எசேக் 34
34
அத்தியாயம் 34
மேய்ப்பர்களும் ஆடுகளும்
1யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2மனிதகுமாரனே, இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்; நீ தீர்க்கதரிசனம் சொல்லி, அவர்களுடன் சொல்லவேண்டியது என்னவென்றால்: யெகோவாகிய ஆண்டவர் மேய்ப்பருக்குச் சொல்லுகிறார்; தங்களையே மேய்க்கிற இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு ஐயோ, மேய்ப்பர் அல்லவா மந்தையை மேய்க்கவேண்டும். 3நீங்கள் நெய்யைச் சாப்பிட்டு, ஆட்டு ரோமத்தை உடுப்பாக்கிக்கொள்ளுகிறீர்கள்: கொழுத்ததை அடிக்கிறீர்கள்; மந்தையையோ மேய்க்காமல்போகிறீர்கள். 4நீங்கள் பலவீனமானவைகளைப் பலப்படுத்தாமலும், நோயற்றவைகளைக் குணமாக்காமலும், எலும்பு முறிந்தவைகளைக் காயங்கட்டாமலும், துரத்தப்பட்டவைகளைத் திருப்பிக்கொண்டு வராமலும், காணாமல்போனவைகளைத் தேடாமலும் போய், பலாத்காரமும் கடுமையாக அவைகளை ஆண்டீர்கள். 5மேய்ப்பன் இல்லாததினால் அவைகள் சிதறுண்டுபோயின; சிதறப்பட்டு போனவைகள் காட்டு மிருகங்களுக்கெல்லாம் இரையானது. 6என்னுடைய ஆடுகள் எல்லா மலைகளிலும் உயரமான எல்லா மேடுகளிலும் அலைந்து, பூமியின்மீதெங்கும் என்னுடைய ஆடுகள் சிதறித் திரிகிறது; விசாரிக்கிறவனுமில்லை, தேடுகிறவனுமில்லை. 7ஆகையால், மேய்ப்பரே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள். 8யெகோவாகிய ஆண்டவராக இருக்கிற நான் என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; மேய்ப்பன் இல்லாததினால் என்னுடைய ஆடுகள் சூறையாகி, என்னுடைய ஆடுகள் காட்டுமிருகங்களுக்கெல்லாம் இரையாகப் போனது; என்னுடைய மேய்ப்பர்கள் என்னுடைய ஆடுகளை விசாரியாமல்போனார்கள், மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்தார்கள். 9ஆகையால் மேய்ப்பரே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள். 10யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்: இதோ, நான் மேய்ப்பர்களுக்கு விரோதமாக வந்து, என்னுடைய ஆடுகளை அவர்கள் கையிலே கேட்டு, மேய்ப்பர்கள் இனித் தங்களையே மேய்க்காதபடி, மந்தையை மேய்க்கும் தொழிலைவிட்டு அவர்களை விலக்கி, என்னுடைய ஆடுகள் அவர்களுக்கு ஆகாரமாக இல்லாதபடி, அவைகளை அவர்கள் வாய்க்குத் காப்பாற்றுவேன் என்று சொல்லு. 11யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் நானே என்னுடைய ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன். 12ஒரு மேய்ப்பன் சிதறுண்ட தன்னுடைய ஆடுகளின் நடுவே இருக்கிற நாளில் தன்னுடைய மந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறதுபோல, நான் என்னுடைய ஆடுகளைத்தேடி, மப்பும் மந்தாரமுமான நாளிலே அவைகள் சிதறுண்டுபோன எல்லா இடங்களிலுமிருந்து அவைகளைத் தப்பிவரச்செய்து, 13அவைகளை மக்களிடத்திலிருந்து புறப்படவும் தேசங்களிலிருந்து சேரவும்செய்து, அவைகளுடைய சொந்ததேசத்திலே அவைகளைக் கொண்டுவந்து, இஸ்ரவேல் மலைகளின்மேலும் ஆறுகள் அருகிலும் தேசத்தின் எல்லா குடியிருக்கும் இடங்களிலும் அவைகளை மேய்ப்பேன். 14அவைகளை நல்ல மேய்ச்சலிலே மேய்ப்பேன்; இஸ்ரவேலுடைய உயர்ந்த மலைகளில் அவைகளுடைய தொழுவம் இருக்கும்; அங்கே அவைகள் நல்ல தொழுவத்தில் படுத்துக்கொள்ளும் இஸ்ரவேலின் மலைகளின்மேல் நல்ல மேய்ச்சலை மேயும். 15என்னுடைய ஆடுகளை நான் மேய்த்து, அவைகளை நான் மடக்குவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 16நான் காணாமல்போனதைத் தேடி, துரத்தப்பட்டதைத் திரும்பக் கொண்டுவந்து, எலும்பு முறிந்ததைக் காயங்கட்டி, வலிமை இல்லாததைத் திடப்படுத்துவேன்; நியாயத்திற்குத்தக்கதாக அவைகளை மேய்த்து, கொழுத்ததும் பெலமுமுள்ளவைகளை அழிப்பேன். 