ஆதியாகமம் 20

20
ஆபிரகாமும் அபிமெலேக்கும்
1ஆபிரகாம் அவ்விடம் விட்டு நெகேப் பிரதேசத்திற்குப் போய் அங்கே காதேஷ், சூர் என்னும் இடங்களுக்கு இடையே வசித்தான். சிறிதுகாலம் அவன் கேராரில் தங்கினான். 2ஆபிரகாம் அங்கே தன் மனைவி சாராளைத், “தன் சகோதரி” என்று சொல்லியிருந்தான். அப்பொழுது கேராரின் அரசன் அபிமெலேக்கு தன் ஆட்களை அனுப்பி, சாராளை எடுத்துக்கொண்டான்.
3ஆனால் இறைவன் ஒரு இரவில் அபிமெலேக்குவுக்கு கனவில் தோன்றி, “நீ கொண்டுவந்திருக்கும் பெண்ணின் காரணமாக நீ செத்து அழியப்போகிறாய்; அவள் இன்னொருவனுடைய மனைவியாய் இருக்கிறாள்” என்றார்.
4அபிமெலேக்கு அதுவரை சாராளை நெருங்கவில்லை; அதனால் அவன், “யெகோவாவே, குற்றமற்ற மக்களை நீர் அழிப்பீரோ? 5‘அவள் என் சகோதரி’ என்று அவன் எனக்குச் சொல்லவில்லையா? அவளும், ‘அவன் என் சகோதரன்’ என்று சொல்லவில்லையா? அதனால் சுத்த மனசாட்சியுடனும், குற்றமற்ற கைகளுடனுமே நான் இதைச் செய்தேன்” என்றான்.
6இறைவன் அந்த கனவில் அவனிடம், “ஆம், சுத்த மனசாட்சியுடனே நீ இதைச் செய்தாய் என்பது எனக்குத் தெரியும். அதனால்தான் நீ எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்யாதபடிக்கு உன்னைக் காத்துக்கொண்டேன். நீ அவளைத் தொட நான் உன்னை விடவில்லை 7அந்தப் பெண்ணை அவளுடைய கணவனிடமே திருப்பி அனுப்பிவிடு, அவன் ஒரு இறைவாக்கினன்; அவன் உனக்காக மன்றாடுவான், நீயும் பிழைப்பாய். நீ அவளைத் திருப்பி அனுப்பாவிட்டால், நீயும் உன்னைச் சேர்ந்தவர்களும் சாகிறது நிச்சயம்” என்றார்.
8அடுத்தநாள் அதிகாலையிலே அபிமெலேக்கு எழுந்து, தன் அலுவலர்கள் அனைவரையும் அழைப்பித்து, நடந்த யாவற்றையும் அவர்களுக்குச் சொன்னான்; அப்போது அவர்கள் மிகவும் பயந்தார்கள். 9அதன்பின்பு அபிமெலேக்கு ஆபிரகாமை அழைத்து, “நீ எங்களுக்குச் செய்திருப்பது என்ன? நீ என்மேலும் என் அரசின்மேலும் இத்தகைய குற்றத்தைச் சுமத்துவதற்கு நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன்? செய்யத் தகாதவற்றை நீ எனக்குச் செய்துவிட்டாயே!” என்றான். 10மேலும் அபிமெலேக்கு, “நீ இதைச் செய்ததன் காரணமென்ன?” என்று ஆபிரகாமிடம் கேட்டான்.
11ஆபிரகாம் அதற்குப் மறுமொழியாக, “இந்த இடத்தில் நிச்சயமாக இறைவனைப்பற்றிய பயம் இல்லையென்றும், அதனால் என் மனைவியை அபகரிப்பதற்காக என்னைக் கொலைசெய்துவிடுவார்கள் என்றும் நினைத்தேன். 12அவள் என் சகோதரி என்பது உண்மையே. அவள் என் தாய்க்குப் பிறக்காவிட்டாலும், என் தகப்பனின் மகளாய் இருக்கிறாள்; ஆனால் இப்பொழுது அவள் என் மனைவி. 13இறைவன் என்னை என் தந்தையின் குடும்பத்தைவிட்டு அலைந்து திரியப்பண்ணியபோது, நான் அவளிடம், ‘நாம் எங்கு சென்றாலும், என்னை உன் சகோதரன் என்றே நீ சொல்லவேண்டும். நீ என்மேல் கொண்டிருக்கும் அன்பை இவ்விதமாகவே காண்பிக்கவேண்டும்’ என்று சொல்லியிருந்தேன்” என்றான்.
14அப்பொழுது அபிமெலேக்கு, செம்மறியாடுகளையும், மாடுகளையும், ஆண், பெண் அடிமைகளையும் ஆபிரகாமுக்குக் கொடுத்து, அவன் மனைவி சாராளையும் அவனிடத்தில் திரும்ப ஒப்படைத்தான். 15அபிமெலேக்கு ஆபிரகாமிடம், “என் தேசம் உனக்கு முன்பாக இருக்கிறது. நீ விரும்பிய இடத்தில் குடியிரு” என்றான்.
16அவன் சாராளைப் பார்த்து, “உன் சகோதரனுக்கு ஆயிரம் சேக்கல்#20:16 அதாவது, சுமார் 25 பவுண்டுகள் அல்லது 12 கிலோகிராம் வெள்ளிக்காசைக் கொடுக்கிறேன். உனக்கு விரோதமான குற்றத்திற்கு ஈடாக இங்கு உன்னுடன் நிற்கிறவர்களுக்கு முன்பாக நான் இவற்றைக் கொடுக்கிறேன். நீ குற்றமற்றவள் என்று முழுவதுமாய் நிரூபிக்கப்பட்டிருக்கிறாய்” என்றான்.
17ஆபிரகாம் இறைவனிடம் வேண்டுதல் செய்தபோது, அவர் அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவனுடைய வீட்டிலுள்ள பணிப்பெண்களையும் குணமாக்கி, அவர்கள் மீண்டும் பிள்ளைப்பேறு உள்ளவர்களாகும்படிச் செய்தார். 18ஏனெனில், ஆபிரகாமின் மனைவி சாராளின் நிமித்தம், யெகோவா அபிமெலேக்கின் வீட்டுப்பெண்களின் கருப்பைகளை எல்லாம் அடைத்திருந்தார்.

Subratllat

Comparteix

Compara

Copia

None

Vols que els teus subratllats es desin a tots els teus dispositius? Registra't o inicia sessió