருவதில்லை? ஆசாரியர்களாகிய நீங்கள் என் பெயரை மதிப்பதில்லை” என்றார்.
ஆனால் நீங்கள், “நாங்கள் உமது பெயருக்கு மரியாதை தரவில்லை என்று எச்செயல் மூலம் கூறுகின்றீர்?” எனக் கேட்கிறீர்கள்.
7கர்த்தர், “நீங்கள் எனது பலிபீடத்திற்கு சுத்தமற்ற அப்பத்தைக் கொண்டு வருகிறீர்கள்” என்றார்.
ஆனால் நீங்கள், “அந்த அப்பத்தைச் சுத்தமற்றதாகச் செய்கிறது எது?” என்று கேட்கிறீர்கள்.
கர்த்தர், “நீங்கள் எனது மேஜைக்கு (பலிபீடம்) மரியாதை காட்டுவதில்லை. 8நீங்கள் குருட்டு விலங்குகளைப் பலியாக கொண்டு வருகிறீர்கள். அது தவறு. நீங்கள் நோயுற்றதும் நொண்டியானதுமான விலங்குகளை பலியாக கொண்டுவருகிறீர்கள். அது தவறு. அந்நோயுற்ற விங்குகளை உங்கள் ஆளுநருக்கு அன்பளிப்பாகக் கொடுக்க முயலுங்கள். அவன் நோயுற்ற விலங்குகளை அன்பளிப்பாக ஏற்றுக்கொள்வானா? இல்லை. அவன் அந்த அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளமாட்டான்” என்றார். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
9“ஆசாரியர்களே, நீங்கள் எங்களிடம் நல்லவராக இருக்கும்படி கர்த்தரிடம் கேளுங்கள். ஆனால் அவர் நீங்கள் சொல்வதைக் கேட்கமாட்டார். இது எல்லாம் உங்களுடைய தவறு” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.
10“உறுதியாக, ஆசாரியர்களுள் சிலர் ஆலய கதவுகளை அடைத்து சரியாக நெருப்பைக் கொளுத்த முடியும். நான் உங்களிடம் மகிழ்ச்சியாக இருக்கமாட்டேன். நான் உங்கள் அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளமாட்டேன்” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.
11“உலகைச் சுற்றிலும் உள்ள ஜனங்கள் எனது நாமத்தை மதிக்கிறார்கள். உலகைச் சுற்றிலும் உள்ள ஜனங்கள் எனக்கு நல்ல அன்பளிப்புகளைக் கொண்டு வருவார்கள். அவர்கள் எனக்கு நறுமணப் பொருட்களை அன்பளிப்பாக எரிக்கிறார்கள். ஏனென்றால் எனது நாமம் அந்த ஜனங்கள் அனைவருக்கும் மிக முக்கியமானது” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
12“ஆனால் நீங்கள் என் நாமத்தை மதிப்பதில்லை. கர்த்தருடைய மேசை (பலிபீடம்) சுத்தமற்றதாக உள்ளது என்று நீங்கள் சொல்கிறீர்கள். 13நீங்கள் அந்த மேசையில் உள்ள உணவை விரும்புவதில்லை. நீங்கள் அந்த உணவை நுகர்ந்து பார்த்து அதனை உண்ண மறுப்பீர்கள். அது கெட்டது என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் அது உண்மை இல்லை. பிறகு நீங்கள் நோயுள்ளதும், நொண்டியானதும், களவாடப்பட்டதுமான மிருகங்களை என்னிடம் கொண்டு வருகிறீர்கள். நீங்கள் எனக்கு நோயுற்ற விலங்குகளைப் பலியாகக் கொடுக்க முயல்கிறீர்கள். நான் உங்களிடமிருந்து அந்நோயுற்ற விலங்குகளை ஏற்றுக்கொள்ளமாட்டேன். 14சில ஜனங்கள் நல்ல ஆண் மிருகங்களை வைத்திருப்பார்கள். அவர்களால் அவற்றை பலியாக கொடுக்கமுடியும். ஆனால் அவர்கள் அந்நல்ல மிருகங்களை எனக்குப் பலியாக கொடுக்கமாட்டார்கள். சிலர் எனக்கு நல்ல மிருகங்களைக் கொண்டு வருவார்கள். அவர்கள் அந்த ஆரோக்கியமான மிருகங்களை எனக்குத் தருவதாக வாக்குறுதியளிப்பார்கள். ஆனால் அவர்கள் ரகசியமாக அந்நல்ல மிருகங்களை மாற்றிவிட்டு எனக்கு நோயுற்ற மிருகங்களைத் தருவார்கள். அந்த ஜனங்களுக்குத் தீமைகள் ஏற்படும். நானே பேரரசன். நீங்கள் என்னை மதிக்க வேண்டும். உலகம் முழுவதுமுள்ள ஜனங்கள் என்னை மதிக்கின்றனர்!” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.
S'ha seleccionat:
மல்கியா 1: TAERV
Subratllat
Copia
Compara
Comparteix
Vols que els teus subratllats es desin a tots els teus dispositius? Registra't o inicia sessió
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International