17என்னுடைய மந்தையே, யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, ஆட்டுக்கும் ஆட்டுக்கும், ஆட்டுக்கடாக்களுக்கும், வெள்ளாட்டுக்கடாக்களுக்கும் நான் நியாயந்தீர்ப்பேன். 18நீங்கள் நல்ல மேய்ச்சலை மேய்ந்து, உங்களுடைய மேய்ச்சல்களில் மீதியானதை உங்களுடைய கால்களால் மிதிக்கலாமா? தெளிந்த தண்ணீரைக் குடித்து மீதியாக இருக்கிறதை உங்களுடைய கால்களால் குழப்பிப்போடலாமா? 19என்னுடைய ஆடுகள் உங்களுடைய கால்களால் மிதிக்கப்பட்டதை மேயவும், உங்களுடைய கால்களால் குழப்பப்பட்டதைக் குடிக்கவும் வேண்டுமோ? 20ஆகையால், யெகோவாகிய ஆண்டவர் அவைகளை நோக்கி: இதோ, நான், நானே கொழுத்த ஆடுகளுக்கும் இளைத்த ஆடுகளுக்கும் நியாயந்தீர்ப்பேன். 21நீங்கள் பலவீனமாக இருக்கிறவைகளையெல்லாம் வெளியேற்றி சிதறச்செய்யும்படி, அவைகளைப் பக்கத்தினாலும் முன்னந்தொடைகளினாலும் தள்ளி உங்களுடைய கொம்புகளைக்கொண்டு முட்டுகிறதினாலே, 22நான் என்னுடைய ஆடுகளை இனிச் சூறையாகாதபடி இரட்சித்து, ஆடுகளுக்கும் ஆடுகளுக்கும் நியாயந்தீர்ப்பேன். 23அவர்களை மேய்க்கும்படி என்னுடைய தாசனாகிய தாவீது என்னும் ஒரே மேய்ப்பனை நான் அவர்கள்மேல் விசாரிப்பாக இருக்க ஏற்படுத்துவேன்; இவர் அவர்களை மேய்த்து, இவரே அவர்களுக்கு மேய்ப்பனாக இருப்பார். 24யெகோவாகிய நான் அவர்களுக்குத் தேவனாக இருப்பேன், என்னுடைய தாசனாகிய தாவீது அவர்கள் நடுவில் அதிபதியாக இருப்பார்; யெகோவாகிய நான் இதைச் சொன்னேன். 25நான் அவர்களுடன் சமாதான உடன்படிக்கைசெய்து, கொடிய மிருகங்களைத் தேசத்தில் இல்லாதபடி ஒழியச்செய்வேன்; அவர்கள் சுகமாக வனாந்திரத்தில் வாழ்ந்து, காடுகளில் உறங்குவார்கள். 26நான் அவர்களையும் என்னுடைய மேட்டின் சுற்றுப்புறங்களையும் ஆசீர்வாதமாக்கி, ஏற்றகாலத்திலே மழையைப் பெய்யச்செய்வேன்; ஆசீர்வாதமான மழை பெய்யும். 27வெளியின் மரங்கள் தங்களுடைய பழத்தைத் தரும்; பூமி தன்னுடைய பலனைக் கொடுக்கும்; அவர்கள் தங்களுடைய தேசத்தில் சுகமாக இருப்பார்கள்; நான் அவர்கள் நுகத்தின் கயிறுகளை அறுத்து, அவர்களை அடிமைகொண்டவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கும்போது, நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள். 28இனி அவர்கள் அந்நியதேசங்களுக்குக் கொள்ளையாவதில்லை, பூமியின் மிருகங்கள் அவர்களை அழிப்பதும் இல்லை; தத்தளிக்கச்செய்வார் இல்லாமல் சுகமாகத் தங்குவார்கள். 29நான் அவர்களுக்குக் புகழ்ச்சிபொருந்திய ஒரு நாற்றை எழும்பச்செய்வேன்; அவர்கள் இனித் தேசத்திலே பஞ்சத்தால் வாரிக்கொள்ளப்படுவதுமில்லை, இனிப் அந்நியதேசங்கள் செய்யும் அவமானத்தைச் சுமப்பதுமில்லை. 30தங்களுடைய தேவனாகிய யெகோவாக இருக்கிற நான் தங்களுடன் இருக்கிறதையும், இஸ்ரவேல் மக்களாகிய தாங்கள் என்னுடைய மக்களாக இருக்கிறதையும், அவர்கள் அறிந்துகொள்வார்களென்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 31என்னுடைய மந்தையும் என்னுடைய மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நீங்கள் மனிதர்; நான் உங்களுடைய தேவன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
S'ha seleccionat:
எசேக் 34: IRVTam
Subratllat
Copia
Compara
Comparteix
Vols que els teus subratllats es desin a tots els teus dispositius? Registra't o inicia sessió
TAM-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.