நாகூ 2

2
அத்தியாயம் 2
நினிவேயின் அழிவு
1சிதறடிக்கிறவன் உன் முகத்திற்கு முன்பாக வருகிறான்; அரணைக் காத்துக்கொள், வழியைக் காவல் செய், இடுப்பைக் கெட்டியாகக் கட்டிக்கொள், உன் பெலனை மிகவும் உறுதிப்படுத்து. 2வெறுமையாக்குகிறவர்கள் அவர்களை வெறுமையாக்கி, அவர்களுடைய திராட்சைக்கொடிகளைக் கெடுத்துப்போட்டாலும், யெகோவா யாக்கோபின் மகிமையைத் திரும்பிவரச் செய்வதுபோல், இஸ்ரவேலின் மகிமையையும் திரும்பிவரச் செய்வார். 3அவனுடைய பராக்கிரமசாலிகளின் கேடகம் இரத்தமயமாகும்; அவனுடைய போர்வீரர்கள் இரத்தாம்பரம் அணிந்து கொண்டிருக்கிறார்கள்; அவன் தன்னை ஆயத்தம்செய்யும் நாளிலே இரதங்கள் மின்னுகிற சக்கரங்களை உடையதாக இருக்கும்; ஈட்டிகள் குலுங்கும். 4இரதங்கள் தெருக்களில் கடகட என்று ஓடி, வீதிகளில் இடதுபக்கமும் வலதுபக்கமும் வரும்; அவைகள் தீப்பந்தங்களைப்போல விளங்கி, மின்னல்களைப்போல வேகமாகப் பறக்கும். 5அவன் தன் பிரபலமானவர்களை நினைவுகூருவான்; அவர்கள் தங்கள் நடைகளில் இடறி, கோட்டை சுவருக்கு விரைந்து ஓடுவார்கள்; மறைவிடம் ஆயத்தப்படுத்தப்படும். 6ஆறுகளின் மதகுகள் திறக்கப்படும், அரண்மனை கரைந்துபோகும். 7அவள் சிறைப்பட்டுப்போகத் தீர்மானமாயிற்று; அவளுடைய தாதிமார்கள் தங்கள் மார்பிலே அடித்துக்கொண்டு, புறாக்களைப்போலச் சத்தமிட்டுக் கூடப்போவார்கள். 8நினிவே ஆரம்பகாலமுதல் தண்ணீர் நிறைந்த குளம்போல் இருந்தது; இப்போதோ அவர்கள் ஓடிப்போகிறார்கள்; நில்லுங்கள் நில்லுங்கள் என்றாலும், திரும்பிப்பார்க்கிறவன் இல்லை. 9வெள்ளியைக் கொள்ளையிடுங்கள், பொன்னையும் கொள்ளையிடுங்கள்; செல்வத்திற்கு முடிவில்லை; விரும்பப்படத்தக்க சகலவித பொருட்களும் இருக்கிறது. 10அவள் வெறுமையும் வெளியும் பாழுமாவாள்; மனம் கரைந்துபோகிறது; முழங்கால்கள் தள்ளாடுகிறது; எல்லா இடுப்புகளிலும் மிகுந்த வேதனை உண்டு; எல்லோருடைய முகங்களும் கருகிப்போகிறது. 11சிங்கங்களின் குடியிருப்பு எங்கே? பாலசிங்கம் இரைதின்கிற இடம் எங்கே? கிழச்சிங்கமாகிய சிங்கமும், சிங்கக்குட்டிகளும் பயப்படுத்துபவர்கள் இல்லாமல் வசிக்கிற இடம் எங்கே? 12சிங்கம் தன் குட்டிகளுக்குத் தேவையானதைக் கொன்று, தன் பெண் சிங்கங்களுக்கு வேண்டியதைத் தொண்டையைப் பிடித்துக் கொன்று, இரைகளினால் தன் கெபிகளையும், கொன்றுபோட்டவைகளினால் தன் இருப்பிடங்களையும் நிரப்பிற்று. 13இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, இரதங்களை எரித்துப்போடுவேன்; பட்டயம் உன் பாலசிங்கங்களை அழிக்கும்; நீ இரைக்காகப் பிடிக்கும் வேட்டையை தேசத்தில் இல்லாமல்போகச் செய்வேன்; உன் பிரதிநிதிகளின் சத்தம் இனிக் கேட்கப்படுவதில்லை என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

S'ha seleccionat:

நாகூ 2: IRVTam

Subratllat

Copia

Compara

Comparteix

None

Vols que els teus subratllats es desin a tots els teus dispositius? Registra't o inicia sessió