ஓசியா 5

5
அத்தியாயம் 5
இஸ்ரவேலுக்கு எதிரான நியாயத்தீர்ப்பு
1ஆசாரியர்களே, இதைக் கேளுங்கள்; இஸ்ரவேல் மக்களே, கவனியுங்கள்; ராஜாவின் வீட்டாரே, செவிகொடுங்கள்; இந்த நியாயவிசாரிப்பு உங்கள்மேல் செல்லும்; நீங்கள் மிஸ்பாவில் கண்ணியும் தாபோரின்மேல் விரிக்கப்பட்ட வலையுமானீர்கள். 2நெறிதவறினவர்கள் அதிகமாக வதைசெய்கிறார்கள்; அவர்கள் எல்லோரையும் நான் தண்டிப்பேன். 3எப்பிராயீமை நான் அறிவேன், இஸ்ரவேல் எனக்கு மறைவானதல்ல; எப்பிராயீமே, இப்போது நீ வழிவிலகிப்போனாயே, இஸ்ரவேல் தீட்டுப்பட்டதே. 4அவர்கள் தங்கள் தேவனிடத்திற்குத் திரும்புவதற்குத் தங்கள் செயல்களை சரிசெய்யமாட்டார்கள், வேசித்தன ஆவி அவர்கள் உள்ளத்தில் இருக்கிறது; யெகோவாவை அறியார்கள். 5இஸ்ரவேலின் அகந்தை அவர்களுடைய முகத்திற்கு முன்பாகச் சாட்சியிடுகிறது; ஆகையால் இஸ்ரவேலும் எப்பிராயீமும் தங்கள் அக்கிரமத்தினால் இடறி விழுவார்கள்; அவர்களோடே யூதாவும் இடறி விழுவான். 6அவர்கள் யெகோவாவை தேடும்படி தங்கள் ஆடுகளோடும் தங்கள் மாடுகளோடும் போவார்கள்; அவரைக் காணமாட்டார்கள்; அவர் அவர்களை விட்டு விலகினார். 7யெகோவாவுக்கு விரோதமாக துரோகம்செய்தார்கள்; அந்நியபிள்ளைகளைப் பெற்றார்கள்; இப்போதும் ஒரு மாதத்திற்குள்ளாக அவர்கள் தங்கள் பங்குகளோடே அழிக்கப்படுவார்கள். 8கிபியாவிலே எக்காளத்தையும், ராமாவிலே பூரிகையையும் ஊதுங்கள்; பெத்தாவேனிலே கதறுங்கள்; பென்யமீனே உன்னைப் பின்தொடருகிறார்கள். 9தண்டிப்பின் நாளிலே எப்பிராயீம் பாழாவான்; நிச்சயமாக வரப்போகிறதை இஸ்ரவேலின் கோத்திரங்களுக்குள்ளே அறிவிக்கிறேன். 10யூதாவின் பிரபுக்கள் எல்லைகளை ஒதுக்குகிறவர்களுக்கு ஒப்பானார்கள்; அவர்கள்மேல் என் கடுங்கோபத்தைத் தண்ணீரைப்போல ஊற்றுவேன். 11எப்பிராயீம் தகாத கற்பனையை மனதாரப் பின்பற்றிப்போனபடியால் அவன் ஒடுங்கி, நியாயவிசாரணையில் நொறுக்கப்பட்டுப்போகிறான். 12நான் எப்பிராயீமுக்குப் பூச்சி அரிப்பைப்போலவும், யூதாவின் வீட்டிற்கு உளுப்பைப்போலவும் இருப்பேன். 13எப்பிராயீம் தன் வியாதியையும், யூதா தன் காயத்தையும் கண்டபோது, எப்பிராயீம் அசீரியனிடம் போய் யாரேப் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பினான்; ஆனாலும் உங்களைக் குணமாக்கவும் உங்களில் இருக்கிற காயத்தை ஆற்றவும் அவனால் முடியாமற்போனது. 14நான் எப்பிராயீமுக்குச் சிங்கம்போலவும், யூதாவின் வம்சத்தாருக்குப் பாலசிங்கம்போலவும் இருப்பேன்; நான் நானே காயப்படுத்திவிட்டுப் போய்விடுவேன்; தப்புவிப்பார் இல்லாமல் எடுத்துக்கொண்டு போவேன். 15அவர்கள் தங்கள் குற்றங்களை உணர்ந்து, என் முகத்தைத் தேடும்வரை நான் என் இடத்திற்குத் திரும்பிப் போய்விடுவேன்; தங்கள் ஆபத்தில் என்னைக் கருத்தாகத் தேடுவார்கள்.

S'ha seleccionat:

ஓசியா 5: IRVTam

Subratllat

Copia

Compara

Comparteix

None

Vols que els teus subratllats es desin a tots els teus dispositius? Registra't o inicia sessió